இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருப்பாடுகளின் வெள்ளி

விரக்தி மேலாண்மை

எசாயா 52:13-53:12
எபிரேயர் 4:14-16, 5:7-9
யோவான் 18:1-19:42

எருசலேமுக்குள் இயேசு நுழைந்தபோது இருந்த மக்கள் கூட்டம் எங்கே?

அவர்களின் ஓசான்னா ஆரவாரம் எங்கே?

அவர்களின் தாவீதின் மகன் எங்கே?

அவர்களின் புகழ்பாடல் எங்கே?

அவர்கள் சாலைகளில் விரித்த ஆடைகள் எங்கே?

அவரோடு உடன்வந்த சீடர்கள் எங்கே?

அன்று அவர்களோடு இருந்த நம்பிக்கை எங்கே?

வாடகைக் கழுதையில் ஏறி வந்த அவர்களின் இறுதி நம்பிக்கை இங்கே கல்வாரியில் சிலுவையில் தொங்குகிறது.

ஆரவாரம் அடங்கி எங்கும் மௌனமாக இருக்கிறது.

மோகன ராகம் எல்லாம் முகாரி ராகம் ஆகிவிட்டது.

ஆர்ப்பரிப்புகள் அடங்கி ஒப்பாரி தொடங்கிவிட்டது.

ஆடைகள் கிழிக்கப்பட்டு, உடல் குத்தப்பட்டு, உயிர் பிரிந்து தொங்குகிறது ஒரு உடல்.

அவர்களின் நம்பிக்கை விரக்தி ஆகிவிட்டது.

'நான் உம்மை மெசியா என்று நம்பினேன். ஆனால் நீயோ இங்கே சிலுவையில் ஒரு தோல்வியாய் மரித்துப் போனாய்.

நீ 'இவ்வுலக அரசன் அல்ல. மறுவுலக அரசன்' என்றாய். எனக்கு இவ்வுலகையும், மறுவுலகையும் பிரித்துப்பார்க்க முடியவில்லையே?

நான் இன்று அனுபவிக்கும் உரோமை அடிமைத்தனம் தொடர வேண்டுமா?

நீ வாக்களித்த இறையரசு எங்கே?

இப்படித்தான் எழுந்தது சாமானியனின் குரல் சிலுவையை நோக்கி.

நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் எல்லாம் விரக்திக்கு தள்ளப்படுகின்றனர். காட்டிக்கொடுத்த விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார். மறுதலித்த ஒருவர் கண்ணீர்விட்டு அதைக் கரைக்கின்றார். மற்ற பத்து பேர் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து கொள்கின்றனர். மக்கள் தங்கள் இயலாமையை அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர்.

இவர்கள் அனுபவித்த விரக்தியை விட இயேசு நிறைய விரக்திகளை அனுபவித்தார்.

அவரின் விரக்தி மேலாண்மை பற்றி இன்று நாம் சிந்திப்போம்.

ஒரு காலத்தில் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்ட 'மேலாண்மை' என்ற வார்த்தை இன்று சாதாரண வாழ்க்கை நிகழ்வுகளுக்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது: 'வாழ்க்கை மேலாண்மை,' 'நேர மேலாண்மை,' 'நிதி மேலாண்மை,' 'குடும்ப மேலாண்மை,' 'சோர்வு மேலாண்மை.' இந்த வரிசையில் வருவதுதான் 'விரக்தி மேலாண்மை.'

அடிப்படையில், 'மேலாண்மை' என்பது 'நமக்கு நடக்கும் ஒரு நிகழ்விற்கு எதிர்நிகழ்வு நடத்தாமல் அதற்கேற்ற பதில் கொடுப்பது.' ஆக, மேலாண்மை செய்ய வேண்டுமென்றால் அந்த நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும். அந்த நிகழ்விற்கான எதிர்வினையை அறிய வேண்டும். அந்த எதிர்வினையை தவிர்த்து நேர்முகமாக செயலாற்ற வேண்டும்.

விரக்தி என்றால் என்ன?

விரக்தி என்பது அடிப்படையில் நம்பிக்கை இழந்த நிலை. ஒருவர் மேல் அல்லது ஒன்றின் மேல் உள்ள நம்பிக்கை தகர்ந்துவிடும்போது ஏற்படும் வெற்றிடத்தில் தொற்றிக்கொள்ளும் உணர்வுதான் விரக்தி.

