இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருமுழுக்கு விழா

அவரது குரல்!

எசாயா 40:1-5, 9-11
தீத்து 2:11-14, 3:4-7
லூக்கா 3:15-16, 21-22

இன்று ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த விழாவின் பின்புலத்தில் நமக்கு இயல்பாக மூன்று கேள்விகள் எழுவதுண்டு: (அ) இயேசுவே வயது வந்தபின்னர் தான் திருமுழுக்கு பெற்றார். அப்படி இருக்க, கத்தோலிக்கத் திருஅவையில் நாம் குழந்தைகளாக இருக்கும்போதே திருமுழுக்குப் பெறுவது ஏன்? (ஆ) பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கை யோவான் வழங்கினார் எனில், பாவமே அறியாத இயேசு அத்திருமுழுக்கைப் பெற வேண்டியதன் நோக்கம் என்ன? (இ) 'அவர் தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பார்' என்று இயேசுவைப் பற்றி யோவான் முன்னுரைக்கிறார் எனில், நாம் பெற வேண்டிய இந்த இரண்டாவது திருமுழுக்கு என்ன? இதுதான் 'முழுக்கு ஸ்நானமா'? அல்லது இதுதான் 'அபிஷேகம், இரட்சிப்பு பெறுதலா?'

விரைவாக இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டு, நம் சிந்தனைக்குள் நுழைவோம். (அ) திருமுழுக்கு நாம் தொடக்கப் பாவத்தைக் கழுவுகிறது. மேலும், திருமுழுக்கு என்பது திருஅவை என்னும் சமூகத்திற்குள் உறுப்பினராக மாறும் நுழைவுச் சடங்கு. ஆக, குழந்தையாக இருக்கும்போதே திருமுழுக்கு கொடுப்பதை கத்தோலிக்கத் திருஅவை முன்மொழிகிறது. (ஆ) இயேசு திருமுழுக்கு பெறுவதன் நோக்கம் பாவமன்னிப்பு அல்ல. மாறாக, இது மனுக்குலத்தோடு அவர் முழுமையாக ஒன்றித்திருந்ததையும், மற்றும் அவருடைய பொதுவாழ்வு அல்லது பணிவாழ்வின் தொடக்கத்தையும் குறிக்கிறது. (இ) 'தூய ஆவியால் திருமுழுக்கு' என்பது லூக்கா நற்செய்தியில் திருத்தூதர்பணிகள் நூலில் வரப் போகின்ற ஆவியார் அருள்பொழிவைக் குறிக்கின்றது. தூய ஆவியாரின் கொடைகளை நாம் உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பெறுகின்றோம். திருமுழுக்கில் நம்மேல் பொழியப்பட்ட ஆவி – தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் - இந்த அருளடையாளத்தில் உறுதிசெய்யப்படுகின்றார். ஆக, நாம் முழுக்கு ஸ்நானம், அல்லது ஆவியின் அபிஷேகம் அல்லது இரட்சிப்பு பெறத் தேவையில்லை.

நம் திருமுழுக்குச் சடங்கில், 'எப்பத்தா' ('திறக்கப்படு') என்னும் ஒரு பகுதி உண்டு. அதில், திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர், 'செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும், ஆண்டவர் இயேசு செய்தருளினார். நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும் மகிமையும் விளங்கக் காதால் கேட்கவும், அந்த நம்பிக்கையை நாவால் அறிக்கையிடவும் அவரே அருள்செய்தருள்வாராக!' என்று சொல்லி, குழந்தையின் உதடுகள் மற்றும் காதுகளில் சிலுவை அடையாளம் வரைகிறார்.

'குரல் கேட்டல்' என்பது திருமுழுக்கு நிகழ்வில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. 'அவரது குரல் கேட்டல்' என்பதை நாம் இன்றைய நாளின் மையச் சிந்தனையாக எடுத்துக்கொள்வோம்.

