இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

முழுமையாக, முதன்மையாக, மேன்மையாக!

1 அரசர்கள் 3:5,7-12
உரோமையர் 8:28-30
மத்தேயு 13:44-52

இன்றைய திருப்பலியில் நாம் பயன்படுத்தும் சபை மன்றாட்டின் மூன்று கூறுகள் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் சாரத்தை நமக்கு முன்வைக்கின்றன:

அ. உம்மையன்றி மேலானது ஏதுமில்லை. புனிதமானது ஏதுமில்லை.

ஆ. இந்த மெய்யறிவால் நாங்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

இ. நிறைவாழ்வின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்

ஆக, நன்மையானது, தீமையானது அல்லது மேன்மையானது, மேன்மையற்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறியும் அறிவு மெய்யறிவு. அந்த மெய்யறிவால் உந்தப்பட்டு மேன்மையற்றதைத் தள்ளிவிட்டு, மேன்மையானதைத் தழுவிக்கொள்ள வேண்டும்.

இருபது வருடங்களுக்கு முன்பாக ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று சொல்லும் அறிவு இருந்தால் போதுமானதாக இருந்தது. இன்று அறிவில் நிறைய பிரிவுகள் வந்துவிட்டன. கணித அறிவு, உணர்வு அறிவு, சமூக அறிவு, நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு. இந்த பிரிவுகளுக்குள் மெய்யறிவை எங்கே புகுத்துவது? மெய்யறிவு என்பதை நாம் ஞானம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

'நாமாக அனுபவித்து அறியும் அறிவு மட்டுமே அறிவு என்றும், மற்றதெல்லாம் தகவல்' எனவும் சொல்கின்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.மெய்யறிவு நம் அனுபவத்தில்தான் ஊற்றெடுக்கின்றது. 'நெருப்பு சுடும்' என்று நாம் நம் குழந்தைக்குச் சொன்னாலும், நெருப்பின் சுவாலைகளின் கவர்ச்சியினால் இழுக்கப்பட்டு அது நெருப்பு நோக்கி செல்கிறது. தானாக, அது நெருப்பு நோக்கிச் சென்று, நெருப்பினால் சுடப்பட்டு, தன் கையை பின்னிழுத்து, 'இனிமேல் நெருப்பைத் தொடமாட்டேன்!' என குழந்தை முடிவெடுப்பதற்குப் பெயர்தான் மெய்யறிவு.

மெய்யறிவுதான் விண்ணரசுக்கு முதற்படி என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 13:44-52).

'நல்ல புதையல், நல்ல முத்து, நல்ல மீன்' என மூன்று நல்லவைகளைச் சுற்றிச் சுழல்கிறது இன்றைய நற்செய்தி. நல்ல புதையல், நல்ல முத்தை, நல்ல மீன் இந்த மூன்றையும் அடையும் நிகழ்வே விண்ணரசு என உருவகம் செய்கிறார் இயேசு. இந்த அடைதல் மூன்று படிகளாக நிகழ்கிறது:

அ. தேடுதல்
ஆ. கண்டடைதல்
இ. கீழானவற்றை இழத்தல்
புதையலை ஒருவர் தேடுகிறார். அதைக் கண்டடைகிறார். கண்டவுடன் மீண்டும் அதைப் புதைத்துவிட்டுப் போய் தன்னிடம் உள்ள அனைத்தையும் இழந்து புதையலைப் பெற்றுக்கொள்கின்றார்.
முத்தை ஒருவர் தேடுகிறார். அதைக் கண்டடைகிறார். கண்டவுடன் தன் சொத்துக்களை எல்லாம் விற்று அந்த முத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.
வலையை வீசி ஒருவர் மீன்களைப் பிடிக்கின்றார். நல்ல மீன்களைக் கண்டடைகின்றார். கண்டவுடன் வலையைக் கரைக்கு இழுத்து கெட்ட மீன்களை எல்லாம் அகற்றிவிட்டு நல்ல மீன்களை வைத்துக்கொள்கின்றார்.
இந்த மூன்று படிகள்தாம் மெய்யுணர்வின் படிகள். ஆக, இந்த மூன்று படிகளைக் கொண்ட ஒருவர் கண்டுபிடிப்பதே விண்ணரசு. அல்லது விண்ணரசைக் கண்டுபிடிக்க இந்த மூன்று படிகள் அவசியம்.

