இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

ஒற்றைத் தாலந்து

நீமொ 31:10-13,19-20,30-31
1 தெச 5:1-6
மத் 25:14-30

இன்று முதல் ஒவ்வொரு ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறும் அகில உலக ஏழையர் ஞாயிறாகக் கொண்டாடப்படும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் ஏழையர் ஞாயிறாகிய இன்று நமக்கு 'தாலந்து எடுத்துக்காட்டு' நற்செய்தி வாசகமாக வருகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் ஏழையர் ஞாயிற்றின் சிந்தனைக்கு எதிர்மாறாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். எப்படி?

'இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று சொல்கின்ற தலைவன் ஒரு தாலந்து உள்ளவனிமிருந்து அதைப் பறித்து பத்து தாலந்து உள்ளவனிடம் கொடுக்கின்றான். அப்படி என்றால் இல்லாதவர்கள் இல்லாதவர்களாகவே இருக்க வேண்டும், இருப்பவர்கள் இன்னும் அதிகம் பெறவேண்டும் என்பது தலைவனின் ஆசையாக இருக்கிறது.

மேலும், ஐந்து, மூன்று, ஒன்று என்று மனிதர்களைப் பிரிப்பதே அவர்களுக்குள் வேறுபாட்டை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆக, விண்ணரசு என்ற ஒரு நிகழ்வு இயல்பாகவே சமத்துவம் இல்லாத ஒரு நிலையில்தான் தொடங்குகிறது. இப்படி வேறுபாடுகள் அல்லது ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு விண்ணரசு பற்றி எப்படி பேச முடியும்?

'இருப்பவனுக்குத்தான் எல்லாம் இருக்கணும். இல்லாதவனுக்கு ஒன்னும் இருக்கக்கூடாது' என்று நினைத்த யாரோ ஒருவர் இந்த தாலந்து உவமையை எழுதி இயேசுவே இதைச் சொன்னதாக இடைச்செருகியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் ஆளும் கட்சியினரைச் சார்ந்த சிலரின் வீடுகளை வருமான வரித்துறையினர் சோதனையிட்டு கோடிக்கணக்கான சொத்துக்களைக் கண்டறிந்துள்ளனர். இவர்கள் எதற்காக இவ்வளவு சொத்துக்களைச் சேர்க்க வேண்டும்? என்ற கேள்வி பாமரனின் மனதில் எழுகின்றது. அதிக சொத்து அதிக அதிகாரம் என்பது எழுதப்படாத நியதியாக இருப்பதாலும், மனித மனம் இயல்பாகவே அதிகாரத்திற்கு ஏங்குவதாலும் சொத்து சேர்த்தல் அதிகமாகிறது.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீயிட்டு இறந்துபோன குடும்பத்தினர் இக்கதையாடலில் வரும் 'தலைவனை' எப்படி புரிந்து கொள்வர்? 'என் பணத்தை நீ கந்துவட்டிக்கு கொடுத்திருக்கக்கூடாதா?' என்ற அவனது கேள்வியை இந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா?

