இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறு

'அவர்கள்' - 'நீங்கள்'

மலா 3:19-20
2 தெச 3:7-12
லூக் 21:5-19

இரண்டு வாரங்களுக்கு முன் மத்திய இத்தாலியில் தெர்னி என்ற நகருக்கு அருகே பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்படுத்திய தாக்கத்தை ரோமிலும் மக்கள் உணர்ந்தனர். கடந்த நான்கு மாதங்களாக நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன இத்தாலியில். இதைப் பின்புலமாக வைத்து 'ரேடியோ மரியா' என்ற வானொலியில் மறையுரை ஆற்றிய அருள்தந்தை ஒருவர், 'நிலநடுக்கங்களுக்குக் காரணம் இத்தாலி நாடு செய்கின்ற பாவங்கள்தாம்!' என்றார். இதைக் கேட்ட அனைவரும் கொந்தளிக்க, விஷயம் போப் பிரான்சிஸ் வரை போக, அவர் அவரைக் கண்டிக்க, தான் அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் அருள்தந்தை.

நிலநடுக்கங்களும், போர்களும், வன்முறைகளும் உலக அழியப்போகிறது என்பதற்கான முக்கிய அறிகுறி என்று சொல்லும் நம் அடுத்த வீட்டு பாஸ்டர்கூட இன்னும் புதிய வீடு கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். ஆக, உலகம் அழியப்போகிறது என்பது உலகம் தோன்றியது முதல் மக்கள் கேட்டுக்கொண்டே வரும் ஒரு கேள்வி.

திரைப்படம், நாவல், டிவி சீரியல், ஃபுட்பால் மேட்ச், கிரிக்கெட் 20-20 என எதை எடுத்தாலும், நாம் கேட்கும் ஒரு கேள்வி: 'எப்படி முடிந்தது?'

'எப்படி முடிந்தது?' என்னும் சொல்லாடலைத் தனியே எடுத்துப் பார்த்தால், இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கிறது. (அ) 'உன்னால் எப்படி முடிந்தது?' என்பதன் பொருள், 'உன்னால் எப்படி சாத்தியமானது அல்லது இயன்றது?' (ஆ) 'எப்படி முடிந்தது படம்?' என்பதன் பொருள் 'படத்தின் இறுதி எப்படி இருக்கிறது?' என்பதாகும்.

நாம் கேட்கும் கேள்வியும் இரண்டாம் பொருளில்தான்.

இயேசுவும் சீடர்களும் ஒலிவ மரத் தோப்புக்குள் நின்று கொண்டு தூரத்தில் தெரியும் எருசலேம் கோயிலைப் பற்றி வியக்கிறார்கள். 'அங்க பாருங்க! எவ்வளவு ஜைஜான்டிக்கா இருக்கு? என்ன ஒரு கலை? என்ன ஒரு வேலைப்பாடு? என்ன ஒரு கலரிங்!' என அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இயேசு அவர்களின் வியப்பை அப்படியே தரைமட்டமாக்குகிறார்.

'நீங்க பார்க்கிற எல்லாம் அழிந்து போகும்!'

கேட்கிற நமக்கே கோபம் வருது. சீடர்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.

இந்தக் கடவுளே இப்படித்தான்! அவர் ஒன்றைப் பார்த்து வியந்து, 'அழகு!' என்றால் ஒன்றுமில்லை. வானம், பூமி, நிலவு, நட்சத்திரம், மனிதர் என வரிசையாகப் படைத்துவிட்டு, 'நல்லது!' 'அழகு!' என வியக்கிறார். ஆனா, நாம ஒன்னு சொன்னா மட்டும் உடனடியாக அதை எதிர்மறையாகப் பேசி அமுக்கிவிடுகிறார்.

எந்த ஒரு கட்டடமும் ஒரு நாள் அழியும் என்பது சீடர்களுக்குத் தெரியாதா? என்ன?

கூட்டத்தோட கூட்டமா நின்னு எல்லாத்தையும் ரசிச்சிட்டு போறத விட்டுட்டு, 'அது அழியும்!' 'இது இடிக்கப்படும்!' என்று இயேசு சொல்வது நல்லாவா இருக்கு?

