இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு

தோமா அவர்களோடு இல்லை!

திருத்தூதர்பணிகள் 2:42-47
1 பேதுரு 1:3-9
யோவான் 20:19-31

உயிர்ப்புக் காலத்தில் நாம் வாசிக்கும் நற்செய்தி பகுதிகளில் வரும் கதைமாந்தர்களில் என் இதயம் தொட்டவர்கள் இரண்டு பேர்: ஒன்று, மகதலா மரியா. இரண்டு, தோமா. உயிர்த்த ஆண்டவரை இறுகப் பற்றி கட்டி அணைத்துக் கொண்டவர் மகதலா மரியா. உயிர்த்த இயேசுவின் உடலைத் தன் கையால் ஊடுருவியவர் தோமா. உயிர்த்த ஆண்டவர் வெறும் ஆவி அல்லர் என்பதற்கும், அவருக்கென உடல் இருந்தது என நிரூபிப்பதற்குமாக என இவர்களின் செயல்களால் நம் நம்பிக்கை இன்னும் வலுப்பெறுகிறது.

தோமா என்ற கதைமாந்தரை நன் இன்றைய சிந்தனைப் பொருளாக எடுத்துக்கொள்வோம்.

ஆங்கிலத்தில், 'டவுட்டிங் தாமஸ்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதாவது, எதையும் எளிதாக நம்பாமல் ஐயம் கொண்டிருக்கும் மனநிலை தான் 'டவுட்டிங் தாமஸ்.' நாம் எல்லாரும் தோமையாரை 'டவுட்டிங் தாமஸ்' என சொல்லிவிடுகிறோம். ஆனால், நம் ஒவ்வொருவருள்ளும் நிறைய டவுட்டிங் தாமஸ் இருக்கிறார்கள்: 'அலார்ம் கரெக்ட்டான நேரத்திற்கு அடிக்குமா?' 'நாம் அன்பு செய்பவர் நம்மோடு என்றும் இருப்பாரா?' 'கடவுள் என் செபத்தை கேட்பாரா?' 'இன்றைக்கு கடன் வாங்கினால் நாளைக்கு திரும்ப அடைச்சுடலாமா?' 'மாத்திரை எடுத்தால் காய்ச்சல் சரியாகுமா?' 'இது நடக்குமா?' 'அது நடக்காதா?' என நிறைய ஐயங்கள் நம் ஒவ்வொருவரிடமும் வரும்போதெல்லாம் நம்மில் ஒரு தாமஸ் தோன்றி மறைகிறார்.

ஆனால், தோமையாருக்கு மறுமுகம் ஒன்று உண்டு என்பதை நாம் மறந்துவிடுகின்றோம்.

திருத்தூதர் தோமா பேசிய வார்த்தைகளைப் பதிவு செய்தவர் யோவான் நற்செய்தியாளர் மட்டுமே. மற்ற நற்செய்தியாளர்கள் 'தோமா' என்ற பெயரை மட்டுமே பதிவு செய்கின்றனர். ஆனால், யோவான் அவரை உரையாடுபவராகப் பதிவு செய்கிறார். மேலும், 'தோமா' என்று வரும் இடத்தில் எல்லாம், 'திதிமு என்னும் தோமா' என்று பதிவு செய்கின்றார். 'திதிமு' என்றால் 'இரட்டை' என்று பொருள்.

'இரட்டை' என்னும் இந்த அடைமொழி தோமாவுக்கு பொருந்துவதுபோல நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் யோவான்.

யோவான் நற்செய்தியில் தோமா நான்கு முறை பேசுகிறார்.

திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' என்றார். (11:16)

தோமா இயேசுவிடம், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' என்றார். (14:5)

தோமா மற்ற சீடர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' என்றார். (14:25)

தோமா இயேசுவைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்றார். (14:28)

இந்த நான்கு முறைகளில், தோமாவின் பேச்சு இரண்டு முறை சீடர்களை நோக்கியும், இரண்டு முறை இயேசுவை நோக்கியும் இருக்கிறது.

  இந்த நான்கு முறைகளில், தோமா இயேசுவை இரண்டு முறை 'அவர்' எனவும், இரண்டு முறை 'ஆண்டவரே' எனவும் விளிக்கின்றார்.

