இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக் காலம் 4ஆம் ஞாயிறு

ஆயன்போல திருடன்போல

திருத்தூதர் பணி 2:14,36-41
1 பேதுரு 2:20-25
யோவான் 10:1-10

ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை உண்டவுடன் மரங்களுக்குப் பின் ஒளிந்துகொள்கின்றனர் ஆதாமும் ஏவாளும். அவர்களைத் தேடி வருகின்றார் கடவுள். 'நீ எங்கே இருக்கிறாய்?' என்று கேட்கிறார் கடவுள். 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்' என்கிறார் ஆதாம்.

குரல் ஒலியைக் கேட்டு அச்சம் கொள்கிறார் ஆதாம்.

'குரல் ஒலி'

நம்மைச் சுற்றி இன்று நிறைய குரல் ஒலிகளைக் கேட்கின்றோம். ஒரு நிமிடம் கண்களை மூடி நம்மைச் சுற்றி இருக்கும் சப்தங்களைக் கேட்க ஆரம்பித்தால் நம்மால் நூற்றுக்கணக்கான ஒலிகளைக் கேட்க முடியும்.

நம் செல்ஃபோனில் செய்தி அல்லது அழைப்பு வரும் ஒலி.

நோட்டிஃபிகேஷன் ஒலி.

அறையில் ஓடும் ஃபேன் அல்லது ஏஸியின் ஒலி.

பறவைகளின் ஒலி.

பேருந்து மற்றும் வாகனங்களின் ஒலி.

தொழிற்சாலைகளின் ஒலி.

நாம் ஃபோனில் கேட்கும் மற்றவரின் ஒலி.

நம்மோடு நேருக்கு நேர் பேசுபவரின் ஒலி.

தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளத்தில் நாம் கேட்கும் ஒலி.

இப்படி ஒலி சூழ் உலகில் நாம் அமர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த ஒலிகளுக்கு நடுவில் நல் ஆயன் கிறிஸ்துவின் ஒலியும் கேட்கிறது என்றும் அந்த ஒலிக்கு யார் யார் செவிகொடுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 10:1-10).

உயிர்ப்புக்காலத்தில் நான்காம் ஞாயிற்றை 'நல்லாயன் ஞாயிறு' எனக் கொண்டாடுகிறோம்.

'ஆயன்' என்னும் உருவகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் உருவகம். வாழ்வியல் உருவகங்கள் மிக இயல்பாக நம் வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. ஆகையால்தான் தங்கள் கடவுளை, தங்கள் அரசர்களை, தங்கள் தலைவர்களை, 'ஆயன்' என்று அழைத்து மகிழ்ந்தனர் இஸ்ரயேல் மக்கள்.

'ஆயர் - திருடர்'

இந்த முரண்பாட்டில் கட்டப்பட்டிருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:

1. ஆயன் வாயில் வழியே நுழைவார் - திருடன் வேறு வழியாக ஏறிக் குதிப்பார்

2. ஆயன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பார் - திருடன் அமைதி காப்பார். அவர் குரல் எழுப்பினால் மாட்டிக்கொள்வார். மேலும் அவரது குரல் ஆடுகளுக்குத் தெரியாது.

3. ஆயன்தான் தன் ஆட்டுக்கொட்டிலுக்கு வாயில் - திருடன் வாயில் அல்ல.

4. வாழ்வு தருவதும், அதை நிறைவாகத் தருவதும் ஆயனின் பணி - திருடுவதும், கொல்வதும், அழிப்பதும் திருடனின் பணி.

5. ஆயன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார் - திருடன் தன் உயிரைக் காக்கும் பொருட்டு ஆடுகளின் உயிரை அழிப்பார்.

இந்த முரண்பாட்டில் 'ஆயன்' என்பதும், 'ஆடு' என்பதும், 'திருடன்' என்பதும் உருவகங்களே.

