மெட்யுகோரியோவில்(Medjugorje) 2015வது ஆண்டில் அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு



2015-01-02 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! இங்கு நான் உங்கள் தாயாக இருந்து, உண்மையை அறிந்து கொள்ள உதவ விரும்புகிறேன். நான் உலகில் வாழ்ந்தபோது, உண்மையை அறிந்திருந்தேன், இதனால் உலகில் ஒரு மோட்சத்தைக் கண்டுகொண்டேன். ஆகவே இதுபோன்றே நீங்களும் அடையுமாறு எனது பிள்ளைகளே, உங்களை நான் வாழ்த்துகிறேன், வானகத் தந்தை, உண்மைகளைக் கண்டுகொண்டு அதனால் நிரம்பிய தூய இதயத்தையே விரும்புகிறார். அவர், நீங்கள் அனைவரும் ஒருவரை ஒருவரும், சந்திப்போரையும் அன்பு செய்வதை விரும்புகிறார், ஏனென்றால் எனது மகன் உங்கள் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். இதுவே உண்மையைத் தெரிந்துகொள்வதன் ஆரம்பமாகும். உங்களுக்கு பல பிழையான உண்மைகள் தெரிவிக்கப்படும். நீங்கள் அவற்றை நோன்பு, செபம், மன்னிப்பு மற்றும் விவிலிய வார்த்தைகளால் நிரப்பப்பட்ட இதயத்தால் ஒதுக்கிவிடுங்கள். எனது மகன் உங்களுக்கு விட்டுச் சென்றதே ஒரே ஒரு உண்மை, அதை நீங்கள் மதித்து நடந்து கொள்ளுங்கள். நான் எவ்வாறு நடந்து கொண்டேனோ அவ்வாறே அன்பு செய்யவும் பிறருக்கு வழங்கவும் முன்வாருங்கள். எனது பிள்ளைகளே, நீங்கள் உண்மையாக அன்பு செய்வீர்களானால் என்னையும் எனது மகனையும் உங்கள் இதயத்தில் வாழச் செய்வதுடன், எனது மகனின் வார்த்தைகளை உங்கள் வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்வீர்கள். எனது பிள்ளைகளே, நான் உங்களை அன்பின் தூதர்களாகவும், எனது அனைத்துப் பிள்ளைகளுக்கு உதவுபவர்களாகவும் பாவிப்பதுடன் இதன்மூலம் அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளட்டும். எனது பிள்ளைகளே, நான் எப்பொழுதும் எனது மகனின் நோக்கிற்காக செபிக்கிறேன், அதேபோன்று செபிக்குமாறு உங்களையும் கேட்டுக் கொள்கின்றேன். செபியுங்கள், உங்கள் மேய்ப்பர்கள் எனது மகனின் அன்பில் மிளிரட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.



2015-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை அழைக்கிறேன், உங்கள் அழைத்தலை செபத்தின் மூலம் வாழ்ந்து கொள்ளுங்கள். இப்போது, முன்னர் எப்போதும் இல்லாதவாறு, சாத்தான் தொற்றும் காற்றைப் போல மனிதருக்குள் வெறுப்பு மற்றும் அமைதியைக் குலைக்க விரும்புகிறது. இறைவனையும் செபத்தையும் பலர் தேடாததால் பல இதயங்களுக்கு மகிழ்ச்சி இல்லாத நிலை உள்ளது. நாளுக்கு நாள் வெறுப்பும் யுத்தமும் வளர்ந்து செல்கின்றது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நான் உங்களை அழைக்கிறேன், மீண்டும் புனிதத் தன்மை மற்றும் அன்பை ஆச்சரியப்படத்தக்க விதத்தில் கொடுக்க ஆரம்பியுங்கள், இதற்காகவே நான் உங்களிடம் வந்துள்ளேன். ஒன்றிணைந்து அன்பை மற்றும் மன்னிப்பை வழங்குவோம், இதை மனிதத்தன்மையுடன் வாழ விரும்பும் அனைவரும் அறிவார்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நாளை நன்றாக அமையும் என்ற நம்பிக்கையை எப்போதும் உங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளுங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக.



