இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா

நாமும் நற்கருணையே!

இணைச்சட்ட நூல் 8:2-3,14-16
1 கொரிந்தியர் 10:16-17
யோவான் 6:51-58

நான் புனே குருமடத்தில் பயின்ற காலத்தில்தான் பன்றிக்கறியை மனிதர்கள் சாப்பிடுவார்கள் என்று தெரிந்துகொண்டேன். மங்களுரில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பன்றிக்கறியை விரும்பி உண்பார்கள். மேலும், இவர்கள் ரொம்ப டாமினன்டாக இருப்பதால் இவர்களைப் பிடிக்காதவர்கள் நடுவில் சொல்லாடல் உண்டு:

'நாம் எதைச் சாப்பிடுகிறோமோ அதுவாக மாறுகிறோம்.
மங்களுருக்காரங்க பன்றி சாப்பிடுறாங்க.
ஆகையால் அவர்கள் பன்றியாக மாறுகிறார்கள்!'
இந்தச் சொல்லாடல் அல்லது சொலவடையில் கொஞ்சம் பொறாமை, நிறைய கேலி, கிண்டல், பகை இருந்தாலும், இப்போது யோசித்தால் அப்படி சொல்லியிருப்பது தவறே என்று தோன்றுகிறது.

ரெண்டு வாரமா வாட்ஸ்ஆப்பில் ஒரே பரபரப்பு. ரப்பர் அரிசி, ரப்பர் முட்டை என பயமுறுத்துகிறார்கள். சாப்பிடுவதற்கு முன் ஒரு வாய் சோற்றை சுவற்றில் அடித்து அது ரப்பர் மாதி திரும்ப வருகிறதா என்று பார்த்துத்தான் சாப்பிட வேண்டும் என நம் தட்டில் கை வைக்கிறார்கள்.நாம் பிளாஸ்டிக் அரிசி சாப்பிட்டால் பிளாஸ்டிக்காக மாறிவிடுவோமா?

இன்று நாம் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். கத்தோலிக்க திருச்சபை வழிபாட்டு வரலாற்றில் மிக தொன்மையான திருவிழா இது.

இந்த நாள் மூன்று நிலைகளில் சிறப்பு பெறுகிறது:

அ. இயேசுவின் கல்வாரிப் பலியை இது நமக்கு நினைவூட்டுகிறது.

ஆ. இயேசு நம்மோடு பிரசன்னமாக இருக்கிறார் என்ற வாக்குறுதியை தருகிறது.

இ. நாமும் இதைப்போல வாழ வேண்டும் என்ற அழைப்பை விடுக்கிறது.

நற்கருணை பற்றி பேசுகிறவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:

அ. முதல் வகையினர் நற்கருணை என்றால் பலி, உணவு, இறைப் பிரசன்னம் என மறைக்கல்வி போதிப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன்படி பேசும் வகையினர். கார்ல் ரானர் போன்ற இறையியல் அறிஞர்கள் போன்றவர்கள் இவர்கள். இவர்கள் நற்கருணைப் பேழையை அலங்கரிப்பார்கள். பூச்சூடுவார்கள். அதன்முன் முழந்தாளிடுவார்கள். மணிக்கணக்காக ஆராதனை செய்வார்கள்.

ஆ. இரண்டாம் வகையினர் நற்கருணை என்பது சாதாரண  மனிதர்களின் பசி, பிணி, வறுமை, அடிமைத்தனம் என்பவற்றில் அடங்கியிருக்கிறது என்று சொல்பவர்கள். பொன்வாய் அருளப்பர், ஆஸ்கர் ரொமேரோ போன்றவர்கள் இவர்கள். வெளியில் தெருவில் ஏழை துணி இல்லாமல் இருக்கிறான், நற்கருணைப் பெட்டிக்கு துணி எதற்கு என இரத்தம் கொதிப்பவர்கள் இவர்கள்.

இந்த இரண்டு வகைகளில் எது சரி, எது தவறு என்பது நாம் கண்டுபிடிக்க இயலாத ஒன்று.

'இயேசுவை அலகை அல்லது பேய்' என குஜராத் பாடப்புத்தகம் எழுதியுள்ளதை நாம் எல்லாரும் கண்டித்துக்கொண்டிருக்கின்றோம். இது மாதிரியான குற்றச்சாட்டு தொடக்கத் திருச்சபையிலும் இருந்தது. நற்கருணையைக் கொண்டாடிய முதற் கிறிஸ்தவர்களை, அவர்கள் இயேசுவின் திருவுடலை இரத்தத்தை உண்பதால், 'மனிதமாமிசம் திண்பர்கள்' என்று உரோமையர்கள் அழைத்தனர்.