இந்த நான்கு முறைகளில், முதல் இரண்டு முறை தோமா தன்னை மற்ற சீடர்களோடு இணைத்துக்கொண்டு, 'நாம்' என்கிறார். மற்ற இரண்டு முறைகளில், தன்னையே அவர்களிடமிருந்து தள்ளி வைத்துக்கொண்டு, 'நான்,' 'என்' எனச் சொல்கின்றார்.

இந்த நான்கு முறைகளில், தோமா தன் உடன் சீடர்களிடம் பேசும் பேச்சுக்கு அவர்கள் எதுவும் மறுமொழி சொல்லவில்லை. ஆனால், தோமா இயேசுவிடம் பேசும்போதெல்லாம் இயேசுவும் பதில் பேசுகின்றார்.

மொத்தத்தில், அவர்களோடு (சீடர்களோடு) இருப்பவராகவும், அவரோடு (இயேசுவோடு) இருப்பவராகவும், அவர்களோடு இல்லாதவராகவும், அவரோடு இல்லாதவராகவும் முன்நிறுத்தப்படுகிறார் தோமா.

இதுதான் இவரது இரட்டைத்தன்மை.

ஆகையால்தான், இவரது பெயர் 'திதிம்' (இரட்டை).

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (காண். யோவா 20:19-31) 'இரட்டை' என்ற நிலை தனித்துக் காணப்படுகிறது. எப்படி?

இயேசு இரண்டு முறை தன் சீடர்களைச் சந்திக்கின்றார். தோமா இல்லாமல் ஒருமுறை. தோமாவோடு மறுமுறை.

இரண்டுமுறை, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று சொல்கின்றார்.

இரண்டுமுறை தன் கைகளையும், விலாவையும் காட்டுகின்றார்.

'நான் உங்களை அனுப்புகிறேன்,' 'நான் உங்களுக்கு பாவம் மன்னிக்க அதிகாரம் அளிக்கிறேன்' என்று இரண்டு உடனிருப்பு செய்திகளைத் தருகின்றார்.

தோமா இரண்டு வார்த்தைகளால் தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்: 'ஆண்டவரே,' 'கடவுளே.'

சீடர்களின் உள்ளத்து உணர்வு இரண்டாக இருக்கின்றது: 'நம்பிக்கை,' 'மகிழ்ச்சி.'

இந்நூலில் பல எழுதப்பட்டிருக்கின்றன. சில எழுதப்படாமல் இருக்கின்றன.

இந்நூலை வாசிப்பவர்கள் இயேசுவைப் பற்றி, 'இறைமகன்,' 'மெசியா' என இரட்டை அறிக்கை செய்ய வேண்டும்.

இந்நூலை எழுத இரட்டை நோக்கம் இருக்கிறது: 'நீங்கள் நம்பவும்,' 'நீங்கள் வாழ்வு பெறவும்.'

மேலும், யோவான் பதிவு செய்யும் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுக்கும் (காண். யோவா 20:1-18) இன்றைய நற்செய்திப் பகுதிக்கும் சில 'இரட்டை' வேறுபாடுகள் உள்ளன:

அது 'முதல் நாள் காலை'. இது 'முதல் நாள் மாலை.'

அங்கு 'கல்லறை காலியாக இருக்கிறது.' இங்கு 'வீடு நிறைந்திருக்கிறது.'

அங்கே 'கல் திறந்திருக்கிறது.' இங்கே 'கதவு மூடியிருக்கின்றது.'

அங்கே 'மரியா அச்சமின்றி இருக்கின்றார்.' இங்கே சீடர்கள் 'அச்சத்தோடு இருக்கின்றனர்.'

அங்கே 'என் ஆண்டவரைக் கண்டேன்' என மரியா உரிமை கொண்டாடுகின்றார். இங்கே 'ஆண்டவரைக் கண்டோம்' என பொத்தாம் பொதுவாகச் சொல்கின்றனர் சீடர்கள்.

இந்த இரண்டு மேடைகளுக்கு நடுவே மூன்றாவது மேடையில் தோமா இருக்கின்றார்.

'தோமா அவர்களோடு இல்லை' என பதிவு செய்கிறார் யோவான்.

