இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு

கடவுளுக்கு உரியதும், உரியவர்களும்!

எசாயா 45:1,4-6
1 தெசலோனிக்கர் 1:1-5
மத்தேயு 22:15-21

'மனிதர்களுக்கு அதிகமாக பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிப்பது கேடராக்ட் எனப்படும் கண்புரை நோய்;. முதல் இரண்டு இடங்களை சமயமும், அரசியலும் பிடித்துள்ளன.’

பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் என்னும் மெய்யியலாளர் சொன்னதாக சமீபத்தில் டுவிட்டரில் வெளிவந்த இந்த கீச்சு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சமயமும் அரசியலும் அல்லது ஆன்மீகமும் அரசியலும் மனிதர்களை ஏன் குருடாக்குகின்றன? நம் மனதின் எண்ண ஓட்டங்களை, நம் கட்டின்மையைத் தடை செய்வன சமயமும், அரசியலுமே. எப்படி?

'திருவிவிலியம்' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இது மற்ற எல்லா வார்த்தைகளையும் போல ஒரு வார்த்தைதான். ஆனால், இனிமேல் 'திருவிவிலியம்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படாமல் 'விவிலியம்' என்றே பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது என வைத்துக்கொள்வோம். உடனடியாக என் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? என் நூல் புனித நூல். அதற்கு எப்படி 'திரு' சேர்க்காமல் இருக்க முடியும் என மனம் அங்கலாய்க்கிறது. அது புலம்பலாக, ஆர்ப்பாட்டமாக, போராட்டமாக மாறுகிறது. இது ஒரு இந்துத்துவ முயற்சி, ஆர்எஸ்எஸ் பின்புலம் இருக்கிறது என்றெல்லாம் நான் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதாவது, என்னைத் தவிர மற்ற எல்லாரையும் நான் எதிரியாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன். ஆனால், இந்த வார்;த்தை மாற்றம் என் வீட்டிற்கு அருகில் உள்ள மற்ற நபருக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. 

கிரிக்கெட் பார்க்கிறேன் என வைத்துக்கொள்வோம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் மேட்ச். மேட்ச் தொடங்குமுன் வீரர்கள் அணிவகுத்து நிற்க, இரண்டு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்படுகின்றன. இந்திய நாட்டின் பண் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கும் அல்லது அமைதியாக நிற்கும் நான் பாகிஸ்தான் நாட்டு பண் இசைக்கப்படும்போது ஏன் அவ்வாறு செய்வதில்லை? இரண்டுமே பாடல்கள்தாம். இரண்டுமே ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இசைக்கப்படுகின்றன. மற்ற பாடலுக்கு என் காதுகள் செவிடாவது ஏன்?

சமயமும், அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்து நம் கண்களைக் கட்டியே வைத்திருக்கின்றன. சமயத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் இருந்தாலும், பெருவாரியாக மக்களின் கட்டின்மை இழப்பிற்கும், தன்னலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் காரணம் சமயமும் அரசியலுமே என்பது என் கருத்து.

சரி. இந்த இரண்டையும் சரி செய்வது எப்படி? கட்டின்மையோடு கூடிய ஆன்மீகமும், அரசியலும் உருவாவது எப்போது?

ஆன்மீகம், அரசியல் என்ற இரண்டு தளங்களையும் மிக நேர்த்தியாக ஒன்றாக்கி, கட்டின்மையோடு கூடிய மக்களாக, முழுப்பார்வை பெற்றவர்களாக வாழ இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நம் சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகத்தோடு (காண். மத் 22:15-21) தொடங்குவோம். 'சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்று நிறைவுபெறகிறது இன்றைய நற்செய்தி வாசகம். இதை வாசித்தவுடன், இயேசு அரசியலுக்குரியதை அரசியலுக்கும், ஆன்மீகத்திற்குரியதை ஆன்மீகத்திற்கும் கொடுங்கள் என்று சொல்லி, அரசியலையும் ஆன்மீகத்தையம், இவ்வுலகத்தையம் மறுவுலகத்தையும் சமமாக்கிவிட்டார் என்று பல நேரங்களில் என் சிந்தனையை நான் சுருக்கியிருக்கிறேன். ஆனால், இந்த வார்த்தைகளின் அர்த்தம் இவ்வளவு எளிதானது அல்ல. 

இந்த நற்செய்தி வாசகத்தை எப்படி புரிந்துகொள்வது?

