இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

வாயில்! இதயத்தில்! கையில்!

இணைச்சட்டம் 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

இந்து மரபில் இறைவனை அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உண்டெனச் சொல்லப்படுகிறது: பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம். பக்தி மார்க்கம் இறைவனை வழிபடுதலையும், மந்திரங்களை உச்சரிப்பதையும், வழிபாடுகள் நடத்துவதையும் முதன்மைப்படுத்துகிறது. ஞான மார்க்கம் இறைவனின் திருநூல்களை அறிவதையும், இறைவன் பற்றிய மறைபொருளை சிந்தித்து, தியானித்து அறிதலையும் முதன்மைப்படுத்துகிறது. கர்ம மார்க்கம் பிறரன்புச் செயல்கள் செய்வதையும், தன்னுடைய வேலைகளை சரிவரச் செய்தலையும் முதன்மைப்படுத்துகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வரும் வாய், இதயம், கை என்னும் மூன்று வார்த்தைகளும் முறையே பக்தி, ஞானம், மற்றும் கர்மம் ஆகியவற்றைக் குறிப்பது போல இருக்கின்றன. இறைவனின் திருச்சட்டங்கள் தூரத்தில் இல்லை, மாறாக, அவை வாயிலும், இதயத்திலும் உள்ளன என்று மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிக்க, இயேசுவோ இன்னும் ஒரு படி மேலே போய், அது கையில் - அதாவது, செயலில் - இருக்கிறது என்று இன்னும் அதை நெருக்கமாக்குகிறார்.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 10:25-37) திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். சட்ட அறிஞர் இயேசுவிடம் கேள்வி கேட்பது மற்ற நற்செய்திகளில் காணக் கிடந்தாலும் (காண். மாற் 12:28-34, மத் 22:34-40, லூக் 18:18-20), லூக்கா மட்டும்தான் இந்த கேள்வியைப் பயன்படுத்தி 'நல்ல சமாரியன்' உருவகத்தைப் பதிவு செய்கின்றார்.

இயேசு பணிக்கு அனுப்பிய எழுபது (எழுபத்திரண்டு) சீடர்களும் மகிழ்வோடு திரும்புகின்றனர். அவர்களின் மகிழ்வில் மகிழ்கின்ற இயேசு தன் தந்தையை வாழ்த்திப் புகழ்கின்றார் (காண். லூக் 9:21-22). தொடர்ந்து, 'நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் பேறுபெற்றோர்!' (லூக் 9:23) என தம் சீடர்களை வாழ்த்துகின்றார். இந்தச் சூழலில் அங்கே வருகிறார் திருச்சட்ட அறிஞர். அவர் வருவதன் நோக்கம் இயேசுவைச் சோதிக்க.