இந்த மெய்யறிவு இறைவனின் கொடை என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம் (காண். 1 அர 3:5,7-12): 'சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். அதைக் கடவுள் தந்தார்' என நாம் மிகவும் எளிதாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், இந்த நிகழ்வின் பின்புலத்தோடு பார்த்தால் இந்த நிகழ்வின் அழகு இன்னும் சிறப்பாகத் தெரியும்.
தாவீது இறந்துவிடுகிறார். சாதாரண வீடுகளில் தந்தை இறந்துவுடன் பிள்ளைகள் அடித்துக்கொள்கிறார்கள். அரச குடும்பத்திற்கும் இது விதிவிலக்கு அல்ல. தாவீதுக்கு எபிரோனில் பிறந்த பிள்ளைகள் ஆறு: அம்னோன், கிலயேபு, அப்சலோம், அதோனியா, செபதியா, இத்ரேயம். எருசலேமில் பிறந்த பிள்ளைகள் ஐந்து: பிறந்தவுடன் இறந்த பெயரில்லா குழந்தை, சிமயா, ஷோபாப், நாத்தான், சாலமோன். மேலும் மற்ற மனைவியர் வழியாக பிறந்த ஒன்பது பிள்ளைகள். இப்படியாக 20 பிள்ளைகளின் தந்தை தாவீது. 20 பிள்ளைகளில் சாலமோன் மட்டும் அரியணை ஏறுகின்றார். தனக்கு முன் பிறந்த பெயரில்லாத குழந்தை பிறந்த ஓரிரு நாள்களில் இறந்துவிட்டது சாலமோனின் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. தானும் சீக்கிரம் இறந்துவிடுவோமோ என்ற பயத்தில் இருந்தார் சாலமோன்.
இரண்டாவதாக, வறுமை. தாவீது தன் இறுதிக்காலத்தில் தனக்கு இஷ்டம்போல செலவழித்ததாலும், போர் மற்றும் அழிவு போன்ற காரியங்களை முன்னெடுத்ததாலும் அரசின் கருவூலம் தரைதட்டிக்கொண்டிருந்தது.
மூன்றாவதாக, சாலமோன் இஸ்ரயேலின் அரசனாகப் பொறுப்பேற்ற காலம் இஸ்ரயேலுக்கு மிகவும் போதாத காலம். ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடானது வடக்கே இஸ்ரேல் எனவும், தெற்கே யூதா எனவும் பிளவுபட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறாக, அரசியலிலும் அமைதி இல்லாத நிலை. இந்தப் பின்புலத்தில், கிபயோனில் சாலமோனுக்குக் கனவில் தோன்றும் ஆண்டவர், 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!' என்கிறார். சாலமோன் உண்மையில் புத்திசாலிதான். எப்படி? 'ஞானம் வேண்டும்' என நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. 'உன் மக்களுக்கு நீதி வழங்க, நன்மை தீமைகளை பகுத்தாய' என தான் கேட்டதன் காரணத்தையும் கடவுளுக்குத் தெளிவாக்குகின்றார் சாலமோன். இங்கே சாலமோன் தன் மக்களை கடவுள் மக்களாக ஏற்றுக்கொள்கின்றார். மேலும், இவ்வாறு 'உன் மக்கள்' என்று சொல்வதன் வழியாக அவர் தன் பொறுப்புணர்வை தட்டிக் கழிக்கவில்லை. மாறாக, 'நீரே இம்மக்களின் கடவுள். நான் உன் பிரதிநிதி' என தன்னையே ஒரு படி கீழே இறக்கிக்கொள்கின்றார். ஆக, ஞானம் இருக்கும் இடத்தில் தாழ்ச்சி தானாகவே வந்துவிடுகிறது. அல்லது தாழ்ச்சியின் வழியே ஞானம் வருகிறது. மேலும், சாலமோன் முதலில் 'பிறர்நலத்தையும்' (மக்களுக்கு நீதி வழங்க), பிறகு 'தன்னலத்தையும்' (நன்மை தீமைகளைப் பகுத்தாய) பார்க்கின்றார்.
ஆனால், கடவுள் சாலமோனுக்கு தேவையான மூன்றை நினைவுபடுத்துகிறார்:
அ. நீடிய ஆயுள். ஓர் அரசனுக்கு தேவை நீடிய ஆயுள்தான். நம்ம வாழ்க்கையிலேயே பாருங்களேன். ஒன்னும் இல்லாதவர் இறப்பை பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார். ஏனெனில் அவர் விட்டுச் செல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் செல்வம் படைத்தவர் சாவைக் கண்டு ரொம்ப பயப்படுவார். ஏனெனில் அவர் விட்டுச் செல்ல நிறைய இருக்கிறது. மேலும், செல்வம் வந்துவிட்டால் கல்வி, மருத்துவம் என எல்லாவற்றையும் வாங்கிவிடலாம். உயிரை மட்டும் விலைகொடுத்து வாங்க முடியாது. ஆக, கடவுள் ஆயுளையும் வரமாகக் கொடுத்துவிட்டால் சாலமோன் கவலை இன்றி வாழலாம். தன் மூத்த சகோதரனைப் போல மிக குறைந்த வயதில் இறந்துவிடுவோம் என்ற பயம் இருக்காது.

