இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

நற்செய்தி - பறைசாற்றுதலும் பதிலிறுத்தலும்

யோனா 3:1-5,10
1 கொரிந்தியர் 7:29-31
மாற்கு 1:14-20

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் வாட்ஸ்ஆப் செயலி புதியதொரு தனியுரிமைக் கொள்கையை அறிவித்தது. அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் செயலி பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவார்கள் என்றும், மேலும் வாட்ஸ்ஆப்பில் பெறப்படும் தரவுகள் ஃபேஸ்புக் தளத்தோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு இரு தரப்பு பதிலிறுப்புகள் தரப்பட்டன. முதல் தரப்பினர், தங்கள் தரவுகளைத் தற்காத்துக் கொள்வதற்காக வாட்ஸ்ஆப் செயலியை விடுத்து, 'சிக்னல்,' மற்றும் 'டெலிகிராம்' போன்ற செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இன்னொரு தரப்பினர், தங்கள் தரவுகளை வைத்து மார்க் என்ன செய்யப் போகிறார்? நம் பயன்பாட்டுக்கு இதுவே எளிதாக இருக்கிறது என்று வாட்ஸ்ஆப் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் பலர் தங்கள் செயலிகளைத் துறப்பதைக் கண்ட வாட்ஸ்ஆப் வேகமாக ஓர் அறிவிப்பையும் வெளியிட்டு, பயனர்களின் தனியுரிமைக்கு தங்கள் நிறுவனம் எந்தவொரு இடையூறும் விளைவிக்காது என்று அறிவித்தது.

வாட்ஸ்ஆப், சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தி நாம் இன்று வேகமாக நம் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றோம். ஒவ்வொரு செய்தியையும் நாம் பறைசாற்றுகிறோம், ஒவ்வொரு செய்திக்கும் பதிலிறுப்பு செய்கிறோம். நாம் பறைசாற்றுதலும், பதிலிறுப்பு செய்தலும் நமக்கும் அந்த நபர் சார்ந்தவருக்குமே என்பதை உறுதி செய்யக் கருத்தாய் இருக்கிறோம். ஆனால், இன்றைய தரவுகள் (டேட்டா) மைய உலகில் நாம் எதையும் நமக்கென வைத்துக்கொள்ள இயலாது. இன்று நாம் விரும்புகிறோமா அல்லது விரும்பவில்லையோ, நான் என்னை அறியாமல் என் தரவுகளை மற்றவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

சாலையில் நான் நடந்து சென்றால் என் உருவம் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் தரவுகளாகப் பதிகிறது. நான் மதுரைக்கு வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பீட்ஸா ஆர்டர் செய்வதைக் கண்காணிக்கின்ற ஸ்விக்கி நிறுவனம், தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று, 'நீங்கள் இன்று மதுரை செல்வீர்களா? கார் வேண்டுமா? ஓட்டுநர் வேண்டுமா?' என்ற ஒரு கேள்வியோடு எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அறிவிக்கிறது. ஆக, நான் நான்கு வாரம் தொடர்ந்து மதுரைக்கு வருகிறேன் என்பதை அது பதிவு செய்து, அதில் உள்ள செயற்கை நுண்ணறிவு எனக்குத் தேவையானதைப் பரிந்துரை செய்ய முன்வருகிறது. யூட்யூப், வலைதளம், தேடுபொறி என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு கால் பரப்பிப் படுத்துக்கிடக்கிறது.

ஒரு பக்கம், நான் செய்திகளைப் பரிமாறுகிறேன். இன்னொரு பக்கம் நானே செய்தியாகப் பின்பற்றப்படுகிறேன். மேலும், செய்திகள் என்னைச் சுற்றிப் பரவிக் கிடக்கின்றன. 

செய்திகளைப் பறைசாற்றுதலும் செய்திகளுக்குப் பதிலிறுப்பு செய்தலும் இன்றியமையாத ஒன்றாக இன்று ஆகிவிட்டன.