'போதகரே' என்றுதான் இயேசுவை அழைக்கிறார். இந்த அழைப்பிலேயே ஒரு கிண்டல் இருக்கிறது. 'திருச்சட்டத்தை முறையாகக் கற்ற ஒருவரையே' இந்த தலைப்பு கொண்டு அழைப்பர் யூதர்கள். 'நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' - 'நிலைவாழ்வை உரிமையாக்குதல்' என்பது ஒவ்வொரு யூதரும் ஏங்கிக் கொண்டிருந்த ஒன்று. ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட இந்த 'உரிமையாக்குதல்' வாக்குறுதி (காண். தொநூ 12:1-3) தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதாக நினைத்தனர் அவர்கள். இயேசு அவருக்கு விடையாக மற்றொரு கேள்வியை முன்வைக்கின்றார்: 'திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?' மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசுவே பதில் தருகின்றார். 'ஆண்டவரை அன்பு செய்' என இச 6:5ஐயும், 'அயலானை அன்பு செய்' என லேவி 19:18ஐயும் மேற்கோள் காட்டுகின்றார். இச 6:4-9 ஒவ்வொரு யூதரும் அறிந்திருக்கும் ஒரு இறைவார்த்தைப் பகுதி. 'இதயத்தோடும்,' 'ஆன்மாவோடும்,' 'வலிமையோடும்,' 'மனத்தோடும்' என்னும் நான்கு வார்த்தைகளில் முதல் மூன்று வார்த்தைகள் மட்டுமே எபிரேய அல்லது கிரேக்க பதிப்புகளில் உள்ளன. மூன்று வார்த்தைகளோ, நான்கு வார்த்தைகளோ, இவ்வார்த்தைகள் நமக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே: நம் வாழ்வின் எல்லாமாக இறைவன் வேண்டும் - இதயத்தின் ஆழத்தில், ஆன்மாவின் அடையாளமாய், நம் புத்தியின் தெளிவாய், நம் ஆற்றலின் நிறைவாய். நம் உடலின் எந்தச் சிறுபகுதியும் அவரிடமிருந்து அந்நியப்பட்டுவிடக் கூடாது. இறைவனை அன்பு செய்யும் கட்டளையோடு ஒன்றித்துச் செல்லும் மற்ற கட்டளை அடுத்தவரை அன்பு செய்வது (காண். 1 யோவா 4:7-21). 'உன்னைப்போல்' என்ற வார்த்தையில் ஒருவர் தன்னை அன்பு செய்ய வேண்டிய கட்டளையும் பதிவு செய்யப்படுகிறது. மூன்று அன்புகள்: ஆண்டவரை, அடுத்தவரை, என்னை - இதே வரிசையில் என் வாழ்வில் இருக்க வேண்டும்.

திருச்சட்ட அறிஞர் இந்தக் கட்டளைகளை அறிந்திருந்தார். ஏனெனில், அகிபாவின் போதனையின்படி, 'திருச்சட்டத்தை அறிதல் அதைப் பின்பற்றுவதைவிட மேலானது!' ஆனால், இயேசுவைப் பொருத்த வரையில், அறிதல் மட்டும் போதாது நிலைவாழ்விற்கு. 'அப்படியே செய்யும். நீர் வாழ்வீர்' என கட்டளையும், வாக்குறுதியும் தருகின்றார் இயேசு. ஆக, திருச்சட்ட அறிஞர் 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்ட கேள்வியையே, 'நீர் செய்யும்!' என விடையாகத் தருகின்றார் இயேசு.

ஆக, நிலைவாழ்வு என்பது ஆண்டவரை, அடுத்தவரை, தன்னை அன்பு செய்வது. இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் வந்த அறிஞருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, இன்னொரு கேள்வியை எழுப்புகிறார் அறிஞர்: 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?'

யூத சமயம் வரையறைகள் நிறைந்தது. 'தூய்மை - தீட்டு' என்ற அடிப்படையில்தான் அவர்களின் சமூகமும், சமயமும் கட்டப்பட்டிருந்தது. யூதர்கள் புறவினத்தார் மற்றும் சமாரியர்களிடம், குருக்கள் மற்ற மக்களிடம், ஆண்கள் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நிறைய சட்டங்களும், விதிமுறைகளும் வழக்கத்தில் இருந்தன. வரையறைகள் நிர்ணயித்தல் சமூகத்தின் செயல்முறைக்கு அதிகம் தேவைப்பட்டது. அது ஒரு சமயக் கடமையாகவும் பார்க்கப்பட்டது.