ஆ. செல்வம். தாவீது விட்டுச்சென்ற காலியான கருவூலத்தை நிரப்பும்படி கேட்டிருக்கலாம். கருவூலம் நிறைந்தால் மனம் நிறையும். கருவூலம் நிறைந்தால் பலர் நம் நாடு தேடி வருவர். நமக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்ளலாம். பணம் இருக்கும் இடத்தில்தான் பணம் கிடைக்கும். இல்லையா? நான் குருமாணவராக இருந்தபோது என் சக குருமாணவர் ஒருவரின் தந்தையின் மருத்துவத்திற்காக பணம் தேவைப்பட்டது. அதைத் தன் மறைமாவட்டத்தில் கேட்க அவர் விரும்பினார். அப்படி அவர் ஆயரிடம் கேட்கலாமா, வேண்டாமா என ஆலோசனை கேட்க அவர் ஓர் அருள்பணியாளரை அணுகினார். அருள்பணியாளர் சொன்னார்: 'தம்பி, 'உன் வீட்டில் பணம் இருக்கிறது. உன் அப்பாவின் செலவை நீங்களே சமாளித்துக்கொள்ளலாம்' என்று இருந்தால் மறைமாவட்டம் பணம் கொடுக்கும். 'இல்லை. முடியாது!' என்றால் மறைமாவட்டமும், 'இல்லை. அப்படி எல்லாம் கொடுக்க முடியாது!' என்று பாலிசி பேசும்' என்றார். அதே போலவே நடந்தது. மறைமாவட்டம் அவருக்கு உதவ முன்வரவில்லை. அந்த சகோதரரின் அப்பாவும் இறந்துவிட்டார். கடவுளைப் பணம் இருந்தால் மட்டும்தான் பார்க்க முடியும் என்பது இன்று நாம் காணும் எழுதப்படாத உண்மை. ஒரு பங்கு அலுவலகத்திற்கு எல்லா மக்களும் வருவார்கள். பணம் அல்லது செல்வாக்கு படைத்தவர் வந்தால் அவரை கேட் வரை சென்று வழியனுப்பும் நான், சில நேரங்களில், ஒன்றும் இல்லாத ஒருவர் வரும்போது என் இருக்கையைவிட்டு கூட எழுவதில்லையே. எனக் கேட்கிறேனே! ஏன்?

இ. எதிரிகளின் சாவு. சாலமோன் இதையாவது கேட்டிருக்கலாம். தனக்கு எதிராக கிளர்ந்து நிற்கும் தன் 18 சகோதரர்களின் மரணத்தையாவது அல்லது தன்னைச் சுற்றி இருக்கும் எதிரி நாடுகளின் அழிவையாவது கேட்டிருக்கிலாம். ஏனெனில் அரசர்களின் தூக்கத்தைக் கெடுப்பவர்கள் எதிரி நாட்டினர். அவர்கள் அழிந்துவிட்டால் அரசர் நிம்மதியாக இருக்கலாம்.

இந்த மூன்றையும்தான் ஓர் அரசன் கேட்டிருக்க வேண்டும் என வரையறை செய்கின்ற ஆண்டவராகிய கடவுள், சாலமோன் இவற்றிற்கு மாறாக ஞானத்தைக் கேட்டதால், அதை அவருக்கு வழங்கியதோடல்லாமல், 'உனக்கு நிகராக உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப்போவதுமில்லை' என வாக்களிக்கிறார்.

சாலமோன் தான் பெற்ற இந்த ஞானத்தால் மெய்யறிவு பெருகின்றார். இந்த மெய்யறிவுதான் இறைவனின் அரசுதான் தன் வழியாகச் செயல்படுகிறது என்பதை சாலமோனுக்கு உணர்த்துகிறது.