மேற்காணும் தொடக்கக் கேள்விகளை ஒதுக்கிவிட்டுக் கதையாடலைக் கையாள்வோம்: விண்ணரசு பற்றிய இயேசுவின் தாலந்து உவமை நாம் பலமுறை கேட்ட ஒன்று. இந்த உவமை லூக்கா மற்றும் மத்தேயு நற்செய்திகளில் மட்டும் உள்ளது. மாற்கு நற்செய்தியாளாரின் கைக்கு எட்டாத ஒரு பாரம்பரியத்தை லூக்காவும், மத்தேயும் பெற்றதால் அவர்கள் மட்டும் இதை எழுதுகின்றனர். ஆனால் இந்த இருவரின் பதிவுகளும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. மத்தேயு நற்செய்தியாளரில் வரும் வீட்டுத்தலைவன் தன் பணியாளர்களில் மூவருக்கு தலா ஐந்து, மூன்று மற்றும் ஒன்று என தாலந்துகளைக் கொடுத்து விட்டுப் பயணம் மேற்கொள்கிறான். ஐந்து பெற்றவன் மேலும் ஐந்து, மூன்று பெற்றவன் மேலும் மூன்று என ஈட்டினாலும், ஒன்று பெற்றவன் அதை நிலத்தில் புதைத்து வைக்கிறான். லூக்கா நற்செய்தியாளரில் அரசன் தன் பணியாளர்களுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கின்றார். பத்துப் பேருக்கு தலா ஒரு தாலந்து என பத்துத் தாலந்துகள் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. அரசுரிமை பெற வெளியூர் செல்கின்றான் தலைவன். இதற்கிடையில் 'இவன் எங்களுக்கு அரசனாக வேண்டாம்!' என ஒரு சிலர் தூது அனுப்புகின்றனர். இருந்தாலும் அரசுரிமை பெற்றுத் திரும்புகின்றான் தலைவன். அவன் திரும்பியபோது பணியாளர்களில் ஒருவன் ஒரு தாலந்தைக் கொண்டு பத்து சம்பாதித்ததாகவும், இரண்டாமவன் ஒன்றைக் கொண்டு ஐந்து சம்பாதித்ததாகவும், மூன்றாமவன் தலைவனுக்குப் பயந்து அதை கைக்குட்டையில் முடிந்து வைத்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் மற்ற ஏழு பேர் என்ன செய்தார்கள் என்பது பற்றி உவமையில் ஒன்றும் இல்லை. மத்தேயு மற்றும் நற்செய்தியாளர்களில் பொதுவாகக் காணப்படுவை மூன்று: அ. முதல் இரண்டு பேர் நன்றாக சம்பாதிக்கின்றனர், மூன்றாமவன் சம்பாதிக்கவில்லை. ஆ. அதிகம் பெற்றவர்கள் இன்னும் அதிகம் பெறுகிறார்கள். இ. பொல்லார் தண்டிக்கப்படுகின்றனர்.

'தாலந்து உவமை'யை நாம் மூன்று விதங்களில் காலங்காலமாக 'தவறாக' புரிந்துகொள்கிறோம்:

அ. தாலந்து என்றால் ஆங்கிலத்தில் 'டேலன்ட்' ('திறன்'). கடவுள் நமக்கு நிறைய திறன்களைக் கொடுத்திருக்கின்றார் எனவும், அத்திறன்களை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் அல்லது பெருக்க வேண்டும் என்று பொருள் கொள்வது.

ஆ. வட்டிக்குக் கொடுத்துவைப்பதை அல்லது வங்கியில் கொடுத்து வைப்பதை சரி என்று இயேசு சொல்வதாகப் புரிந்து கொள்வது.

இ. 'புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்' என்ற சொல்லாடல் உத்தரிக்கிற நிலை அல்லது நரகத்தைக் குறிக்கிறது என்று பொருள்கொள்வது.

தாலந்து உவமையின் நோக்கம் இந்த மூன்றும் அல்ல. பின் என்ன?

இயேசு உவமையின் தொடக்கத்தில் சொல்வது போல, 'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்.' ஆக, 'தாலந்து உவமை' முழுக்க முழுக்க விண்ணரசு பற்றியது. தாலந்து உவமையிலிருந்து விண்ணரசை நாம் எப்படி புரிந்து கொள்வது?

அ. தலைவர் தான் விரும்பியதைச் செய்கின்றார். யாருக்கு எவ்வளவு தாலந்து கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்பவர் அவரே. 'ஏன் இப்படிச் செய்கிறீர்?' என்று அவரை யாரும் கேட்க முடியாது.

ஆ. இருப்பது பெருகும், இல்லாதது தேயும். இதை ஆங்கிலத்தில் 'ஸ்னோபால் இஃபெக்ட்' என்கிறார்கள். சின்னதாக உருட்டி மேலே இருந்து உருட்டிவிடப்படும் பனிக்கட்டி கீழே வர, வர தன்னோடு மற்ற பனித்துகள்ளையும் சேர்த்துக்கொண்டு பெரிதாகிக்கொண்டே வருகிறது. ஆக, இருப்பது வேகமாக நகரும்போது இன்னும் பலவற்றைதன் தன்னோடு அணைத்துக்கொள்ளும்.

இ. பரிசும், தண்டனையும் தருபவர் தலைவரே. ஏன் இந்தப் பரிசு? ஏன் இந்த தண்டனை? என யாரும் தலைவனைக் கேள்வி கேட்க முடியாது. மேலும், என்ன செய்தால் பரிசு, என்ன செய்தால் தண்டனை என்பதும் பணியாளர்களுக்கு மறைபொருளாக இருக்கிறது.