2015-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் இங்கு உங்களோடு உள்ளேன். நான் உங்களைப் பார்க்கிறேன், உங்களைப் பார்த்துச் சிரிக்கிறேன், உங்களை அன்பு செய்கிறேன், அதாவது ஒரு தாய் செய்வது போன்று. தூய ஆவியானவர் ஊடாக, அவர் தூய்மையில் இருந்து வருபவர், உங்கள் இதயத்தைப் பார்ப்பதுடன் உங்களை எனது மகனிடம் அழைத்துச் செல்கிறார். பல காலம் தொடக்கம், நீங்கள் எனது தூதுவர்களாக செயற்பட்டு கடவுளை அறியாதவர்களுக்காக செபிக்குமாறு முயற்சித்தேன். செபங்கள் அன்பாகவும், செயல்களை செய்து அதிலிருந்து பலன் கிடைக்கும் செபங்களாகவும் இருக்க வேண்டுமெனத் ஆசிக்கிறேன். ஆகவே அதைப்பற்றி எண்ணி நேரத்தை வீணே செலவழியாது, நீங்கள் எனது தூதுவர்களாக இருப்பதற்குத் தயாராக உள்ளீர்களா என்பதை அறிய விரும்புகிறேன். வானகத் தந்தை ஒவ்வொர்வருக்கும் தீர்ப்பளிப்பார், ஆனால் நீங்கள் அவருடன் அன்பாகவும் அவரைப் போற்றுபவர்களாகவும் உள்ளீர்கள். எனக்குத் தெரியும் இவை அனைத்தும் உங்களை குழப்பமடையைச் செய்யலாம், ஆனால் நான் இங்கு வருகைதந்து உங்களுடன் இருப்பதற்கு மகிழ்ச்சியுடனும் செபத்துடனும் மன்றாடுங்கள், இதன்மூலம் நீங்கள் மறு உலகிற்காக செயற்பட ஆயத்தமாக உள்ளீர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். எனது அன்பு உங்கள் மேல் உள்ளது. செபியுங்கள், எனது அன்பு அனைத்து இதயங்களையும் வெல்லட்டும், அந்த அன்பு மன்னிப்பாக மாறட்டும், அது முடிவில்லாமல் தொடரட்டும். நான் நன்றி கூறுகிறேன்.



2015-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இரக்கத்தின் காலமான இவ்வேளையில் நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது: அதிகம் செபியுங்கள் மற்றும் குறைவாகப் பேசுங்கள். செபத்தின்போது இறை சித்தத்தைத் தேடுவதுடன் இறைவன் வழங்கிய கற்பனைகளின்படி வாழ்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுடன் சேர்ந்து செபிக்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றவதற்கு!



2015-03-18 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

செறின் மிர்ஜானா றாகிசேவிச்-சொல்டோ 24 ஆனி 1981 தொடக்கம் 25 மார்கழி 1982 வரையாக நாளாந்தம் மரியன்னையின் காட்சிகளைப் பெற்றார். இறுதி நாட்களில் இடம்பெற்ற காட்சிகளின்போது இறை அன்னை, தனது 10வது மறை உண்மையில் நம்பிக்கை கொண்ட இவளுக்கு, வருடத்தில் ஒருமுறை, அதாவது பங்குனி 18ல், காட்சி கொடுப்பதாக வாக்களித்தார். அப்படியே ஒவ்வொரு வருடமும் நிகழ்வதுடன் இவ்வருடமும் நிகழ்ந்தது. பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் செபமாலை வழிபாட்டில் ஒன்றுகூடியிருந்தனர். காட்சி 13.47க்கு ஆரம்பித்து 13.53 வரையாக இடம்பெற்றது. அன்பான பிள்ளைகளே! நிரம்பிய இதயத்தோடு தயவாக நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், தயவாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், எனது பிள்ளைகளே, உங்கள் இதயத்தை பாவத்திலிருந்து கழுவிக்கொள்வதுடன் கடவுளுக்கும் நிலையான வாழ்விற்கும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்பதாகும். நான் தயவாகக் கேட்டுக்கொள்வது, நீங்கள் விழித்திருப்பதுடன் உண்மையின் வழியில் நடந்து கொள்ளுங்கள். உலக மாயைகளுக்கும், எனது மகனிடமிருந்து உங்களை விலக வைக்கும் கூட்டு முயற்சிகள் அனைத்திற்கும் இடம்கொடுக்காதீர்கள். நான் உங்களை நிறைந்த அறிவுள்ளவர்களாக வழிநடத்துவேன், இதன்மூலம் நீங்கள் உண்மையான சமாதானத்தைக் கண்டுகொள்வீர்கள். நேரத்தை இழந்துவிடாதீர்கள், உரிய காலத்திலேயே நீங்கள் வானகத் தந்தையிடம் ஒரு அடையாளத்தைத் தயவுடன் கேளுங்கள். அவர் ஏற்கனவே உங்களுக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்துள்ளார்: அது தான் எனது மகன். ஆகவே, எனது பிள்ளைகளே, செபியுங்கள், இதன்மூலம் தூயஆவி உங்களை உண்மையில் வழிநடத்துவதுடன், அவர் உங்களை அறிந்துகொண்டு, வானகத் தந்தையும் எனது மகனும் உங்களை மேலும் விரும்பச் செய்வார். இதுவே உலகில் ஒரு மகிழ்ச்சியைத் தரும் ஒரு வெளிப்பாடு, நிலையில்லா வாழ்விற்கான கதவு மற்றும் எல்லையில்லா அன்புக்குத் திறவுகோல். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.



