இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

இழப்பின் மகிழ்ச்சி!

எசாயா 66:10-14
கலாத்தியர் 6:14-18
லூக்கா 10:1-12, 17-20

அவர்கள் சென்றார்கள். அவர்கள் வெறுங்கையராய்ச் சென்றார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போல சாந்தமாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களோ ஓநாய்களைப் போல ஆபத்தானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஒன்றுமில்லை. தோளில் பைகள் இல்லை. மாற்று உடைகள் இல்லை. அரையில் பணம் இல்லை. பாதங்களில் மிதியடிகள் இல்லை. அவர்கள் போகும் வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்தவில்லை. ஏனெனில் அடுத்தவருக்கு வணக்கம் செலுத்தி முகஸ்துதி செய்யும் குணமும் அவர்களிடம் இல்லை. தன் கண்களில் பட்ட வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் முன் வைக்கப்பட்டதை உண்டார்கள். அங்கிருந்தவர்களின் நோய்களைக் குணமாக்கினார்கள். இறையரசு வந்துவிட்டது என்ற செய்தியைச் சொன்னார்கள். சிலர் கதவுகளைத் திறந்து ஏற்றுக்கொண்டனர். பலர் கதவு இடுக்கின் வழியே இவர்களைப் பார்த்துவிட்டு, கதவுகளைத் திறக்கவில்லை. சிலர் இவர்களோடு வாக்குவாதம் செய்தனர். சிலர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களின் வேலை முடிந்து தன் தலைவரிடம், தன்னை அனுப்பியவரிடம் திரும்பினார்கள். இவர்களின் உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி. இவர்களைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். ஒன்றும் இல்லாமல் இருந்தாலும், எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருந்தாலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவர்களின் தலைவர் அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்துகின்றார்: 'உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்று மகிழுங்கள்!' என்கிறார். மனிதர்களின் நினைவில் மறைந்துவிடும் இவர்களின் பெயர்கள் அழியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

இழந்தார்கள். இழப்பே மகிழ்ச்சி என்று கண்டார்கள்!

கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் பாடங்களைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும், தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை இறையரசுப் பணிக்கு அனுப்புவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-12, 17-20) வாசிக்கக் கேட்டோம். எல்லாவற்றையும் இழந்தவர்களாய் அவர்களை வழியனுப்பும் இயேசு இழப்பும் மகிழ்ச்சியே அல்லது இழப்பே மகிழ்ச்சி என்று அவர்களுக்குக் கற்பிக்கின்றார்.

இழப்பே மகிழ்ச்சி என்ற செய்தி இன்றைய முதல் (காண். எசாயா 66:10-14) மற்றும் இரண்டாம் (காண். கலா 6:14-18) வாசகங்களிலும் மேலோங்கி நிற்கின்றன.

பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா குலத்தினர் தங்களின் சொந்த நகராம் எருசலேம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையின் செய்தியை விதைக்கின்ற மூன்றாம் எசாயா, எருசலேமை ஒரு தாயாக உருவகித்து அந்தத் தாயை நோக்கி அனைத்து நாட்டினரும் வர வேண்டும் எனவும், அவளின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' (66:13) என்று கடவுளைத் தாயாக உருவகிக்கும் எசாயா, அதே உருவகத்தைக் கொண்டு எருசலேமையும் உருவகிக்கின்றார். 'அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகள்,' 'அவளின் மார்பு,' 'பால்,' 'அவளின் மடி' என்னும் வார்த்தைகள் புதிதாக குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயை நம் கண்முன் கொண்டு வருகின்றன. முலைகள், மார்பு, பால், மடி போன்றவை குழந்தைக்கு மகிழ்ச்சி, நிறைவு, அல்லது இன்பம் தந்தாலும், இந்த மகிழ்ச்சிக்கு முன்னால் அந்தத் தாய் அனுபவித்த மரண வேதனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பேறுகால வேதனையுற்று தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்த துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனை போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. ஏனெனில் இறைவன் அவர்களை மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார் இறைவன். இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இழப்பு அவர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்துவிட்டது.