இப்படி நீங்க கேள்வி கேட்டீர்கள் என்றால், பின்வரும் பின்புலம் அவசியம்.

அ. நேரம் சார்ந்த பின்புலம்

இந்த நற்செய்திப் பகுதியைப் புரிந்துகொள்ள ஒரு சில பின்புலங்கள் தேவை. முதலில் நேரம் சார்ந்த பின்புலம். மேற்கத்திய சிந்தனையின் நேரக் கணக்கீடும், இந்தியப் பாரம்பரியத்தின் நேரக் கணக்கீடும் வித்தியாசப்படுகின்றது. மேற்கத்திய கணக்கீட்டை நேர்க்கோடு முறை (linear worldview) என்பர். அதாவது, வரலாற்று நிகழ்வுகள் ஒரு புள்ளியில் தொடங்கி ஒரே கோடாக மறுபுள்ளிக்கு செல்கின்றது. முதற்புள்ளி என்பது தொடக்கம். இறுதிப்புள்ளி என்பது முடிவு. இதற்கிடையே இருக்கின்ற கோடு வரலாற்றின் வளர்ச்சி மற்றும் நிறைவைக் குறிக்கும். இறுதிப்புள்ளிதான் இறுதி. அதற்குப் பின் ஒன்றும் கிடையாது. ஆனால், இந்தியப் பாரம்பரியத்தின் கணக்கீடு வட்டக் கணக்கீட்டு முறை (cyclic worldview). இதன் படி ஒரு புள்ளியில் தொடங்கும் வரலாறு மற்றொரு புள்ளியில் முடியும். அந்தப்புள்ளி அடுத்த வரலாற்றின் தொடக்கமாக இருக்கும். இப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக பிறப்புகள் அல்லது வரலாறுகள் தொடரும். நம் நற்செய்தியில் பிரதிபலிப்பது மேற்கத்திய கணக்கீடு. உலக வரலாற்றின் முடிவு. அதற்குப் பின் ஒன்றும் இருக்கப்போவதில்லை. (அந்த வெறுமையை யோசிக்கவே பயமாக இருக்கிறது. இந்தியப் பாரம்பரியச்சிந்தனை நல்லதோ எனத் தோன்றுகிறது!)

ஆ. மொழி சார்ந்த பின்புலம்

விவிலியத்தில் கையாளப்படுகின்ற மொழிநடை. அனைத்து விவிலியப்பகுதிகளும் ஒரே போன்ற மொழிநடையில் எழுதப்பட்டவையல்ல. உரைநடை, செய்யுள் என வித்தியாசப்பட்டாலும், உரைநடையிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த நற்செய்திப் பகுதியில் பயன்படுத்தப்படும் நடை – திருவெளிப்பாட்டு நடை (apocalyptic language). இதன் அடிப்படையில் உலக இறுதி வானில் நடைபெறும் மாற்றத்தின் நிகழ்வுகளாக எழுதப்படும். இந்த நடையில் எழுதப்பட்டவைதாம் தானியேல், எசாயாவின் சில பகுதிகள் மற்றும் திருவெளிப்பாடு. இந்த மொழிநடையில் பயன்படுத்தப்படுபவை அடையாளங்கள். அவற்றை நேரடிப் பொருளில் எடுக்க முடியாது.

இ. பின்னோக்கி வாசித்தல்

பின்னோக்கி வாசிப்பது (retrojection) விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு இலக்கியப் பண்பு. அதாவது, விவிலிய ஆசிரியர் தான் வாழும்போது காண்கின்ற ஒன்றை ஏற்கனவே நடைபெற்ற ஒன்றாகக் கூறுவது. உதாரணத்திற்கு, உடன்படிக்கை என்ற சொல்லாடல் இஸ்ராயேல் வரலாற்றில் பயன்பாட்டில் இருந்தது அவர்கள் கானான் நாட்டில் நுழையும்போதுதான். ஆனால் அந்த வார்த்தை ஏற்கனவே நோவா காலத்தில், ஆபிரகாம் காலத்தில் பயன்படுத்தப்பட்டதுபோல எழுதுவதுதான் பின்னோக்கி வாசிப்பது. மாற்கு நற்செய்தியாளரும், மற்ற நற்செய்தியாளரும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் உரோமைப் பேரரசின் கலாபனையை நேரில் பார்த்தவர்கள். அந்தக் கலாபனையின் கோரத்தை உலக முடிவாகவும், இயேசுவே அதைச் சொன்னதாகவும் பின்னோக்கி வாசித்து எழுதியிருக்கலாம்.