இந்த விரக்தியின் ஊற்று எதிர்பார்ப்பு.

ஆக, விரக்தியை 'எதிர்பார்ப்பிற்கும்,' 'எதார்த்தற்கும்' இடையே ஏற்படும் இடைவெளி என்று சொல்லலாம்.

என் நண்பன் இறுதிவரை என்னோடு இருப்பான் என்று நினைப்பது என் எதிர்பார்ப்பு.

ஆனால் ஏதோ ஒரு நாள் ஏற்பட்ட மனக்கசப்பில் அவன் என்னிடமிருந்து பிரிந்து விடுவது எதார்த்தம்.

என் எதிர்பார்ப்புக்கு முரணாக எதார்த்தம் நிகழ்வதால் என்னைத் தொற்றிக்கொள்வது விரக்தி.

நான் 12ஆம் வகுப்பு தேர்வை நன்றாக எழுதியிருக்கிறேன். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுவேன் என்பது என் எதிர்பார்ப்பு.

ஆனால் ஒரு பாடத்தில் நான் ஃபெயில் என வருகிறது ரிசல்ட். இது எதார்த்தம்.

என் எதிர்பார்ப்பும் எதார்த்தமும் இணைந்து கொள்ளாததால் எனக்கு வருவது விரக்தி.

இன்று நாம் வாசிக்கக் கேட்ட யோவான் எழுதிய பாடுகளின் வரலாற்றில், இயேசு ஆறு விரக்திகளை அனுபவிக்கின்றார்:

1. நிராகரிக்கப்படுதல் (ரிஜெக்ஷன்)

2. கைவிடப்படுதல் (அபேன்டன்மன்ட்)

3. காட்டிக்கொடுக்கப்படுதல் (பிட்ரேயல்)

4. மறுதலிக்கப்படுதல் (டினையல்)

5. அவமானப்படுத்தப்படுதல் (ஹ்யுமிலியேஷன்)

6. சிலுவையில் அறையப்படுதல் (க்ருஸிஃபிக்ஷன்)

1. நிராகரிக்கப்படுதல்

'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (யோவா 1:11). இயேசுவின் வாழ்வில் அவரைச் சந்தித்தவர்களை மூன்று குழுக்களாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவிடம் எந்த உதவியும் பெறாதவர்கள். ஆனால் இயேசுவுக்கு நெருக்கமானவர்கள் - அவரின் அம்மா, திருத்தூதர்கள், பெத்தனி நண்பர்கள். (ஆ) இயேசுவிடம் உதவி பெற்றவர்கள். ஆக, உடன் இருப்பவர்கள் - பேய் நீங்கியவர், நலம் பெற்றவர், பார்வை பெற்றவர். (இ) இயேசுவின் எதிரிகள் - பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், தலைமைக்குருக்கள். முதல் இரண்டு குழுக்களும் சாதாரணமானவர்கள். அவர்களின் இருப்பினால் இயேசு உடனிருப்பை உணர்ந்தாலும் அவர்கள் சென்றுவிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், மூன்றாவது குழுவினர் அவரின் பணிவாழ்வின் தொடக்கமுதல் அவரை நிராகரித்துக்கொண்டே இருந்தனர். இயேசுவால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை, பயனும் இல்லை. ஆகையால் அவரை நிராகரிக்கின்றனர்.

2. கைவிடப்படுதல்

இயேசுவோடு மூன்று ஆண்டுகள் உடனிருந்து, அவரின் இறையரசு என்ன, கொள்கை என்ன, மெசியா நிலை என்ன, அதை அடையும் வழி என்ன, அந்த வழிதரும் வலி என்ன என எல்லாம் அறிந்திருந்தாலும் அவரைக் கைவிடுகின்றனர். இறுதி இராவுணவில் ஒன்றாகச் சாப்பிட்ட, இவரும் அவர்களின் பாதங்களை எல்லாம் கழுவிவிட்ட அவர்கள், அரை மணி நேரத்தில் ஆளுக்கொரு திசை நோக்கி ஓடுகின்றனர். 'இவன் நம்மோடு இருக்க மாட்டான்' என்று தெரிந்தே இயேசு அவர்களோடு உணவு அருந்தும்போது அவருக்கு எத்துணை வலி இருந்திருக்கும்? 'இவன் நம்மை விட்டு போய்விடுவான்' என்ற மனநிலையில் எல்லாப் பொழுதுகளையும் வாழக் கற்றிருந்தார் இயேசு.

