இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

பரிவின் பரிமாணங்கள்

எரேமியா 23:1-6
எபேசியர் 2:13-18
மாற்கு 6:30-34

'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ, பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள்ஒளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே, சிவபெருமானே யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன், எங்கு எழுந்தருளுவது இனியே?'

இன்றைய இறைவாக்கு வழிபாட்டின் வாசகங்களைப் படிக்கும்போது மேற்காணும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்தான் (திருவாசகம், எட்டாம் திருமுறை, பாடல் எண் 9) நினைவிற்கு வருகிறது. இந்தப் பாடலின் பொருளறிந்து, பின் இதன் பொருத்தத்தை அறிவோம்.

குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய பாலை நினைவுகூர்ந்து ஊட்டும் தாயைவிட பரிந்து, இரக்கம் காட்டி, பாவி எனது உடலை உருக்கி, உள் ஒளியை பெருக்கி, அழிவில்லாத மகிழ்ச்சி என்னும் தேனைப் பொழிந்து, எனக்கு வெளியே நான் தேடிய என் செல்வமே உன்னைத் தொடர்ந்து வந்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன் - என்னுள்ளே உன்னைக் கண்டேன். இனி நீ எங்கே எழுந்தருள்வாய்?

இங்கே இது சைவத்திருமுறையின் பாடல் அல்லது சிவனை நோக்கிய பாடல் என்ற குறுகிய பார்வையை நாம் விலக்கி, நம் தமிழ்மண்ணில் எழுந்த ஓர் ஆன்மீகப்பாடல் என்று நம் பார்வையை விரித்தால்தான் இதன் பொருளை நாம் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும்.

எப்படி?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 6:30-34) இயேசு பணிக்கு அனுப்பிய சீடர்கள் அவரிடம் திரும்பி வருகின்றனர். திரும்பி வந்து தாங்கள் சொன்னது, செய்தது அனைத்தையும் இயேசுவிடம் ஒப்புவித்தபோது, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்கிறார். இது இயேசுகாட்டும் பரிவின் முதல் பகுதி. அதாவது, வேலை, மக்கள், பணி, ஓட்டம், பேய், நோய் என்று இருந்தவர்கள்மேல் பரிவுகாட்டும் இயேசு அவர்களை ஓய்விற்கு அழைக்கின்றார். 

இந்த ஓய்வு எதற்காக? 'இவ்வளவு நாள் உண்பதற்குக் கூட நேரமில்லை. இனி உண்ணுங்கள்' என்று சொல்வதற்காகவா? இல்லை. இயேசு ஓய்விற்கு அனுப்பும் இடம் பாலைவனம். அவர் அவர்களை பழமுதிர்ச்சோலைக்க அனுப்பினால் அவர்கள் உடல் பெருகும். ஊட்டம் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் ஒன்றும் கிடைக்காது. அங்கே ஊன் (உடல்) உருகும். உள்ஒளி பெருகும். ஆக, மாணிக்கவாசகரின் இறைவன் அவருடைய 'ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, அழிவில்லாத ஆனந்தம் அருள்வதாக' பாடுகிறார். பாலைநிலத்தில் திருத்தூதர்கள் இந்த மூன்றையும் தான் பெற்றுக்கொள்கிறார்கள்: (அ) அவர்களின் உடல் உருகும் - ஆக, உடலையும் கடந்த ஒன்று இருப்பதாக அவர்கள் கண்டுணர்வார்கள், (ஆ) உள் ஒளி பெருகும் - நம் உள்ளத்தில் இருக்கும் இயல்பாகவே அங்கே இருக்கிறது. அது எப்போது பெருகுகிறது என்றால், நாம் தனியாக அமர்ந்து நம்மையே ஆய்ந்து, 'நான் இது அல்ல. அது அல்ல' என்று ஒவ்வொரு அடையாளத்தைக் களையும்போது. (இ) அழிவில்லாத ஆனந்தம் - திருத்தூதர்கள் தங்கள் பணி அனுபவத்தில் கண்ட அல்லது பெற்ற அனுபவங்கள் எல்லாம் அழியக்கூடியவை. ஒரு இடத்தில் நேர்முக அனுபவம் கிடைத்து, வேறிடத்தில் எதிர்மறை அனுபவம் கிடைத்தால், அல்லது ஒரு இடத்தில் மக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள, மற்றோர் இடத்தில் வெறுத்து விலக்கினால் மகிழ்ச்சி சட்டென மறைந்துவிடுகிறது. ஆனால் பாலைநிலத்தில் தனிமையில் கிடைக்கும் மகிழ்ச்சி அழிவில்லாதது. அது இடத்தையும், நேரத்தையும், நபரையும் சாராதது. மேலும் சீடர்கள் இதுவரை தங்கள் இறையனுபவத்தைத் தங்களுக்கு வெளியே தேடினார்கள். ஆனால் அவர்கள் கண்டுகொண்டது பாலைவனத்தின் தனிமையில்தான். 'உணவு எப்படி உடலுக்கோ, அப்படியே தனிமை ஆன்மாவுக்கு' என்கிறார் அரிஸ்டாட்டில். இவ்வாறாக, தனிமையில்தான் ஆன்மா உண்மையான இறைமையைக் கண்டுகொள்கிறது.

