இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

முரண்படு வாழ்வு

எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மத்தேயு 26:14-27:66

சென்னையின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 110 பேர் இந்த தொகுதியில் வேட்பாளர்களாக போராடுகின்றார்கள், போட்டியிடுகின்றார்கள். கட்சிகள் தங்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை இழந்தது, புதிய கட்சிகள், புதிய சின்னங்கள், புதிய முகங்கள், புதிய வாக்குறுதிகள், புதிய வாகனங்கள், புதிய அன்பளிப்புகள் என எங்கும் கூட்டமாக இருக்கின்றது. ஒவ்வொரு தலைவரும் இந்தப் பகுதிக்குள் நுழையும்போது மக்கள் அளிக்கும் வரவேற்பு ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. மக்கள் கூட்டம் சில இடங்களில் தானாக சேர்கின்றது. பல இடங்களில் சேர்க்கப்படுகின்றது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற நிலையில் ஆட்டமும், ஓட்டமுமாக இருக்கிறது ஆர்.கே. நகர்.

'என் பக்கம் இவ்வளவு மக்கள்' - என்று மற்றவருக்கு காட்டி வெற்றி பெறுவதுதான் ஜனநாயகத்தில் வெற்றி. ஆக, கூட்டம் கூடுவதன் நோக்கம் தன் பலம் என்ன என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல, மாறாக, தன் பலத்தை மற்றவர்களுக்கு நிரூபித்து அவர்களை கலங்கச் செய்யவே. பயத்திலும், கலக்கத்திலும் மக்கள் கூட்டம் கூடி தங்கள் தலைவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்க, எதிர்நோக்கிலும், மகிழ்ச்சியிலும் ஒரு கூட்டம் எருசலேம் நகரில் ஒரு கழுதைக்குட்டியில் ஏறி வந்த தலைவர்மேல் ஓடிக்கொண்டிருந்ததை இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம்.

நம்மிடம் இன்று வரும் தலைவர்கள் வெற்றி பெற்றவுடன் தங்களிடம் வரமாட்டார்கள் எனவும், இவர்கள் விடும் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் வெறும் காகிதங்கள் எனவும், இவர்களின் பேச்சு வெறும் காற்று எனவும், இவர்கள் மனதில் இருப்பதல்லாம் பொய் எனவும் தெரிந்திருந்தாலும் ஏன் அவர்கள் பின் மக்கள்கூட்டம்? இம்முரண்களோடு வாழக் கற்றுக்கொண்டவர்கள் மக்கள். இந்த முரண்களுக்கு நடுவிலும் நம்பிக்கை என்ற ஒளியை அணையாமல் காத்துக்கொள்ளக்கூடியவர்கள்.

உரோமையர்களை நம்பினோம், ஆளுநர்களை நம்பினோம், தலைமைக்குருக்களை நம்பினோம் - ஒன்றும் நடக்கவில்லை. எல்லாம் அப்படியே இருக்கிறது. வறுமை, பசி, வாட்டம், அடிமைத்தனம் தலைவிரித்தாடுகின்றது என்று புலம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை கழுதையில் ஏறி வருகின்றது.

வாடகைக் கழுதையில் ஏறி வந்த இறுதி நம்பிக்கை தான் இயேசு.

ஒத்தமைவு நற்செய்திகளின்படி இயேசு மூன்று முறை எருசலேமுக்குள் நுழைகின்றார்: (அ) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவரது பெற்றோர் எருசலேமிற்கு அழைத்துவருகின்றனர் (லூக்கா 2:22-38), (ஆ) பாஸ்கா விழா கொண்டாட அவருடைய பெற்றோர்களுடன் இயேசு எருசலேமிற்குள் வருகின்றார் (லூக்கா 2:41-52), மற்றும் (இ) வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேம் நுழைகின்றார் (லூக்கா 19:28-44).

  இயேசுவின் முதல் இரண்டு வருகைகளுக்கும், அவரின் மூன்றாம் எருசலேம் வருகைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன):

1. அப்போது ஆர்ப்பரிப்பு இல்லை. இப்போது எங்கும் ஆர்ப்பரிப்பு.

2. அப்போது அவருக்கு எந்த ஒரு பட்டமும் இல்லை. இப்போது 'தாவீதின் மகன்' என்ற பட்டம்.

3. அப்போது அவருக்கு எந்த ஆதரவாளரும் இல்லை. இப்போது சீடர்களும், மக்களும் கூட்டமாக பின்தொடர்கின்றனர்.

4 அப்போது எந்த தயாரிப்பும் இல்லை. இப்போது கழுதை, குருத்து, போர்வை என எல்லாம் தயாரிக்கப்படுகின்றது.

5. அப்போது இயேசு மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இப்போது அவர் திரும்ப முடியாது.

6. அப்போது எந்த வழி வந்தார் என்று எந்த பதிவும் இல்லை. இப்போது பெத்பதே வழியாகவும், ஒலிவ மலை வழியாகவும் வருகின்றார் (காண். மாற்கு 11:1-10). ஏனெனில் மெசியா இந்த வழியாகத்தான் வருவார் என்றுதான் மக்கள் எதிர்நோக்கியிருந்தார்கள்.

இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்ததை நற்செய்தியாளர்களின் பதிவுகளின் பின்புலத்தில் கற்பனை செய்து பார்த்தால், 'மகிழ்ச்சி' என்ற ஒற்றை உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய காரியங்கள் செய்கிறார்கள்: சிறியவர் முதல் பெரியவர் வரை குருத்தோலைகள் வெட்டி வருகின்றனர், பாதைகளில் துணிகளை விரிக்கின்றனர், உரத்த குரலில் கடவுளை புகழ்கின்றனர்: 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக' (லூக் 19:38). இயேசுவின் சமகாலத்தில் மெசியா எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது. 'யாராவது ஒருவர் வந்து என்னைக் காப்பாற்றிவிடமாட்டாரா? என் நாடும், நகரமும் நலம் பெறாதா?' என்ற கவலையும், ஏக்கமும் நிறைய இருந்தது. இந்த நேரத்தில் இயேசு கழுதையின்மேல் ஏறி வருதல் மெசியாவின் வருகையின் அடையாளமாகக் கருதப்பட்டது.

  1. மகிழ்ச்சி

இன்றைய நாள் நமக்கு வைக்கும் முதல் பாடம் 'மகிழ்ச்சி.' இயேசுவோடு உடன் வந்த மக்கள் மட்டுமல்ல, இயேசுவும் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார். ஆகையால்தான், 'போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்' என்று பரிசேயர் சொன்னபோது, 'இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என பதில் சொல்கிறார். இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியின் செய்தியாக அறிவிக்கப்பட்டதுபோலவே, அவருடைய எருசலேம் நுழைதலும் மகிழ்ச்சியின் செய்தியாக இருக்கிறது. ஆக, இன்று நாம் அழுகையின் அல்லது சோகத்தின் மக்களாக இருக்க வேண்டாம். விரக்திக்கும், சோர்வுக்கும் ஒருபோதும் இடம் கொடுத்துவிட வேண்டாம். நம் மகிழ்ச்சி அதிகம் பெற்றிருப்பதில் அல்ல. மாறாக, இயேசுவை நம் நடுவில் பெற்றிருப்பதில்தான் இருக்கின்றது. இவ்வளவு நாள்கள் இந்த மக்களிடம் குருத்தோலைகளும், கழுதைகளும், ஆடைகளும் இருந்தன. ஆனால், இன்று மட்டும் ஏன் அவர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும்? காரணம், இயேசு. இயேசு அவர்கள் நடுவே இருப்பதால் அவர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இந்த நிகழ்விலிருந்து இயேசுவை நீக்கிவிட்டால் மகிழ்ச்சிக்கு இடம் இல்லை. அவரோடு இருக்கும்போது நாம் தனியாக இருப்பதில்லை. வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், நம் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளும், தடைகளும் தாண்ட முடியாதவைகளாகத் தெரியும்போதும் கவலை வேண்டாம். ஏனெனில், அவர் நம் நடுவில் இருக்கின்றார். நாம் அவரோடு நடப்போம், ஓடுவோம். அவர் நம்மோடு நடக்கிறார், நம்மையும் தன் கழுதைக்குட்டியில் ஏற்றிக்கொள்கிறார் என்று தளராமல் நம்புவோம். இதுதான் நாம் இந்த உலகிற்குத் தரும் மகிழ்ச்சி. இயேசுவின் பிரசன்னத்தில் எருசலேம் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கையும் இருக்கட்டும்.

2. சிலுவை

ஏன், எப்படி இயேசு எருசலேமிற்குள் நுழைகின்றார்? மக்கள் கூட்டம் இயேசுவை 'அரசன்' என்கிறது. மற்ற இடங்களில் அந்த பட்டத்தை மறுத்த இயேசு இன்று அதை மறுக்கவில்லை. அவர்களை அமைதியாக இருக்குமாறு சொல்லவில்லை. எப்படிப்பட்ட அரசர் அவர்? அவர் ஏறிவருவது கழுதை. அவரைச் சுற்றி படைத்திரள் இல்லை. அவரிடம் அடக்குமுறை ஆயுதங்கள் இல்லை. அவரை வரவேற்க அமைச்சர்கள் இல்லை. அவர் வெறுங்கையராய் வருகின்றார். அவரை வரவேற்றவர்கள் சாதாரண மக்கள். ஆனால் அவர்களால் இயேசுவிடம் ஏதோ ஒன்றைக் காண முடியாதது. தாங்கள் தங்கள் கண்களால் பார்ப்பதைவிட ஏதோ ஒன்று அவரிடம் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் நம்பிக்கை, 'இவர்தான் மீட்பர்' என்று சொன்னது. அவர் மணிமகுடம் சூட்டிக்கொள்வதற்காக இங்கே நுழையவில்லை. இன்றைய முதல் வாசகம் சொல்வது போல (காண். எசாயா 50:6). 'அடிப்போருக்கு தன் முதுகை காட்டவும், தாடியை பிடுங்குவோருக்கு தாடியை ஒப்படைக்கவும், நிந்தனை செய்வோருக்கும் காரி உமிழ்வோருக்கும் தன் முகத்தைக் காட்டவும்' அவர் உள்ளே நுழைகின்றார். இயேசு எருசேலமிற்குள் நுழைவது சிலுவையில் அறையப்படுவதற்காக. முள்களை தன் மகுடமாகவும், சிலுவையைத் தன் அரியணையாகவும் ஆக்கிக்கொள்ள அவர் இங்கே வருகின்றார். எதற்காக அவர் சிலுவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சிலுவை தீமையின் அடையாளமாக நிற்கிறது. மனித வாழ்வின் சுயநலம், வெறுமை, வன்முறை ஆகிய அனைத்தையும் தன்மேல் ஏற்றிக்கொள்ளும் இயேசு தன் உயிர்ப்பால் அதை வெல்கின்றார். அன்பால் இயேசு தழுவிக்கொண்ட சிலுவை நம்மை மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கிறது. ஏனெனில் இந்தச் சிலுவையால்தான் நமக்கு மீட்பு வந்தது.