இந்தப் பின்புலத்தில் தான், 'எனக்கு அடுத்திருப்பவர் யார்?' 'என் அயலான் என்பதை நான் என்பதை நான் எப்படி வரையறுப்பது?' எனக் கேட்கிறார். இயேசு சொல்லும் கதையின் நாயகன் வரையறையைக் கடந்து நிற்கின்றான். அவனது இனம், மதம், சமூகம், தொழில் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குச் சென்றார்' என்று மட்டும் குறிப்பிடுகின்றார் இயேசு. 'ஒருவர்' என்பது லூக்கா உவமைகளில் பரவலாகக் காணக்கிடக்கும் கதைமாந்தர் (காண். 12:16, 14:2, 15:11, 16:1, 19:12, 20:9). எருசலேமிலிருந்து எரிக்கோவிற்கு செல்லும் வழி ஆபத்தானது. ஏறக்குறைய 3300 அடி தாழ்வாக இருக்கும் இந்தப் பாதை 25 கிமீ தூரம் செல்லக்கூடியது. திருடர்கள் பதுங்குவதற்கு ஏற்ற குழிகளும், புதர்களும் இவ்வழியில் நிறைய உண்டு. அவர்களின் கைகளில் சிக்கிய நம் கதைமாந்தர் குற்றுயிராய் விடப்படுகிறார். உடைமையின்றி, உடல்நலமின்றி இருக்கும் இவர் இப்போது அதிக தேவையில் இருக்கிறார். 'தற்செயலாக' அந்த இடத்திற்கு வரும் அடுத்த வழிப்போக்கர் வாசகருக்கு நம்பிக்கை தருகிறார். வந்தவர் ஒரு குரு. கண்டிப்பாக இவர் உதவி செய்வார் என வாசகர் நினைத்துக் கொண்டிருக்க, 'அவர் மறுபக்கம் சென்றார்.' நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தொடர்ந்து வரும் லேவியரும் அவ்வாறே செய்கின்றார். அவர்கள் எதற்காக மறுபக்கம் சென்றார்கள் என்று சொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள் அப்படிச் சென்றதை நாம் நியாயப்படுத்த முடியாது. தொடர்ந்து வரும் மூன்றாமவர்தான் கதையில் முக்கியமானவர். 'குரு, லேவி, இஸ்ரயேலர்' என எல்லாரும் எதிர்ப்பார்க்க, மூன்றாம் நபரை, 'ஒரு சமாரியன்' என அறிமுகப்படுத்துகிறார் இயேசு. இவ்வாறாக, நீண்ட காலம் மக்கள் மனத்தில் இருந்த 'சமாரிய வெறுப்பை' கிண்டி விடுகின்றார் இயேசு. அசீரியர்களோடு திருமண உறவு கொண்டு தங்கள் தூய்மையை இழந்துவிட்ட யூதர்களே சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர் (காண். 2 அர 17:6, 24). சமாரியர் ஒருவரை கதாநாயகனாக முன்வைப்பதன் வழியாக இயேசு மக்கள் மனத்தில் இருந்த வரையறை எண்ணங்களையும், வேற்றுமை உணர்வுகளையும் புரட்டிப் போடுகின்றார்.

குரு மற்றும் லேவியைப் போல சமாரியர் காயம் பட்ட மனிதனைக் கண்டாலும் அவரை விட்டு விலகிச் செல்லவில்லை. மாறாக, அவர்மேல் பரிவு கொள்கின்றார். 'அவரை அணுகி,' 'எண்ணெயும் மதுவும் வார்த்து,' 'அவற்றைக் கட்டி,' 'விலங்கின் மீது ஏற்றி,' 'சாவடிக்குக் கொண்டு போய்,' 'அவரைக் கவனித்துக் கொள்கின்றார்' - இப்படி அடுக்கடுக்காக வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார் லூக்கா. 'இந்த மூவரில் காயம்பட்டவரின் அயலார் யார்?' என அறிஞரிடம் கேட்கின்றார் இயேசு. 'சமாரியர்' என்ற வார்த்தையைக் கூட சொல்ல மறுக்கும் திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே!' என்கின்றார். இவர் இப்படிச் சொன்னது அந்த சமாரியரின் இரக்கத்தையும், செயலையும் அடிக்கோடிடுவதுபோல இருக்கிறது. 'அயலாராக இருப்பது' என்பது ஒருவர் தானாக விரும்பி செயல்படும் நிலையே. 'நமக்கு ஒரு நல்ல அடுத்திருப்பவர் வேண்டுமெனில், நாமும் முதலில் நல்ல அடுத்திருப்பவராக இருத்தல் அவசியம்.'

