இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு

அவர் பெயர் இரக்கம்!

விடுதலைப் பயணம் 32:7-11,13-14
1 திமொத்தேயு 1:12-17
லூக்கா 15:1-32

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் பிரிவு 13ல் அன்பிற்கு ஒரு பாடல் இசைக்கின்றார். அதை வாசிக்கும்போதெல்லாம், இந்தப் பாடலில் 'இரக்கம்' என்ற வார்த்தையை அவர் ஏன் பயன்படுத்தவில்லை என்ற ஐயம் என்னில் எழுவதுண்டு. இன்று அதிகமாகப் பேசப்பட்டு பொருளை இழந்த வார்த்தைகளில் ஒன்று அன்பு. எல்லாவற்றையும் நாம் அன்பு செய்வதாக இன்று சொல்கின்றோம். ஆனால், அன்பிற்கு அடிப்படையான ஒரு படி அல்லது வாயில் இருக்கின்றது. அதன் வழியாகத்தான் ஒருவர் அன்பிற்குள் நுழைய முடியும். அது என்ன? இரக்கம். அந்தப் படியை நாம் ஏறிக் கடக்கத் தேவையில்லை - இறங்கித்தான் கடக்க வேண்டும்!

நாம் பலகாரக் கடை ஒன்றிற்குச் செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். நிறைய பலகாரங்களை வாங்கிவிட்டு வெளியே வந்து, நம்முடைய வண்டியை நகர்த்தும்போது அங்கு வருகின்ற ஒருவர், 'ஐயா! எனக்கு ஏதாவது கொடுங்க!' என்று கையை நீட்டுகிறார். நாம் பையைத் துலாவி ஐந்து அல்லது பத்து ரூபாய் கொடுக்கிறோம். இதை நாம் பிறரன்புச் செயல் என்று சொல்கிறோம். இந்த அன்பு நம்மில் எப்படி வந்தது? இரக்கம் என்ற உணர்வால்தான். இரக்கம் என்ற உணர்வு வர வேண்டுமென்றால் ஒருவர் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து அடுத்தவரின் தளத்தில் நிற்க வேண்டும். இரக்கம் வர இறங்கித்தான் ஆக வேண்டும்!

இரக்கம் கொண்டு இறங்கி வந்த ஐந்து நபர்களை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த ஐந்து நிகழ்வுகள் அல்லது எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டும் செய்தி ஒன்றுதான்: 'அவர் பெயர் இரக்கம்!' இவை எழுப்பும் கேள்வியும் ஒன்றுதான்: 'அவர் பெயர் இரக்கம் என்றால் உன் பெயர் என்ன?'

1. ஆண்டவராகிய கடவுளின் இரக்கம்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 32:7-11,13-14) இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியை வழிபட்டு யாவே இறைவனை, ஆண்டவராகிய கடவுளைப் புறக்கணிக்கின்றனர். இது பெரிய பிரமாணிக்கமின்மையாகக் கருதப்பட்டது. ஆகையால் ஆண்டவரின் கோபம் அவர்கள்மேல் எழுந்து அவர்களைக் கொல்ல நினைக்கிறது. அந்த நேரத்தில் மோசே ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை அவருக்கு நினைவூட்ட, ஆண்டவரின் கோபம் தணிகின்றது. ஆண்டவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு மக்களுக்குச் செய்யப் போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாமல் விடுகின்றார். இஸ்ரயேல் மக்கள் செய்த செயலுக்கு ஆண்டவராகிய கடவுள் கோபம் கொள்வது தகுந்தது என்றாலும், அவர் அந்தக் கோபத்திலிருந்து இறங்குகின்றார். அந்த இறங்குதல் அவருடைய இரக்கமாக மாறுகின்றது. இங்கே மோசேயின் பங்கும் முக்கியமானது. ஆண்டவராகிய கடவுளுக்கே அவருடைய நற்குணத்தைச் சுட்டிக்காட்டுபவராக மாறுகின்றார் மோசே.

2. இயேசு கிறிஸ்துவின் இரக்கம்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 1:12-17), திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற மடலில், தன்னுடைய அழைத்தல் வாழ்வு அல்லது பழைய வாழ்வு பற்றி நினைவுகூறுகின்ற பவுல், 'நான் அவரைப் பழித்துரைத்தேன். துன்புறுத்தினேன். இழிவுபடுத்தினேன் ... ஆயினும் அவர் எனக்கு இரங்கினார்' என்று இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை - தான் அனுபவித்ததை - அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். தொடர்ந்து, 'கடவுள் எனக்கு இரங்கினார் ... பொறுமையைக் காட்டினார்' என்றும் எழுதுகின்றார். பவுலைப் பொருத்தவரையில் இயேசு அவருடைய செயல்களுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்கவோ கண்டிக்கவோ இல்லை. மாறாக, இரக்கத்தைக் காட்டி அவரைப் புறவினத்தாரின் திருத்தூதராகத் தெரிந்துகொள்கிறார்.