'நீங்கள் பால் பருகுவீர்கள்,' 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்,' 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' என மகிழ்ச்சிக்கு மூன்று பரிமாணங்களைத் தருகின்றார் எசாயா.

'பால் பருகுவீர்கள்' - தாய்மையின் நிறைவே இது. ஒரு தாய் தன் இரத்தத்தை பாலாக மாற்றி தன் குழந்தையின் பசி தீர்க்கின்றாள். தன் உடலில் பத்து மாதங்கள் சுமந்து குழந்தைக்கு உடலும், இரத்தமும் கொடுத்த ஒரு தாய் தொடர்ந்து பால் வழியாக தன் உடலையும் இரத்தத்தையும் குழந்தைக்குக் கொடுக்கின்றாள். (தன் உடலையும், இரத்தத்தையும் கொடுக்க வல்லவள் பெண் மட்டுமே. அப்படி இருக்க, இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் எடுத்து, 'இது என் உடல்,' 'இது என் இரத்தம்' என ஓர் ஆண் கொடுப்பதை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி நியாயப்படுத்துவதை இயற்கையை இருட்டடிப்பது போல இருக்கிறதே! சிந்திக்க வேண்டிய கேள்வி.) இறைவனின் இரத்தமும், நாடு திரும்பியவர்களின் இரத்தமும் இனி ஒன்றாகிவிடும்.

'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்' - தாயின் இந்தச் செயல் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. மார்பில் அணைத்துச் சுமக்கப்படாத குழந்தைகள் வளர்ந்தவர்களாகும்போது பாதுகாப்பின்மையால் வருந்துகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்ட உளவியல் உண்மை. எதிரிகளின் கைகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தவர்கள் இனி இறைவன் தரும் பாதுகாப்பை பெறுவார்கள்.

'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' - எந்த ஒரு ஆபத்தும் இல்லாத நிலையை இது குறிக்கிறது. எந்த ஒரு பதட்டமும், கலக்கமும் இல்லாமல் தரையில் அமர்ந்திருக்கும் தாய் தன் குழந்தையைத் தன் மடியில் அல்லது தொட்டிலில் கிடத்தி தாலாட்டுகிறாள். போரும், வன்முறையும், இயற்கைச் சீற்றமும் இருக்கும் இடத்தில் ஒரு தாயால் அமரவோ, தன் குழந்தையைத் தாலாட்டவோ முடியுமா? இல்லை. ஆக, இனி போர் இல்லை. வன்முறை இல்லை. இயற்கைச் சீற்றம் இல்லை.

இவ்வாறாக, எல்லாவற்றையும் இழந்தவர்கள் இறைவனின் இரக்கத்தால் நிறைவான மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் முதல் வாசகத்தில்.

தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியை தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் பவுல் தன் கடிதத்தை நிறைவு செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்.

  'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன்' என்னும் பவுல், 'என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதன் அடையாளம்' என்று சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

இழப்பின், அழிவின், அவமானத்தின் சின்னமாகிய சிலுவையைப் பற்றி பவுல் எப்படி பெருமைப் பட முடியும்? தன் பணியின் தோல்வி மற்றும் தான் அடைந்த துன்பங்களின் அடையாளமான தழும்புகளைக் கொண்டு எப்படி பெருமிதம் கொள்ள முடியும்?

மேலும், 'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, சிலுவை. அந்தச் சிலுவையின் ஒரு பக்கத்தில் உலகம். மறு பக்கத்தில் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது.

ஆக, வலி, துன்பம், அவமானம், அழிவு அனைத்தும் இழப்புகள் என்றாலும், அந்த இழப்புகள் பவுலுக்கு மகிழ்ச்சியை நிறைவாகக் கொடுக்கின்றன.