ஈ. எதிர்காலம் பற்றிய சிந்தனை

நம்மால் எதிர்காலத்தையும் சிந்திக்க முடியும் என்பதால்தான், இறப்பிற்குப் பின்? இதற்குப் பின்ன? என்று நம்மால் கேட்க முடிகிறது. காணக்கூடிய ஒன்றிலிருந்து, காண முடியாத ஒன்றை நம்மால் யூகிக்க முடிகிறது. காணக்கூடிய கார்மேகத்தைப் பார்த்து, காண முடியாத மழை பெய்தலை நாம் முன்கூட்டியே உணர முடிகிறது. அதுபோல, நமக்கு முன் நடக்கும் நிகழ்வுகளை வைத்து, மற்றொன்று நிகழலாம் என்று நம்மால் எழுத முடிகிறது.

இந்தப் பின்புலங்களோடு இன்றைய நற்செய்தியைப் பார்த்தால், இன்றைய நற்செய்தியின் நோக்கம், 'உலகம் எப்படி முடியும்?' என்பதைப் பற்றி அல்ல, மாறாக, அதை நாம் எப்படி எதிர்கொள்வது? என்பதைப் பற்றிச் சொல்வதே.

இன்றைய நற்செய்தியில்,

'அவர்கள்' 'நீங்கள்' என்ற பேதம் பரவிக் காணப்படுகிறது. அவர்கள் இப்படிச் செய்வார்கள், ஆனால், நீங்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்று அவர்களையும், நீங்களையும் பிரித்துக் காட்டுகிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்திலும் (காண். மலாக்கி 4:19-20) இந்தப் பேதத்தை நாம் காண்கிறோம். 'ஆண்டவரின் நாள் அவர்கள்மேல் அழிவாக வரும்' என்றும், 'உங்கள்மேல் நீதியாக, நலமாக, வாழ்வாக வரும்' என்றும் இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி.

திருவழிபாட்டு ஆண்டு முடிவுக்கு வர இன்னும் சில நாட்களே இருப்பதால், இறுதி நாள்கள் பற்றிய நற்செய்திப் பகுதியையே நாம் இந்த நாட்களில் தொடர்ந்து வாசிக்க இருக்கிறோம்.

சரி!

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்வதுதான் என்ன?

அது நம்மை பயமுறுத்துகிறதா?

நம் குற்ற உணர்வைத் தட்டி எழுப்புகிறதா?

இன்றைய இறைவாக்கு வழிபாடு பயமுறுத்தும் சொல்லாடல்களைக் கொண்டிருந்தாலும், ஆறுதலின் செய்தியாகவே இருக்கிறது:

1. நீங்கள் பயப்பட வேண்டாம்

இதுதான் முதல் ஆறுதல். அதாவது, என்னைச் சுற்றி ஆயிரம் பேர் விழுந்தாலும் எனக்கு ஒன்றும் நேராது என்று திருப்பாடல் ஆசிரியர் (திபா 91) பெறும் ஆறுதலைத்தான் நாம் பெற வேண்டும். அதாவது, இயேசு தரும் ஆறுதலைப் பாருங்கள் - 'நம் தலைமுடி ஒன்று கூட விழவே விழாதாம்!'

நம் சுய உணர்வு இல்லாமலேயே தினமும் தலையிலிருந்து முடிகள் விழுகின்றன. ஆக, சுய உணர்வு இல்லாமல் நடக்கும் செயல்கூட நடக்காது என்றும், அந்த அளவிற்கு கடவுளின் பாதுகாப்பு இருக்கும் என்கிறார் இயேசு.