ஒரு தாலந்து என்பது 6000 தெனாரியங்களுக்குச் சமம். அதாவது 6000 நாள்கள் (ஏறக்குறைய 20 ஆண்டுகள்) ஒருவன் செய்யும் வேலையின் கூலி இது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் என வைத்துக்கொண்டால், இதன் தாலந்து மதிப்பு 30 இலட்சம். இவ்வளவு பெரிய தொகை பணியாளர்களுக்கு ஐந்து, இரண்டு, ஒன்று என்ற அளவில் தரப்படுகிறது. அ. எதற்காக தலைவன் ஐந்து, மூன்று, ஒன்று என தாலந்துகளைக் கொடுக்க வேண்டும்? ஐந்து பெற்றவன் ஐந்து கொண்டு வந்தான், மூன்று பெற்றவன் மூன்று கொண்டு வந்தான். ஒன்று பெற்றவன் ஒன்று கொண்டு வந்தான். லாஜிக் சரிதானே! பின் ஏன் அவனுக்கு மட்டும் தண்டனை. ஆ. ஒன்றை மட்டும் கொண்டுவந்தவன் அதையாவது கொண்டு வந்தானே. அவன் ஊதாரித்தனமாகச் செலவழிக்கவில்லை. அல்லது அதைத் தொலைத்துவிடவில்லை. பத்திரமாகத்தானே வைத்திருந்தான். அதற்காகவாவது அவனைப் பாராட்ட வேண்டமா? இ. நிலத்தில் புதைத்து வைப்பது சாதாரண காரியம் அல்ல. நம் அலமாரியில் இருந்தால் கூட திறந்து பார்த்து 'ஆ! இருக்கிறது!' என்று சொல்லிக்கொள்ளலாம். நிலத்தில் புதைப்பதால் அவன் இன்னும் அதிக அலர்ட்டாக இருக்க வேண்டும். நிலத்தில் புதைத்து வைத்து அதைக் காவல் காப்பதும் பெரிய வேலைதானே!

இன்றைய நற்செய்தியில் வரும் மூன்றாம் நபர் அல்லது ஒற்றைத் தாலந்தை மட்டும் வைத்து நாம் சிந்திப்போம்:

1. கோபம். மூன்றாம் பணியாளனுக்குத் தன் தலைவன் மேல் ஏதாவது கோபம் இருந்திருக்க வேண்டும். 'மற்றவர்களுக்கு ஐந்து, மூன்று எனக் கொடுத்துவிட்டு எனக்கு ஒன்றா கொடுக்கிறாய்!' என உள்ளத்தில் கொதித்திருக்கலாம். 'நீ என்னடா கொடுக்கிறது! நான் என்னடா உழைக்கிறது!' என்று நினைத்திருக்கலாம். சமூகத்தில் நடைபெறும் பல தீமைகளுக்குக் காரணம் கோபம்தான். திருடர்கள் திருடுவது எதற்காக? பணம் வைத்திருப்பவர்கள் மேலும், அல்லது தாங்கள் வாழும் சமூகத்தின் கட்டமைப்பின் மீதும் கோபம். தங்களின் கையாலாகாத நிலையில் அந்தக் கோபத்தைத் திருட்டாகக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்ட ஒருவன் காலப்போக்கில் பாலியல் பிறழ்வுகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த பெண் இனத்தின் மேல் பழிதீர்த்துக்கொள்ள நினைக்கிறான். நாம் கையாள முடியாத கோபம் எல்லாம் எதிர்வினைகளாக மாறிவிடுகின்றன. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு புற்றுநோய். என்னை விட கொஞ்சம் கூட வயது. நன்றாக மருத்துவம் பார்த்திருந்தால் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். ஆனால் அவனுக்கு கடவுளின் மேல் ஒரு கோபம்: ஏன் இது எனக்கு மட்டும் வருகிறது? என்ற சதா கேட்டுக் கொண்டிருந்தவன், புற்றுநோய் தன்னை ஏன் அழிக்க வேண்டும்? நானே அழித்துக்கொள்கிறேன் என்னை என அதிக மதுஅருந்தவும், மாத்திரைகளைப் புறக்கணிக்கவும் தொடங்கினான். விளைவு, விரைவில் இறந்துவிட்டான். நம் வாழ்வில் நாம் வாழ்வை முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் இருக்கும் கோபம். பெற்றோரிடம் கோபப்பட்டு வீட்டுக்கு வெளியே தங்கும் இளைஞர்கள், கணவன் மனைவியாக வீட்டில் தங்கியிருந்தாலும் ஒருவருக்கொருவர் வருடக்கணக்காக பேசமால் இருக்கும் நிலைகள், 'ஏதோ! குழந்தை இருக்குன்னு பார்க்கிறேன்! அல்லது எப்பவோ முறிச்சிறுப்பேன்!' என்று சண்டைபோட்டுக் கொள்ளும் தம்பதியினர், அருட்பணி நிலையிலும் தலைமையில் இருப்பவர்கள் மேல் கோபப்பட்டுக் கொண்டு, 'எனக்கு அந்த இடம் கொடுத்தால் தான் பணி செய்வேன். அல்லது தினமும் பூசை மட்டும் வைப்பேன். வேறு ஒன்றும் செய்ய மாட்டேன்!' என ஓய்ந்திருக்கும் நிலை என அனைத்திலும் நம் கதையின் மூன்றாம் கதைமாந்தர் ஒளிந்திருக்கிறார்.