ஆக, தோமாவின் இருப்பை, 'அவர்களோடு தோமா,' 'அவரோடு தோமா' என இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.

அ. அவர்களோடு தோமா

'தோமா அவர்களோடு இல்லை.' ஒருவேளை தோமா அவர்களோடு இருந்தால் அன்று என்ன நடந்திருக்கும்? இயேசுவைக் கண்டவுடன் நம்பியிருப்பாரா? அல்லது மற்ற சீடர்களைப் போல அச்சத்தால் உறைந்து போயிருப்பாரா? அச்சம் ஒரு கொடுமையான உணர்வு. அது தன்னைக் கொண்டிருப்பவரை மட்டுமல்ல. மற்றவர்களையும் அழித்துவிடுகிறது. ஆகையால்தான் அச்சம் கொண்டிருப்பவர் போர்க்களம் செல்லத் தகுதியற்றவனர் என்கிறது பண்டைய போர் மரபு (காண். நீத 6-7).

தோமா இயல்பாகவே அச்சம் இல்லாதவர். ஆகையால்தான் இயேசுவின் பெத்தானியா பயணம் கேட்டு மற்ற சீடர்கள் அவரிடம், 'ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்கு போகிறீரா?' என்று கேட்டபோது, தோமா, 'நாமும் அவரோடு செல்வோம். அவரோடு இறப்போம்' என்கிறார்.

தோமா அன்று தன் உடன்சீடர்களோடு இல்லை என்றால், வேறு எங்குதான் அவர் இருந்தார்?

யூதர்களோடா? எருசலேமின் தெருக்களிலா? பிலாத்துவின் அரண்மனை முற்றத்திலா? கல்வாரி மலையிலா? கல்லறைத் தோட்டத்திலா?

அவர் எங்கு இருந்தார்? என்ற கேள்விக்கு நற்செய்தியில் பதில் இல்லை. வாசகர்களாகிய நாம் தான் இதற்கு விடை காண வேண்டும்.

ஆ. அவரோடு தோமா

முதல் பகுதியில் அவர்களோடு இல்லாத தோமா, இரண்டாவது பகுதியில் அவரோடு இருக்கிறார். யாரோடு? இயேசுவோடு. எந்த அளவிற்கு? இயேசுவின் விரல்களைத் தன் விரல்களாலும், இயேசுவின் விலாவைத் தன் கையாலும் ஊடுருவும் அளவிற்கு நெருக்கம் அடைகின்றார். 

மற்ற சீடர்கள் இயேசுவைக் காண்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆனால் தோமா இயேசுவை ஊடுருவுகின்றார். இந்த நெருக்கம்தான், 'என் ஆண்டவரே, என் கடவுளே,' என இயேசுவிடம் சரணாகதி அடைய அவரைத் தூண்டுகிறது.

ஒருவேளை தோமா அவர்களோடு மட்டுமே இருந்திருந்தால் இந்த அனுபவத்தை அவர் பெற இயலாமல் போயிருக்கலாம்.

ஆக, அவர்களோடு இல்லாமல் அவரோடு இருப்பது என்பது நம் வாழ்வின் இரட்டிப்புத் தன்மைகளைத் களைந்துவிட்டு, இறைவனோடு ஒன்றிப்பு அடைவது.

இந்த நிலை சாத்தியமா?

சாத்தியம்தான் எனச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:42-47):

'நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்.'

அவர்களிடத்தில் எந்த ஒரு பிரிவும் இல்லை: ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், இருப்பவர்-இல்லாதவர், ஏழை-பணக்காரார், தேவைகள் இல்லாதவர்-தேவைகள் உடையவர், பெற்றவர்-பெறாதவர், நிறைந்தவர்-வெற்றானவர் என பிளவுகள் இல்லை. அனைவரும் ஒன்றாயிருந்தனர்.

இவர்களை இந்த 'ஒன்று' நிலையில் கட்டி வைத்திருந்தது 'உயிர்த்த ஆண்டவரின் அனுபவம்.'