3. காட்டிக்கொடுக்கப்படுதல்

'நண்பா, மானிட மகனை முத்தமிட்டா காட்டிக்கொடுத்தாய்?' என யூதாசைக் கேட்கிறார் இயேசு. தன் திராட்சைக் கிண்ணத்தில் முத்தமிட்டு இரசம் பருகிய யூதாசு இயேசுவின் கன்னத்தில் முத்தம் பதிக்கின்றார். அவரிடம் பணப்பை இருந்தது என எழுதுகிறார் யோவான். அப்படி இருக்க, 'எனக்கு என்ன தருவீர்கள்?' என தலைமைக்குரு முன் சென்று நிற்கின்றார். தன் தலைவர் இயேசுவின் மேல் உள்ள பிரமாணிக்கத்தை தலைமைக்குருக்கு விற்கின்றார். ஆக, பணத்தை வாங்கியவுடனேயே யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்துவிட்டார். கெத்சேமனித் தோட்டத்தில் முத்தமிட்டது ஓர் அடையாளம் மட்டுமே.

4. மறுதலிக்கப்படுதல்

இயேசுவின் சீடர்களை பல வட்டங்களாகப் பிரித்து நிறுத்தினால், அவரைச் சுற்றி இருக்கும் முதல் வட்டத்தில் இருந்த மூன்று பேரில் ஒருவர் பேதுரு. இயேசுவின் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளான உருமாற்றம், சிறுமி உயிர்பெறுதல் மற்றும் கெத்சேமனி தோட்டம் ஆகியவற்றில் உடனிருந்த பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். அதாவது, இயேசுவோடு தான் அடையாளப்படுத்தப்படுவதை அவர் விரும்பவில்லை. அப்படி அடையாளப்படுத்தப்படுவது தன் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் என்று நினைத்ததால் என்னவோ அப்படிச் செய்கின்றார். 'நீ இப்படிச் செய்வாய்?' என்று இயேசு சொன்னபோது மறுத்த பேதுரு, இயேசுவையே மறுக்கின்றார். இந்த வகையில் யூதாசு பொய் சொல்லவில்லை. 'நீ காட்டிக்கொடுப்பாய்' என்று சொன்னவுடன், அதை ஏற்றுக்கொண்டவராக அந்த இடத்தை விட்டு நகர்கின்றார்.

5. அவமானப்படுத்தப்படுதல்

'ஹ்யுமிலியேஷன்' என்று ஆங்கிலத்தில் நாம் சொல்வதை 'அவமானப்படுத்துதல்' என்று மொழிபெயர்ப்பது முழுப்பொருளையும் தருவதில்லை. 'ஹ்யுமுஸ்' என்றால் இலத்தீன் மொழியில் 'மண்' அல்லது 'தூசி.' ஆக, ஒருவரை மண்ணோடு மண்ணாக்குவது அல்லது தூசியாக்குவது அல்லது கலங்கப்படுத்துவதுதான் ஹ்யுமிலியேஷன். இயேசு இரண்டு வகையில் அவமானப்படுத்தப்படுகின்றார்: (அ) போலியான குற்றச்சாட்டும் அநீதியான தண்டனையும் மற்றும் (ஆ) நிர்வாணம். 'இவன் தன்னையே இறைமகனாக்கிக்கொண்டான்' என்பது அவர்மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. அதுவே போலியாகத் தயாரிக்கப்பட்டதுதான். இந்தக் குற்றத்திற்கு தண்டனை கல்லால் எறிந்து கொள்வதுதான். ஆனால் இயேசுவுக்கு சிலுவைமரணம் தண்டனையாக தரப்படுகிறது. இரண்டாவது, நிர்வாணம். மக்கள்முன் அரசன்போல நன்மைகள் செய்துகொண்டு வலம் வந்தவரை நிர்வாணமாக்குகிறார்கள்.