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் நற்செய்தி பறைசாற்றவும் பதிலிறுக்கவும்படுவதை நாம் வாசிக்கின்றோம்.

'யோவான் கைது செய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவுக்கு வந்தார்' என்று இயேசுவின் பணித் தொடக்கத்தை அறிமுகம் செய்கின்றார் மாற்கு. மாற்கு நற்செய்தியாளர் தனது நற்செய்தி நூலின் தொடக்கத்தில், 'கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி' (1:1) என்று சொல்கின்றார். ஆனால், இங்கே, 'கடவுளின் நற்செய்தி' என்னும் சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றார். அது என்ன கடவுளின் நற்செய்தி? (அ) இயேசுவே கடவுளின் நற்செய்தி, (ஆ) இயேசு மொழிவதே கடவுளின் நற்செய்தி, மற்றும் (இ) இயேசு வழியாக கடவுள் செயலாற்றும் மீட்புத் திட்டமே கடவுளின் நற்செய்தி என்று மூன்று நிலைகளில் நாம் இந்தச் சொல்லாட்சியைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆக, இயேசுவின் நற்செய்தியின் மையமாகக் கடவுள் இருக்கின்றார். 

முதலில் நற்செய்தியைப் பொதுவாக எல்லா மக்களுக்கும் பறைசாற்றுகின்றார் இயேசு. அங்கே யாரும் பதிலிறுப்பு செய்வதாக மாற்கு குறிப்பிடவில்லை.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'என் பின்னே வாருங்கள்! நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்!' என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், அவருடைய முதற்சீடர்கள் - சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான் - அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களின் பதிலிறுப்பு இரு நிலைகளில் நடக்கிறது: ஒன்று, தங்கள் வலைகளை விட்டுவிடுகின்றனர். இரண்டு, தங்கள் தந்தை யை வேலையாள்களோடு விட்டுவிடுகின்றனர். 

இயேசுவின் செய்தி அவர்கள் வாழ்வில் உடனடியான பதிலிறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வு மூன்று நிலைகளில் நடக்கிறது: முதலில், அவர்கள் இயேசுவின் செய்தியை தாங்கள் இருக்கும் இடத்தில், தங்கள் அன்றாடப் பணியின் நடுவில் கேட்கின்றனர். இரண்டு, அவர்கள் இயேசுவின் செய்தியை முழுமையாக நம்புகிறார்கள். மூன்று, அவர்கள் தங்கள் பாதுகாப்பு வளையங்களான வலை மற்றும் உறவினர், பணியாளர்களை விட்டுவிடத் துணிகிறார்கள். 

முதல் வாசகத்தில், யோனா நினிவே நகரில் நற்செய்தி அறிவித்த நிகழ்வை வாசிக்கின்றோம். நினிவே நகரம் அசீரிய நாட்டின் தலைநகரம். அசீரியர்கள் கிமு 722இல் படையெடுத்து வடக்கு இஸ்ரயேலை அடிமைப்படுத்துகின்றனர். அது முதல், அசீரியர்கள்மேல் தீராத பகையும் கோபமும் இஸ்ரயேல் மக்களுக்கு உண்டாகிறது. இந்நிலையில் அசீரியாவை அழிக்க நினைக்கின்ற கடவுள் யோனாவை அனுப்பி அங்கே மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார். தன் சமகாலத்து இஸ்ரயேல் மக்களைப் போல யோனாவும், நினிவே எப்படியும் அழிய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆண்டவருடைய திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்து, ஆண்டவரின் திருமுன்னிலையிலிருந்து தப்பி ஓடுகின்றார். ஆனால், கப்பலிலிலிருந்து தூக்கியெறியப்பட்ட அவரை வியத்தகு முறையில் மீன் ஒன்றின் வழியாகக் காப்பாற்றுகின்றார் கடவுள். இரண்டாம் முறையாக ஆண்டவராகிய கடவுளின் வாக்கு அருளப்பட்டவுடன், ஆண்டவரின் கட்டளைப்படி நினிவேக்குச் செல்கின்றார் யோனா. யோனா என்றால் புறா என்பது பொருள். மூன்று நாள்கள் கடக்க வேண்டிய தூரத்தை ஒரே நாளில் கடந்து ஓட்டமும் நடையுமாக நற்செய்தியை அறிவிக்கின்றார். ஆனால், என்ன விந்தை! நினிவே மக்கள் உடனடியாகக் கடவுளின் செய்தியை நம்பி நோன்பிருக்கின்றனர். 