இயேசுவின் இவ்வுலக வாழ்க்கை ஏறக்குறைய முடிவுறும் நேரம். அவர் எருசலேமில் இருக்கிறார். அவரை எப்படி அழிக்கலாம் அல்லது அவரை குற்றத்திற்கு உள்ளாக்க என்ன செய்ய முடியும் என்ற பல்வேறு மக்களும், குழுக்களும் பல்வேறு நிலைகளில் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் பரிசேயர்கள். அதாவது, தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்ற மனம் கொண்டிருந்தவர்கள். இவர்கள் பேச்சில் கில்லாடிகள். ஆகையால்தான் தங்கள் பேச்சையே ஆயுதமாக எடுத்து, அந்தப் பேச்சில் இயேசுவைச் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். இவர்கள் இந்த முயற்சிக்குத் துணையாக அழைத்துக்கொள்வது ஏரோதியர்களை. 'ஏரோதியர்கள்'. ஏரோதியர்கள் என்பவர்கள் அந்தக் காலத்து 'ரெண்டுங்கெட்டான்கள்'. தங்களை ஒரு யூதர் தான் ஆள வேண்டும் என்று விரும்பியவர்கள். ஆகையால் தங்கள் பிரமாணிக்கத்தை ஏரோதுக்கு மட்டும் அளித்தனர். அதே நேரத்தில் உரோமை அரசுக்கு வரிகட்டுவதிலும், அவர்களுக்குக் கடை விரிப்பதிலும் மும்முரமாய் இருந்தனர். ஆகையால் தான் எந்நேரமும் சீசரின் முகம் பதித்த நாணயத்தை தூக்கிக் கொண்டு திரிகின்றனர். 

இவர்களில் சிலரும், பரிசேயரின் சீடர்களில் சிலரும் இணைந்து இயேசுவிடம் வருகின்றனர். 'போதகரே' எனத் தொடங்குகிறது இவர்களின் உரையாடல். இந்த வார்த்தையில் ஒரு கேலி ஒழிந்திருக்கிறது. இந்த வார்த்தையைச் சொல்வதன் வழியாக இயேசுவின் மேல் மற்றவர்கள் வைத்திருந்த மரியாதையை கேலி செய்கின்றனர். மேலும், இந்த வார்த்தை இயேசுவுக்கு பொருத்தமானதா? அவரின் வார்த்தை எந்த அளவுக்கு உண்மையானது? என்று சோதிக்கின்றனர். இவர்கள் முகஸ்துதியோடு தங்கள் உரையாடலைத் தொடர்கின்றனர்:

'நீர் உண்மையுள்ளவர், கடவுளின் நெறியை உண்மைக்கேற்ப போதிப்பவர், ஆள்பார்த்து செயல்படாதவர்' என்று அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று இயேசுவைப் புகழ்கின்றனர். ஆனால், இந்த மூன்று வார்த்தைகளும் இவற்றைச் சொல்லும் பரிசேயர்களுக்குப் பொருந்தாதவை. ஏனெனில் அவர்களிடம் உண்மையில்லை. அவர்கள் கடவுளின் நெறியை தங்களுக்கு ஏற்ப போதிப்பவர்கள். அவர்கள் பாரபட்சம் காட்டுபவர்கள்.

'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர்? - இதுதான் அவர்கள் இயேசுவிடம் வைக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னால், 'இயேசு மெசியா அல்ல!' என்று இவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். 'இல்லை' என்று சொன்னால், 'உரோமைக்கு எதிரான தீவிரவாதி!' என்று இவர்கள் பட்டம் கட்டுவர். பழிதீர்ப்பர். இப்படி எந்தப் பதில் சொன்னாலும் அவர் அகப்பட்டு விடுவார்.

'போதகரே' என்று தன்னை அழைத்தவர்களை 'வெளிவேடக்காரர்களே' என அழைக்கிறார். 'ஆசிரியரே' என அழைத்தால் 'மாணவர்களே' என்றுதானே அழைக்க வேண்டும்? இயேசுவின் இந்த ஒரு வார்த்தையை அவர்களுக்குப் பதிலாக அமைந்துவிடுகிறது. வெளிவேடம் என்றால் டபுள் ஸ்டேன்டர்ட். அதாவது ஒரு வகையான ஸ்கிஸோஃபிரேனியா வாழ்க்கை. உள்ளே ஒன்றும் வெளியே மற்றொன்றுமாக வாழ்வதுதான் வெளிவேடம். பரிசேயர்கள் வெளிவேடக்காரர்கள் ஆனது எப்படி? அவர்கள் தாங்கள் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லது உள்ளத்தில் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணமாக்கியவர்களாக இருந்தாலும், அவர்களின் வெளி செயல்பாடுகள் எல்லாம் அதற்கு புறம்பானதாக இருக்கிறது. அதாவது, உலகியல், பொருளியல், அரசியல் ஆதாயங்களுக்காக தங்களின் உள்ளார்ந்த அர்ப்பணத்தோடு சமரசம் செய்துகொள்கிறார்கள். ஏரோதியர்கள் வெளிவேடக்காரர்கள் ஆவது எப்படி? தங்களின் அரசன் தங்கள் நாட்டு அல்லது தங்களின் மண்ணின் மைந்தன் ஏரோது என மார்தட்டிக்கொள்ளும் இவர்கள் ஒரே நேரத்தில் தங்களை ஆட்சி செய்யும் பிலாத்துவுக்கும், சீசருக்கும், ஒட்டுமொத்த உரோமை இனத்திற்கும் அடிபணிபவர்கள். அதாவது, இடத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றபடி தங்கள் அர்ப்பணத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகள்.