ஆயன் என்பது தன்னைக் குறிப்பதாகவும், 'ஆடு' என்பது இஸ்ரயேல் மக்களைக் குறிப்பதாகவும், 'திருடன்' என்பது தனக்கு முன் வந்த அனைவரையும் குறிப்பதாகவும் இயேசு மொழிகின்றார்.

திருச்சபை, நாடு, பணியிடம், படிப்பிடம், குடும்பம் என பல இடங்களில் மற்றவர்கள் நமக்கு தலைவர்களாகவும், இவைகளில் சில இடங்களில் நாமே தலைவர்களாகவும் இருக்கின்றோம்.

நம் முன் இருப்பது இரண்டு ஆப்ஷன்:

ஒன்று, ஆயன்போல இருப்பது.

இரண்டு, திருடன் போல இருப்பது.

இவைகளில் நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதுதான் கேள்வி.

மேற்காணும் இரண்டு நிலைகளிலும் மையமாக இருப்பது 'வாழ்வு.'

என்னால் பிறருக்கு வாழ்வு வருகிறது என்றால் நான் ஆயன்.

என்னால் பிறருக்கு இழப்பு வருகிறது என்றால் நான் திருடன்.

ஆயன் நிலை - திருடன் நிலை

இதை இன்று நாம் மூன்று வாழ்க்கை நிலைகளுடன் பொருத்திப் பார்ப்போம்:

1. உறவு நிலைகள்

2. பணி நிலைகள்

1. உறவு நிலைகள்

நம் வாழ்வின் உறவு நிலைகளை 'எனக்கும் எனக்குமான உறவு,' 'எனக்கும் பிறருக்குமான உறவு,' 'எனக்கும் இறைவனுக்குமான உறவு,' 'எனக்கும் இயற்கைக்குமான உறவு' என்று நான்காகப் பிரிக்கலாம்.

எனக்கும் எனக்குமான உறவில் ஆயன் நிலை என்பது என்னை முழுமையாக அறிவதும், என்னை இருப்பது போல ஏற்றுக்கொள்வதும், என் இனியது இன்னாததை பொறுத்துக்கொள்வதும் ஆகும். திருடன் நிலை என்பது என்னையே அறியாமல் இருந்துகொண்டு, அறிந்ததுபோல நடிப்பதும், அல்லது என்னையே அறிய மறுப்பதும் ஆகும். திருடன் நிலையில் நான் என்மேல் தேவையற்ற சுமைகளைச் சுமத்துகிறேன்.

எனக்கும் பிறருக்குமான உறவில் ஆயன் நிலை என்பது பிறரை அறிவதிலும், பிறரை பெயர் சொல்லி அழைத்து உரிமை பாராட்டுவதிலும், பிறருக்குரிய எல்கையை மதிப்பதிலும், பிறரின் உடலை, உணர்வை மதிப்பதிலும் இருக்கிறது. இங்கே திருடன் மனநிலை என்பது நாம் அடுத்தவரின் எல்கைக்குள் அத்துமீறி நுழைவதிலும், அடுத்தவருக்கு உரியதை எனதாக்கிக்கொள்ள நினைப்பதிலும் இருக்கிறது.

எனக்கும் இறைவனுக்குமான உறவில் நான் அவருக்கு ஆயனாக இருக்க முடியவில்லை என்றாலும், நான் இந்த நிலையில் திருடனாக இல்லாமல் இருக்க முடியும்.

எனக்கும் இயற்கைக்குமான உறவில் ஆயன் நிலை என்பது நான் சார்ந்திருக்கும் இந்த இயற்கையை நேசிப்பதிலும், அதைப் பராமரிப்பதிலும் அடங்கி இருக்கிறது. அதை விடுத்து நான் என் முன் இருக்கும் அனைத்தையும் எனதாக்கவும், வியாபாரம் ஆக்கவும், நுகர்ந்து கொள்ளவும் நினைத்தால் நான் திருடன் ஆகிவிடுகிறேன்.