சிலுவை என்பதை சீடத்துவத்தின் நீட்சி என்று போதிக்கும் இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை தாம் போகவிருந்த ஊருக்கு தமக்கு முன் இருவர் இருவராக அனுப்புகிறார். இந்த நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில கிரேக்க பிரதிகள் 'எழுபது பேரை' அனுப்பியதாகக் குறிப்பிடுகின்றன. நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்குப் பின் இருந்த 72 (அல்லது 70) நாடுகளையும் (காண். தொநூ 10), அல்லது மோசே தன் உதவிக்காக தெரிவு செய்த 72 (அல்லது 70) பேரையும் (காண். விப 24:1, எண் 11:16, 24) இது குறிக்கலாம். இருவர் இருவராக அனுப்பக் காரணம் மோசேயின் சட்டப்படி இருவரின் சாட்சியமே செல்லும் என்பதற்காகவும் (காண். இச 19:15) அல்லது பாலைநிலப் பகுதிகளின் ஆபத்து காரணமாக இருவர் சேர்ந்து அனுப்பப்படுதல் மரபாகவும் இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலும், பேதுரு மற்றும் யோவான் (8:14), பவுல் மற்றும் பர்னபா (11:30, 13:1), பர்னபா மற்றும் மாற்கு (15:39), பவுல் மற்றும் சீலா (15:40) என திருத்தூதர்கள் இருவர் இருவராகவே பணி செய்கின்றனர்.

  'இருவர்' என்னும் இலக்கியக்கூறும் இங்கே கையாளப்படுகிறது.

இங்கே இயேசு சொல்லும் பழமொழிகளும் இரண்டு: (அ) 'அறுவடையோ மிகுதி. வேலையாள்களோ குறைவு.' (ஆ) ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி.

மக்கள் சீடர்களை ஏற்றுக்கொள்ளும் விதமும் இரண்டு: (அ) 'நேர்முகமாக ஏற்றுக்கொள்வார்கள்.' (ஆ) 'எதிர்மறையாக உதறித் தள்ளுவார்கள்.'

இயேசுவின் போதனையும் இரண்டு: (அ) வீட்டிற்குள் போகும் போது என்ன செய்ய வேண்டும்? (ஆ) நகருக்குள் போகும்போது என்ன செய்ய வேண்டும்?

மேலும், 'இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என அறிவியுங்கள்' என்ற கட்டளையையும் இயேசு இரண்டு முறை கொடுக்கின்றார்.

  முதல் ஏற்பாட்டில் அறுவடை என்பது வரப்போகும் இறுதித்தீர்ப்பையும், இஸ்ரயேல் மக்கள் ஒன்றுகூட்டப்படுதலையும் குறித்தது (காண். யோவே 3:13, மீக் 4:11-13). அறுவடைக் காலம் என்பது விறுவிறுப்பான காலம். விறுவிறுப்பும், வேகமும் இல்லையென்றால் அறுவடை சாத்தியமல்ல. அறுவடைக் காலத்தில் சோம்பித் திரிந்தால் அது முதலுக்கே மோசம் கொண்டுவந்துவிடும்.

  அறுவடைக்கால வேகம் இயேசுவின் மற்ற அறிவுரையிலும் வெளிப்படுகிறது: 'எதையும் கொண்டு செல்லாதீர்கள் - ஏனெனில், நீங்கள் எதையாவது கொண்டு சென்றால் உங்கள் கவனமெல்லாம் உங்கள் உடைமையில்தான் இருக்கும்!' 'யாருக்கும் வணக்கம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள்!' 'இந்த ஊரு, வீடு ஓகேவா, அந்த ஊரு, வீடு ஓகேவா, என ஒவ்வொரு ஊராக, வீடாக மாறிக் கொண்டு இராதீர்கள்!'

  பின் என்னதான் செய்ய வேண்டும் அவர்கள்? சீடர்கள் செய்ய வேண்டியது மூன்று காரியங்கள் மட்டுமே:

அ. 'உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்' - இதுதான் புதிய நற்கருணைப் படிப்பினை. நற்கருணை என்பது அடிப்படையில் உணவைப் பகிர்தல். அதை இன்று நாம் ஒரு வழிபாட்டுச் சடங்காக மாற்றியிருப்பது பெரிய அபத்தம். எதையும் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ளும், தன்னிடம் உள்ளதை அப்படியே பகிர்ந்து கொடுக்கும் உள்ளம்தான் நற்கருணையைக் கொண்டாட முடியும்!