'இதைச் செய்யும், வாழ்வீர்' (வ. 28) என்று முதலில் கட்டளையிட்ட இயேசு. இப்போது, 'நீரும் போய் அவ்வாறே செய்யும்' என்கிறார் (வ. 37). 'வாழ்வீர்' என்ற வாக்குறுதி இப்போது இல்லை. அயலாருக்கு நாம் காட்டும் பரிவன்பு எல்லாவகை பரிசுகளையும் கடந்தது. காயம்பட்ட மனிதனிடம் எந்தவொரு அன்பளிப்பையும் சமாரியர் எதிர்ப்பார்க்கவில்லை. ஆக, இரக்கம் என்பது கணக்குப் பார்க்கும் இதயம் அல்ல. நிலைவாழ்வு என்பது வெறும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது மட்டும் அல்ல. பரிவு அல்லது இரக்கம் தேவையை மட்டுமே பார்க்கும்.

இவ்வாறாக, 'உனக்கு மிக அருகில்' இருக்கிறது நிலைவாழ்வு என திருச்சட்ட அறிஞருக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலும் (காண். இச 30:10-14) இதே எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.

எகிப்து நாட்டின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றபின், வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி, இஸ்ரயேல் மக்களோடு நாற்பது ஆண்டுகள் வழிநடந்த மோசே, மோவாபு பள்ளத்தாக்கில், புதிய தலைமுறை இஸ்ரயேலருக்கு, இதுவரை நடந்த அனைத்தையும், யாவே இறைவன் தந்த திருச்சட்டங்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். 'ஆண்டவர் மீது அன்புகூர்வாயாhக!' என்று முதல் கட்டளையை அவர்களுக்கு மேற்கோளிட்டுக் காட்டும் மோசே, கட்டளை என்பது 'புரியாததோ' அல்லது 'வெகு தொலைவில் இருப்பதோ,' 'விண்ணிலோ' அல்லது 'கடலுக்கு அப்பாலோ' இருப்பது அல்ல, மாறாக, 'உனக்கு மிக அருகில்,' 'உன் வாயில்,' 'உன் இதயத்தில்' இருக்கிறது என்கிறார். ஆக, ஒருவர் தன் உள்ளத்திலிருந்தே இந்தக் கட்டளையை உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியும். ஒருவரின் உள்ளுறைந்து கிடப்பதே இறைவனின் கட்டளை. இந்த நெருக்கம் கட்டளையின் மேல் ஒருவர் கொள்ள வேண்டிய ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. 'எனக்குப் புரியவில்லை' என்றும், 'அதைப்பற்றி எனக்குத் தெரியாது,' என்றும் 'நான் அதைக் கண்டதில்லை' என்றும் யாரும் ஒதுங்கிவிடவும் முடியாது. அடிபட்டுக் கிடந்த அந்த பெயரில்லாத மனிதரைப் போல திருச்சட்டம் என் கண்முன், என் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. குரு மற்றும் லேவி போல மறுபக்கம் ஒதுங்கிச் செல்லாமல், சமாரியர்போல கைநீட்டி நான் தழுவிக் கொள்ள வேண்டும் திருச்சட்டத்தை.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 1:15-20) தொடக்கத் திருஅவையில் புழக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தியல் பாடல் (காண். பிலி 2:6-11). கிறிஸ்து தொடக்கமில்லாதவர், படைப்பனைத்தையும் முந்தியவர் என்று சொல்லும் பவுல், தொடர்ந்து, 'கிறிஸ்துவே திருச்சபையின் தலை' என்கிறார். ஆக, தூரமாக இருந்த ஒருவர் இன்று திருச்சபை என்னும் உடலின் தலையாக இருக்கும் அளவிற்கு நெருக்கமாக வந்துள்ளார். கிறிஸ்துவில் நடந்தேறிய இந்த நெருக்கத்தை, 'ஒப்புரவாதல்' என்ற இறையியல் கருதுகோள் வழியாக முன்வைக்கிறார் பவுல்: 'சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும், விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர்வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்' (1:20). விண்ணுக்கும், மண்ணுக்கும் இனி தூரமில்லை. இரண்டும் ஒன்றிற்கொன்று 'மிக அருகில் உள்ளது.' கடவுள் தன்மையும், மனிதத் தன்மையும் ஒன்றையொன்று கைகோர்த்து நிற்கின்றன கிறிஸ்துவில். கடவுள் தன்மையை நினைத்து நாம் பயந்து ஓடத் தேவையில்லை. மாறாக, 'மிக அருகில் உள்ள' கடவுள்தன்மையைத் தொட்டு நாம் அதை நமதாக்கிக் கொள்ள முடியும்.