3. ஆடு மேய்ப்பவரின் இரக்கம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 15:1-32) இயேசு, 'பரிசேயரின் முணுமுணுப்புக்கு' எதிராக மூன்று எடுத்துக்காட்டுக்களைச் சொல்கின்றார். முதலாவது எடுத்துக்காட்டு, ஆடு மேய்க்கும் ஒருவர் காணாமல் போன ஆட்டைத் தேடும் நிகழ்வு. நூறு ஆடுகள் வைத்திருந்த ஒருவர் அவற்றில் ஒன்று காணாமல்போனபோது, தொன்னூற்று ஒன்பது ஆடுகளை விட அந்த ஒரு ஆடுதான் பெரியது என்று எண்ணியதால் அதைத் தேடிக் கண்டுபிடித்து மகிழ்ச்சியோடு தோளில் போட்டுக்கொண்டு, தன் நண்பர்களையும் தன்னுடைய மகிழ்ச்சியில் பங்கேற்க அழைக்கின்றார். அவர் காணாமல் போன அந்த ஒரு ஆட்டிற்காக அனுபவித்த எல்லாத் துன்பங்களும் மறைந்து சட்டென்று மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. ஆடு மேய்ப்பவர் காணாமல்போன அந்த ஆட்டிற்காக மலைகள், பள்ளத்தாக்குகள் என அனைத்திலும் ஏறி இறங்குகின்றார். அதுவே அவருடைய இரக்கம்.

4. நாணயம் தொலைத்த பெண்ணின் இரக்கம்

ஓர் ஆணை உருவகப்படுத்திய லூக்கா தொடர்ந்து ஒரு பெண்ணையும் உருவகப்படுத்துகிறார். பத்து நாணயங்களுள் ஒன்றைத் தொலைத்த பெண், உடனடியாக எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும் வரை தேடி, அதைக் கண்டுபிடித்துத் தோழியரோடு மகிழ்ந்து கொண்டாடுகின்றார். தான் தோழியரோடு மகிழ்ந்து கொண்டாடிய பணம் தொலைந்து போன பணத்தைவிட மிகுதியாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படவில்லை அவர். தான் தொலைத்த திராக்மா கிடைத்ததே அவளுடைய பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.

5. மகன்களைத் தொலைத்த தந்தையின் இரக்கம்

'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எடுத்துக்காட்டில், தந்தை இரண்டு மகன்களையும் தொலைத்துவிடுகின்றார். இளைய மகன் தன்னுடைய சொத்துக்களைப் பிரித்து வாங்கிக் கொண்டு சென்று, தந்தையிடமிருந்து தொலைந்துவிடுகின்றார். மூத்த மகன் தன்னுடைய வேலைகளிலேயே தொலைந்துவிடுகின்றார். இருவரையும் விருந்திற்கு அழைக்கின்றார் தந்தை. மூத்தவர் விருந்திற்குள் நுழைய மறுக்கிறார், தயங்குகிறார். தான் செய்த வேலைகள் அனைத்தும், தான் தந்தைக்குக் காட்டிய பிரமாணிக்கம் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாக உணர்கின்றார்.

இவர்களுடைய பெயர்கள் இரக்கம் என்றால் என்னுடைய பெயர் இரக்கம் என்றாக நான் என்ன செய்ய வேண்டும்?

இவர்களே இதற்கான வாழ்க்கைப் பாடங்களையும் வரையறுக்கிறார்கள்:

அ. அவரவருடைய முடிவுக்கு அவரவரே பொறுப்பு

தன்னுடைய இளைய மகன் தன்னுடைய சொத்துக்களைப் பிரித்துக் கேட்டபோது அவனைத் தடுத்து நிறுத்தவோ, அவனுக்கு அறிவுரை பகரவோ முயற்சி செய்யவில்லை அந்த ஊதாரித் தந்தை. மகனுடைய முடிவுக்கு மகனே பொறுப்பு என்று கருதினார். தன்னுடைய ஆற்றல், நேரத்தைச் செலவழித்து அவனுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அல்லது தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி அவனைப் பின்தொடரச் சொல்லவில்லை. 'நான் போகிறேன்' என்று என்று சொன்ன மகனிடம், 'போ' என்கிறார். முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுளும் தன்னுடைய மக்கள் தனக்கு எதிராகத் திரும்பிய போது, அவர்களுடைய முடிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பொறுமை காக்கின்றார். இரண்டாம் வாசகத்திலும் பவுல் திருச்சபையைத் துன்புறுத்தியபோது இயேசு பொறுமை காக்கின்றார். பவுலின் செயலுக்கு அவரே பொறுப்பு என்பது போல அமைதி காக்கின்றார்.