6. சிலுவையில் அறையப்படுதல்

உரோமை அரசு தன் இனம் சாராத மக்களைத் தண்டிக்க கண்டுபிடித்த உச்சகட்ட தண்டனைதான் இது. சிலுவையில் மனிதர்களை அறைவது பற்றி நிறைய வரலாற்று பதிவுகள் இருக்கின்றன. சில இடங்களில் ஆணிகளைப் பயன்படுத்தி மனிதர்களை சிலுவையோடு பிணைக்கிறார்கள். மற்ற இடங்களில் கயிறுகள் கட்டி பிணைக்கிறார்கள். ஆணிகள் அடிப்பதிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் உள்ளங்கைகளிலும், சில இடங்களில் கை நாடிகளிலும் அடிக்கிறார்கள். சிலுவையில் மரணம் எப்படி நடக்கிறது? அறையப்பட்டவர் தன் கைகளையும், கால்களையும் பயன்படுத்த முடியாது. ஆக, காகம், கழுகு போன்ற பறவைகள் வந்து கண்களைக் கொத்தினால், கன்னத்தைக் கொத்தினால் விரட்டவும் முடியாது. வயிறு மற்றும் கால்களின் எடை கீழ்நோக்கி இழுப்பதல் மூச்சு விடுவது சிரமம் ஆகிவிடும். மேலும், கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் இரத்தக்கசிவினால் ஆற்றல் குறையும். இப்படியாக எல்லா உறுப்புக்களையும் சித்திரவதை செய்து ஏற்படுத்தும் மரணமே சிலுவை மரணம்.

இயேசுவின் இந்த ஆறு விரக்தி நிலை அனுபவங்கள் - நிராகரிக்கப்படுதல், கைவிடப்படுதல், காட்டிக்கொடுக்கப்படுதல், மறுதலிக்கப்படுதல், அவமானப்படுத்தப்படுதல், சிலுவையில் அறையப்படுதல் - அவரின் அனுபவங்கள் மட்டுமல்ல.

இவை நம் வாழ்க்கை அனுபவங்களும்தாம்.

நம் அப்பாவும், அம்மாவும், நம் சபையின் அருள்சகோதரியும், நம் மறைமாவட்டத்தின் அருள்பணியாளரும் பயன்படு நிலையை இழந்தவுடன் அவர்களை நாம் நிராகரிப்பு செய்கிறோம். ஒருவர் எனக்கு எந்த அளவுக்கு பயன்தருவார் என்பதை வைத்து நாம் அவரை மதிப்பிடுகிறோம். மதிப்பு தருகிறோம். சில நேரங்களில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் நாம் நிராகரிக்கப்படுகிறோம். நமது குடும்பத்தில் ஒருவர் மற்றவரின் நன்மைத் தனத்தை கண்டுகொள்ளாதபோது, நம் குழந்தைகளை பாராட்டாதபோது, தேவையில் இருப்பவர்களை கண்டுகொள்ளாதபோது நாம் நிராகரிக்கிறோம். நிராகரிக்கவும் படுகிறோம்.

கைவிடப்பட்ட அனுபவமும் நமக்கு நிறைய உண்டு. பாதியில் நின்றுபோன உறவுகள், தவறவிட்ட வேலைவாய்ப்புகள், நம் தவற்றால் மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிட்ட நிலைகள் நம் வாழ்விலும் நடக்கின்றன.

காட்டிக்கொடுக்கப்படுதல் - யூதாசு தொடங்கி எட்டப்பன் வரை மனிதர்கள் காட்டிக்கொடுக்கப்பட்ட கதைகள் ஏராளம். நாமே நம் பிரமாணிக்கத்தை இடம் மாற்றி இருக்கலாம். அல்லது நமக்கு காட்டவேண்டிய பிரமாணிக்கத்தை மற்றவர்கள் மாற்றியிருக்கலாம்.

மறுதலிக்கப்படுதல் - தன் பாதுகாப்புக்காக, தன் நலனுக்காக மற்றவரை தெரியாது என்று நாம் சொல்லியிருக்கலாம். அல்லது மற்றவர்கள் நம்மைச் சொல்லியிருக்கலாம்.

அவமானப்படுத்தப்படுதல் - இயேசு மட்டும் நிர்வாணப்படுத்தப்படவில்லை. இன்று டெல்லியில் நம் தமிழக விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள் நிர்வாணப்படுத்தப்படுகிறார்கள். நாம் மற்றவரிடம் சொன்ன இரகசியத்தை அவர் வெளியிட்டு நம்மை நிர்வாணப்படுத்தியிருக்கலாம். ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் நாம் மற்றவரைப் பற்றி அவதூறு பரப்பும்போதும் நாம் அடுத்தவரை அவமானப்படுத்துகிறோம்.