'ஏன் என்னை சோதிக்கிறீர்கள்?' - பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை 'சோதித்ததை' சுட்டிக்காட்ட விவிலியம் பயன்படுத்தும் அதே வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அன்று தங்கள் முரட்டுத்தனத்தாலும், பிடிவாத குணத்தாலும் மக்கள் கடவுளைச் சோதித்தனர். இன்று அதே வேலையை பரிசேயர்களும், ஏரோதியர்களும் செய்கின்றனர்.

'வரி கொடுப்பதற்கான நாணயம்' - இயேசுவின் காலத்தில் இரண்டு வகை நாணயங்கள் பயன்பாட்டில் இருந்தன. உரோமையர்கள் கொண்டுவந்த தெனாரியம் என்னும் நாணயம். இஸ்ரயேல் மக்கள் பயன்படுத்தி வந்த செக்கேல் என்னும் நாணயம். செக்கேல் நாணயங்கள் ஆலயத்திற்கு மட்டுமே பயன்படும். மற்ற எல்லா இடங்களுக்கும் அவர்கள் உரோமையரின் நாணயத்தையே பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாகத்தான் ஆலயத்தில்கூடி அன்று நாணயமாற்றுவோர் இருந்தனர். 'டேய் வெளிவேடக்கார பசங்களா! ஒரே நேரத்தில் ரெண்டு நாணயங்களைத் தூக்கிக்கொண்டு போகும் பசங்களா!' என கிண்டல் அடிக்கின்றார் இயேசு. 'அவர்கள் ஒரு தெனாரியத்தை இயேசுவிடம் கொண்டுவருகின்றனர்.' தெனாரியம் என்பது ஒருவரின் ஒருநாள் கூலி. 

'இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?' - கேட்கின்றார் இயேசு. இயேசுவுக்குத் தெரியாமல் இல்லை இது. தெரிந்தும் கேட்கிறார். 'சீசருடையவை' என்கிறார்கள் வந்தவர்கள். அதாவது, சீசரின் முகமும், அவர் பேசும் இலத்தின் மொழியின் சொற்களும் அங்கே பதிக்கப்பட்டிருக்கும். நாணயத்தில் அல்லது ரூபாய் நோட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பது மிக முக்கியம். ஆகையால்தான் நம்ம ஊருல புதிய 2000 மற்றும் புதிய 500 தாள் வந்தபோது நாம் எல்லாரும் அதில் தமிழ்மொழி இடம்பெற்றிருக்கிறதா? அது சரியாக இருக்கிறதா? என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அதாவது, ஒரு இனமும் ஒரு மொழியும் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என இது சுட்டிக்காட்டுகிறது. செக்கேல் நாணயத்தில் (பிற்காலத்தில்) எபிரேய எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' - இவைதாம் இயேசுவின் இறுதி வார்த்தைகள். இவற்றை மேலோட்டமாக வாசித்தால் இயேசு சீசரையும் கடவுளையும் ஒரே இடத்தில் ஒரே தளத்தில் வைப்பது போல இருக்கிறது. அதாவது, 50 சதவிகிதம் இவருக்கும் 50 சதவிகிதம் அவருக்கும் அர்ப்பணத்தைப் பிரித்துக்கொள்ளுங்கள் என்று அவர் சொல்வதுபோல இருக்கிறது. இயேசு அப்படிச் செய்வாரா? 'ஒருவர் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அவர் ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்' என்று சொல்லிய இயேசு, 'நீங்கள் சீசருக்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்யுங்கள்' என்று சொல்வாரா? நிச்சயமாக இல்லை. 