நற்கருணைப் பெட்டிகள் சில இடங்களில் உடைக்கப்படுகின்றன. நற்கருணை கீழே கொட்டப்படுகிறது.

நாம் வாழும் இந்திய மண்ணில் நற்கருணை பற்றி அறியாத பிற மதத்தவர்கள் இருக்கிறார்கள். மேலும் பிற மதத்தவர்கள் நம் திருப்பலிகளில் பங்கேற்கும்போதெல்லாம், 'பிற சமய அன்பர்கள் தயவு செய்து இந்த விருந்தில் பங்கேற்க வேண்டாம்!' என்று எச்சரிக்கையும் செய்கின்றோம். எனக்கு இங்கே ஒரு லாஜிக் புரியல! பிறசமய அன்பர்கள் காணிக்கை போட்டா வாங்கிக்கொள்கிறோம். ஆனால் நற்கருணை வாங்கிவிட்டால், குய்யோ முறையோ எனக் கத்துகிறோம். உரோமையில் நான் இருந்த பங்கின் அருள்பணியாளர் இப்படித்தான் கிறிஸ்தவர் அல்லாத ஒரு பெண்மணியை மிகவும் கடிந்துகொண்டார். அதுமுதல் அவர்கள் கோவிலுக்கே வருவதில்லை.

ஆக, இன்றைய நாளில் மற்றவர்களின் பார்வையில் நற்கருணையை சிந்திப்போம்.

அதாவது, கத்தோலிக்கர் அல்லது கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் நம் ஆலயத்திற்குள் வருகிறார். நற்கருணைப் பேழை முன் நாம் மண்டியிடுவதைப் பார்த்து, 'அது என்ன?' என்று கேட்கிறார். நாம் அந்த இனியவருக்கு என்ன பதில் சொல்வோம். 'இது ஒரு மறைபொருள்' என்று சொல்லி ஒதுங்கிவிடுவோமா? அல்லது மௌனம் காப்போமா?

நற்கருணை என்றால் பிரசாதமா?

நற்கருணை என்றால் கர்ப்பக்கிரகமா?

நற்கருணை எள்றால் நினைவுச்சின்னமா?

1. நற்கருணை என்றால் பசி

நற்கருணை என்பது ஒரு கிறிஸ்தவ வார்த்தை அல்ல. யூகரிஸ்டேய்ன் என்ற கிரேக்க பதத்திலிருந்துதான் யூக்கரிஸ்ட் என்ற ஆங்கில வார்த்தை பிறக்கிறது. ஆனால் யூகரிஸ்டேய்ன் என்பது அன்றாடம் சொல்வழக்கில் இருக்கும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தையின் பொருள் நன்றி சொல்வது. ஆக, நற்கருணை என்றால் அடிப்படையில் நன்றி சொல்வது. எதற்கு நன்றி? கிறிஸ்துவின் கல்வாரி பலிக்கு, அவரின் தியாகத்திற்கு, அவரின் உடனிருப்புக்கு என சொல்லி நன்றியைச் சுருக்கிவிட வேண்டாம்.

நன்றி சொல்வது என்பது நினைவுகூறுதல். அதாவது, நினைவுகூறும் ஒருவர் தான் நன்றி என்றே சொல்ல முடியும். நினைவும், நன்றியும் எப்போதும் இணைந்தே செல்கிறது. ஆகையால்தான் நன்றி இல்லாதவரை நாம் 'நன்றி மறந்தவர்' என்று சொல்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 8:2-3,14-16), 'நினைவில் கொள்ளுங்கள்,' என்று தொடங்கி, 'மறந்துவிடாதீர்கள்' என தன் அறிவுரையை நிறைவு செய்கின்றார் மோசே. 'நினைவில் கொள்வதும்,' 'மறந்து போகாமல் இருப்பதும்' ஒன்றுதானே!

இஸ்ரயேல் மக்கள் எதை நினைவில் கொள்ள வேண்டுமாம்?

அ. ஆண்டவரின் வழிநடத்துதலை

ஆ. ஆண்டவர் மன்னா உண்பித்ததை

இ. ஆண்டவர் தந்த பாதுகாப்பை

இந்த வாசகத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, 'உங்களுக்கு பசியை தந்தார்' என்ற வரிதான்.