2. பணி நிலைகள்

திருடனின் பணி என மூன்றை வரையறை செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:

அ. திருடுவது. அதாவது, எனக்கு உரிமை இல்லாத ஒன்றை என் உரிமையாக்கிக்கொள்வது. நான் உழைக்காத ஒன்றை சுரண்டிக் கொள்வது. மிக எளிதான அல்லது குறுக்கு வழியிலான பொருளை நாடுவது. திருட்டு என்பது சில நேரங்களில் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன் பாஸ் மேல் இருக்கும் கோபத்தில் அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்வது அல்லது நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண் அல்லது பையன் நம்மேல் உள்ள கோபத்தைக் காட்டுவதற்காக நம் வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்வது அல்லது சேதப்படுத்துவது என்பவை இதன் உதாரணங்கள்.

ஆ. கொல்வது. ஆடுகளைத் திருட வருபவர் ஆடுகள் சத்தமிட்டால் ஆடுகளைக் கொன்றுவிடுவார். ஏனெனில் ஆடுகளின் சத்தத்தால் மற்றவர்கள் விழித்துக்கொண்டு திருடனைப் பிடித்துவிடுவார்கள். அல்லது திருடன் தன் திருட்டிற்கு தடையாக இருக்கும் ஆயன் அல்லது மற்றவர்களைக் கொன்றுவிடுவார். அதாவது, தான் யார் என்றும், தன் அடையாளம் எது என்றும் வெளிப்பட்டவுடன் அதை மறைக்க அவர் இவ்வாறு செய்கிறார்.

இ. அழிப்பது. ஆட்டு மந்தையில் ஓர் ஆடு அழிந்தாலும் அதன் குழுமம் அழிவைச் சந்திக்கிறது. சில வீடுகளில் திருட்டு நடக்கும்போதும் நாம் இதையே கேள்விப்படுகிறோம். நகைத்திருட்டால் நிறுத்தப்படும் திருமணங்கள். அதன் விளைவாக நடக்கும் தற்கொலைகள். இவ்வாறாக, ஒரு செயல் அடுத்த செயலுக்கு இட்டுச் செல்கின்றது. ஒரு அழிவு அடுத்த அழிவுக்கு இட்டுச்செல்கின்றது.

ஆனால், இதற்கு மாறாக ஆயனின் பணி இரண்டு நிலைகளில் வரையறுக்கப்படுகிறது:

அ. அவர்கள் உள்ளே போவர். வெளியே வருவர். அதாவது, ஒருவகையான கட்டின்மையை அனுபவமாக தருபவர் நல் ஆயன்.

ஆ. அவர்கள் வாழ்வு பெறுவர். அதை நிறைவாகப் பெறுவர். நிறைவான மேய்ச்சல். ஆகையால் பசியும், தாகமும் தீர்ந்துவிடும். எவ்வித குறையும் இன்றி நிறைவாக இருப்பர்.

பொதுநிலையினர் நம் தனிப்பட்ட குடும்பத்தையும், அருள்நிலையினர் நம் பணித்தளம் என்னும் குடும்பத்தையும் எடுத்து மேற்காணும் இந்த பண்புகளைப் பொருத்திப் பார்ப்போம்.

என் உடனிருப்பு ஆயன் நிலையாக இருக்கிறதா அல்லது திருடன் நிலையாக இருக்கிறதா?

இறுதியாக,

இன்றைய முதல் வாசகத்தில் பேதுருவின் உரையைக் கேட்ட மக்கள் உள்ளம் குத்துண்டவர்களாய், 'சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கின்றனர்.

இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் கேட்க வேண்டும். இதற்கு விடை, 'அவரின் குரல் கேட்பது' என்று இருக்கட்டும்.

மேலும், 'நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போல் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்' என்று தன் திருமடலில் பதிவு செய்யும் பேதுரு, இயேசுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 'ஆயர்' என்ற உருவகம் நமக்கு தெளிவாகிறது.

என் வாழ்க்கை உறவு நிலைகளில் நான் ஆயரா அல்லது திருடரா?

அவர் குரல் கேட்பதில் நான் நல்ல ஆடா?