2015-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் அனைத்திலும் உயர்ந்தவர் என்னை, உங்களுடன் இருப்பதற்கும் உங்களை மனம்திரும்பும் வழியில் நடத்துவதற்கும் அனுமதித்துள்ளார். அநேக இதயங்கள் இரக்கத்தின் முன்பாக தம்மை மூடிக்கொள்வதுடன் எனது அழைப்பிற்கும் தமது காதுகளை மூடிக்கொள்கின்றன. எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் செபிப்பதுடன் சோதனைகளுக்கு எதிராகவும், புதுமைப்படுத்துவது என்ற பெயரில் சாத்தான் வழங்கும் தவறான திட்டங்களுக்கு எதிராகவும் போராடுங்கள். நீங்கள் செபத்தில் உறுதியாக இருப்பதுடன் கைகளில் சிலுவையை வைத்துக் கொள்ளுங்கள், செபியுங்கள், சாத்தான் உங்களைப் பயன்படுத்தாமலும் வெற்றிகொள்ளாமலும் இருக்கட்டும். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக செபிக்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!



2015-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை நலமான வழியில் நடத்திச்செல்ல உங்களுடன் உள்ளேன். உங்கள் ஆன்மா சலனப்படுகின்றது, ஏனென்றால் எண்ணங்கள் பலவீனமானவையாகவும் அனைத்து முரண்பாடான விடயங்களாலும் இளைத்துப்போயுள்ளது. எனது அன்பான பிள்ளைகளே, தூய ஆவியிடம் மன்றாடுங்கள், அவர் உங்களில் மாற்றங்களைக் கொணர்ந்து அவரது விசுவாசம் எனும் பலத்தால் உங்கள் நம்பிக்கையை திடமாக்குவார், இதன்மூலம் நீங்கள் சாத்தானுக்கு எதிரான போரில் உறுதியாக இருப்பீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவிடம் மன்றாடுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!



2015-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் இதயங்களைத் திறப்பதுடன் நான் உங்களை எவ்வாறு விருப்பத்துடன் அதிகம் அன்பு செய்கிறேனோ, அதேபோன்று எனது மகனையும் நீங்கள் அன்பு செய்வதை உணர முயலுங்கள். நீங்கள் அவரை நன்கு அறிந்து கொள்வதை நான் விரும்புகிறேன் - அதாவது அவரே அன்பின் வடிவம். நான் உங்களை அறிவேன் எனது பிள்ளைகளே. நான் உங்கள் வேதனைகள் மற்றும் துன்பங்களை அறிவேன், இவைகளை நான் அனுபவித்துள்ளேன். நான் உங்கள் மகிழ்வில் சிரிப்பதுடன், உங்கள் வேதனைகளில் உங்களுடன் சேர்ந்து அழுகின்றேன். நான் உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டேன். நான் எப்போதும் தாயின் பரிந்துரையை உங்களுக்காக செய்து கொள்வேன். எனக்கு அதாவது, தாய்க்கு, உங்கள் திறந்த இதயமே தேவைப்படுகின்றது, இதன்மூலம் நீங்கள் அறிவாற்றலையும் எளிமையையும் எனது மகனின் அன்பில் பரவச்செய்வீர்கள். எனக்கு உங்கள் திறந்த, நலமான மற்றும் இரக்கமுள்ள உள்ளம் தேவைப்படுகின்றது. நீங்கள் எனது மகனுடன் ஒன்றித்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் எனது அனைத்துப் பிள்ளைகளுடனும் அதிஸ்டத்தை பகிர்ந்து கொள்வதில் எனக்கு உதவுங்கள். எனது தூதர்களே, எனக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள், இதன்மூலம் எனது இதயம், அன்று எத்தனையோ துன்பங்களை அனுபவித்தது, இன்றும் அனுபவித்துக்கொண்டிருப்பது, அன்பில் வெற்றி கொள்ள முடியும். உங்கள் ஆயர்களின் தூய வாழ்விற்காக மன்றாடுங்கள், இதன்மூலம் அவர்கள் எனது மகனின் பெயரால் அற்புதங்களை ஆற்ற முடியும், ஏனென்றால் தூய வாழ்வு அற்புதங்களை ஏற்படுத்தும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.