சிலுவையில் அறையப்படுதல் - இதை இன்று நாம் அனுபவிக்காவிட்டாலும், அநீதியான தண்டனைகளை நாம் அன்றாடம் அனுபவிக்கவே செய்கின்றோம்.

இயேசு தன் வாழ்வின் இந்த ஆறு விரக்திகளை எப்படி மேலாண்மை செய்தார்? அவரின் மேலாண்மை நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. நோ குறுக்குவழி

இயேசுவின் விரக்திக்கு நிறைய குறுக்குவழிகள் இருந்தன. பாலைவனத்தில் சாத்தான் தந்த மூன்று குறுக்கு வழிகளை பயன்படுத்தியிருக்கலாம். அல்லது 'சிலுவையில் இருந்து இறங்கி வா. நாங்கள் உம்மை நம்புகிறோம்' என்று ஏளனம் செய்தவர்கள் முன் விறுவிறு என சிலுவையிலிருந்து இறங்கி வந்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு அற்புதம் செய்து தன்னையே காப்பாற்றி இருக்கலாம். இவற்றில் எந்த குறுக்குவழியையும் தேடவில்லை இயேசு. குறுக்குவழியை தெரிவு செய்வது முள்குத்திய இடத்தில் முள்ளை எடுக்காமல் காயத்திற்கு மருந்துபோடுவது போல. கொஞ்ச நேரம் வேண்டுமானால் மருந்து சுகமாயிருக்கும். ஆனால், மீண்டும் வலி எடுக்கும். முள்ளை எடுப்பது வலிதரும் என்றாலும் வலிதரும் அந்த நேரிய பாதையை தேர்ந்தெடுக்கிறார்.

இன்று நம் வாழ்வின் விரக்திகளுக்கு நாம் தேடும் குறுக்குவழிகள் எவை? இணையதளத்தில் நிறைய நேரம் செலவழித்தல், அளவுக்கதிகம் சாப்பிடுதல், நிறைய பொருள்களை வாங்கிக் குவித்தல், மது மற்றும் போதை மருந்துகளைத் தேடுதல், அதிகம் டிவி பார்த்தல், நிறைய புறணி பேசுதல் - இவை எல்லாமே விரக்தி நிவாரணிகள்தாம். ஆனால் இவை சில நிமிடங்கள் மட்டுமே நலம் தருபவை. இவைகளை நாம் தேர்வுசெய்யக்கூடாது.

2. வாழ்வின் இலக்கு நிர்ணயம்

நம் வாழ்வின் இலக்கு தெளிவாக இருந்தால் விரக்தியை எளிதாக சமாளித்துவிடலாம். இயேசுவின் வாழ்வின் இலக்கு 'உண்மையும், நீதியும்.' இந்த இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ளவே இல்லை. 12ஆம் வகுப்பில் என் மதிப்பெண் 1150 என நான் இலக்கு வைத்தால், காலாண்டில் 450 மதிப்பெண்களே வாங்கும்போது நாம் விரக்தி அடையக்கூடாது. 'இது எனக்கு சரிப்படாது' என என் இலக்கோடு நான் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. மாறாக, இலக்கை நோக்கி தொடர்பயணம் செய்ய வேண்டும்.

3. எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுதல்

நாம் பல நேரங்களில் நம் எதார்த்தங்களோடு சண்டை போடுகின்றோம். அப்போது நம் விரக்தி கூடிவிடுகிறது. எனக்கு முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுகின்றன, அல்லது என் தலையில் நரை தோன்றுகிறது. என் முகம் அழகாகவும், என் முடி கறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. ஆனால், எதார்த்தம் என்ன? வெண்புள்ளியும், நரையும். இவைகளை குணமாக்க முடியும் என்றால் குணமாக்கலாம். இல்லை என்றால் நான் அந்த எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த எதார்த்தத்தோடு நான் சண்டை இடுதல் அல்லது போராடுதல் கூடாது. காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் நின்று கொண்டு முகத்தின் ஒவ்வொரு இஞ்சாய் பிதுக்கிப் பார்த்துக்கொண்டிருந்தால், அல்லது ஒவ்வொரு முடியாய் தேடி நரையின் அளவு என்ன என பார்த்துக்கொண்டிருந்தால் நான் வெண்புள்ளியோடும், நரையோடும் சண்டை இடுகிறேன்.