பரிவின் இரண்டாம் பகுதியாக, தம்மையும் தம் திருத்தூதர்களையும் பின்பற்றி கால்நடையாகவே கூட்டமாக ஓடி தங்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்த கூட்டத்தினரைப் பார்த்து அவர்கள் மேல் பரிவு கொண்டு அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. இந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தாலே நமக்கு ஆச்சர்யம் மேலோங்குகிறது. பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், குழந்தைகள், கண்பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் என எத்தனைபேர் ஓடியிருப்பர் அந்தப் பாலைவனத்தில்? சிகப்பு கலர் சேலை, மஞ்சள் கலர் பிளவுஸ் அணிந்து ஒரு பெண், ஒழுங்காக தலையைக் கூட சீவாமல், தலைக்கு எண்ணெய் வார்க்காமல், கால்களில் செருப்புகள் அணியாமல், ஒரு வாரமாக சளி பிடித்து, காய்ச்சல் அடித்து, மூக்கொழுகும் மேல்சட்டை அணியாத தன் இரண்டு வயது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு, அந்தக் கூட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இயேசுவைக் காண ஓடியிருப்பாள்? அன்றைக்கு அவள் வேலை செய்தால்தான் அவள் வீட்டில் அடுப்பெரியும். அந்த வேலையை விட்டுவிட்டு அவளால் எந்த நம்பிக்கையோடு ஓட முடிந்தது இயேசுவைத் தேடி? அவள்வரும் வரை அவள்வீட்டு நாய்க்குட்டிக்கு யார் சோறு வைப்பார்கள்? கோழிக்குஞ்சுளை யார் கூட்டில் அடைப்பார்கள்? அப்படி என்ன அவசரம் அவளுக்கு? எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓட அவளால் எப்படி முடிந்தது? - இவள் ஒருத்திபோல் எண்ணற்றோர் இயேசுவைத்தேடி அந்த மாலை வேளையில் சென்றனர். ஓய்வுக்காகச் சென்ற இயேசு இவர்களைப் பார்த்தவுடன் எரிச்சல்படவில்லை. 'என் தனிமையைக் கெடுக்கிறீர்களே!' என்று எரிந்துவிழவில்லை. அவர்களைத் தொந்தரவாகப் பார்க்கவில்லை. மாறாக, அவர்கள்மேல் பரிவு கொள்கின்றார். அதாவது, அவர்களைப் பார்த்தவுடன் மேற்காணும் அனைத்தையும் தன் மனதில் நொடியில் ஓடவிடும் இயேசுவாக இருந்தால்தான் பரிவுகாட்ட முடியும். தான் தன் குழந்தையைத் தனக்குத் தொந்தரவாக நினைப்பதில்லை. குழந்தையின் இயலாமை தாய்க்கு எரிச்சல் மூட்டுவதில்லை. அவளின் உள்ளத்தில் பரிவை மட்டுமே அது எழுப்புகிறது. ஆகையால்தான், இயேசு தாயினும் சாலப் பரிந்தவராக இருக்கிறார்.