கடவுள் நமக்கு பசியை தரவில்லை என்றால் இன்று நாம் எல்லாவற்றையும் மறந்துவிடும்.

'பசி வந்தா பத்தும் பறந்திடும்' என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், உண்மை அதுவல்ல. பசியை அனுபவித்த ஒருவர் அனைத்தையும் நினைவில் கொள்வார். உதாரணத்திற்கு, எனக்கு பணத்தேவை என்ற பசி இல்லாவிட்டால், எனக்கு பணம் தந்து உதவியவரை நான் மறந்துவிடுவேன். ஆக, பசி என்பது வெறும் வயிற்றுப்பசி அல்ல. மாறாக, பசி என்றால் ஒரு குறைவு. அதாவது, நிறைவாக இருக்க வேண்டிய வயிறு குறைவாக அல்லது காலியாக இருக்கிறது. அந்த காலியான நிலைதான் பசி. அந்தக் காலியான நிலையை நாம் உணவைக்கொண்டும், தண்ணீரைக் கொண்டும் நிறைத்துவிட்டால் நம் பசி போய்விடுகிறது.

எல்லா உயிர்களுக்கும் பசி இருக்கும். பசி இருக்கும் வரை தான் நமக்கு உயிரும் இருக்கிறது. ஆகையால்தான் பசி எடுக்கவில்லை என்றால் மருத்துவரிடம் ஓடுகிறோம். எனக்கு பசிப்பதே இல்லை! என யாரும் ஓய்ந்துவிடுவதில்லை. ஆக, மனிதரின் மிக சாதாரணமான ஒரு உணர்வை எடுத்து கடவுள் அதை மிக அழகாக கையாளுகின்றார். அந்தப் பசியின் வழியாக அவர்களுக்குத் தன் உடனிருப்பைக் காட்டுகின்றார்.

மன்னா அல்லது காடை இறைச்சி கொடுப்பதற்கு பதிலாக கடவுள் அவர்களுக்கு பசியே எடுக்காமல் செய்திருக்கலாம் அல்லவா? முதலில் பசி என்ற உணர்வைக் கொடுக்கின்றார். பின் அந்தப் பசியை போக்குகின்றார். இந்த நிறைவு என்பது தற்காலிகமானது. உண்ட உணவு செரித்துவிட்டால் நமக்கு மீண்டும் பசி எடுக்கும். ஆக, மீண்டும் அவர் உணவு தருவார். இவ்வாறாக, பசி இருக்கும் வரை நமக்கு தேடல் இருக்கும். அந்தத் தேடலின் நிறைவாக இறைவன் இருப்பார்.

ஆக, நாம் கொண்டாடும் நற்கருணை என்பது நம் பசியின் நிறைவு.

ஆனால், அந்த நிறைவு நாம் உண்ணும் அப்பம் அல்லது ரொட்டியில் அல்ல. மாறாக, கடவுளின் வாய்ச்சொல்லில் இருக்கிறது. ஆக, காணக்கூடியதிலிருந்து காண முடியாத ஒரு புரிதலுக்கு அழைக்கிறார் கடவுள். நற்கருணையை நாம் பார்க்கும்போதெல்லாம் நம் குறைவும், பசியும் நினைவுக்கு வருகிறது. அந்தப் பசியை ஆற்றுபவராக நம் முன் வருகிறார் கடவுள்.

இப்படி கடவுள் நம் பசியை ஆற்றுகிறார் என்றால் நாம் ஒருவர் மற்றவரின் பசியை ஆற்ற வேண்டும். உணவுப் பசி, அறிவுப் பசி, பணப் பசி, உறவுப் பசி என நாம் உணரும் குறைகளை போக்குபவர் நம் கடவுள் என்றால், இவற்றை நாம் மற்றவர்களுக்குப் போக்கும் போது நாமும் நற்கருணை ஆகின்றோம்.

2. நற்கருணை என்றால் இணைப்பு

கொரிந்து நகரத் திருச்சபைக்குள் நிலவிய பிளவுகள் மற்றும் பிரிவினைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கடிந்து கொண்டு, அவர்களுக்கு அறிவுறுத்தும் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 10:16-17), நற்கருணையை ஒன்றிணைப்பின் உருவகமாக கையாளுகின்றார்.