பெரியவர்கள் முதல், வலது கை எது இடது கை எது என அறியாத குழந்தைகள் வரை அனைவரும் நோன்பிருக்கின்றனர். ஆண்டவரும் தன் மனத்தை மாற்றிக்கொள்கின்றார்.

இங்கே, ஆண்டவராகிய கடவுளின் செய்தி முதலில் யோனாவுக்குப் பறைசாற்றப்படுகின்றது. முதலில் அதற்குப் பதிலிறுக்க மறுக்கும் அவர் இரண்டாம் முறை பதிலிறுக்கின்றார். ஆனால், நினிவே நகர மக்கள், யோனா வழியாகக் கடவுள் அறிவித்த செய்திக்கு உடனே பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பரத்தைமை என்ற செயல் பரவிக்கிடந்த கொரிந்து நகரத் திருஅவையினரிடம் மணத்துறவு பற்றி உரையாடுகின்ற பவுல், இந்த உலகின் நிலையாத்தன்மையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, தாங்கள் பெற்ற நம்பிக்கைக்கு ஏற்ற பதிலிறுப்பைத் தங்கள் வாழ்வில் காட்ட அழைப்பு விடுக்கின்றார்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், யோனா கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார். நினிவே மக்கள் தங்கள் மனமாற்றத்தின் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், பவுல், கடவுளின் நம்பிக்கையினால் உந்தப்படும் அறநெறி வாழ்க்கைமுறையைச் சுட்டிக்காட்டி, அதற்கேற்ற பதிலிறுப்பைக் காட்ட கொரிந்து நகர மக்களை அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு கடவுளின் செய்தியைப் பறைசாற்றுகின்றார். முதற்சீடர்கள் நால்வர் அவரைப் பின்பற்றுவதன் வழியாக அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

நற்செய்தியைப் பறைசாற்றுதலும், நற்செய்திக்குப் பதிலிறுத்தலும் நம் வாழ்வில் எப்படி நடைபெற வேண்டும்?

(அ) நற்செய்தியைப் பறைசாற்றுதல்

இன்று நாம் பல தளங்களில் நற்செய்தியைப் பறைசாற்றுகிறோம். பல்வேறு ஊடகங்கள் மற்றும் செயலிகள் நற்செய்திப் பறைசாற்றுதலை எளிமையாக்கி உள்ளன. ஆனால், பல நேரங்களில் மேற்காணும் பறைசாற்றுதல்கள் கடவுள் அல்ல, மாறாக, நாமே முதன்மைப்படுத்தப்படுகிறோம் என்ற உணர்வு வருகிறது. நான் கொடுத்த செய்தியை எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் விரும்பினார்கள், எத்தனை பேர் பகிர்ந்துகொண்டார்கள், எத்தனை பேர் பாராட்டினார்கள் என்று நம் உள்ளத்தில் எழும் தேடல் சொல்வது என்ன? பறைசாற்றப்படுவது கடவுள் அல்ல! பறைசாற்றுபவர்தான்! யோனா முதலில் கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்ற மறுக்கக் காரணம் அவருடைய முற்சார்பு எண்ணமும், தன்மையப்படுத்தலும்தான். தன்னையும், தன் சார்ந்த இனத்தின் விருப்பு வெறுப்புகளையும் உள்வாங்கிய யோனா, அதன் பின்புலத்தில் கடவுளை அறிவிக்க மறுக்கின்றார். 