இயேசுவின் உயிர்ப்பை அவர்கள் வெறும் 'நிகழ்வாக' (இவென்ட்) பார்க்கவில்லை. மாறாக, அதை ஓர் அனுபவமாக (எக்ஸ்பிரியன்ஸ்) பார்க்கிறார்கள். ஆகையால்தான் அவர்கள் வாழ்வில் மாற்றம் பிறக்கிறது. இயேசுவின் உயிர்ப்புக்கு இதைவிட பெரிய சான்று இருக்கமுடியாது.

இன்று இயேசுவின் உயிர்ப்பு எனக்கு என்ன?

அது ஒரு நிகழ்வா?

அல்லது நான் விசுவாசப் பிரமாணத்தில் அறிக்கையிடும் ஒரு வரியா?

அல்லது அது என் வாழ்க்கை அனுபவமா?

மேலும், உயிர்ப்பு அனுபவம் அவர்களின் தனிநபர் அனுபவமாக மட்டும் இல்லாமல், அது அவர்களின் குழுவாழ்விலும் செயல்வடிவம் பெற்றது. ஆகையால்தான், 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் அவர்களால் உறுதியாய் நிலைத்திருக்கவும்,' 'எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தைப் பெறவும் முடிந்தது.'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 பேதுரு 1:3-9) மற்றொரு இரட்டை நிலையைப் பார்க்கின்றோம். 

பேதுருவின் திருச்சபையில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒரு பிரிவினர் இயேசு மற்றும் பேதுருவின் சமகாலத்தவர்கள். இவர்கள் இயேசுவை நேரடியாக பார்த்தவர்கள். அவரின் அருஞ்செயல்களைக் கண்டவர்கள். மற்ற பிரிவினர் இயேசு மற்றும் பேதுருவின் இரண்டாம் தலைமுறையினர். இவர்கள் இயேசுவை நேரடியாக பார்க்கவில்லை. அவரின் அருஞ்செயல்களைக் காணவில்லை. இவர்கள் முதல் தலைமுறையினரின் பிள்ளைகள். இப்போது இந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒரு கருத்து வேறுபாடு: 'யாருடைய நம்பிக்கை பெரிது?' இயேசுவைக் கண்டவர்களின் நம்பிக்கையா? அல்லது அவரைக் காணாதவர்களின் நம்பிக்கையா? இரண்டாம் நம்பிக்கையைவிட முதல் நம்பிக்கை பெரியதா? அல்லது சிறியதா?

இப்படிப்பட்ட இறையியல் சிக்கலில் சிக்கித் தவித்த மக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருக்கின்றது பேதுருவின் கடிதம்: 'இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகை சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளில் பேருவகை கொள்வீர்கள் ... ... அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகிறீர்கள் ... ... நீங்கள் அவரைப் பார்த்ததில்லை. எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை. எனினும் நம்பிக்கை கொண்டு, ஒப்பற்ற மகிழ்ச்சி அடைந்து பேருவகை கொள்கிறீர்கள்.'

இதே இரட்டை தலைமுறை நிலை யோவானின் திருச்சபையிலும் இருக்க, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என இயேசுவே சொல்வதாகச் சொல்லி, 'பின்னவர்களை' 'முன்னவர்களை' விட மேலானவர்கள் என முன்வைத்து எளிதாக பிரச்சினையை சரிசெய்துவிடுகின்றார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு முன்வைக்கும் வாழ்வியல் கேள்விகள் மூன்று:

1. நாம் யாரோடு? - அவர்களோடு? அல்லது அவரோடு?

'அவர்களோடு' இருப்பது என்பது கூட்டத்தில் ஒருவராக இருப்பது. அப்படி இருக்கும் நமக்கு தனியான அடையாளம் இல்லை. கூட்டத்தின் அடையாளமே நம் அடையாளம். அங்கே யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. எல்லோரும் அங்கே முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். ஒருவர் சொல்வதை இங்கே எல்லாரும் பின்பற்றுவர். ஆனால், 'அவரோடு' இருப்பது என்பது தனியாக இருப்பது. அப்படி நாம் இருப்பதற்கு நமக்குத் தனியான அடையாளம் தேவை. இங்கே முகமூடி கிழிக்கப்படும். உண்மையை நேருக்கு நேர் நாம் சந்திக்க வேண்டிய கட்டாயம் இங்கே இருக்கும். ஆகையால்தான், தோமா 'அவர்களோடு' இல்லாமல், 'அவரோடு' இருக்கின்றார். சில நேரங்களில் நம்மிடம் இந்த இரட்டைத்தன்மை ஒரே நேரத்தில் இருக்கலாம். 'அவர்களோடு' நிலையில் இருந்து, 'அவரோடு' நிலைக்கு என்னால் கடந்து செல்ல முடிகிறதா?