2015-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களுடன் இருப்பதுடன் மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்: செபியுங்கள் மற்றும் செபத்தின் பலத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் இதயத்தை திறவுங்கள் எனது அன்பான பிள்ளைகளே, இறைவன் அதைத் தனது அன்பால் நிரப்புவதுடன் அதன்மூலம் நீங்கள் மற்றவர்களுக்கு மகிழ்வைக் கொடுங்கள். உங்களுக்கான சான்றிதழ்கள் பலமாக இருப்பதுடன், நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும், இறைவனைப் போன்று மென்மையானவைகளாக இருக்கட்டும். நீங்கள் மனம்திரும்பி இறைவனை முதல் இடத்தில் வைக்கும் காலம் வரை, நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக செபித்துக்கொள்வேன். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!



ஜூன் 2, 2015 அன்று மிர்யானாவுக்கு அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே! நான் உங்கள் வழியாக செயல்பட ஆவலாய் இருக்கிறேன் என் பிள்ளைகளே, என் சீடர்களே. இறுதிநாளில் நமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மகிழ்வான இடத்திற்கு உங்களை கூட்டிச்சேர்ப்பேன். நான் உங்களுக்காக செபிக்கிறேன். உங்கள் நற்செயல்கள் மூலம் மற்றவர்களை மனமாற்றுங்கள். ஏனென்றால் மனுமகனின் காலம் வந்துவிட்டது, உண்மையின் காலம் அண்மித்துவிட்டது. என் அன்பு உங்களில் செயல்படும். நான் உங்களை கருவியாக பயன்படுத்துவேன். என் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள். நான் ஆசைப்படுவது அனைத்தும் உங்களின் நன்மைக்கே; விண்ணகத்தந்தை ஏற்படுத்திய முடிவில்லா நன்மைக்கே. என் பிள்ளைகளே! என் சீடர்களே! நீங்கள் இயேசுவின் அன்பை அறியாதவர்களோடும், என்னை அம்மா என்று அழைக்காதவர்களோடும் இம்மண்ணுலகில் வாழ்ந்துவருகிறீர்கள். ஆனால் அவர்கள் முன் உண்மையின் சாட்சியாக இருக்க பயப்படாதீர்கள். அஞ்சாத, தைரியமான சாட்சியாக இருக்கும்போது, உண்மை ஒருநாள் வெல்லும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நம் பலம் அன்பில்தான் இருக்கிறது. அன்பு என்றால் மனமாற்றம், அன்பு என்றால் மன்னிப்பு, அன்பு என்றால் செபம், அன்பு என்றால் தியாகம், அன்பு என்றால் இரக்கம், கருணை. உங்கள் செயல்கள், பணிகள் வழியாக எப்படி மற்றவரை அன்பு செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தால், மற்றவரை மனமாற்றுவது எளிது. மற்றவரின் ஆன்மாவில் இயேசுவின் ஒளியைப் பாய்ச்சுவதும் எளிது. உங்களுக்கு நன்றி. உங்களுடைய ஆயர்களுக்காக, குருக்களுக்காக செபியுங்கள். அவர்கள் என் மகனைச் சார்ந்தவர்கள். ஏனென்றால் அவரே அவர்களை அழைத்தார். குருக்களுக்காகவும், ஆயர்களுக்காகவும் செபியுங்கள். நற்செய்தி அறிவிக்க ஆற்றலையும், தைரியத்தையும் இயேசு அவர்களுக்கு அருள செபியுங்கள்.



2015-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் அனைத்திலும் வல்லவர், நான் உங்களை நேசிக்கவும் மனம்திரும்புமாறு அழைக்கவும் எனக்கு இரக்கத்தைத் தந்துள்ளார். எனது அன்பான பிள்ளைகளே, கடவுளை விரும்புவதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும், யுத்தமும் அமைதியின்மையும், கவலையும் இல்லாமல் மகிழ்வும் சமாதானமும் அனைத்து மனித இதயங்களிலும் குடிகொள்ள ஆரம்பிக்கட்டும், ஆனால் கடவுளின் துணை இல்லாமல் நீங்கள் ஒருபோதும் அமைதியைக் காணப்போவதில்லை. ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, இறைவன் பக்கம் செபத்தோடு திரும்புங்கள், அதனால் உங்கள் இதயம் மகிழ்வுடன் இசைபாடும். நான் உங்களுடன் இருப்பதுடன், அளவிடமுடியாத வகையில் உங்களை நான் அன்பு செய்கிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!