இன்று நற்செய்தியைப் பறைசாற்ற மூன்று தடைகள் இருக்கின்றன என்று நாம் சொல்ல முடியும்:

ஒன்று, தயக்கம். அதாவது, 'நான் எப்படி இதைச் செய்வது?' என்ற தயக்கம். இத்தயக்கத்தோடு வருவது, 'என்னால் இயலாது' என்ற எதிர்மறை உணர்வு.

இரண்டு, முற்சார்பு எண்ணம். 'நற்செய்தி சொல்லி என்ன ஆகப் போகிறது? இந்த உலகம் அப்படியே தான் இருக்கும். யாரும் மாறப்போவது இல்லை. எதற்கு நேரத்தை மற்றும் ஆற்றலை விரயம் செய்ய வேண்டும்?' என்ற கேள்விகளோடு நாம் பல நேரங்களில் நம் முற்சார்பு எண்ணங்களில் உறைந்துவிடுகின்றோம்.

மூன்று, தன்மையப் போக்கு. யோனாவைப் போல கடவுளின் நற்செய்தியையும் நம் செய்தியையும் ஒன்று எனப் பல நேரங்களில் குழப்பிக் கொள்கின்றோம்.

(ஆ) நற்செய்திக்குப் பதிலிறுத்தல் - எப்படி?

ஒன்று, தயார்நிலை. நினிவே மக்கள் உடனடியாகத் தவ உடை அணிந்து நோன்பிருக்கின்றனர். முதற்சீடர்கள் உடனயாக தங்கள் வலைகளையும் படகுகளையும் தந்தையையும் பணியாளர்களையும் விட்டுவிட்டு வருகின்றனர். 'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும்!' என்பது ஜென் மொழி. தயாராக இருப்பவர்கள் மட்டுமே பதிலிறுப்பு செய்ய முடியும்.

இரண்டு, வாழ்வின் நிலையாமை. இரண்டாம் வாசகத்தில் இந்த உலக வாழ்வின் நிலையாமை பற்றி எடுத்துச் சொல்கின்றார் பவுல். எதுவும் நிலையற்றதாக இருக்கும் இந்த உலகில், இந்த நொடியில் உடனடியாகக் கடவுளைப் பற்றிக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். நாளை என்பது உறுதியாக இல்லாத நிலையில் இன்றே பதிலிறுத்தல் நலம்.

மூன்று, பாதை மாற்றம். ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்து இன்னொரு விளைவை எதிர்பார்த்தல் நியாயமற்றது. மீன்களைப் பிடித்துக் கொண்டே மனிதர்களைப் பிடிக்க இயலாது. பரத்தைமையில் இருந்துகொண்டே அறநெறியோடு வாழ இயலாது. பாவ நிலையில் இருந்துகொண்டே கடவுளுக்கு அருகில் வர முடியாது. பின்னையதை அடைய முன்னையதை விட வேண்டும்.

இறுதியாக,

இன்று மனிதச் செய்திகளைப் பறைசாற்றவும், அவற்றுக்குப் பதிலிறுப்பு செய்யவும், அவற்றில் நம் தனியுரிமை காக்கப்படவும் முயற்சிகள் எடுக்கும் நாம்,

கடவுளின் நற்செய்தி நம் வாழ்வில் பறைசாற்றப்படவும், அச்செய்தி நம்மை நோக்கி வரும்போது அதற்கேற்ற பதிலிறுப்பு செய்யவும் முயற்சி எடுத்தல் நலம்.

எனவே, 'உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்' (காண். திபா 25) என்று அவரிடம் வேண்டும். அவரின் பாதைகளை அறிதல் நற்செய்தி. அந்தப் பாதையில் வழிநடத்தல் நம் பதிலிறுப்பே.