ஆக, திருச்சட்டம், இயேசு, அயலார் என்னும் மூவரும் நம்முடைய வாய் மற்றும் இதயத்தைத் தாண்டி கையால் தொட்டுவிடும் நெருக்கத்தில் இருக்கின்றனர்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால் ஒன்றுதான்: 'வாய்' மற்றும் 'இதயத்தை' தாண்டி என்னால் 'கைக்கு' செல்ல முடிகிறதா?

நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் வரும் குருவுக்கும் லேவியருக்கும் 'அடுத்திருப்பவர்' என்பர் அவர்களுடைய வாயிலும், இதயத்திலும் இருந்தாரே தவிர அவர்களுடைய கைகளில் இல்லை. தங்களுடைய வாயால் இறைவனைப் புகழ்ந்த, தங்களுடைய இதயத்தால் இறைவனைச் சிந்தித்த அவர்களால் அடிபட்டுக் கிடந்த அயலாருக்கு கரம் நீட்ட முடியவில்லை. கரம் நீட்டுதல் மூன்று நிலைகளில் சாத்தியமாகும்:

அ. அறிதலிலிருந்து செய்தலுக்குக் கடத்தல்

'நிறைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?' என கேட்டு வருகிற அறிஞரிடம், 'நீ முதலில் செய்!' என கட்டளை கொடுத்து அனுப்புகிறார் இயேசு. ஆக, கட்டளைகளை அறிதல் அல்ல, மாறாக, அவற்றைச் செய்தல் அல்லது அவற்றின்படி நடத்தல் அல்லது அவற்றைச் செயல்படுத்துதலே நிறைவாழ்வைத் தரும். சர்க்கரை நோய் உள்ளவர் உணவில் சர்க்கரை சேர்க்கக் கூடாது என்பது நான் கொண்டுள்ள அறிவு. இந்த அறிவு மட்டும் இருந்தால் போதுமா? இல்லை. அறிவோடு சேர்ந்து செயலும் இருக்க வேண்டும். 'சர்க்கரை சேர்க்கக் கூடாது' என்று அறிந்துள்ள நான் அதைச் செயல்படுத்த வேண்டும் - என் உணவில் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ஆக, அறிவு மட்டும் ஆற்றல் அல்ல. அறிவோடு கூடிய செயலே ஆற்றல். அறிதலிலிருந்து செயல்பாட்டிற்கு திருச்சட்ட அறிஞரை அழைத்துச் செல்கின்றார் இயேசு.