ஆ. 'உடல்நலம் குன்றியோரைக் குணமாக்குங்கள்' - இறையாட்சிப் பணி என்பது ஆன்மீகப் பணி அல்ல. 'நல்லா இருங்க, சாப்பிடுங்க, நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன், நீங்களும் எனக்காக வேண்டிக்கோங்க!' என வாயிலேயே அவரைப் பந்தல் போடும் பணி அல்ல. மாறாக, உடல்சார்ந்த தேவைகளையும் நிவர்த்தி செய்தல் - பசித்தோரின் பசி போக்குதல், பிணியுற்றோரின் பிணி போக்குதலே இறையாட்சிப் பணி.

இ. 'இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்' - சில நேரங்களில் இந்தச் செய்தியை சொல்வது நமக்கு கூச்சமாக இருக்கின்றது!

செல்லும் எல்லா ஊர்களிலும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, ஊர்கள் ஏற்றுக்கொள்ளாமலும், எதிர்க்கவும் செய்தால் சீடர்கள் தங்கள் கால்களின் தூசியை உதறிவிட வேண்டும் என அறிவுறுத்துகின்றார். முதல் ஊர் தந்த இழப்பையும், ஏமாற்றத்தையும் சீடர்கள் தங்கள் உள்ளங்களிலும், கால்களிலும் சுமந்து செல்லக் கூடாது.

இப்படி எல்லாவற்றையும் இழந்தவர்களாய் இறையாட்சிப் பணிக்குச் சென்ற சீடர்கள் தங்கள் பணி முடிந்து இயேசுவிடம் திரும்புகிறார்கள். இவர்கள் செய்த பணியின் காலம், இடம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களின் உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்துப் போய் இருக்கின்றது. 'ஐயோ! கையில காசு இல்லாம கஷ்டப்பட்டோம்! வழியில் பாம்பு கடிச்சது! மேலாடை இல்லாமல் ரொம்ப குளிரா இருந்தது! அந்தா அவருக்கு காலில் கல் எத்தியது!' என்ற எந்தப் புலம்பலும் இல்லை. மாறாக, 'பேய்கள் கூட அடிபணிகின்றன!' என்று மகிழ்ச்சியால் துள்ளுகின்றார்கள். சீடர்கள் தீமையின் மேல் ('பாம்பு,' 'தேள்,' 'பகைவரின் வல்லமை,' 'தீய ஆவி') அதிகாரம் பெறுகின்றனர். இதைவிட மேலாக அவர்களின் 'பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன'. இந்த இறுதிக் காரணத்திற்காக அவர்கள் மகிழ வேண்டும்.

அ. தாய்மை உள்ளம் கொண்ட பணி

ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்யும் எந்த வேலையையும் தன் இழப்பாகக் கருதுவதில்லை. தன் குழந்தையோடு தன் ஆற்றலைச் செலவழித்தாலும், நேரத்தைச் செலவழித்தாலும், பொருளைச் செலவழித்தாலும் அவள் அங்கே தன் இழப்பை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மாறாக, அந்த இழப்பே மகிழ்ச்சி என்பதை அவள் அனுபவித்து உணர்கிறாள். அருள்பணி நிலையில் அனுப்பப்படும் ஒவ்வொரு இனியவரும் இத்தகைய தாய்மை உணர்வைப் பெற்றிருந்தால் எத்துணை நலம். 'பால் கொடுக்க, மார்போடு அணைக்க, மடியில் இட்டு தாலாட்ட' என தன் பணித்தள மக்களோடு தன் ஆற்றல், நேரம், பொருள் அனைத்தையும் இழந்தாலும், அந்த இழப்பை மகிழ்ச்சியாக உணரும் உள்ளம் கொண்டிருத்தலே சால்பு.

