News

மணிப்பூரில் அமைதி நிலவ ஒன்றிய அரசு முயற்சி!

மத கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்பும் ஒன்றிய அரசின் முயற்சியை பூர்வகுடி கிறித்தவர்கள் வரவேற்றுள்ளதாக கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.


ஜூன் 17 , இத்திங்களன்று, இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் 13 மாதங்களுக்கும் மேலாக வன்முறை ஏற்பட்டதிலிருந்து 220-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், போரிடும் பூர்வகுடி கிறிஸ்தவர்களுக்கும் பெரும்பான்மையான இந்து மெய்தி சமூகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததை வரவேற்கும் விதமாக, இவ்வாறு கூறியுள்ளனர் மணிப்பூர் கிறித்தவர்கள்.

ஜூன் 18, இச்செவ்வாயன்று, இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தலத்திருஅவை அதிகாரி ஒருவர், இது ஒரு நேர்மறையான முயற்சி என்றும், அதற்காக நாங்கள் ஓராண்டிற்கும் மேலாக காத்திருக்கிறோம் என்றும், அரசு தீவிர முயற்சி எடுத்தால், இங்கே அமைதியை மீட்டெடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மேலும் இதுவரையிலும் இங்கு அமைதியைக் கட்டியெழுப்பவதில் அரசு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைள் எதுவும் எடுக்காததால், கிறிஸ்தவ மக்கள் இன்னும் அச்சத்தின் பிடியில் வாழ்வதாகவும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மியான்மாரின் எல்லையில் உள்ள மணிப்பூரில் வன்முறை புதிய பகுதிகளுக்கு பரவி வருவதால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து இத்தகையதொரு அழைப்பு வந்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.


மணிப்பூரின் 32 இலட்ச மக்களில் ஏறக்குறைய 53 விழுக்காட்டினர் மெய்தி இந்துக்கள், 41 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள், முதன்மையாக குகி-சோ பூர்வகுடியினர்.

முந்தைய அடுத்தது