ஜுலை 2, 2015 அன்று மிர்யானாவுக்கு அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

பாசமுள்ள என் பிள்ளைகளே! என் மகனின்மீது உங்களுக்குள்ள விசுவாசத்தை பரப்பவே நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் தூய ஆவியாரின் ஒளியால் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள். அதை விசுவசியாத, அறியாத மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள். இது கடவுளின் அன்பான கொடை. ஆனால் அதற்காக நீங்கள் நிறைய செபிக்கவேண்டும். அன்பே உண்மையான விசுவாசத்திற்கு ஆதாரம். நீங்கள் அன்பின் சீடராயிருப்பீர்கள். மகிழ்வினையும், பாடுகளையும் ஒருசேர நினைவுகூறும் திருவிருந்தை தினமும் புதுப்பியுங்கள். திருவிருந்து இயேசுவின் பாடுகளை புதுப்பித்து, இயேசு நம்மை எவ்வளவு அன்பு செய்தார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. திருவிருந்தின் வழியாக நமக்கு கிடைக்கும் ஆன்மீக உணவு நமக்கு மகிழ்வையும் தருகிறது. திருவிருந்தின் வழியாக நாம் அவரோடு ஒன்றித்திருக்கிறோம். உங்களை உறுதியான விசுவாசத்திற்கு அழைத்துச்செல்ல உங்கள் மீது கொண்டுள்ள என் அளவில்லா அன்பு என்னை பலப்படுத்துகிறது. இதுவே என் விருப்பம். ஏனெனில் அவரில் வாழுங்கள், அன்பில் வாழுங்கள், உங்களை ஒளிர செய்யும் ஒளியாய், திருவிருந்தாய் வாழுங்கள். உங்கள் ஆயர்களுக்காகவும், குருக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். அவர்கள் இயேசு அளித்த அன்பில் வாழ செபியுங்கள். அந்த அன்பை அவர்கள் மற்றவர்களுக்கு அறிவிக்க செபியுங்கள். அவர்களை அன்பு செய்யுங்கள். அன்பு என்பது தாங்குவது, பொறுத்துக்கொள்வது, கொடுப்பது. ஆகவே அவர்களை தீர்ப்பிடாதீர்கள். உங்களுக்கு நன்றி!



2015-07-25 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களோடு மகிழ்வடைந்து அழைக்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, அனைவரும் விழித்தெழுங்கள், செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள், இதனூடாக எனது அன்பை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். எனது அன்பு பலமானது. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, ஆகவே நீங்கள் இறைவன் அருகே வாருங்கள் இதனூடாக நீங்கள் எனது இறை மகிழ்வை உணர்வீர்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இறைவன் இன்றி உங்களுக்கு எதிர்காலமில்லை, உங்களுக்கு நம்பிக்கையில்லை, உங்களுக்க மீட்பில்லை, ஆகவே தீமைகளை விட்டு நல்லவற்றைத் தெரிவுசெய்யுங்கள். நான் உங்களோடு இருப்பதுடன் உங்களுக்காக இறைவனிடம் உங்கள் தேவைகள் அனைத்திற்குமாக மன்றாடுவேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!



ஆகஸ்ட் 2, 2015 அன்று மிர்யானாவுக்கு அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பு பிள்ளைகளே! எவ்வளவு கடினமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான், உங்களை அன்பு செய்யும் தாயாக உணர்ந்திருக்கிறேன். நான் உங்களின் வேதனைகளை காண்கிறேன். ஆனால் நீங்கள் தனிமையில் இல்லை. என் மகன் எப்போதும் உங்களோடு இருக்கிறார். எங்கும் இருக்கிறார். அவர் காணக்கூடியவரல்ல. ஆனாலும் அவர் வழி வாழ்ந்தால் அவரை காணலாம். உங்களின் ஆன்மாவை ஒளிர்விக்கும் ஒளி அவரே. உங்களுக்கு அமைதி அருள்பவரும் அவரே. அவரே திருச்சபை. அத்திருச்சபையை அன்பு செய்யுங்கள். அத்திருச்சபைக்காக செபியுங்கள். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, அன்பான செயல்பாடுகளைக் கொண்டு இவ்வுலகில் போராடுங்கள். என் மகனின் அன்பை மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள். இயேசுவை அன்பு செய்ய தூண்டுங்கள். ஏனென்றால் அவரில் உண்மை இருக்கிறது. அவரே நமக்காக பிறந்த கடவுளின் மகன். பேசியே காலத்தை வீணடிக்காதீர்கள். இதனால் உண்மையை விட்டு விலக நேரிடும். எளிமையான உள்ளத்தோடு வார்த்தையை நம்புங்கள், வாழுங்கள்.. வார்த்தையை வாழ்பவர்கள் செபம் செய்வார்கள். வார்த்தையை வாழ்ந்தால், நீங்கள் பிறரை அன்பு செய்வீர்கள். எவ்வளவுக்கு அன்பு செய்கிறீர்களோ, அவ்வளவுக்கு மரணத்தைவிட்டு தொலைவில் இருப்பீர்கள். இயேசுவின் வார்த்தையை வாழ்பவர்கள் அன்பின் மூலம் மரணத்தையும் வென்று வாழ்வார்கள். உங்களுக்கு நன்றி. இறைமகன் இயேசுவை ஆயர்களில், குருக்களில் காண அவர்களுக்காக செபியுங்கள். இயேசுவை அரவணைத்துச் செல்ல அவர்களுக்காக செபியுங்கள்.