இங்கே சீசருக்கும், கடவுளுக்கும் என்ற இணைப்பு 'ம்க்காக' கிரேக்கத்தில் பயன்படுத்தப்படும் சொல்ல 'kai' ('மற்றும்') என்பது. இந்த 'மற்றும்' என்ற சொல் இணைப்புச் சொல் அல்ல. மாறாக, ஒன்றிலிருந்து அடுத்ததுக்கு எடுத்துச் செல்லும் ப்ரொக்ரெஸிவ் சொல். 'வாழைப்பழம் மற்றும் மாம்பழம் வாங்கி வா' என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல், 'படிக்க மற்றும் விளையாடவும் செய்!' - அதவாது 'முதலில் படி, பின் விளையாடு' என எடுத்துக்கொள்ள வேண்டும். 

உரோமையின் அடிமைத்தளத்திலிருந்து யாராவது நம்மை விடுவிக்க மாட்டார்களா என இயேசுவின் காலத்தவர் எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தனர். 'தீவிரவாதிகள்' என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினர், தீவிரவாதத்தின் வழியாகவும், வன்முறையின் வழியாகவுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என நினைத்தனர். இயேசுவும் அவர்களின் சிந்தனையைப் பகிர்ந்தவர் தான். 'சீசருக்கு உரியதை சீசருக்கு கொடுங்கள், கடவுளுக்கு உரியதை கடவுளுக்குக் கொடுங்கள்' என்று சொல்வதில் ஒரு கோபம் ஒளிந்திருக்கிறது. அதாவது, சீசருக்கு உரியது உரோம். அதை விடுத்து விட்டு அவன் இங்கே என்ன செய்கிறான். இந்த மண்ணும், மக்களும் கடவுளுக்கு உரியது. அதை கடவுளுக்குக் கொடுத்துவிட்டு அவன் தன் ஊர் திரும்ப வேண்டும் என்ற தன் கருத்தை நாசுக்காகச் சொல்கின்றார் இயேசு. இவ்வாறாக, இங்கே ஆட்சி செய்ய வேண்டியர் இறைவன். இது இறைவனின் நாடு. இங்குள்ள மக்கள் இறைவனின் மக்கள். இவர்களை எப்படி சீசர் ஆட்சி செய்ய முடியும்?

ஆக, நாம் நம் அர்ப்பணத்தில் பிளவுபட்டிருந்தால், ஒன்றை அழித்துவிட்டு அடுத்ததில் முழுமையான அர்ப்பணம் செலுத்த அழைக்கிறார் இயேசு. அதாவது, அரசியல் மற்றும் உலகியல் அர்ப்பணத்தையும் தாண்டிய ஒன்று இருக்கிறது என்றும், அதுவே ஆன்மீகம் அல்லது கடவுள் என்றும் சொல்லி, 'கடவுளுக்கு உரியதை' மட்டும் தேர்ந்துகொண்டு, 'கடவுளுக்கு உரியவர்களாக' மட்டும் வாழ நம்மை அழைக்கிறார் இயேசு.

'கடவுளுக்கு உரியது' என்றால் என்ன? என்பதை இன்றைய  இரண்டாம் வாசகமும், 'கடவுளுக்கு உரியவர்கள்' என்றால் என்ன? என்பதை இன்றைய முதல் வாசகமும் வாசகமும் நமக்குச் சொல்கின்றன:

கடவுளுக்கு உரியது எது? (1 தெச 1:1-5)

புதிய ஏற்பாட்டில் முதன் முதலாக எழுதப்பட்ட நூல் என்று சொல்லப்படுகின்ற தெசலோனிக்கருக்கு தூய பவுல் எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கமே இன்றைய இரண்டாம் வாசகம். தன் மற்றும் தன் உடன் பணியாளரின் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட பவுல் தொடர்ந்து அவர்களை நினைக்கும் ஒவ்வொரு பொழுதும் தான் கடவுளுக்கு நன்றி சொல்வதாக எழுதுகின்றார். இந்த நேரத்தில் அவர்களிடமிருந்த மூன்று பண்புகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இந்த மூன்று பண்புகள்தாம் கடவுளுக்கு உரிய வாழ்வைச் சுட்டிக்காட்டுகின்றன. அவை யாவை?

