இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

அதிகாரத்தின் ஊற்றும் பணியும்

இணைச்சட்டம் 18:15-20
1 கொரிந்தியர் 7:32-35
மாற்கு 1:21-28

ஒரு சாதாரண தாள். பத்திரம் எழுதுமிடத்தில் கையெழுத்து வைக்கப்பட்டு, முத்திரை இடப்பட்டவுடன் சொத்து என்று ஆகிவிடுகிறது.

ஒரு சாதாரண தாள். ஆளுநரின் கையொப்பம் இருந்தால் அது பணம் என்றாகிவிடுகிறது.

முன்பின் தெரியாத இருவர். திருமண நிகழ்வு. மணமகன் மணமகளுக்கு மாங்கல்யம் அல்லது மோதிரம் அணிவிக்க, ஒருவர் மற்றவர்மேல் அதிகாரம் கொண்டவர்களாக மாறுகின்றனர். ஒருவர் மற்றவர்மேல் உரிமை கொண்டுகின்றனர்.

எளிய பின்புலத்திலிருந்து வரும் ஒருவர். அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றவுடன் அவர் தன் ஆயருக்குக் கீழ் மறைமாவட்டத்தின் பங்கு அல்லது நிறுவனத்தில் அதிகாரம் பெற்றவராக மாறுகின்றார்.

பேருந்து ஓட்டுநருக்கு பேருந்தின் மேல் அதிகாரம். நடத்துனருக்குப் பயணிகள் மேல் அதிகாரம். மருத்துவமனையில் மருத்துவருக்கு நோயுற்றவர்கள்மேல் அதிகாரம். நாட்டின் தலைவருக்கு அந்நாட்டு மக்கள்மேல் அதிகாரம் என எல்லா நிலைகளிலும் அதிகாரத்தின் இருப்பும் இயக்கமும் இருப்பதை நாம் காண்கிறோம்.

சில அதிகாரங்களைக் கண்டு நாம் அஞ்சுகின்றோம்.

சில அதிகாரங்களை நாம் வெறுக்கிறோம்.

சில அதிகாரங்களை நாம் விரும்பி ஏற்றுக்கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு அதிகாரத்தோடு போதிக்கின்றார், அதிகாரத்தோடு தீய ஆவிகளுக்குக் கட்டளை இடுகின்றார். இவை இரண்டையும் கேட்கின்ற, காண்கின்ற மக்கள் திரள் வியக்கிறது. 

தீய ஆவி தொழுகைக்கூடத்தில் இருக்கிறது. 'நீர் யாரென்று எனக்குத் தெரியும்' என்று இயேசுவை நோக்கிச் சொல்வதோடு, 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கேட்கிறது.

உண்மையில், 'உனக்கு இங்கு என்ன வேலை?' என்று இயேசுதான் தீய ஆவியிடம் கேட்டிருக்க வேண்டும்.

மக்கள் கூடி இறைவேண்டல் செய்யும் இடத்தில் தீய ஆவி எப்படி வந்தது?

மக்கள் வாரந்தோறும் தொழுகைக்கூடத்திற்கு வந்தார்களோ இல்லையா, தீய ஆவி ரெகுலராக வந்தது. தீய ஆவி வந்து செல்லும் அளவுக்குத்தான் தொழுகைக்கூடத்தின் இயக்கம் இருந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. தீய ஆவிக்கு தொழுகைக்கூடம் பிடித்திருந்தது.

தீய ஆவியின் அதிகாரத்திற்குள் இருந்த ஒரு நபரை இயேசு விடுவிக்கின்றார். ஆக, உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பது இந்த நிகழ்வின் வழியாகத் தெளிவாகிறது.