2015-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை செபிக்குமாறு அழைக்கிறேன். உங்கள் செபங்கள் இறைவனைச் சந்திப்தற்கான செட்டைகளாக இருக்கட்டும். உலகம் இறைவனை மறப்பதும் விட்டு விலகுவதும் இன்றைய சோதனைகளாக உள்ளது. ஆகவே எனது அன்பான பிள்ளைகளே நீங்கள் ஒவ்வொருவம் இறைவனைத் தேடுவதுடன் அவரை அன்பு செய்யுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களை எனது மகனிடம் அழைத்துச் செல்வேன், ஆனால் நீங்கள் வெளிப்படையாக இறைவனின் பிள்ளைகளென உங்களை வெளிப்படுத்த வேண்டும். நான் உங்களுக்காகப் பரிந்து பேசுவதுடன் உங்களை முடிவில்லாமல் அன்பு செய்கிறேன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே. நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!



2015-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே! எனது அன்புத் திருத்தூதர்களே, உண்மையைத் தாங்கிச் செல்லும் எனதவர்களே, மீண்டும் நான் உங்களை என்னிடம் ஒன்றுகூடுமாறு அழைக்கிறேன். இதன்மூலம் நீங்கள் அன்புக்கும் உண்மைக்கும் ஏங்கித் தவிக்கும் பிள்ளைகளுக்கு - அதாவது எனது மகனைப்பற்றி அறிந்து கொள்ளத் தாகத்துடன் இருப்பவர்களுக்கு உதவுங்கள். நானே, எனது மகனின் வார்த்தையாக, வானகத்தந்தையால் இரக்கத்துடன் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளேன். நானும் உங்களைப்போன்று குழப்பமான வாழ்க்கையை வாழ்ந்தவள். அத்துடன் அது எளிதானதல்ல என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதுடன், இதயத்தால் செபித்தால் நீங்கள் தியானத்தில் உயர்நிலையை அடைவதுடன் உங்களுக்காக விண்ணகத்துக்கான வழிகள் திறக்கப்படும். அங்கு உங்கள் அன்னையான நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். நீங்கள் எனது மகனுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதுடன் மற்றவர்களுக்கும் பிரமாணிக்கமாக நடந்து கொள்ளுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன், உங்களுக்கு உதவுவேன். நான் உங்களுக்கு உண்மையைக் கற்பிப்பதால், நீங்கள் வித்தியாசத்தை உணர்ந்து கொள்வீர்கள். உங்களுக்கு அன்பைக் காட்டுவதால் எது உண்மையான அன்பு என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். எனது பிள்ளைகளே, எனது மகன் உங்களது வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு நிச்சயமாக செவிமடுப்பார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.



2015-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் தூய ஆவியானவரிடம் உங்கள் இதயங்களை உறுதியான விசுவாசத்தால் நிரப்புமாறு வேண்டுகிறேன். மன்றாட்டுக்களும் நம்பிக்கையும் உங்கள் இதயங்களை அன்பாலும் மகிழ்வாலும் நிரப்புவதுடன், இறைவனிடமிருந்து தூர இருப்போருக்கு அவை ஒரு அடையாளமாக இருக்கட்டும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, ஒருவர் ஒருவருக்காக இதயத்தால் செபியுங்கள், இதனால் செபங்கள் உங்கள் வாழ்வை மலரச்செய்வதுடன், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, ஒவ்வொரு நாளும் அனைத்திற்குமாக சாட்சிகளாக இருந்து, இறைவனிடம் செபித்து மற்றவர்களின் தேவைகளுக்கு உதவுங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்குமாக வேண்டிக்கொள்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!