இரக்கத்தின் முதன்மையான பண்பு பொறுமை. அந்தப் பொறுமையில் நான் அடுத்தவரை அவருடைய பொறுப்பில் விட வேண்டும். இரக்கம் என்றவுடன் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு என்னுடைய மடியில் வைத்து, 'நான்தான் எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் பொறுப்பு' என்று பதறுவது அல்ல. மாறாக, ஒவ்வொருவரும் முதிர்ச்சி அடைந்தவர், ஒவ்வொருவரும் நன்மை-தீமை அறியக்கூடியவர், பொறுமையாக இருந்தால் அல்லவரும் நல்லவர் ஆவார் என்று அடுத்தவரின் செயல்களுக்கு அடுத்தவரே பொறுப்பு என்று பொறுமையுடன் அமர்தல் இரக்கத்திற்காக முதற் பாடம்.

ஆ. உன்னுடைய தீமை என்னுடைய நன்மையை ஒருபோதும் பாதிக்காது

'நீ தீயவனாய் இருக்கிறாய் என்பதற்காக நானும் தீயவனாய் இருப்பேன்' என்று யாவே இறைவனோ, இயேசுவோ, தந்தையோ சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் தீமை தங்களுடைய நன்மையைப் பாதிக்காவண்ணம் அவர்கள் கவனமாக இருந்தார்கள். தன்னுடைய மகன் வெறுங்கையனாய் வந்தான் என்பதற்காக அவனுடைய தந்தை தன் கைகளையும் வெறுங்கையாக்கவில்லை. வெற்றுக்கையனாய் இருந்த மகனை இருந்த இடத்திலேயே நிரப்புகின்றார். தான் தெரிந்துகொண்ட இஸ்ரயேல் மக்கள் பிரமாணிக்கமின்மையில் இருந்தாலும் அவர்களுடைய தீமை கடவுளையோ மோசேயையோ பாதிக்கவில்லை. பவுல் சவுலாய் இருந்தபோது செய்த தீமையும் இயேசுவின் நன்மைத்தனத்தைப் பாதிக்கவில்லை.

இன்று நான் என்னுடைய நன்மையை எப்படி நிர்ணயிக்கிறேன்? எனக்கு ஒருவர் தீமை செய்தால் நான் அவருக்கும் தீமை செய்ய நினைத்தேன் என்றால், என்னுடைய நன்மையைவிட அவருடைய தீமை வலுவானதாக இருக்க நான் அனுமதித்துவிடுகிறேன். காணாமல் போன ஆடும் நாணயமும் தங்களுக்கு ஏதோ வகையில் தீங்கிழைத்தாலும் அவற்றைத் தொலைத்தவர்கள் வாளாவிருக்கவில்லை. தங்களுடைய நன்மைத்தனத்தால் அவற்றைத் தேடினர். இதுவே இரக்கத்தின் இரண்டாம் பாடம்.

இ. என்னுடையதும் உன்னுடையதே

ஊதாரித் தந்தையின் இவ்வார்த்தைகள் அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றன. 'என்னுடையதும் உன்னுடையதே' என்று அவர் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் சொல்கின்றார். தன்னுடைய செயலுக்கு அவர் எந்த பதில் உபகாரமும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய இளைய மகனைக் கண்டபோது அவனுடைய கழுத்தில் விழுந்து அவனை வரவேற்ற தந்தை மூத்த மகனுடைய கழுத்தில் அவ்வாறு விழவில்லை. ஏனெனில், மூத்த மகனை அவர் தன்னுடைய சமம் என்று கருதினார். 'எனக்குரிய ஒன்று என் தம்பிக்குப் போகிறது' என்று மனதுக்குள் முணுமுணுத்த மூத்த மகனிடம், 'நான், என்னுடையது, என்னுடைய இளைய மகன், வேலைக்காரர்கள், சொத்து என எல்லாம் உன்னுடையது' என்று சொல்லி ஒரு நொடியில் அவனைத் தந்தையாக்கி இவர் மகனாகின்றார். இதுதான் இரக்கத்தின் மூன்றாம் குணம்.

நான் ஒருவருக்கு இரங்குகிறேன் என்றால் அவரை நான் அதே நிலையில் வைத்திருத்தல் கூடாது. அப்படி வைத்திருந்தால் நான் அவரைப் பயன்படுத்துபவராக மாறிவிடுவேன். மாறாக, 'என்னுடையது எல்லாம் உன்னுடையது' என்று சொல்லி அவருக்கு இரங்கும்போது, அவர் நிறைந்தவராகிவிடுவார். அங்கே நான் குறைந்தவன் என ஆனாலும் எனக்கு அது நிறைவே.

இறுதியாக,

இரக்கம் என்பது இறைவனின் பெயர்! இது நம் பெயரானால் இந்த உலகமும், உறவும் இனிக்கும்!