இந்த மெய்யறிவு என்ற வார்த்தையை 'ஒருங்கியக்கம்' (சினர்கெயோ) என்ற வார்த்தையின் வழியாக இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:28-30) விளக்குகிறார் தூய பவுல். கடந்த வார மறையுரைக் குறிப்பில் நாம் குறிப்பிட்ட ஸ்டீஃபன் கோவே அவர்களின் 'ஏழு பண்புகளில்' ஆறாவதாக அவர் குறிப்பிடுவது, 'சினர்ஜைஸ்' (ஒருங்கியக்கு அல்லது ஒருங்கமை) என்ற சொல். சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமானால், நான் இந்த மறையுரையை தட்டச்சு செய்ய என் பத்து விரல்களைப் பயன்படுத்துவதும், நீங்கள் இதை உங்கள் கைபேசியில் வாசிக்க ஐந்து விரல்களைப் பயன்படுத்துவதும் 'சினர்ஜிஸம்' (கூட்டியக்கம் அல்லது ஒருங்கியக்கம்). அதாவது ஐந்து விரல்கள் சேர்ந்து ஒரு வேலையைச் செய்யும் போது அந்த வேலையின் ஆற்றல் ஐந்து விரல்களின் கூட்டுத்தொகையைவிட அதிகமாக இருக்கும்.

பவுல்தான் இந்த வார்த்தையை முதன்முதலாகக் கையாளுகின்றார். எப்படி? 'கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவருடைய திட்டத்திற்கு ஏற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் சினர்கெயோ (ஒருங்கியக்கம்) செய்கிறார்.' இதையே பவுலோ கோயலோ தனது 'இரசவாதி' (தி ஆல்கமிஸ்ட்) என்ற நூலில், 'நீ உன் கனவைப் பின்பற்றிச் சென்றால், இந்த பிரபஞ்சமே உனக்கு ஒத்துழைக்கும்' என்கிறார். அதாவது, கடவுளை நாம் அன்பு செய்தோம் என்றால், நம்மைச் சுற்றி இருக்கும் புள்ளிகள் எல்லாம் தானாவே கனெக்ட் ஆகும்.

இன்றைய நற்செய்தியின் முதல் உவமை வாசித்துக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு டவுட் வந்தது.

ஒரு நிலத்தில் புதையலைப் பார்த்துவிட்டு, அதை வேகமாக மூடிவைத்துவிட்டு, அந்த நிலத்தை வாங்குவதற்காக ஒருவன் செல்கின்றான். அப்படி செல்லும் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் விற்கிறான். ஒருவேளை அவன் விற்றுவிட்டு வருவதற்குள் அந்த புதையலை வேறு ஒருவன் எடுத்துச் சென்றாலோ, அல்லது வேறு ஒருவருடைய கைக்கு நிலம் சென்றுவிட்டாலோ அவன் என்ன செய்வான்? உள்ளதும் போய்விட்டது! என வருந்துவானே என்று நான் நினைத்தேன். என் டவுட்டிற்கு விடை இரண்டாம் வாசகத்தில் கிடைத்தது.

ஒருவன் மெய்யறிவு பெற்று முழுமையாக விண்ணரசைத் தேடினால் அவன் வரும்வரை அவனது நிலம் அவனுக்காக காத்திருக்கிறது. இதுதான் சினர்கெயோ. இதுதான் ஒருங்கியக்கம். அதாவது நம் எண்ணம் நேர்முக எண்ணமாக இருந்தால் அது நம்மைச் சுற்றி ஒரு நல்ல வட்டத்தை அமைத்து நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவற்றையும் பாதுகாத்துக்கொள்கிறது. இதைச் செய்பவர்தான் ஆவியானவர். இதே கருத்தைத்தான் 'ஆழ்மனத்தின் சக்தி' என்று உளவியலில் சொல்கிறார்கள். என் ஆழ்மனம் பிரபஞ்சத்தின் ஆழ்மனத்தோடு தொடர்பில் இருக்கிறது. அந்த ஆழ்மனத்திடம் என் தேவையை சொல்லும்போது அது பிரபஞ்சத்திடம் சொல்லி அதை எனக்குக் கொடுக்கிறது.