முதல் ஏற்பாட்டில், 'குரல்' பற்றிய மூன்று பகுதிகள் முக்கியமானவை: (அ) ஆதாம் கேட்ட குரல். நம் முதற்பெற்றோர் விலக்கப்பட்ட கனியை உண்கின்றனர். ஆண்டவராகிய கடவுள் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த ஓசை 'கேட்டு,' அவர்கள் மரங்களுக்கு இடையே ஒளிந்துகொள்கின்றனர். 'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று ஆண்டவர் கேட்டபோது, 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன்' என்கிறார் (காண். தொநூ 3:8-10). இந்நிகழ்வில், 'குரல்' அச்சம் தருகிறது. (ஆ) பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டுக்குள் இஸ்ரயேல் மக்கள் நுழையுமுன் மோசே வழியாக ஆண்டவர் பேசுகின்றார்: 'நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு' (இச 15:5). இங்கே, 'குரல்' என்பது கீழ்ப்படிதலுக்கான அழைப்பாக இருக்கின்றது. (இ) இஸ்ரயேல் மக்கள் அசீரிய மற்றும் பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தபோது, ஆண்டவராகிய கடவுள் தங்களைவிட்டு விலகியதாக நினைத்தனர். அவர்களுக்குத் தன் உடனிருப்பை முன்மொழிகின்ற ஆண்டவர், 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் குரல் பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்'' (எசா 30:21). இங்கே, 'குரல்' உடனிருப்பின் மற்றும் வழிகாட்டுதலின் அடையாளமாக இருக்கிறது.

ஆண்டவரின் குரல் அச்சம் தருவதாகவும், கீழ்ப்படிதலுக்கான அழைப்பாகவும், உடனிருப்பின் அடையாளமாகவும் இருக்கிறது. சில நேரங்களில் ஆண்டவரின் குரல் அரிதாக இருக்கிறது (காண். 1 சாமு 3:1).

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா மட்டுமே பதிவு செய்கின்றனர். லூக்கா மற்ற நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்: (அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான் சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண். 3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்' என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல் விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில், இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல் கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசு திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது, 'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசு 'தண்ணீரால்' மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால், லூக்காவில், 'தண்ணீர்,' 'தூய ஆவி' என இரண்டு நிலைகளில் திருமுழுக்கு பெறுகிறார் இயேசு. இந்த வேறுபாடுகளின் வழியாக, லூக்கா, இயேசு திருமுழுக்கு பெறும் நிகழ்வுக்கு முக்கியத்துவம் தராமல், அந்த நிகழ்வின் பொருள் என்ன என்பதை முதன்மைப்படுத்துகின்றார். இயேசு, தந்தையின் குரல் கேட்கும் நிகழ்வு மூன்று நிலைகளில் நடக்கிறது: (அ) திருமுழுக்கு பெறுகின்றார், (ஆ) இறைவேண்டல் செய்கின்றார், (இ) தூய ஆவியாரால் நிரப்பப் பெறுகின்றார். இந்த மூன்றும் நடந்தேறும்போதுதான், 'அவரது குரல்' ஒலிக்கின்றது. நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், தான் மெசியா அல்ல என்பது யோவான் மறுப்பதோடு, இயேசு தருகின்ற திருமுழுக்கின் மேன்மையை – தூய ஆவியாரால் திருமுழுக்கு – எடுத்துரைக்கின்றார். நம்பிக்கையாளர்கள் பெறுகின்ற தூய ஆவியாரை இது குறிக்கிறது. யோவான், ஆண்டவரின் குரலைக் கேட்டவராக, தான் மெசியா அல்ல என ஏற்றுக்கொள்கிறார். மேலும், அவர் தன்னையே பாலைவனத்தில் ஒலிக்கும் குரலாக மட்டுமே அடையாளப்படுத்துகின்றார்.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வுக்குப் பின்னர் மூன்று நிகழ்வுகள் விரைவாக நடந்தேறுகின்றன: (அ) தூய ஆவியால் இயேசு பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார் (லூக் 4:2), (ஆ) தூய ஆவியின் வல்லமையால் கலிலேயாவுக்குப் போய்த் தன் பணியைத் தொடங்குகின்றார் (4:14), மற்றும் (இ) 'ஆண்டவரின் ஆவி என்மேல் உளது' என்று நாசரேத்து தொழுகைக்கூடத்தில் அறிக்கையிடுகின்றார் (4:18). பாலைநிலத்தில் இயேசு அலகையை எதிர்கொள்கின்றார். இறையாட்சிப் பணியைத் தொடங்குகின்றார். தானே அருள்பொழிவு பெற்றவர் என்பதை அறிக்கையிடுகின்றார். இந்த மூன்று நிகழ்வுகளுக்கும் அடிநாதமாக இருப்பது, 'தந்தையின் குரல்' கேட்ட இயேசுவின் அடித்தள அனுபவம்தான். 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்னும் இந்தக் குரல்தான் இயேசுவைப் பொதுவாழ்வுக்கு அறிமுகம் செய்கிறது. இந்தக் குரல்தான் இயேசுவோடு என்றும் உடனிருக்கிறது.