இந்த உருவகம் நம் தமிழ்மரபோடு தொடர்புடையது. எப்படி?

நமக்கும், நம் உறவினர்களுக்கும் இடையே இருக்கும் உறவில் விரிசல் வரும்போது, 'உனக்கும், எனக்கும் சம்பந்தம் கிடையாது. உன் வீட்டில் நான் கை நனைக்க மாட்டேன்' என்று விலகிவிடுகிறோம். 'கை நனைப்பது' என்பது அடுத்தவரின் பாத்திரத்தில் கையிடுவது. திருமண விருந்தின்பொழுது ஒரே அண்டாவில் சமைத்த உணவை நாம் உண்கிறோம். இருக்கிறவர், இல்லாதவர் எல்லாருக்கும் ஒரே உணவுதான். (ஆனால், இன்று சுகர் இருக்கிறவர், இல்லாதவர் என்று உணவு சில இடங்களில் பரிமாறப்படுகிறது!) ஒரே உணவை உண்கின்றோம் என்றால் நாம் சகோதரர், சகோதரிகள் ஆகிவிடுகிறோம்.

ஒரே அண்டாவில் உணவு என்பதை சற்று மாற்றி ஒரே கிண்ணம், ஒரே அப்பம் என்று சொல்கிறார் பவுல்.

இன்று ஆலயத்திற்கு வருகின்ற நம் எல்லாருக்கும் நற்கருணை நற்கருணையாகத்தான் தெரிகிறது. ஒரே கிண்ணத்திலிருந்து அப்பத்தை உண்கிறோம். ஆக, நற்கருணை என்ன சொல்கிறது?

இதோ, இந்த ஆலயத்திற்குள் கூடி நிற்கும் நாங்கள் அனைவரும் நிறத்தால், குணத்தால், பணத்தால், மனத்தால், மொழியால், பண்பாட்டால் வேறுபட்டிருந்தாலும் நாங்கள் அனைவரும் ஒன்றே. ஏனெனில் எங்களுக்குள் செல்லும் உணவு ஒன்றே.

லாஜிக் ரொம்ப சிம்பிள். 

என் வயிற்றுக்குள் செல்லும் நற்கருணையும், உங்கள் வயிற்றுக்குள் செல்லும் நற்கருணையும் ஒன்றே. அப்படி என்றால் உங்கள் உடலும், என் உடலும் ஒன்றே. பின் ஏன் பிரிவினைகள்?

மேலும், இந்த நற்கருணையில் இயேசுவே இருப்பதால் நாம் கடவுளோடு முதலில் இணைகிறோம். இந்த இணைந்திருத்தலைத்தான், 'எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர்' என்கிறார் இயேசு (காண். யோவா 6:51-58)

3. நற்கருணை என்றால் கொடுத்தல்

'நாம் உண்பதற்கு இவர் எப்படி தமது சதையைக் கொடுக்க முடியும்?' - இந்தக் கேள்விதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். யோவா 6:51-58) மையமாக இருக்கிறது. இவர் எப்படி கொடுக்க முடியும்? இந்தக் கேள்வி இன்று நம்முள்ளும் எழுகிறது. எப்போது?

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஐஏஸ் என்னும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெல்பவர்களை நாம் முதல் இடம் எடுத்தவர்கள் அல்லது முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் என சொல்கிறோம். ஆனால், இவர்கள் 'எடுப்பதற்கு' காரணம் இவர்கள் 'கொடுத்ததுதான்'. அதாவது, தங்கள் நேரத்தைக் கொடுத்தார்கள். ஆற்றலைக் கொடுத்தார்கள். சின்ன சின்ன சந்தோஷங்களை விட்டுக்கொடுத்தார்கள். ஆக, எடுத்தல் வேண்டுமென்றால் கொடுத்தல் அவசியம்.

ஆனால், இன்றைய நம் உலகம் கொடுப்பவர்களை விட எடுப்பவர்களையே முதன்மைப்படுத்துகிறது. மக்களிடமிருந்து பணத்தை எடுக்கும் அரசியல்வாதிகளும், வலுவற்றவர்களிடமிருந்து உயிரை எடுக்கும் பயங்கரவாதிகளும்தான் செய்தித்தாள்களின், மாத இதழ்களின் முகப்பில் மின்னுகிறார்கள். தங்கள் உயிரை, ஆற்றலை மற்றவர்களுக்காக கொடுத்தவர்கள் எல்லாம் வெறும் உள்பக்க பெட்டிச் செய்திகளாகவே நின்றுவிடுகிறார்கள்.