2. பயம். 'ஐயா, நீர் கடின உள்ளத்தினர். நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர். தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவர்' என்று தன் தலைவனைப் பற்றிச் சொல்லும்போது இவன் கொண்டுள்ள பயம் தெரிகிறது. இதைவிடப் பெரிய பயம் அல்லது இதை ஒட்டிய பயம் என்னவென்றால், இவன் தான் தன் தாலந்தை இழந்துவிடக்கூடாது என பயப்படுகின்றான். ஒருவேளை இவன் ரொம்ப ஏழையாக இருந்திருப்பான். போதுமான பாதுகாப்பு இல்லாத வீட்டில் குடியிருப்பவனாக இருந்திருக்கலாம். ஆகையால்தான் தாலந்தை தன் வீட்டில் வைப்பதற்குப் பதிலாக நிலத்தைத் தோண்டி புதைக்கிறான். இவனது பயமே இவனைச் செயல்படாமல் ஆக்கிவிட்டது.

3. தேக்கம். இவன் தண்டிக்கப்பட்டது எதற்காக? தாலந்தைப் பெருக்காத குற்றத்திற்காக. இவன் மற்றவர்களையும், தன் தலைவனையும் ஆராய்ச்சி செய்வதிலேயே தன் நேரத்தைக் கழித்தானே ஒழிய தான் ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லை. இதைவிட மேலாக, தவைன் இவனை பொறுப்பாளனாக அல்லது கண்காணிப்பாளனாக மாற்ற நினைத்தான். ஆனால் இவனோ தான் பணியாளனாக இருந்தாலே போதும் என்ற தேக்கநிலையில் இருந்தான். மூன்றாம் பணியாளனை நம் 'சோம்பேறி!' என்று அழைக்கிறோம். அவன் சோம்பேறி இல்லை. சோம்பேறியாக இருந்தால் பணம் கொடுக்கப்படும் போதே, 'ஐயா! நம்மால எல்லாம் இத வச்சு ஒன்னும் செய்ய முடியாது. அவன்கிட்டே சேர்த்துக் கொடுங்க!' என்று சொல்லியிருப்பான். செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் தன் ஆற்றலை பிறழ்வுபடுத்துவதுதான் அவனின் தவறு. நாணயத்தைப் பத்திரப்படுத்தியதில் செய்த வேலையை அவன் வட்டிக்கடைக்குச் செல்வதற்குப் பயன்படுத்தியிருக்கலாமே என்பதுதான் தலைவனின் ஆதங்கம். 'நான் டெய்லி பிஸியாகவே இருக்கிறேன்! எதையாவது செய்து கொண்டே இருக்கிறேன்!' என்று ஒருசிலர் பெருமையாகச் சொல்வார்கள். 'எதையாவது செய்து கொண்டே இருப்பது முக்கியமல்ல. எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோமா?' என்பதுதான் முக்கியம்.