2. நீங்கள் கவலைப்பட வேண்டாம்

எதற்காக? எதிரிகள் முன் என்ன பேசுவது என்றும், எதிரிகளை எப்படி எதிர்கொள்வது என்றும் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் அவற்றை எதிர்கொள்ள ஆண்டவரும் அவரின் ஆவியும் உடனிருப்பர்.

3. நீங்கள் மனவுறுதியோடு இருந்து வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்

இதுதான் மிகவும் முக்கியமானது.

ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் வாழ்வை இழந்துவிட்டால் அதனால் என்ன பயன்? எனக் கேட்கும் இயேசு, வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

வாழ்வு என்றால் என்ன?

வாழ்வு என்றால் ஆன்மா மட்டுமா?

இல்லை.

நம் நற்குணங்கள், நன்னயம், நாணயம், உண்மை, இருப்பு இவைதாம் வாழ்வு.

இவற்றை நாம் விடாமுயற்சியோடு காத்துக்கொள்ள வேண்டும்.

எந்த நேரத்திலும் விட்டுவிடக்கூடாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (2 தெச 3:7-12) தெசலோனிக்கிய திருச்சபையைச் சாடுகின்றார் பவுல். எதற்காக? 'ஆண்டவரின் இரண்டாம் வருகை அருகில் இருக்கிறது. உலகம் அழியப் போகிறது' என்று சிலர் போதிக்க, அந்த போதனையைக் கேட்ட பலர், 'எல்லாம் அழியத்தானே போகிறது. அப்புறம் எதுக்கு வேலை செய்ய வேண்டும்?' எனச் சொல்லிக்கொண்டு சோம்பித் திரிகின்றனர். அவர்களின் லாஜிக் சரிதானே. ஆனால், பவுல், 'உழைக்க மனமில்லாதவர் உண்ணலாகாது' என கடிந்து கொள்கின்றார்.

வாழ்வைக் காத்துக்கொள்வது என்றால் இதுதான்.

உழைக்கிறாயா? தொடர்ந்து உழை.

சாப்பிடுகிறாயா? தொடர்ந்து சாப்பிடு.

தூங்குகிறாயா? தொடர்ந்து தூங்கு.

குழந்தையைக் குளிக்க வைக்கிறாயா? தொடர்ந்து குளிக்க வை.

டிவி பார்க்கிறாயா? தொடர்ந்து பார்.

'இதோ, ஆண்டவர் வருகிறார்!' என்று யாராவது ரோட்டில் மைக் வைத்து பேசிக்கொண்டு சென்றால், நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள். அப்படியே விட்டுவிட்டு அவர்கள்பின் ஓடாதீர்கள்.

அவரால் எப்படியும் வர முடியும். அவர் உங்களின் எல்லாவற்றிலும் இருக்கிறார். அவர் என்றும் உங்களிடம் வருகின்றார். அப்படி வந்தால்தான் அவர் ஆண்டவர்.

இறுதியாக,

இன்றைய நற்செய்தி வைக்கும் ஒரே கேள்வி: நாம் யார்?

'அவர்களில் ஒருவரா?' அல்லது 'நீங்களில் ஒருவரா?'

அவர்களில் ஒருவர் என்றால் நமக்கு அழிவே.

நீங்களில் ஒருவர் என்றால் நமக்கு வாழ்வே.

'நீங்களில் ஒருவர்' என்றால் மனவுறுதியோடு வாழ்வைக் காத்துக்கொள்வோம்.

முடிவு என்று நினைக்கும்போது விடியச் செய்ய அவரால் மட்டுமே முடியும்!

இன்றைய முதல்வாசகத்தின் இறுதி உருவகம் மிக அழகாக இருக்கிறது: 'நீங்கள் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப் போல துள்ளி ஓடுவீர்கள்!' (மலா 3:20).

என்னதான் பிடித்தாலும் நழுவி ஓட எத்தணிப்பதுதான் கன்றுக்குட்டியின் இயல்பு. அதிலும், கொழுத்த கன்றை நம்மால் பிடித்து அமுக்கவும் முடியாது.

ஆக, நாம் ஆண்டவரின் 'நீங்களாக' இருந்தோம் எனில், நாமும் துள்ளி ஓடுவோம். யாரும், எதுவும் நம்மைத் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ள இயலாது - இறப்பும்கூட!