இயேசு தன் விரக்திகளோடு சண்டை இடவில்லை. தன்னை நிராகரித்தவர்களை சபிக்கவில்லை. தன்னை கைவிட்டவர்களையும், காட்டிக்கொடுத்தவர்களையும், மறுதலித்தவர்களையும் கடிந்துகொள்ளவில்லை. அவமானப்படுத்தியவர்களையும், சிலுவையில் அறைந்தவர்களையும் தண்டிக்கவில்லை. அவர்களையும், அவர்கள் தந்த விரக்திகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டார்.

4. நீ உன் வாழ்வின் மாஸ்டர், பலிகடா (விக்டிம்) அல்ல

இயேசுவின் இறப்பு பாஸ்கா ஆடு போன்ற பலிகடா என்றாலும், அவர் தன்னை ஒருபோதும் பலிகடா போல எண்ணவில்லை. நாம் நம்மையே பலி கடா போன்று எண்ணும்போது மற்றவர்கள் நம்மேல் ஆட்சி செலுத்த அவர்களை அனுமதித்துவிடுகிறோம். இயேசு தன் உணர்வுகளுக்குக்கூட தன்னைப் பலிகடா ஆக்கவில்லை. துணிந்து நிற்கின்றார். 'நானே என் வாழ்வின் தலைவன்' என்ற நிலையில் இருக்கும்போது எந்த விரக்தியையும் நாம் சமாளித்துவிடலாம்.

5. இன்னும் கொஞ்சம் நட

மற்றவர்களும், மற்றவைகளும் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதை செய்வதை விட கொஞ்சம் அதிகம் நடக்க வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும். ஒரு மைல் தூரம் என்றால் இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டும். மேலாடை என்றால் அங்கியையும் தர வேண்டும்.

கணவருக்கும், மனைவிக்கும் உள்ள உறவில் விரிசல் வருகிறது என வைத்துக்கொள்வோம். இந்த நேரத்தில் எல்லாரும் செய்வது என்ன? மணமுறிவு அல்லது பிரிந்து வாழ்தல். மற்றவர்கள் செய்வது போல நாம் ஏன் செய்ய வேண்டும்? யூதாசு தற்கொலை செய்துகொண்டான் என்பதற்காக பேதுரு தற்கொலை செய்துகொண்டாரா? அழுதுவிட்டு அடுத்த வேலையை பார்க்கவில்லையா? 'எனக்கு உன்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என இயேசுவைப் பார்த்து அவர் சொல்லவில்லையா? மற்றவர்கள் செய்வதுபோல செய்யாமல், நாம் கொஞ்சம் முயற்சி எடுத்து இன்னும் கொஞ்சம் நேரம் மற்றும் ஆற்றல் எடுத்து எருப்போட்டால் எந்த மரமும், எந்த உறவும் கனிகொடுத்துவிடும்.

6. இறைவனின் உடனிருப்பு

மனிதர்கள்மேல் தான் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்துப்போய் தனக்கு விரக்தி வந்தாலும், தன் நம்பிக்கையை தன் தந்தையின்மேல் நங்கூரமாய் பதிக்கின்றார். எந்நேரமும் என் தந்தை உடனிருக்கிறார் என்ற இயேசுவின் நம்பிக்கைதான் அவரின் மனக்கட்டின்மைக்கு காரணமாக இருந்தது. நீ என்னை உடைத்தாலும், அழித்தாலும் என் தந்தை என்னை எழுப்ப வல்லவர் என்று நம்பினார்.

இதுதான், விரக்தி நேரங்களில் நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையாக இருக்க வேண்டும். மனிதர்களும், பொருள்களும் மாறக்கூடியவை, தற்காலிகமானவை. ஆனால், இறைவன் நிரந்தரமானவர். அந்த நிரந்தரத்தை நாம் பிடித்துக்கொள்ளும்போது தற்காலிகங்கள் தாமாகவே நகர்ந்துவிடும்.

'மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்.
நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்.
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.'
(எசாயா 53:4-5)