3. முரண்படு வாழ்வு

கழுதையில் ஏறி வருவதும், காரில் ஏறி வருவதும் நடந்து வருவதை விட மேலானது. ஏன்? நடந்த வரும்போது நம்மால் பார்க்க முடியாதவைகள் எல்லாம் கழுதையில் ஏறி வரும்போதும், காரில் வரும்போதும் நன்றாகத் தெரிகிறது. பார்வை இன்னும் கொஞ்சம் முழுமை ஆகிறது.

ஆகையால்தான், (1) தன் பயணத்தில் குருத்தோலை ஏந்தியவர்கள் தன் காலை வாரி விடுவார்கள் என்றும்,

(2) தன்னைப் புகழ்ந்து 'ஓசான்னா' பாடியவர்கள் 'சிலுவையில் அறையும்' என கத்துவார்கள் என்றும்,

(3) தங்களது ஆடைகளை தன் முன் விரித்தவர்களே தன் ஆடைகளையே உரிப்பார்கள் என்றும்,

(4) 'போதகரே' என்று அழைத்தவர்கள் எல்லாம், 'ஒழிக' என ஆர்ப்பரிப்பார்கள் என்றும்,

(5) உடன் வந்த சீடர்கள் எல்லாம் ஓடிப்போவார்கள் என்றும், கட்டியணைத்தவர்கள் காட்டிக்கொடுப்பார்கள் என்றும், மறுதலிப்பார்கள் என்றும்

அவருக்குத் தெரிந்தது. தெரிந்திருந்தும் தான் அமைதியாய் இருக்கின்றார். இந்த அமைதி அவரிடம் குடிகொள்ளக்காரணம் அவரிடமிருந்து நம்பிக்கை. தன் தந்தை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை.

ஏன் இயேசுவுக்கு இத்தனை முரண்பாடுகள்?

இயேசுவிடம் அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களே இந்த முரண்பாடுகளுக்குக் காரணம். இயேசு அரசனாகிவிட்டால் தங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை, உடல் நல பஞ்சம் இல்லை, திராட்சை ரச பஞ்சம் இல்லை என நினைத்தவர்கள், அவர் சிலுவையைத் தழுவிக்கொண்டதால் அவரிடம் நம்பிக்கை இழக்கின்றனர்.

தங்கள் கண்களுக்குத் தெரிபவற்றில் அவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கட்டுகிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் கண்களுக்குத் தெரியாதவற்றில் நம்பிக்கையைக் கட்டுகிறார்.

இறுதியாக,

நாம் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்வோம்.

மகிழ்ச்சி, சிலுவை என இந்த நாளின் சவால்கள் மேலோட்டமாக இருந்தாலும், இவைகளின் அடியில் தேங்கியிருப்பது முரண்பாடு. நம் வாழ்வு முரண் என்ற நூலால் பிண்ணப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி நாமும், நம் உணர்வுகளும், நம் உலகமும் மாறிக்கொண்டே இருக்கின்றது.

இப்படி முரண்கள் வந்தாலும், கழுதையில் ஏறி கொண்டாடும் பொழுதுகளை அமைதியான மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கு என்று விருப்பு-வெறுப்புகள் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் எருசலேமிற்குள் நுழைந்திருக்க மாட்டார். நம் வாழ்வின் விருப்பு-வெறுப்புகள்தாம் நம் வாழ்வின் முரண்பாடுகளோடு நாம் வாழக் கற்றுக்கொள்ள நமக்கு தடையாக இருக்கின்றன.

இன்று அவரோடு நாம் எருசலேமிற்குள்ளும், புனித வாரத்திற்குள்ளும் நுழைகின்றோம்.

நாம் வெளியே வரும்போது அவரோடு இணைந்து உயிர்ப்பவர்களாக வருவோம்.

ஏனெனில், எருசலேமும் கலிலேயாவும், பாடுகளும் ஆறுதலும், இறப்பும் உயிர்ப்பும் பிரிக்க முடியாதவை - நம் வாழ்வின் முரண்களைப் போல.