முதல் வாசகத்தில், தன் தூதரை பாபிலோனியாவுக்கு அனுப்புகின்ற கடவுள், அங்கே அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களை நோக்கித் தன் குரலை ஒலிக்கச் செய்கின்றார். இறப்பும், இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள் அந்தப் புதிய நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர். வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள் இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும் விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில் நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன். இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின் பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார். ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத் திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது: 'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு, கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.

ஓர் ஆயன் தன் ஆடுகளைத் தன் குரலால் வழிநடத்துகிறார் (காண். யோவா 1:1-10). இதே உருவகத்தைக் கொண்டு, ஆண்டவராகிய கடவுள் மூன்று நிலைகளில் தன் மக்களை வழிநடத்துகிறார்: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும் இறைவனின் கரம் படும். ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல அவர் சேர்க்க மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும். தன் கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும் ஒன்று சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால் தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ) 'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது, முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில் சோர்ந்துவிடக் கூடியவை. அவற்றுக்குத் தொடர் அரவணைப்பு அவசியம். அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.

ஆக, ஆண்டவருடைய குரல் செயல்பாடாகவும் மாறுகிறது.

இரண்டாம் வாசகத்தில், கடவுளின் அருள் இயேசு கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்ற புனித பவுல், திருமுழுக்கு மற்றும் தூய ஆவியார் பொழிவில் நாமும் பங்கேற்பதை நினைவுபடுத்துகின்றார்.

இன்றைய விழா நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

(அ) அவரது குரல் கேட்கும் தளங்கள். கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்ற கலந்தாலோசித்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் ஒருவர் மற்றவருடைய குரலைக் கேட்கும் முன்னர், ஆண்டவரது குரலைக் கேட்பது அவசியமாகிறது. ஆண்டவருடைய குரல் கேட்கும் தளங்கள் எவை? பாலைநிலத்தில், அந்நிய நாட்டில், யோர்தான் நதிக்கரையில், இறைவேண்டலில், கிறிஸ்துவின் வெளிப்பாட்டில், அருளடையாளங்களில் என அவருடைய குரல் கேட்டுகொண்டே இருக்கிறது. அவருடைய குரலை நாம் கேட்பதற்குத் தடையாக நாம் கொண்டுள்ள உள் மற்றும் வெளி ஓசைகளை அடையாளம் கண்டு அவற்றின் சப்தங்களைக் குறைத்துக்கொள்தல் நலம்.

(ஆ) அவரது குரலாக நாமும் மாற வேண்டும். 'ஆறுதல் கூறுங்கள். கனிமொழி கூறுங்கள்' என ஆண்டவர் தன் இறைவாக்கினரைப் பணிக்கின்றார். இயேசு திருமுழுக்கு நிகழ்வுகளுக்குப் பின்னர் நற்செய்தி அறிவிப்புக்குப் புறப்பட்டுச் செல்கின்றார். அவருடைய குரலைக் கேட்கின்ற நாம், அவருடைய குரலாக நம் வாழ்வியல் தளங்களில் மாற வேண்டும். குடும்பங்களில், பணியிடங்களில், சமூகத்தில் அவருடைய குரலாக, ஆறுதலின் குரலாக நாம் ஒலிக்க என்ன செய்ய வேண்டும்?

(இ) திருமுழுக்கின் அருளைப் புதுப்பித்தல். குழந்தையாக இருந்தபோது நாம் பெற்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுகூருவோம். நம் பெற்றோர், ஞானப் பெற்றோர் நம் சார்பாக நம்பிக்கை அறிக்கை செய்தனர். திருமுழுக்கின் உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்ததோடு கடமைகளையும் ஏற்றனர். அவர்களை நாம் நன்றியோடு எண்ணிப் பார்ப்போம். இன்று வயது முதிர்ந்த நிலையில், நாம் அந்த அருளின் தன்மையை உணர்ந்துள்ளோமா? திருமுழுக்கின் முதற் கடமையான நற்செய்தி அறிவித்தலை நாம் செய்கின்றோமா?

'என் உயிரே, ஆண்டவரைப் போற்றிடு!' என ஆண்டவரைப் புகழும் பதிலுரைப் பாடல் ஆசிரியர் (திபா 104), ஆண்டவருடைய குரல் இந்த உலகில் ஏற்படுத்தும் மாற்றத்தை அறிக்கையிடுகின்றார். 'அவரது குரல்' கேட்கும் நாம், அவரது குரலாக இவ்வுலகில் மாறும்வரை, அருள் என்னும் அக்கரையில் இறைவேண்டல் செய்வோம்.