இஸ்ரயேல் மக்கள் அதிகாரத்தை இரண்டு நிலைகளில் பார்த்தனர்: ஒன்று, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் அதிகாரம். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள்மேல் கொண்டுள்ள அதிகாரம், ஓர் அரசன் தன் மக்கள்மேல் கொண்டிருந்த அதிகாரம், மறைநூல் அறிஞர்கள் தங்கள் விளக்கங்களை வழங்கத் தாங்கள் சார்ந்திருந்த பள்ளியின் வழியாகப் பெற்ற அதிகாரம், ஆலயத்தில் குருக்கள் பெற்றிருந்த அதிகாரம் போன்றவை. இது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒருவர் அதிகாரம் செலுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, நான் பெற்றோர் என்பதற்காக எனக்கு அடுத்திருக்கும் வீட்டில் உள்ள குழந்தையின்மேல் அதிகாரம் செலுத்த முடியாது. இரண்டு, இறைவன் அல்லது கடவுள் மக்களுக்கு வழங்கும் அதிகாரம். இது பற்றிய கேள்வியை இயேசு பரிசேயர்களிடம் கேட்கின்றார்: 'திருமுழுக்கு யோவானுக்கு, திருமுழுக்கு கொடுக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? மண்ணிலிருந்தா? விண்ணிலிருந்தா?' இயேசுவின் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலிறுக்க மறுக்கின்றனர். மேலும், இயேசுவின் பணிக்காலம் முழுவதும், அவருடைய எதிரிகள், 'பாவங்களை மன்னிக்க இவர் யார்?' 'நீர் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கின்றீர்?' என அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கின்றனர். தன் பாடுகளுக்கு முன் இயேசு விசாரிக்கப்படும் நிகழ்வில்கூட, 'உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' எனப் பிலாத்து இயேசுவிடம் கேட்க, இயேசு, 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்கிறார் (காண். யோவா 19:10-11).

மேலிருந்து வரும் அதிகாரம் அல்லது இறைவன் தரும் அதிகாரம் என்றால் என்ன?

இதைப் புரிந்துகொள்ள இன்றைய முதல் வாசகம் (காண். இச 18:15-20) உதவுகிறது. இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டுக்குள் நுழையுமுன் அவர்களோடு உரையாற்றும் மோசே, 'உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார்' என்கிறார். இந்த இறைவாக்கினர் யார்? என்ற கேள்வி யூத இலக்கியங்கள் பலவற்றில் எழுகின்றது. அதிகமான இலக்கியங்கள், 'பொதுவான இறைவாக்கினர் பற்றிய பதிவு இது' என்றும், சில, 'இது இறைவாக்கினர் எரேமியாவைக் குறிக்கிறது' என்றும் சொல்கின்றனர். ஆனால், நற்செய்தியாளர்களைப் பொருத்தவரையில், 'இது இயேசுவையே குறிக்கிறது.' ஏனெனில், இந்த இறைவாக்கினர் பெற்றிருக்கும் மூன்று பண்புகளை இயேசு பெற்றிருக்கின்றார்.

அவை எவை?

(அ) ஆண்டவர் தாமே அந்த இறைவாக்கினரை மக்கள் நடுவினின்று ஏற்படுத்துவார்

(ஆ) ஆண்டவர் தம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பார்.

(இ) ஆண்டவர் கட்டளையிடுவது அனைத்தையும் அந்த இறைவாக்கினர் பேசுவார்.

ஆக, இறைவாக்கினர் என்பவர் வரவிருப்பவற்றை முன்குறித்துச் சொல்லும் குறிசொல்பவர் அல்லது சோதிடக்காரர் என்ற நிலை மாறி, அவர்கள் மக்கள் முன் இறைவன் சார்பாகவும், இறைவன் முன் மக்கள் சார்பாகவும் பேசுபவர் என்ற புரிதல் உருவாகிறது. அந்த நிலையில் இயேசுவின் இறையாட்சிப் பணி என்பது ஓர் இறைவாக்கினர் பணியாக இருக்கிறது. ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிக்கின்றார், வல்ல செயல்கள் செய்கின்றார்.

இயேசு இரண்டு நிலைகளில் தனக்கு முந்தைய இறைவாக்கினர்கள் மற்றும் தன் சமகாலத்து மறைநூல் அறிஞர்களைவிட மேன்மையானவராக இருக்கிறார்:

(அ) மற்ற இறைவாக்கினர்கள் எல்லாம் இறைவாக்குரைக்கும்போது, 'ஆண்டவர் கூறுகிறார்' என ஆண்டவரின் அதிகாரத்தின்கீழ் இறைவாக்கு உரைத்தனர். ஆனால், இயேசுவோ, 'நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்து நட!' என்று தன் வார்த்தைகளின் அதிகாரத்தை தனக்குள்ளே கொண்டிருக்கின்றார்.