இவ்வாறாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பரிவு இரண்டு பரிமாணங்களில் வெளிப்படுகிறது:

அ. தன் சீடர்களுக்கு ஓய்வு

ஆ. தன்னைத் தேடிவந்த மக்களுக்கு போதனை

பரிவின் இன்னும் இரண்டு பரிமாணங்களை இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் சொல்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 23:1-6) 'மேய்ப்பர்களுக்கு எதிராக' இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. இங்கே 'மேய்ப்பர்கள்' என்பவர்கள் இஸ்ரயேலின் 'இறைவாக்கினர்கள்' அல்லது 'அரசர்களை' குறிக்கிறது. இதுவரை இருந்த இஸ்ரயேலின் அரசர்கள்மேல் இறைவன் இரண்டு குற்றச்சாட்டுக்களை வைக்கின்றார்: (அ) அவர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள், (ஆ) அவர்கள் மந்தையின்மேல் அக்கறைகாட்டவில்லை. இவ்வாறாகச் சிதறடிக்கப்பட்ட மந்தை திகில் மற்றும் அச்சம் கொண்டு காணாமல் போயின. இதற்கு மாறாக, தாவீதின் தலைமுறையில் 'தளிர்' ஒன்றை உருவாக்குவேன் என்கிறார் ஆண்டவர். இந்தத் தளிர் உடனடியாக 'செதேக்கியா' ('யாவே நீதியானவர்') என்ற அரசனைக் குறித்தாலும், மெசியாவிற்கான முன்னறிவிப்பாக இந்த இறைவாக்கு திகழ்கிறது. இறுதியில், 'யாவே சித்கேணூ' ('ஆண்டவரே நம் நீதி') என்ற பெயரால் நகர் அழைக்கப்படும். இன்றைய முதல் வாசகம் சொல்லும் பரிவின் மூன்றாம் பரிமாணம் நீதி. அரசனுக்குரியதை மக்கள் அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், மக்களுக்குரியதை அரசன் கொடுக்க வேண்டும். தங்கள் ஊதியத்தை வரியாக அரசனுக்குக் கொடுக்கிறார்கள் என்றால், அந்த வரியை வைத்து அரசன் மக்களின் நல்வாழ்விற்கானதைச் செய்ய வேண்டும். அதைவிட்டு, அவர்களை அச்சுறுத்தவோ, அவர்களைச் சிதறடிக்கவோ அவன் செய்தால் அது நீதி அல்ல.

பரிவின் நான்காம் குணம் 'இணைப்பது.' பரிவு காட்டும் மனம் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபே 2:13-18) நமக்குச் சொல்கிறது. யூதர்கள்-புறவினத்தார்கள், கடவுளுக்கு நெருக்கமானவர்கள்-கடவுளைவிட்டுத் தூரமானவர்கள் என இரண்டு இனமாக சிதறுண்டு கிடந்தவர்கள் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் இணைக்கப்பட்டுள்ளீர்கள் என்று கடவுளின் இரக்கத்தை அல்லது பரிவை 'இணைப்பாக' வெளிப்படுத்துகின்றார் பவுல்.

ஆக, இறைவனின் பரிவு

அ. திருத்தூதர்களுக்கு ஓய்வு

ஆ. மக்களுக்குப் போதனை

இ. சிதறடிக்கப்பட்ட மந்தைக்கு நீதி

ஈ. அந்நியப்படுத்தப்பட்ட புறவினத்தாருக்கு இணைப்பு

என்ற நான்கு பரிமாணங்களாக இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் வெளிப்படுகிறது. இந்த நான்கு பரிமாணங்களையும் நாம் நம் வாழ்க்கைக்கு எப்படி பொருத்திப் பார்ப்பது?