ஆ. ஒருவர் மற்றவரோடு சிலுவையில் இணைக்கப்பட

'இயேசுவோடு சிலுவையில் நான் அறையப்படுகிறேன்' என எழுதுகிறார் பவுல். சிலுவையில் அறையப்படுதல் வலியைத் தரும் என்றாலும், அப்படி அறையப்படுதல்தான் இயேசுவோடு நம்மை இணைக்கும் என்பதை நாம் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். இயேசுவோடு ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பு மகிழ்ச்சியைத் தான் தரும். அத்தகைய மகிழ்ச்சிக்காக எந்தவொரு இழப்பையும் எதிர்கொள்தல் நலமே!

இ. பணிக்குச் செல்லுமுன் பத்துக் கட்டளைகள்

1. 'உலகிற்கு என் பணி தேவை.' 'இன்றைக்கு என்னை யார் எதிர்பார்க்கிறார்? இந்த உலகில் எங்கே கடவுள் நம்பிக்கை இருக்கிறது?' என்று இந்த உலகம் இறையாட்சிப் பணிக்குத் தகுதியில்லாதது என்று நான் ஒருபோதும் எண்ணுதல் கூடாது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அறுவடை மிகுதியாகவே இருக்கிறது. வேலையாளாக இருக்கின்ற நான் என் அரிவாளை இன்னும் கூர்மையாக்கிக் கொண்டு என் பணிக்குத் தயாராக வேண்டும்.

2. 'அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.' இறையாட்சிப் பணி அவருடைய பணி. அவரிடம் நான் இறைவேண்டல் செய்ய வேண்டும். இறைவேண்டலே திருஅவையின் பணியை முன்னெடுத்துச் செல்லும்.

3. 'புறப்பட்டுப் போங்கள்.' நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் - அருள்நிலை என்றாலும், பொதுநிலை என்றாலும் - உங்கள் குடும்பத்தில், பயணத்தில், படிப்பு மற்றும் பணி இடத்தில் சீடர்களாக வாழுங்கள். அதுவே இறையாட்சிப் பணி.

4. 'ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி.' ஓநாய்களின் முன்னிலையில் ஆட்டுக்குட்டிகள் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை. மாறாக, சாந்தம், சகிப்புத்தன்மை, நன்னயம் என்று தங்கள் இயல்பை விட்டுக்கொடுக்காமல் இருக்கின்றன. மேலும், இந்த இடத்தில் சீடர் தான் ஓர் இன்றியமையாதவர் அல்லர் என்பதை உணர வேண்டும். பணித்தளத்தில் சீடர் தான் வலுவில்லாதவர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. 'ஒரே குறிக்கோள்.' சீடத்துவத்திலிருந்து கவனத்தைச் செலுத்தும் பொருள்கள், ஆடைகள், பாதுகாப்பு, வணக்கம் செலுத்துதல் ஆகிய அனைத்தையும் தடை செய்கின்றார் இயேசு. அடிப்படைத் தேவைகள் என்று நான் வைத்துக் கொள்ளும் பொருள்களை இன்று பேணிக்காப்பதிலும், என் இலக்கு, என் வரையறை என என்னுடையவற்றை நான் தேடுவதும் என் குறிக்கோளை சிதறடிக்கின்றன.

6. 'உங்களுக்கு அமைதி!' உயிர்ப்புக்குப் பின் இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லியே சீடர்களை வாழ்த்தினார். சீடர்களின் பணியும் தாங்கள் செல்லமிடங்களில் எல்லாம் இதே அமைதியைக் கொண்டு செல்வதே.

7. 'உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்' - சீடரின் விறுப்பு வெறுப்புக்களுக்கும், அவர் தன் தேவைகளை மற்றவர்மேல் திணிப்பதற்கும் அவருக்கு உரிமை இல்லை.

