News Image

கேவலார் அன்னையின் சகோதரத் தூதர்கள், பெருமை சேர்க்கும் வகையில் திரு. கமிலஸ் துரைசிங்கம்

„துன்புறுவோரின் ஆறுதல் தாய்„ (Trösterin der Betrübten in Kevelaer) என்று அழைக்கப்படும் கேவலார் அன்னையின் திருத்தல உதவியாளர்கள் (Gemeinschaft der Brudermeister) 1873 தொடக்கம் அன்றைய திருத்தல நிர்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் இத் திருத்தலத்தின் 333 ஆண்டுகள் நிறைவில், 1976 இல் இடம்பெற்ற வருடாந்த அமர்வின்போது முன்ஸ்ரர் மறைமாவட்ட ஆயரின் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு அமைய இந்தச் சபையை Bruderschaft der Consolatrix (சகோதரத் தூதர்கள்) என பெயர் மாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த வேண்டுகோள் 1978இல் முன்ஸ்ரர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்தத் திருத்தலச் சகோதர்கள் சபைக்கு Consolatrix Afflictorum in Kevelaer என பெயர் சூட்டப்பட்டு, ஆலய சட்டவரம்புகளுக்கு அமைவாக முன்ஸ்ரர் மறைமாவட்டத்தால் அங்கீகாரம் வழங்கப்;பட்டது. இச் சபையின் சகோதரர்கள் மற்றும் அதன் தலைவர், விசேடமாக இறைமகன் கிறிஸ்துவுக்கும் அவரின் அன்னையான புனித மரியாளுக்கும் கத்தோலிக்க ஆலயங்களில் பணிசெய்ய தாமாகவே முன்வந்து தம்மை அர்ப்பணித்துள்ளனர்.

இவர்கள் பொதுவாக கேவலாரில் புனித மிக்காயேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயமான மெழுகுவர்த்தி ஆலயத்தில் தமக்கான அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள். இச்சபையில் திருமணமான 31 உறுப்பினர்கள் அடங்கியிருப்பர்.
இச்சபைக்கு முன்ஸ்ரர் மறைமாவட்ட ஆயரின் பணிப்பின்பேரில், கேவலார் புனித மரியாள் திருத்தல முதல்வர் அவர்கள் பொறுப்பு வகிப்பார், இவரது உதவியாளராக கேவலார் புனித அந்தோனியார் ஆலய அருட்தந்தை பணியாற்றுவார்.

இச்சபைச் சகோதரர்களின் முக்கிய கடமை, கிழமைநாட்களின் மாலைவேளைகளில் கேவலார் மெழுகுவர்த்தி ஆலயத்தில் இடம்பெறும் மரியன்னை போற்றுதல் வழிபாட்டை நடாத்துவதுடன், ஞாயிற்றுக் கிழமைகளில் திருத்தல முதல்வர் அல்லது வேறு அருட்பணியாளர்களுடன் சேர்ந்து வழிபாட்டுக்கு உதவிசெய்வதாகும். அத்துடன் கேவலார் புனித மரியாள் திருத்தலம் மற்றும் புனித அந்தோனியார் ஆலயங்களில் இடம்பெறும் அனைத்துப் பவனிகளின்போதும் மற்றும் வேறு முக்கிய நிகழ்வுகளின் போதும் இச் சகோதரர்களின்சபை அதைச் சிறப்பாக நடத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குவார்கள்.

இச்சபையில் தமிழ் ஆன்மீகப் பணியகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒபகௌசன் பங்கைச் சேர்ந்த திரு. கமிலஸ் துரைசிங்கம் அவர்கள் இவ்வாண்டுத் தொடக்கத்தில் இச்சபை உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டு, அவர் சம்மதத்துடன் இச்சபையில் இணைக்கப்பட்டுள்ளார். இவ்வருட தமிழ் மக்களின் 38வது திருவிழாத் திருப்பலியின் நிறைவில் அனைவர் முன்னிலையில் இவரை இச்சபையில் இணைப்பதற்கான சான்றிதழும், பட்டயமும் கேவலார் திருத்தல முதல்வரால் வழங்கி மதிப்பளிக்கப்படவுள்ளார். இத்தெரிவு தமிழ் ஆன்மீகப் பணியக இயக்குனர், பங்கு மக்கள் அனைவருக்கும் பெரு மகிழ்வைத் தருவதுடன், இறைவனுக்கும் மரியன்னைக்கும் இத் தெரிவை மேற்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முந்தைய அடுத்தது