2015-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் இங்கு, உங்களை உற்சாகப்படுத்த, உங்களை எனது அன்பினால் நிரப்ப மற்றும் புதியவற்றை வெளிப்படுத்த, எனது மகனின் அன்புக்கு சாட்சிகளாக வாழ உங்களோடு உள்ளேன். எனது பல பிள்ளைகளுக்கு நம்பிக்கையில்லை, அமைதியில்லை, அன்பு இல்லை. அவர்கள் எனது மகனைத் தேடுகின்றார்கள், ஆனால் எப்படி மற்றும் எங்கு அவரைக் காணலாம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எனது மகன் அவர்களுக்காகத் தனது கைகளை அகல விரித்துள்ளார், அவரது கைகளுக்குள் அவர்கள் வருவதற்கு நீங்கள் உதவவேண்டும். ஆகவேதான் எனது பிள்ளைகளே நீங்கள் அன்புக்காக செபிக்க வேண்டும். நீங்கள் மேலும் அதிகமாக செபிக்க வேண்டும், அதன்மூலம்; அன்பு அதிகரித்து, மரணத்தை வெற்றி கொண்டு வாழ்வை தொடரச் செய்யட்டும். எனது அன்புத் திருத்தூதர்களே, எனது பிள்ளைகளே, நீங்கள் ஒருவர் ஒருவரைவிட்டுத் தொலைவில் இருந்தாலும், உங்கள் இதயத்தை இலகுவாக ஒருமனப்படுத்திச் செபத்தில் ஒன்றிணையுங்கள். நான் உங்களை உற்சாகப்படுத்துவது போன்று நீங்களும் ஆவியின் வல்லமையால் ஒருவர் ஒருவரை உற்சாகப்படுத்துங்கள். நான் உங்களுக்குக் காவலாக இருப்பதுடன், நீங்கள் என்னை நினைக்கும் போதெல்லாம் நான் உங்களுடனேயே இருப்பேன். உங்கள் மேய்ப்பர்களுக்காகவும் செபியுங்கள், அவர்கள் எனது மகனுக்காகவும் மற்றும் உங்களுக்காகவும் அனைத்தையும் துறந்தவர்கள். அவர்களை அன்பு செய்வதுடன் அவர்களுக்காக செபியுங்கள். வானகத் தந்தை உங்கள் செபங்களைக் கேட்பார். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்."



2015-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது செபம் இன்றும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக, அனைத்திலும் முதலாக, எனது அழைப்பைக் கேட்டும் கடின இதயத்துடன் இருப்பவர்களுக்கு எனது செபம் உதவட்டும். இறைவன் எனது பிரசன்னத்தால் வழங்கும் இரக்கத்தில் நீங்கள் நாளாந்தம் வாழ்வதோடு அவர் உங்களுக்கு வழங்கும் கொடைகளையும் நினைவிற் கொள்ளுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இன்றும் நீங்கள் தூயவர்களாக இருப்பதற்கு முடிவுசெய்வதுடன், இன்றைய காலத்தின் புனிதர்களை உதாரணமாகக் கொள்ளுங்கள், இதன்போது நீங்கள் அனைவரும் புனிதத்துவத்தின் உண்மை எதுவென்பதை அறிந்து கொள்வீர்கள். அன்பில் மகிழுங்கள் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, கடவுளின் பார்வையில் நீங்கள் இன்னுமொருமுறை உருவாக்க முடியாத மற்றும் மாற்ற முடியாதவர்கள், ஏனென்றால் நீங்கள் இவ் உலகில் இறைவனின் மகிழ்வாய் உள்ளீர்கள். அமைதிக்கும் அன்பிற்கும் சாட்சிகளாக வாழுங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“



2015-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் புதிதாக உங்களுடன் அன்பு குறித்து பேச விரும்புகிறேன். நான் உங்களோடு எனது மகனின் பெயராலும் அவரது விருப்பினாலும் ஒன்றுகூடியுள்ளேன். அன்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் உங்கள் நம்பிக்கை உறுதியாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனது மகனின் அன்பைப் புரிந்து கொண்டு அவரைப் பின்தொடரும் எனது ஒவ்வொரு பிள்ளையும் அன்பிலும் நம்பிக்கையிலும் வாழ்வார்கள். அவர்கள் இறைவனின் அன்பை கண்டறிந்தவர்கள். ஆகவே, எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், மேலும் அன்பிலும் மற்றும் அன்புச் செயல்களிலும் ஈடுபடுங்கள். நம்பிக்கை தனியாக அன்பிலும் மற்றும் அன்புச் செயல்களிலும் இல்லாமல் இருப்பதை நான் எதிர்பார்க்கவில்லை. எனது பிள்ளைகளே, இது நம்பிக்கையின் மறுஉருவமாகும். இது சொந்தமாகப் பாராட்டப்பட வேண்டியது. எனது மகன் நம்பிக்கையையும் செயற்பாடுகளையும், அன்பையும் நன்மையையும் தேடுகிறார். நான் செபிப்பதுடன் உங்களிடம் இரந்து கேட்பது, செபியுங்கள் மற்றும் அன்பில் வாழுங்கள், ஏனென்றால் நான் விரும்புகிறேன், எனது மகன், எனது பிள்ளைகளின் இதயத்தைப் பார்க்கும்போது, அவர்களில் அன்பையும் நன்மையையும் காணவேண்டுமே தவிர வெறுப்பையும் வேறுபாடுகளையும் அல்ல. எனது பிள்ளைகளே, எனது அன்பின் தூதர்களே, நம்பிக்கையை இழக்காதீர்கள், பலத்தை இழக்காதீர்கள். இது உங்களால் முடியும். நான் உங்களை உற்சாகப்படுத்துவதோடு உங்களை ஆசீர்வதிக்கிறேன். பல்வேறு உலக மாயைகளுக்கு, எனது பல பிள்ளைகள் முதல் இடம் கொடுக்கின்றனர், இவை அழிந்துவிடும், ஆனால் அன்பும் அன்புச் செயற்பாடுகளுமே தொடர்ந்து நிலைப்பதோடு வானக அரசின் கதவுகளை திறக்கச் செய்யும். அந்தக் கதவுகளில் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். அந்தக் கதவில் நான் எனது பிள்ளைகள் அனைவரையும் வரவேற்பதோடு கட்டியணைத்துக் கொள்வேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் ".