மேலும், பவுலின் கிரேக்க மொழிநடைக்கு இன்றைய இரண்டாம் வாசகத்தில் சான்று ஒன்று உள்ளது. இதை 'ஸ்பைரல் நடை' அல்லது 'படிக்கட்டு நடை' என்பார்கள். அதாவது முதல் வாக்கியத்தில் உள்ள இறுதி வார்த்தையை எடுத்து அடுத்த வாக்கியத்தில் முதல் வார்த்தையாகப் பயன்படுத்துவது:

'தாம் முன்குறித்துவைத்தோரை அவர் அழைத்தார்.
தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையவராக்கினார்.
தமக்கு ஏற்புடையவர் ஆனோரை தம் மாட்சியில் பங்கு பெறச்செய்தார்.'
ஆக, நம் வாழ்வில் மெய்யறிவு நாம் பெற்று, நம் கடவுளை தேடினால், கண்டடைந்தால், அவருக்காக கீழானவற்றை இழந்தால் நமக்காக ஆவியார் ஒருங்கியக்கம் செய்வார்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. முழுமையாக, முதன்மையாக, மேன்மையாக

நம் வாழ்வில் நாம் தேடுபவை எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் இங்கே கற்றுக்கொள்ளலாம். பல நேரங்களில் வாழ்க்கை நமக்கு எதைக் கொடுக்கிறதோ அதுவே போதும் என நாம் வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்கிறோம். புதையலைத் தேடியவரிடமும், முத்தை தேடியவரிடமும், மீனைத் தேடியவரிடமும் எல்லாம் இருந்தது. இருந்தாலும் ஏன் முதலாமவரும் இரண்டாமவரும் தமக்குள்ள அனைத்தையும் விற்க வேண்டும்? ஏன் மீன் தேடியவர் கெட்ட மீன்களை கடலுக்குள் வீசி எறிய வேண்டும்? வாழ்க்கையில் டூப்ளிகேட் அல்லது டபுளிங் இருக்கவே கூடாது. 'புதையலா? அல்லது சொத்தா?' 'முத்தா? அல்லது சொத்தா?' 'நல்ல மீனா? கெட்ட மீனா?' என்ற கேள்வி வரும்போது, நல்லது எது கெட்டது எது என்று தரம்பார்க்கும் உள்ளமும், தரம் பார்த்துப் பிரித்தவுடன் தாழ்வானதை அகற்றிவிட்டு மேலானதைப் பற்றிக்கொள்ள துணிச்சலும் வேண்டும். அப்படி இருந்தால்தான் விண்ணரசைப் பெற முடியும். ஆக, விண்ணரசு என்பது முழுமையாகவும், முதன்மையானதாகவும், மேன்மையாகவும் தேடப்படவும், கண்டுகொள்ளப்படவும், அடையப்படவும் வேண்டும். ஃபிஃப்டி - ஃபிஃப்டி மனநிலை ரொம்ப ஆபத்து.

2. அவசியம் - அவசரம்

கடந்த வாரத்தில் 'அவசியம் - அவசரமில்லை' என்பதே விண்ணரசு என்றோம். இன்று நாம் பார்வை சற்று மாறுகிறது. சில நேரங்களில் 'அவசியம் - அவசரம்'கூட விண்ணரசாகிறது. புதையலைக் கண்டவரும், முத்தைக் கண்டவரும், நல்ல மீனைக் கண்டவரும் உடனடியாக செயல்படுகின்றனர். 'சின்ன வேலைதான். நாளைக்குப் பார்த்துக்கலாம்!' என அவர்கள் ஓய்ந்திருக்கவில்லை. ஓய்ந்திருப்பது புதையலுக்கும், முத்துக்கும், மீனுக்கும் ஆபத்தாக முடியலாம். ஆக, விண்ணரசைப் பொறுத்தமட்டில் அவசரமும் அவசியம்.