ஆ. 'எனக்கு அருகிருப்பவர் யார்?' எனக் கண்டுணர்தல்

என் பெற்றோர், உறவினர், நண்பர், அறிமுகமானவர் ஒரு வட்டம் என் அருகில் இருந்தாலும், என் அருகிலிருப்பவர்கள் இவர்கள் அல்லர். எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், எல்லாம் சிதைந்து, முகம் இழந்து, உயிரையும் கையில் பிடித்துக் கொண்டு, முணுமுணுத்துக் கொண்டு இருப்பவரே என் அருகிலிருப்பவர். அவரின் ஒரே தேவை என்பது 'தேவை மட்டுமே.' அந்த தேவையை நான் நிறைவு செய்தால் நானும் அவரின் அருகிருப்பவரே. அவரின் தேவையில் நான் அவருக்கு பரிவு காட்டுவதற்குப் பதிலாக, அவரின் அடையாளத்தை நான் தேட ஆரம்பித்தாலோ, அல்லது 'இவருக்கு உதவினால் எனக்கு என்ன கிடைக்கும்?' என நான் கணக்குப் பார்க்க ஆரம்பித்தாலோ என்னால் அவரின் அடுத்திருப்பவராக இருக்க முடியாது. அவரின் முணகல் சத்தம் என் காதில் விழ வேண்டும். நான் என் கழுதையிலிருந்து இறங்க வேண்டும். குனிய வேண்டும். என் கையை அழுக்காக்க வேண்டும். என் உடையை இரத்தக்கறையாக்க வேண்டும். அவரைத் தொட வேண்டும். மருந்திட வேண்டும். காயத்திற்குக் கட்டுப்போட வேண்டும். என் விலங்கில் ஏற்றிக்கொண்டு சென்று அவரின் பாதுகாப்பை நான் உறுதி செய்ய வேண்டும். 'அவரைப்போல' நானும் செய்ய என்னை அழைக்கிறார் இயேசு.

இ. நிலைவாழ்வு - இங்கே இப்போதே!

இறப்பிற்குப் பின் வருவதல்ல நிறைவாழ்வு. இருக்கும்போதே வருவதுதான் நிலைவாழ்வு. 'ஆண்டவர்-அடுத்திருப்பவர்-நான்' என்ற புதிய மூவொரு இறைவனை முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள். இந்த மூவொரு அன்பில் நான் இணைந்திருந்தால் அதுவே எனக்கு நிலைவாழ்வு. 'நான் ஆண்டவரை அல்லது அடுத்தவரை அல்லது என்னை அன்பு செய்தால் எனக்கு நிறைவாழ்வு கிடைக்கும்' என்று நினைப்பது சால்பன்று. ஆக, அன்பு என்பது நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் கொடுக்கும் விலை அன்று. அப்படி அதை விலை என நான் நினைத்தால், நான் ஆண்டவரையும், அடுத்தவரையும், என்னையும் வியாபாரப் பொருளாக்கிவிடுகிறேன். அடுத்தவரை அல்லது காயம்பட்டவரை அன்பு செய்து நான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்கிறேன் என்றால், அங்கே நான் அவரை ஒரு பொருளாக ஆக்கிவிடுகிறேன் என்றுதானே அர்த்தம். ஒவ்வொரு மனிதரும் ஓர் ஆள். அவரை நான் பொருளாக்க எனக்கு உரிமை இல்லை. நான் செய்யும் அன்பிற்கு எனக்கு நிறைவாழ்வு அல்லது நிலைவாழ்வு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் தொடர்ந்து அன்பு செய்வேன் என்ற மனப்பான்மை என்னில் உதிக்கிறதா? நிறைவாழ்வு என்பது பயணத்தின் இறுதியில் நான் கண்டடையும் பொருள் அல்லது இடம் அல்ல. மாறாக, பயணமே நான் கண்டடையும் பொருள். என் இலக்கு பயணத்தின் இறுதி அல்ல, மாறாக, பயணமே. இந்தப் பயணத்தில் வழிப்பாதையில் விழுந்துகிடக்கும் அனைவரும் என் அடுத்திருப்பவரே. அவரைத் தொட்டுத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு நிறைவாழ்வே!

'உனக்கு அருகில் நான்' என என் ஆண்டவரும், என் அடுத்திருப்பவரும் என்னிடம் சொல்ல, 'உனக்கு மிக அருகில் நான்' என நான் அவர்களிடம் சொல்ல முடிந்தால் அதுவே நிலைவாழ்வு. வாயில் தொடங்கும் இப்பயணம் கைகளில் முடியட்டும் - இன்றும் என்றும்!