குருத்துவம்
ஓர் உடலாக விசுவாசிகளை ஒன்று சேர்க்கும்படி, அவர்களில் சிலரை ஆண்டவர் பணியாளர்களாக ஏற்படுத்தினார். அவ்வுடலில் உறுப்புகள் எல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை; (உரோ.12:4) இப்பணியாளர்கள் விசுவாசிகளின் சமூகத்தில் குருத்துவ நிலையின் புனித அதிகாரத்தைக் கொண்டு பலி ஒப்புக் கொடுக்கிறார்கள், பாவங்களை மன்னிக்கிறார்கள், மேலும் குருத்துவ அலுவலை மக்களுக்கு கிறிஸ்துவின் பெயரால் வெளிப்படையாக நிறைவேற்றுகிறார்கள். ஆகவே, தந்தையால் தாம் அனுப்பப்பட்டது போல், கிறிஸ்து மறைதூதர்களை அனுப்பி வைத்தார்.
அதே மறைதூதர்களின் வழியாகவே அவர்களின் வழிவருபவர்களான ஆயர்களுக்குத் தம்முடைய அர்ச்சிப்பிலும் பணியிலும் பங்கு அளித்தார். ஆயர்களோடு சார்ந்து நின்று அவர்களது பணியில் குருக்கள் பங்கு கொள்கிறார்கள். இவ்வாறு குருத்துவ நிலையில் நியமிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவால் ஒப்படைக்கப்பட்ட மறைத்தூதுப் பணியைச் சரிவர நிறைவேற்றும் பொறுட்டு ஆயர் திருநிலையுடன் ஒத்துழைப்பவர்கள் ஆகிறார்கள்.
குருத்துவம் வழியே குருக்கள் தூய ஆவியின் பூசுதலால் ஒரு தனிப்பட்ட முத்திரை கொண்டு குறிக்கப்படுகிறார்கள். இவ்வாறு தலையாகிய கிறிஸ்துவின் பெயரால் செயல்படும்படி, அவர்கள் குருவாகிய கிறிஸ்துவின் சாயலைப் பெறுகிறார்கள். (குருக்களின் பணியும் வாழ்வும், 2)
கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவின் பொது குருத்துவத்தில் பங்கு கொள்கிறோம். நமது சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க அழைக்கப்படுகிறோம்.
இப்பணிக்காக இறைவன் சிலரை தனிப்பட்ட முறையில் அழைக்கிறார். இந்த அழைப்பை பெறுகிறவர்கள் இறைப்பணி செய்வதற்காக தங்கள் வாழ்கையை அர்ப்பணிக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப உறவைத் தவிர்த்து இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்ய சிறப்பாக அழைக்கப்படுகிறார்கள்.
இவ்வழைப்பில் மூன்று நிலைகள் உள்ளன: திருத்தொண்டர் (தியாக்கோன்), குரு, மற்றும் ஆயர். இந்திய திருநாட்டில் இறைப்பணி செய்வதற்கு அதிக பேர் முன்வருவதால் திருத்தொண்டர் பணிக்கென யாரும் தனியாகத் திருநிலைப்படுத்தப்படுவதில்லை. குருவாகப் பயிற்சி பெறும் அனைத்து குருமாணவர்களும் தங்களின் பயிற்சியின் இறுதி ஆண்டிற்கு முந்திய ஆண்டில் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்படுகின்றனர். மேலை நாடுகளில் திருத்தொண்டர் பணிக்கென பயிற்சி பெற்று திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்படுகின்றனர். இத் திருத்தொண்டர்கள் திருமுழுக்கு, திருமணம், நோயில் புசுதல் ஆகிய மூன்று திருவருட்சாதனங்களை நிறைவேற்றலாம். அவர்களின் முக்கிய பணி நற்செய்தி அறிவுப்புப் பணி. இவர்கள் பங்கு பணித்தள குருவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
குருக்களாக திருநிலைப்படுத்தப்படுகிறவர்கள் இரு விதமான வாழ்கை முறையை தெரிந்து கொள்ளலாம். மறைமாவட்ட குருக்களாக தங்களின் ஆயரின் வழிநடத்துதலில், கற்பு, கீழ்படிதல் வாக்குறுதியின் படி வாழ்வார்கள். பொதுவாக தங்களின் சொந்த மறைமாவட்டத்தில் பங்குகளில் அல்லது மறைமாவட்ட நிர்வாகத்தின் ஏதாவது பொறுப்புகளில் பணிபுரிவார்கள். தங்களுடைய ஆயருக்கு கட்டுப்பட்டவர்கள்.
கத்தோலிக்க திருச்சபையில் மறைமாவட்ட குருக்கள் தவிர சபை சார்ந்த குருக்களும் திருநிலைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் சபை எத்தகைய பணி வாழ்வை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதோ, அத்தகைய பணிவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களில் சபைத் தலைவருடைய வழிநடத்துதலின் கீழ் கற்பு, கீழ்படிதல், ஏழ்மை ஆகிய வாக்குறுதியின் படி பொதுவாக இணைந்து (குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர்) பணிசெய்வார்கள்.
உதாரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும் இயேசு சபை குருக்கள், தூய பிரான்சிஸ்கன் அஸிஸி, சலேசிய குருக்கள், பல்வேறு கல்வி, சமூக, நிறுவனங்களிலும், பங்குத் தளங்களிலும் பணிசெய்வதைக் காணலாம். இவர்கள் தங்கள் சபை தலைவருக்கோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பதிலி தலைவருக்கோ கட்டுப்பட்டவர்கள்.
குருக்களின் பணிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: நற்செய்தி அறிவிக்கும் பணி, வழிநடத்தும் பணி, ஆளும் பணி.
குருத்துவத்தின் நிறைவு ஆயராக திருநிலைப்படுத்தப்படுதல். ஆயர் என்பது இயேசு கிறிஸ்துவின் நேரடி அப்போஸ்தலர்களின் வழிவந்தவர். தம்மிடன் ஒப்படைக்கப்பட்ட மந்தையை காத்து வழிநடத்துதல் அவரின் சிறப்புப் பணி. அவருக்கும் நற்செய்தி அறிவிப்பும், வழிநடத்தலும், ஆளும் பணிகளும் முக்கியமானவை.
தேவ அழைத்தல் என்பது இறைவன் அருளும் கொடை. யாரும் அதைப் பெற உரிமை கொண்டாட முடியாது. இறைவன் அழைத்தாலன்றி யாரும் இப்பணிக்கு வர இயலாது; அதில் நிலைத்து நிற்கவும் இயலாது.
குருவாவதற்கு தேவையான முன்னிலை:
பயிற்சி கால கட்டங்கள்:
மொத்தம் குறைந்தது 10 வருடங்கள் பயிற்சி தேவை. மேலும் விபரங்களுக்கு உங்கள் பங்குத் தந்தையை அணுகலாம்; தக்க வழிகாட்டுதலை அளிப்பார்கள்.
"இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." (மத்தேயு 10:42)
இந்த ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப, இறைஅடியார்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். தேவ அழைத்தலுக்காகவும் குருக்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
The Tamil Catholic Website is a faith-based platform dedicated to the Tamil-speaking Catholic community. It provides spiritual resources, daily prayers, Bible readings, church events, and religious articles in Tamil. The website also includes features such as a prayer request form, and community support to help believers stay connected and grow in their faith.
© Tamil Catholic Daily. All Rights Reserved. Developed by DB Media