எடுப்பவர் நன்றாக இருப்பதால், கொடுப்பவரும் காலப்போக்கில் எடுக்கத் தொடங்குகின்றார். நம் உறவுகளில் கூட நாம் நம் நேரத்தை, ஆற்றலை, உணர்வுகளை மற்றவருக்குக் கொடுக்காமல், எடுக்க மட்டுமே நினைக்கும்போது நாம் அத்துமீறல் செய்கின்றோம். உறவைச் சீர்குலைத்துவிடுகின்றோம்.

முன்னோர் உண்ட உணவு மன்னா. அதை அவர்கள் தாங்களாக உண்டனர். இறந்தனர். ஆனால், நற்கருணையில் வாழ்வு தொடர்கிறது. எப்படி? என்னிடம் 1000 ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதை நான் 'எடுத்து' திரைப்படம் அல்லது உணவகம் அல்லது பொழுதுபோக்கு என செலவழித்தால், அந்த 1000 ரூபாய் என்னோடு முடிந்துவிடுகிறது. அது எனக்குள் இறந்துவிடுகிறது. அந்தப் பொழுதோடு சேர்த்து நானும் இறந்துவிடுகின்றேன். ஆனால், அதே 1000 ரூபாயை எடுத்து நான் ஒரு மாணவரின் படிப்புச் செலவுக்காக அல்லது முதியவர் ஒருவரின் மருத்துவ செலவுக்காக 'கொடுத்தால்,' அது அந்த மாணவரிலும், முதியவரிலும் தொடர்ந்து வாழ்கிறது. அந்தப் பணம் அழிவதில்லை. நானும் அழிவதில்லை. இதுதான் இயேசு சொல்லும், 'என்றும் வாழ்வர்' என்பதன் அர்த்தம். இதையே தூய பவுலடியாரும், 'வாழ்வோர் இனி தங்களுக்கென்று வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்' (2 கொரி 5:15) என எழுதுகின்றார். கிறிஸ்து எனக்காக இறந்தார் என்றால் நான் மற்றவருக்காக இறக்க வேண்டும். கோதுமை மணி இறப்பதால் அப்பம் உருவாகிறது. அப்படியே நான் மற்றவர்களுக்காக இறக்கும்போது நானும் மாற்றம் அடைகிறேன்.

  நற்கருணையில் அப்பம் என்ற இயல்பு மாறி, கிறிஸ்துவின் உடல் உருவாகிறது என்றால், அதை உண்ணும் என்னிலும் அதே மாற்றம் இருக்க வேண்டும்.

இறுதியாக,

நற்கருணை என்றால் 'பசி,' 'இணைப்பு,' மற்றும் 'கொடுத்தல்' என்பவை எல்லாருக்கும் புரியும் எளிய வார்த்தைகள். நற்கருணையை 'கல்வாரிப் பலி,' 'தியாகம்,' 'இறைஇருப்பு' என பெரிய வார்த்தைகளில் பேசி நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிட வேண்டாம்.

நம்மில் பசி எடுக்கும் ஒவ்வொரு பொழுதும், நாம் இணைப்புக்காக ஏங்கும் ஒவ்வொரு பொழுதும், நாம் மற்றவருக்குக் கொடுக்க கைகளை நீட்டும் ஒவ்வொரு பொழுதும், நாமும் நற்கருணை ஆகின்றோம்.

'இது என் உடல், இது என் இரத்தம். ஆனால் இது உனக்காக' என அன்று அவர் பசி போக்கினார். இணைத்தார். கொடுத்தார்.

இன்று போலியான நிறைவு, போலியான இணைப்பு, போலியான கொடுத்தல் என நாம் திசைமாறிக்கொண்டே இருக்கிறோம். இன்று நாம் கொண்டாடும் திருவிழா நம்மை நேர்வழிக்குக் கொண்டுவரட்டும். ஒவ்வொரு பொழுதும் நற்கருணையை உற்று நோக்கும்போதும், கைகளில் ஏந்தும்போதும், மனுக்குலத்தின், இயற்கையின் பசியை, இணைத்தலை, கொடுத்தலை நினைத்தால்,

நாமும் என்றும் 

'இதை அவர் நினைவாகச் செய்வோம்!