அ. ஓய்வு என்னும் பரிவு

ஓய்வு என்பது நான் எனக்குக் காட்டும் பரிவு. (அ) திருத்தூதர்கள் இயேசுவிடம் திரும்பி வருகின்றனர், (ஆ) பாலைவனத்திற்குச் செல்கின்றனர், (இ) தனிமையை அனுபவிக்கின்றனர். ஆக, மக்களோடும் மக்கள் சார்ந்தவற்றோடும் இருந்தவர்கள் இறைவனை நோக்கித் திரும்புகின்றனர். இது ஓய்வின் முதற்படி. இரண்டு, இவர்கள் பாலைவனம் செல்கின்றனர். பாலைவனம் என்பது வெறுமையின், இல்லாமையின் அடையாளம். அதாவது, 'எங்களால் எல்லாம் முடியும்!' 'எங்களால் தீய ஆவிகளை விரட்ட முடியும்,' 'எங்களால் நோய்களைக் குணமாக்க முடியும்' என்று தங்கள் வெற்றிகளால் நிரம்பி வழிந்தவர்களை வெறுமையாக்க அனுப்புகின்றார் இயேசு. பாலைவனத்தில் அவர்களால் எதுவும் 'முடியாது' என்ற நிலையில் அவர்கள் தங்கள் இயலாமையை, இல்லாமையை உணர்வார்கள். மேலும், அந்தத் தனிமையில் அவர்கள் தங்களோடு உறவாடுவார்கள். இன்று நம்மிடம குறைந்துவருவது ஓய்வு. ஆகையால்தான், நாம் இறைவனிடம் திரும்பிவருவதில்லை. பாலைநிலத்தை உணர்வதில்லை. நம் தனிமையைக் கொண்டாடுவதில்லை. இது எப்போது சாத்தியம்? ஓய்வு என்ற ஒன்று இருக்கும்போது. இன்று நேரத்தை மிச்சமாக்க நாம் நிறைய கண்டுபிடித்துவிட்டோம். இருந்தாலும் நமக்கு நேரம் போதவில்லை. இன்றைய ஊடகமும், தகவல் தொழில்நுட்பமும் நம்மை நிறைத்துக்கொண்டு, 'அடுத்து இது,' 'அடுத்து அது' என்று பரபரப்பாக ஓடவைத்துக்கொண்டே இருக்கின்றன. ஓய்வு என்பது வேலையற்ற நிலை அல்ல. மாறாக, அது வேலைகள் ஒருங்கிணைக்கப்பட்ட, இறைவனிடம் ஒப்புவிக்கப்பட்ட நிலை. தூங்கும்வரை ஃபோன், தூங்கும்போதும் ஃபோன், தூங்கி எழுந்ததும் ஃபோன் என்று நம் தனிமையை ஃபோனுக்கும் அதன் செயலிகளுக்கும் விற்றுவிடுவதைத் தவிப்பது ஓய்விற்கான ஒரு வழி. பிறருக்கு நாம் பரிவு காட்டுவதை விட எனக்கு நானே முதலில் ஓய்வு என்னும் பரிவைக் காட்ட வேண்டும். இப்படிக் காட்டியதால்தான் நல்ல சமாரியனால் கள்வர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்ய முடிந்தது. 'என் வேலை, என் பணம், என் முதலீடு, என் இலாபம்' என அவன் ஓடினால் அவனால் மற்றவருக்குப் பரிவுகாட்ட முடியாது. இந்த ஓய்வில்தான் நான் என்னுடைய ரம்பத்தைக் கூர்மையாக்க முடியும்.

ஆ. கற்பித்தல் என்னும் பரிவு

தன்னைத் தேடி ஓடி வந்தவர்களுக்கு அப்படியே உணவு கொடுத்து, உபசரித்து, நோய் நீக்கி திருப்பி அனுப்பிவிடவில்லை இயேசு. மாறாக, அவர்களுக்குக் கற்பிக்கிறார். உணவு, நோய், உடல்நலம் ஆகியவற்றையும் கடந்து உள்ளத்திற்கு ஊட்டம் தருகின்றார். அன்றைய மக்களுக்கு உணவைவிட நல்ல போதனைதான் தேவைப்பட்டது. இன்று நான் மற்றவர்களுக்குக் கற்பிக்கின்றேனா? இன்று நாம் கற்றலைச் சுருக்கிவிட்டோம். 'எல்லாம் சரி. ஒவ்வொருவருக்கும் ஒரு அறநெறி' என்ற நிலைக்கு நாம் கடந்து போவதால் நாம் செய்யும் அனைத்திற்கும் காரணம் கண்டுபிடிக்கிறோம். இன்று ஒருவர் மற்றவருக்குக் கற்பிக்கத் தயங்குகிறோம். அல்லது தவறானவற்றைக் கற்பிக்கிறோம். இன்றைய சமூகம் 'பணம்' என்ற ஒற்றைச் சொல்லைத்தான் கற்பிக்கிறது. வசிக்க வீடு, பேச ஃபோன், போக கார், வங்கியில் சேமிப்பு, ஓட்டல், பெட்ரோல் என பணம் என்ற ஒன்றைச் சுற்றியே நம்மை ஓடவைக்கிறது. 'எப்படியாவது பணத்தைச் சேர்த்துக்கொள்' என்பதுதான் இன்றைய அரசும், ஆட்சியாளர்களும் நமக்குக் கற்பிக்கும் பாடமாக இருக்கிறது. தம்மைத் தேடிவந்த மக்களுக்கு இயேசு 'பலவற்றைக் கற்பித்தார்' எனப் பதிவுசெய்கிறார் மாற்கு. அவை எவை என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், தன்னிடம் எழுந்த பரிவு என்னும் உணர்வால் இயேசு உந்தப்பட்டதால், ஆயனில்லா அவர்கள் நிலையை அறிந்ததால் அழியா மகிழ்ச்சி பற்றியே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார். ஆக, இன்று நான் நல்லதைக் கற்க வேண்டும். கற்பிக்க வேண்டும்.