அ. செயலில் வெளிப்பட்ட நம்பிக்கை

ஆ. அன்பினால் உந்தப்பட்ட உழைப்பு

இ. எதிர்நோக்கி இருப்பதால் பெற்றுள்ள மனவுறுதி

இந்த மூன்று பண்புகள் இருந்தால் நாமும் கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுக்க முடியும். அல்லது இந்த மூன்று பண்புகளில்தாம் கடவுளுக்கு உரியது அடங்கியிருக்கிறது. எப்படி? வெறும் நம்பிக்கை மட்டும் இருந்தால் என்ன பயன்? அந்த நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவரோடு மடிந்துவிடும். ஆனால் அந்த நம்பிக்கை செயல்களோடு கைகோர்க்கும்போது மானுடமும் வளம் பெறும். கடவுளைத் தந்தை என நான் நம்புகிறேன் என்றால், அந்த நம்பிக்கை செயலாக - அதாவது, ஒருவர் மற்றவரை சகோதர, சகோதரியாக ஏற்றுக்கொள்வதில் வெளிப்பட வேண்டும். அதுவே செயல். அப்படி இல்லாமல், நான் கடவுளை மட்டும் தந்தை என்று சொல்லிவிட்டு மற்றவர்கள்மேல் அக்கறையே இல்லாமல் இருந்தால், அல்லது மற்றவர்களை அந்நியமாக்கி வைத்தால் என்னிடம் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் செயல்கள் இல்லாமல் போய்விடும்.

அடுத்ததாக, உழைப்பு. இந்த உழைப்பு வெறும் உழைப்பாக மட்டும் இருந்தால் அங்கே தேய்மானமும், சோர்வும்தான் இருக்கும். கால்நடைகள் அல்லது எந்திரங்களின் உழைப்பு இப்படித்தான். அவைகளால் மற்றவர்களுக்குப் பயன் இருந்தாலும், நாளின் இறுதியில் அவர்களுக்கு மிஞ்சுவது சோர்வும் தேய்மானமும்தான். ஆனால், அந்த உழைப்போடு அன்பு கலந்தது என்றால், அங்கே சோர்வும் தேய்மானமும் இருப்பதில்லை. தாய் தன் குழந்தையின் மேல் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்கொள்வோம். அந்த அக்கறை என்ற உழைப்பில் அவள் தன் அன்பைக் கலப்பதால் ஒவ்வொரு நாளும் அவள் தாய்மையில் வளர்கிறாள். அவளிடம் சோர்வும், தேய்மானமும் இருப்பதில்லை.

மூன்றாவதாக, எதிர்நோக்கி இருப்பதால் பெறும் மனவுறுதி. மனவுறுதி என்பது பல ஏமாற்றங்களின் இறுதி வடிவம். அதாவது, நாம் எதிர்பார்த்து அது கிடைக்காமல் ஏமாந்து, ஏமாந்து போகும்போது நம் மனம் உறுதி பெறுகிறது. அதாவது, இது இல்லாமலும் என்னால் வாழ முடியும் என்ற உறுதியை அது பெற்றுக்கொள்கிறது. ஏமாற்றத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை மனவுறுதியாக மாற்றிக்கொள்வது மூன்றாவது பண்பு.

கடவுளுக்கு உரியவர்கள் யார்? (எசா 45:1,4-6)

இஸ்ரயேல் மக்கள் நெபுகத்னேசர் அரசனின் ஆட்சிக்காலத்தில் பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்தபோது அவர்களின் மீட்பராக வருபவர் பாரசீக நாட்டு அரசன் சைரசு. இந்த சைரசு இஸ்ரயேல் மக்களை தங்கள் நாட்டிற்குத் திரும்பச் சொன்னதோடல்லாமல், இடிந்து கிடந்த நகரையும் எருசேலம் ஆலயத்தையும் புதிதாய்க் கட்டிக்கொடுக்க முன்வருகிறார். இந்த நற்செயலைச் செய்த சைரசு அரசனைத் தானே திருப்பொழிவு செய்ததாகவும், தானே அவருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்குவதாகவும், தானே அவரை வழிநடத்துவதாகவும் சொல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். அத்தோடல்லாமல் 'கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை' என்று சொல்லி அனைவரையும், அனைத்தையும் தன் உரிமையாக்கிக்கொள்கிறார் கடவுள்.

அவரை அன்றி வேறு எவரும் இல்லை எனில் அவரே அனைத்துமாய் இருக்கிறார்.

ஆக, அவரவருக்குரியதைக் கொடுத்துவிட்டு இறுதியாக அவருக்குரியதை அவருக்கு வழங்குவதே சால்பு.

இறுதியாக,

ஒன்றே ஒன்று. அவருக்குரியதை நான் அவருக்குக் கொடுக்க எனக்கு குறுக்கே நிற்கும் என் சீசர் யார்? அவரின் உருவம் என்ன? அவரின் எழுத்துக்கள் எவை?

நான் அவருக்குரியதை அவருக்குக் கொடுக்க நான் அவருக்குரியவர் என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும். அந்த நம்பிக்கை என் அன்பில் மலர்ந்து மனவுறுதியாகக் கனிந்தால் எத்துணை நலம்!