இந்த மூன்று எதிர்மறையான பாடங்களுக்கு மாற்றாக மூன்று நேர்முகமான பாடங்களையும் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் கற்றுத்தருகிறது:

1. பார்வை மாற்றம். ஐந்து மற்றும் இரண்டு தாலந்து பெற்றவர்களின் பார்வை மற்றவனின் பார்வையைவிட வித்தியாசமாக இருந்தது. தன் தலைவரின் கடின உள்ளம் தெரிந்திருந்தாலும் அந்தக் கடின உள்ளத்தை மாற்றக்கூடிய மருந்து ஒன்று இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார்கள். ஒரே தலைவன் தான். ஆனால் பணியாளர்கள் அவனை எப்படி பார்க்கிறார்களோ அதைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறுகிறது. இன்று நாம் பார்க்கும் பார்வைதான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது. ஆக, இந்தப் பார்வை நேர்முகமாக இருக்கிறதா அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

2. திறமை. திறமை வாய்ந்த மனையாள் எப்படி இருப்பாள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. திறமையும், உழைப்பும் அவளை உயர்த்துவதுடன், அவள் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களிலும் அவளுக்கு வெற்றியைக் கொடுக்கின்றன.

3. விழிப்பு. 'ஆகவே மற்றவர்களைப் போல நாம் உறங்கலாகாது. விழிப்போடும் அறிவுத்தெளிவோடும் இருப்போம்' என தெசலோனிக்க நகர் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார் தூய பவுல் (இரண்டாம் வாசகம்). ஒற்றைத் தாலந்து பெற்றவன் தன் தாலந்தைக் காக்க விழித்திருந்தானே தவிர, அதைப் பெருக்க அல்ல. விழிப்பு நிலை என்பது இருப்பதை அப்படியே வைத்திருத்தல் அல்ல. மாறாக, தொடர்ந்து முன்னேறுதல்.

இறுதியாக,

இன்றைய 'ஏழையர் தினத்திற்கும்,' 'இறைவாக்கு வழிபாட்டிற்கும்' எப்படி முடிச்சு போடுவது?

ஏழைகளுக்கு இருக்கும் மூன்று உணர்வுகளை ஒற்றைத் தாலந்து நமக்கு உணர்த்துகிறது: (அ) பயம், (ஆ) சோம்பல், (இ) பயனறு மனம். இந்த மூன்று உணர்வுகள் நம்மிலும் சில நேரங்களில் துலங்கலாம். 'எனக்கு இன்னும் வேண்டும்' என்ற ஆலிவர் டுவிஸ்ட் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய சமுதாயம், 'அதிகம் வைத்திருத்தலே நலம்' என்று கற்பிக்கிறது. 'இன்னும் அதிகம்,' 'இன்னும் அதிகம்' என நம்மை ஓடச் செய்கிறது. கதையில் வரும் தலைவனும் இதே ஓட்டத்தோடுதான் இருக்கிறான். இன்று இவ்வாறு ஓட முடியாமல் நிற்பவர்களே ஏழைகள். இவ்வாறு ஓட முடியாதவர்களும் மதிப்பிற்குரியவர்களே என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம்.

இன்றும் இவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற ஒற்றைத் தாலந்துகள் ஏராளம்.

ஒற்றைத் தாலந்தும் இல்லாமல் கலங்கி நிற்பவர்களை, அழுகையிலும் அங்கலாய்ப்பிலும் இருப்பவர்களைத் தேடிச் செல்ல இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

வாழ்க்கை எல்லாரையும் ஒரே போல நடத்துவதில்லை.

சிலரை மயிலிறகால் வருடிக் கொடுக்கிறது.

சிலரை செங்கல்லால் முகத்தில் அறைகிறது.

வாய்ப்புக்களும், வசதிகளும், தாலந்துகளும் எல்லாருக்கும் பொதுவானதும், சமமானதும் அல்ல. அவர் நினைக்கிறார். அவர் கொடுக்கிறார். அவர் எடுக்கிறார்.

'எல்லாம் அவருடையதே' - இந்த மனநிலையோடுதான் ஒற்றைத்தாலந்து பெற்றவன் வாழ்ந்தான். இதுதான் ஏழைகளின் மனநிலை.

இந்த மனநிலையே மகிழ்ச்சி தரும் மனநிலை.