(ஆ) மற்ற மறைநூல் அறிஞர்கள் மறைநூல் பகுதிகளை விளக்கிச் சொல்லும்போது, தங்களுடைய விளக்கவுரைகளை தங்களுக்கு முன்சென்ற மறைநூல் அறிஞர்கள் மற்றும் தாங்கள் சார்ந்திருந்த பள்ளிகளின் கருத்துகளை ஒட்டி விளக்கம் தந்தனர். எடுத்துக்காட்டாக, ஒரு ரபி இன்னொரு ரபியின் விளக்கத்தை ஒட்டியே தன் விளக்கத்தையும் அளிப்பார். ஆனால் இயேசு, தொழுகைக்கூடத்தில் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை வாசித்தவுடன், அதற்கு விளக்கம் தருவதற்குப் பதிலா, 'நீங்கள் கேட்ட இந்த இறைவாக்கு இன்று நிறைவேறிற்று!' என்கிறார் (காண். லூக் 4). தானே இறைவாக்கு நூல்களின் நிறைவு எனத் தன்னை முன்மொழிகிறார் இயேசு.

இந்த இரண்டும் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நடந்தேறுகிறது.

முதலில், இயேசு அதிகாரம் கொண்டவராகப் போதிக்கின்றார்.

இரண்டு, தீய ஆவி மேல் அதிகாரம் கொண்டு தீய ஆவியைத் தன் சொல்லால், தன் அதிகாரத்தால் விரட்டுகின்றார்.

இந்தப் பின்புலத்தில்தான், எம்மாவு சீடர்கள் எருசலேமிலிருந்து வழிநடந்தபோது, தங்களோடு மறைவாக வழிநடந்த இயேசுவிடம், 'நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகிறோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்' (காண். லூக் 24:19) எனப் பதிவு செய்கின்றார்.

மாற்கு நற்செய்தியில், இயேசு தன் முதற்சீடர்களை அழைத்த பின்னர், பதிவு செய்யப்படும் முதல் நிகழ்வே அவருடைய போதனை மற்றும் வல்ல செயலின் இயல்பை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இவ்வாறாக, மாற்கு, மக்களும் தீய ஆவிகளும் இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதாகப் பதிவு செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 7:32-35), மணத்துறவு பற்றித் தொடர்ந்து பேசுகின்றார் பவுல். திருமண உறவில் கணவன் மனைவி மேலும், மனைவி கணவன் மேலும் கொண்டிருக்கும் அதிகாரத்தில் உரிமை இருப்பதோடு, கவலையும் இருப்பதாகச் சொல்கின்றார் பவுல். ஏனெனில், அங்கே ஒருவர் அடுத்திருப்பவருக்கு உகந்ததைச் செய்யும்போதே அங்கே அதிகாரம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, கணவர் தன் மனைவிமேல் அதிகாரம் கொள்ள வேண்டுமெனில், அவருக்கு உகந்ததைச் செய்ய வேண்டும். பல நேரங்களில் அடுத்தவருக்கு உகந்தது என்று அறிந்துகொள்வதே பெரிய போராட்டமாக அங்கு இருக்கிறது. ஆனால், மணமாகாதவர் ஆண்டவருக்கு உகந்ததை நிறைவேற்றுவதால் அவர் ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கிறார். ஆண்டவரின் பொருட்டு தன் அதிகாரத்தை இழக்க முன் வருகின்றார்.

ஆக,

முதல் வாசகத்தில், மோசே, இறைவாக்கினரின் அதிகாரம் இறைவனில் ஊற்றெடுக்கிறது என முன்மொழிகிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு, இறைவனின் மகனாக, தானே அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் அவருடைய போதனை மற்றும் வல்ல செயலில் வெளிப்படுகிறது.

இரண்டாம் வாசகத்தில், மணவுறவின் அதிகாரத்தையும் தாண்டி, மணத்துறவின் அதிகாரம் ஒருவரைக் கவலையின்றி இருக்கவும், ஆண்டவர்மேல் பற்றுக்கொண்டிருக்கவும் செய்கிறது என்கிறார் பவுல்.