2015-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்கள் அனைவரையும் எனது விடயத்திற்காக செபிக்குமாறு அழைக்கிறேன்: அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, ஆகவே எனது பிள்ளைகளே, சாத்தான் தாக்கி அனைத்து வழிகளிலும் முயன்று அமைதியைக் குலைக்கும் இவ் உலகில் செபிப்பதுடன் சமாதானத்தையும் நம்பிக்கையையும் எடுத்துச் செல்பவர்களாக வாழுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபிப்பதில் உறுதியாகவும் இறை நம்பிக்கையில் துணிவுடனும் இருங்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் எனது மகன் இயேசுவிடம் உங்கள் அனைவருக்காகவும் பரிந்து பேசுகிறேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“



2015-12-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பார்ந்த பிள்ளைகளே! நான் என்றும் உங்களோடு உள்ளேன், ஏனென்றால் எனது மகன் உங்களில் நம்பிக்கை கொண்டுள்ளார். அத்துடன் எனது பிள்ளைகளே, உங்களுக்கு நான் தேவைப்படுகின்றேன், நீங்கள் என்னைத் தேடுகின்றீர்கள், நீங்கள் என்னிடம் வருவதுடன் எனது தாய்க்குரிய இதயத்தால் மகிழ்வடைகின்றீர்கள். உங்களுக்காக, உங்கள் துன்பங்கள் வேதனைகள் மற்றும் எனது மகனின் பாடுகளையும் என்னிடம் கொண்டுவருவதால், நான் என்றும் எப்பொழுதும் உங்களுக்காக அன்பைக் கொண்டுள்ளேன், அன்பிற்கு ஊடாக இயேசு வானகத்திற்கும் பூமிக்கும், எனது பிள்ளைகளுக்கும் – அவரது மக்களுக்கும் இடையே ஒன்றிணைவைத் தேடுகிறார், ஆகவே அனைவரும் நன்கு செபிக்க வேண்டும், தாம் சார்ந்துள்ள மறைகள் ஊடாக செபிக்க வேண்டும். தற்போது திருச்சபை துன்பப்படுகின்றது அதற்கு திருத்தூதர்கள் தேவைப்படுகின்றார்கள், ஒன்றிணைந்து வாழ்ந்து, கடவுளின் வழியைக் காட்டுவதற்கு சான்று பகர்பவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். திருத்தூதர்கள் தேவைப்படுகின்றார்கள், அவர்கள் திருப்பலியை இதயத்தால் போற்றி வாழ்பவர்களாகவும் பெரும் செயல்களை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் எனது அன்பின் திருத்தூதர்களே. எனது பிள்ளைகளே, திருச்சபை ஆரம்பம் முதற்கொண்டே துன்பப்படுத்தப்பட்டது மற்றும் காட்டிக்கொடுக்கப்பட்டது, ஆனால் நாளுக்கு நாள் அது வளர்ந்து செல்கின்றது. அதை உடைத்துவிட முடியாது, ஏனென்றால் நீங்கள் எனது மகனுக்கு உங்கள் இதயத்தைக் கொடுத்துள்ளீர்கள் - திருப்பலி மூலமாக அவரது உயிர்ப்பின் ஒளி உங்கள் மீது ஒளிரட்டும். ஆகவே நீங்கள் அச்சமடைய வேண்டாம். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், அவர்கள் பலமும் அன்பும் கொண்ட குணமாக்கும் பாலமாகத் திகழட்டும். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்“



2015-12-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்வதுடன் எனது அரணைப்பில் உங்களுக்கு நான் அவரது சமாதானத்தையும் வானகம் குறித்த பேரவாவையும் வழங்குகின்றேன். நான் உங்களுடன் சேர்ந்து சமாதானத்திற்காக செபிக்கின்றேன் சமாதானத்தில் நிலைத்திருக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். நான் உங்கள் அனைவருக்கும் அன்னையின் சமாதான ஆசீரை வழங்குகின்றேன். நன்றி நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!