3. நிறைய இருப்பது நிறைவன்று

நம் வாழ்வில் நிறைவு என்று எதைப் பார்க்கிறோம்? நிறைய வைப்பதால் வருவதா நிறைவு? இல்லை. நிறைவாக வைத்திருப்பதே நிறைவு. நிறைய நிலம் வைத்திருந்தால் அது நிறைவல்ல. ஆனால் கையில் ஒரு புதையல் வைத்திருந்தால் நிறைவு. நிறைய செல்வம் வைத்திருந்தால் அது நிறைவல்ல. ஆனால் ஒரே ஒரு முத்து வைத்திருந்தால் அது நிறைவு. வலை நிறைய மீன்கள் வைத்திருந்தால் அது நிறைவல்ல. கூடையில் சில நல்ல மீன்கள் வைத்திருந்தாலே அது நிறைவு. இன்று சிறுநுகர் வாழ்வு பற்றி நிறையப்பேர் பேசுகிறார்கள். அதாவது, சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு நிறைவாக வாழ்வது. ஒரு பெட்டி எடுத்துக்கோங்க. நீங்க பயன்படுத்தமாட்டோம் என நினைக்கிற ஃபோன், டிரஸ், மேக்அப் திங்ஸ், பேனா, பென்சில் என அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு 30 நாள் என ஸ்டிக்கர் ஒட்டி விடுங்க. 30 நாள்கள் நீங்கள் அந்தப் பொருள் இல்லாமல் வாழ்ந்துவிட்டால் அந்தப் பொருள் உங்களுக்கு தேவை அல்ல என்பது பொருள். 'எப்பயாவது தேவைப்படும்!' என நாம் நம் வீடுகளிலும், அறைகளிலும் நிறைய சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், அவற்றை நாம் ஒருபோதும் பயன்படுத்தப்போவதில்லை. சில நேரங்களில் இன்னும் மேன்மையானவை வீட்டிற்குள் வர அவை தடையாகக் கூட இருக்கின்றன. இதே போல நம் ஃபோன்களையும், நம் கணிணியின் மெமரியையும், ஏன் நம்மளோட மெமரியையும் நிறைத்துக் கொண்டே இருக்கிறோம். நிறைய தெரிந்து கொள்வது அறிவு அல்ல. நிறைவானதை தெரிவது அறிவு. நிறைய வைத்திருப்பது செல்வம் அன்று. நிறைவை வைத்திருப்பதே செல்வம். ஆக, நம் வாழ்வில் நிறைய இருப்பவற்றை குறைக்க முன்வருவோம். சாலமோன் இதைத்தான் செய்தார். நிறைய செல்வம், நிறைய ஆயுள், நிறைய எதிரிகளின் அழிவு அவருக்கு நிறைவைத் தரவில்லை. கடவுளின் ஞானம் மட்டுமே நிறைவு தந்தது. அதை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.

4. தேடுதல், கண்டடைதல், கீழானதை இழத்தல்

நம்ம வாழ்க்கையில் முதல் தேடிடுவோம், கண்டுபிடிச்சிடுவோம். ஆனால், கீழானதை இழப்பதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. மது அருந்தக் கூடாது, கோபப்படக்கூடாது, புறணி பேசக்கூடாது என எல்லா நல்லதும் நமக்குத் தெரியும். ஆனால், இந்தக் கீழானவைகளை இழப்பதுதான் நமக்கு கஷ்டமாக இருக்கிறது. இது கரடி போல. எப்படி? கரடி நம்ப பிடிச்சுகிட்ட இருக்குதுன்னு நினைப்போம். ஆனா நல்லா பார்த்தா நாமதான் கரடியைப் பிடித்துக்கொண்டு விடாமல் இருப்போம். நல்ல புதையலுக்காக, நல்ல முத்துக்காக, நல்ல மீனுக்காக தங்களின் கீழானவற்றை இழக்கத் துணிகிறார்கள் நம் கதைமாந்தர்கள்.

5. ஒருங்கியக்கம்

சாலமோன் செய்ததுபோல, பவுல் அறிவுறுத்துவதுபோல 'கடவுளிடம் அன்பு கூர்வோம்.' நாம் எல்லாருமே காலிக்குடங்கள். தூய அகுஸ்தினார் சொல்வது போல, 'காலிக்குடமாகிய நான் என் தாகத்தை யாராவது தீர்ப்பார்களா என்று எல்லாரிடமும் ஓடினேன். ஆனால் எல்லாருமே காலிக்குடங்கள் என்பதை நான் இப்போது கண்டுகொண்டேன். காலிக்குடங்கள் மற்றொரு காலிக்குடத்தை எப்படி நிரப்ப முடியும்? காலிக்குடங்களைத் தேடியதில் நான் வற்றாத ஜீவ நதியாகிய உன்னை நான் மறந்துவிட்டேனே!' ஆக, கடவுளையும் அவருடைய அரசிற்குரியவற்றையும் தேடினால், வாழ்வில் உள்ள மற்ற அனைத்தையும் ஆவியார் ஒருங்கியக்கம் செய்துவிடுவார்.

இறுதியாக,

முழுமையாக, முதன்மையாக, மேன்மையாக - விண்ணரசு!