அதிகாரம் இன்று எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறது. அதிகாரம் பல நேரங்களில் வன்முறையால் பிறழ்வுபடுகிறது. அல்லது அதிகாரம் சில நேரங்களில் வலுவற்றவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டு, வலுவற்றவர்களை இன்னும் நொறுக்குகிறது.

நாம் எந்த நிலையில் இருந்தாலும் நமக்கென்று ஓர் அதிகாரம் இருக்கவே செய்கிறது. ஒரு குழந்தையும் கூட தான் வைத்திருக்கும் தன் பொம்மையின்மேல் தன் அதிகாரத்தைக் காட்ட விழைகிறது. 

இன்று நம் அதிகாரத்தின் ஊற்றும் பணியும் எப்படி இருக்க வேண்டும்?

(அ) இறைமைய அதிகாரம்

இறைவன் ஒருவரே நம் அதிகாரத்தின் ஊற்று என எண்ண வேண்டும். இப்படி எண்ணுவதால் நம் அதிகாரத்தின் வரையறையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் எனக்கு அளிக்கும் அதிகாரம் நான் நன்மை - தீமையைத் தெரிவு செய்யப் பயன்படுகிறது. அந்த அடிப்படை அதிகாரத்தையே நான் தவறாகப் பயன்படுத்தினேன் என்றால், மற்ற அதிகாரத்தையும் நான் தவறாகவே பயன்படுத்துவேன். நான் எந்த நிலையில் அதிகாரம் கொண்டிருந்தாலும் என் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்று இருக்க வேண்டும். புனித பவுல் அப்படி நினைத்ததால்தான், மணத்துறவு பற்றிய அறிவுரையை அவரால் வழங்க இயலுகிறது.

(ஆ) அதிகாரம் பணி செய்வதற்கே

இயேசுவின் அதிகாரம் போதிப்பதிலும், வல்ல செயல் செய்வதிலும் வெளிப்படுகிறது. ஆக, சொல்லும் செயலும் ஒருவரின் அதிகாரத்திலிருந்து புறப்படுகின்றன. அப்படிப் புறப்படும் சொல்லும் செயலும் மற்றவருக்கு நன்மை செய்ய வேண்டுமே அன்றி, ஒருபோதும் தீமை செய்தல் கூடாது. இன்று, அதிகாரப் பிறழ்வுகள் சொல் மற்றும் செயல் என்னும் இரண்டு நிலைகளில்தாம் நடந்தேறுகின்றன. அடுத்தவர் வாழ்வு பெறுகிறார் என்பதோடு, அங்கே நாமும் வாழ்வு பெற வேண்டும். என் அதிகாரத்தால் தீமை அகல வேண்டும்.

(இ) ஆண்டவருக்கு உகந்தது

ஆண்டவருக்கு உகந்ததை நாடுபவர்கள் கவலையின்றி இருப்பார்கள் எனச் சொல்கிறார் பவுல். ஒருவர் தன் அதிகாரத்தின் ஊற்று இறைவன் என்பதை உணர்ந்தால், அவர் மற்றவருக்குத் தன் சொல்லாலும் செயலாலும் நன்மைகள் செய்தால் அவர் ஆண்டவருக்கு உகந்ததையே செய்கின்றார். ஆக, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், எனக்கு உகந்ததை நாடாது, ஆண்டவருக்கு உகந்ததை நாட நான் முயற்சி செய்ய வேண்டும். பல நேரங்களில் எனக்கு உகந்தது எது என்பதை அறிந்துகொள்ளவே எனக்குக் குழப்பமாக இருக்க, ஆண்டவருக்கு உகந்ததை நான் எப்படிக் கண்டறிவது என்ற கேள்வி எழலாம்? ரொம்ப எளிதான விடயம். எனக்கு உகந்ததை நான் செய்யும்போது அங்கே கவலை பிறக்கிறது. ஆண்டவருக்கு உரியதை நான் செய்யும் போது கவலைகள் அகல்கின்றன. இதுவே அளவுகோல்.