8. 'உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால்' - இறைவன் இன்று வெற்றியாளர்களை அல்ல, நம்பிக்கைக்குரியவர்களையே நாடுகின்றார். என் பணியில் நான் எல்லா நேரமும் வெற்றி பெறுவேன் என்று அவர் வாக்குறுதி தரவில்லை. என் பணியில் ஏமாற்றம், விரக்தி வரலாம். என்னை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அந்த எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்னில் வேண்டும்.

9. 'விடாமுயற்சி. விஸ்வரூப வெற்றி!' - அடுத்தவர்களின் பாராட்டும், ஏற்றுக்கொள்ளுதலும், ஏற்றுக்கொள்ளாமையும் என் பணியையும், என் மகிழ்வையும் தீர்மானித்தல் கூடாது. எல்லாவற்றையும் ஒரே மனநிலையோடு ஏற்றுக்கொண்டு விடாமுயற்சியோடு முன்னேறிச் செல்லுதலே சீடரின் குணம்.

10. 'இயேசுவின் வாக்குறுதி' - 'இறையாட்சி அருகில் வந்துவிட்டது.' இதுதான் இயேசுவின் உடனிருப்பு. இந்த நம்பிக்கை ஒன்றே என் பணியின் முதுகெலும்பாக இருத்தல் வேண்டும்.

ஈ. போனவர்கள் திரும்ப வேண்டும்

இயேசுவால் பணிக்கு அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு சீடர்களும் மகிழ்வோடு அவரிடம் திரும்பி வருகின்றனர். ஆக, பணிக்குச் செல்வதும் பணி முடித்துத் திரும்பி வருதலும் இணைந்தே செல்பவை. குருவாக அருள்பொழிவு பெற்று பணிக்கு அனுப்பப்படும் நான் பல நேரங்களில் இறுதி வரை இயேசுவிடம் இல்லம் திரும்புவதே இல்லை. நோவா பெட்டக காகம் போல போனவர்கள் திரும்பாமலே இருக்கின்ற நான் சில நேரங்களில் என் பணியே என் மகிழ்ச்சி என்று சொல்லிக் கொள்வதும் உண்டு. ஆனால், அருள்பணியாளர்கள் தங்கள் மகிழ்வை தங்களின் பணியில் காண்பதும் ஆபத்து. ஏனெனில் பணித்தளங்கள் மாறலாம். இலக்கு மக்கள் மாறலாம். ஆக, மாறுகின்ற அவற்றை விட்டு தங்களின் மகிழ்வை மாறாத இயேசுவில் மட்டுமே காண வேண்டும். நாள்தோறும் பணி முடித்து அவரிடம் திரும்பி வந்து இறைவேண்டலில் நம் நல்லது கெட்டதை அவரிடம் பகிர்ந்து கொண்டால், அவரின் பிரசன்னம் நம் மகிழ்வை இரட்டிப்பாக்கும்.

உ. 'உமது பெயரைச் சொன்னால்'

இயேசுவிடம் திரும்பி வரும் எழுபத்திரண்டு சீடர்களும், 'உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடி பணிகின்றன' என்று அக்களிக்கின்றனர். 'உமது பெயரைச் சொன்னால்' - இந்த வார்த்தைகள் தாம் மிக முக்கியம். அனுப்புகிறவரின் பெயரால்தான் அறிகுறிகள் நடந்தேறுகின்றன. ஆக, அனுப்பப்பட்டவர் இந்த அறிகுறிகளுக்கான பாராட்டுக்களை பெறக் கூடாது. என் பணி வாழ்வில் நான் ஒவ்வொரு நாளும் என்னை அனுப்பியவரின் பெயரை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். இன்று என் பணி யார் பெயரால் இருக்கிறது? - என் பெயராலா அல்லது என் ஆயர் பெயராலா அல்லது என் மறைமாவட்டம், என் துறவற சபை பெயராலா? அல்லது இயேசுவின் பெயராலா?

இழத்தலே மகிழ்ச்சி என்று நான் கற்றுகொள்ள,  இனி எல்லாமே நீதான் என இறைவனில் மகிழ்தல் அவசியம். இல்லையா?