2. என் உள்ளுணர்வு என்ன?

உயிர்த்த ஆண்டவரின் அனுபவம் பெறுபவர்கள் மூன்றுவகை உணர்வுகளைப் பெறுகின்றனர்: (அ) சீடர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர், (ஆ) தோமா பேறுபெறுகின்றார், (இ) இந்நூலை வாசிக்கும் அனைவரும் வாழ்வு பெறுகின்றனர். 'மகிழ்ச்சி அடைதல்,' 'பேறுபெற்றவர் ஆகுதல்,' 'வாழ்வு பெறுதல்' என்பது இறையனுபவத்தின் படிக்கட்டுகள். மகிழ்ச்சியை அடைய ஒருவர் தன்னிறைவு பெற வேண்டும். தன்னிறைவு பெற்ற ஒருவர்தான் தன் அடையாளத்தை அழிக்கவும், தன் உடைமைகளையும், நேரத்தையும், ஆற்றலையும் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் முடியும். 'வாழ்வு' என்பது இதுவே. தன்மையமான எல்லாவற்றையும், இறைமையமாகவும், பிறர்மையமாகவும் மாற்றுவதுதான் வாழ்வு. ஆகையால்தான், 'நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்' (யோவா 10:10) என்று இயேசு சொல்லுமிடத்தில், தன்மையத்திலிருந்து பிறர்மையத்தை நோக்கிய நகர்வு இருக்கின்றது.

3. அச்சம்-ஆனந்தம், ஐயம்-நம்பிக்கை, கண்டு-காணாமல்

சீடர்களின் அச்சம் நீங்கி ஆனந்தம் தருகின்றார் இயேசு. அவர்களுக்கு தன் அமைதியை உரித்தாக்குவதோடல்லாமல் அவர்களை 'அனுப்புகின்றார்.' சீடத்துவம் இரட்டைத்தன்மை கொண்டது. இங்கே 'அழைத்தலும்,' 'அனுப்புதலும்' இணைந்தே செல்கிறது. அச்சம் கொண்டிருப்பவர்கள் அனுப்பப்பட முடியாது. ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் உள்ளத்திலும் அச்சத்தை விதைத்துவிடுவர். அதுவே, ஆனந்தமாக மாறினால் அவர்களின் அனுப்பப்படுதல் எளிதாகும். ஐயம் நீங்கி நம்பிக்கை கொள்கின்றார் தோமா. இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்வதில் தோமாiவிட சீடர்கள் பெரியவர்கள் அல்லர். அவர்களும் இயேசுவைக் கண்டதால்தான் நம்புகின்றனர். நேரத்தாலும், இடத்தாலும் இயேசுவைவிட்டு மிக தூரமாக இருக்கும் நாம்தான் நம்பிக்கையில் பெரியவர்கள். ஏனெனில் நாம் காணாமலேயே நம்புகின்றோம்.

இறுதியாக,

'அவர்களோடு' இல்லாத தோமா தன்னையே 'அவரோடு' அறைந்துகொண்டார். அவரின் விரல்களில் தன் விரலையும், அவரின் விலாவில் தன் கைகளையும் பதித்துக்கொண்டார்.

இன்று 'அவர்களோடு' மற்றும் 'அவைகளோடு' இருக்கும் நம் இருப்பிலிருந்து 'அவரோடு' இருக்கும் இருப்பிற்குக் கடந்து செல்வோம்.ஏனெனில், 'அவர்களோடு' மற்றும் 'அவைகளோடு' என்பவை காண்பவை. காண்பவை நிலையவற்றவை. காணாதவவை நிலையானவை.

காணாத அவரே நிலையான அமைதியையும், ஆனந்தத்தையும் அருள வல்லவர். அவரோடு என்றும் நாம்!