இ. நீதி என்னும் பரிவு

அவரவருக்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பது என்பது 'நீதி' என்னும் சொல்லாடலின் பொருள். இஸ்ரயேலின் மேய்ப்பர்கள் மந்தைக்கு உரியதை மந்தைக்குக் கொடுக்காமல் தங்களுக்கே கொடுத்துக்கொண்டனர். தங்களைப் பராமரித்துக்கொண்டு மந்தையைச் சிதறடித்தனர். தாங்கள் உண்டுகொழுத்து மந்தையைப் பட்டினிபோட்டனர். இவ்வாறாக, நீதிக்குப் பதிலாக அநீதியைத் தழுவிக்கொண்டார்கள். நீதி உள்ளம் கொண்டவரால்தான் பரிவு காட்ட முடியும். கள்வர் கையில் அகப்பட்டவன் குற்றுயிராய்க் கிடந்தபோது, அவனுக்கு உரிய பொருளும், உயிரும் மறுக்கப்பட்டபோது அதை அவனுக்கே வழங்க முற்படுகின்றான் நல்ல சமாரியன். அவனிடமிருந்தே நீதி என்னும் உணர்வு அவனைப் பரிவிற்கு அழைக்கிறது. தன் சொத்தை தன்னிடமிருந்து பிரித்து, வெளியூர் சென்று ஊதாரித்தனமாக செலவழித்து, தன் இல்லத்திற்கு வெறுமையாக வந்தாலும், மகனுக்கு உரியதை மகனுக்கே வழங்க முற்படுகின்றார் தந்தை. இந்தப் பரிவின் பின்புலத்தில் இருப்பது நீதி. ஆக, நம் வீடுகளில் பிள்ளைகளுக்கு உரியதை பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கு உரியதை பெற்றோருக்கும் அவரவருக்கு உரியதை அவரவருக்கும் கொடுக்கும்போது நீதியும், பரிவும் கரம்கோர்க்கின்றன.

ஈ. இணைப்பு என்னும் பரிவு

யூதர்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட இனம் என்றும், புறவினத்தார் ஒதுக்கப்பட்ட இனம் என்ற எண்ணத்தில் யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும், புறவினத்தாருக்கும், கடவுளுக்கும் இடையே இருந்த சுவற்றை உடைக்கின்றார் இயேசு. ஆக, பரிவில் இணைப்பு நிகழ்கிறது. நல்ல சமாரியன் நிகழ்விலும், ஊதாரி மகன் நிகழ்விலும், காயப்பட்டவரும், மகனும் முறையே தங்கள் சமூகத்தோடும், தங்கள் குடும்பத்தோடும் இணைக்கப்படுகின்றனர். பரிவு இல்லாத இடத்தில் பகைமையும், விரிசலும் இருக்கும். ஏனெனில் அங்கே ஒருவர் மற்றவருக்கான வேற்றுமை மட்டுமே பார்க்கப்படும், பாராட்டப்படும். ஆனால், பரிவில் ஒருவர் மற்றவர் தங்களுக்கிடையேயான ஒற்றுமைகளை மட்டுமே பார்ப்பர்.

இறுதியாக,

'தாயினும் சாலப் பரியும்' இறைவனின் பரிவுள்ளம் ஓய்வு, கற்பித்தல், நீதி, மற்றும் இணைப்பு என தன்னையே விரித்துக்காட்டுகிறது. இன்றைய நம் ஓட்டத்தையும், போட்டியையும், போராட்டங்களையும் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு நான் என்னோடும், நான் ஒருவர் மற்றவரோடும் பரிவு காட்டப் பழகினால் நலம். வேகம் குறைத்தலும், வேகமாய் ஓடிவருவோரை ஆற்றுப்படுத்துவதும், வேகமாய் சிதறடிக்கப்படுவோரைக் கூட்டிச் சேர்ப்பதும் பரிவு.