இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

இரு விதைகளும் வினைகளும்

சாலமோனின் ஞானம் 12:13,16-19
உரோமையர் 8:26-27
மத்தேயு 13:24-43

நாம் கடந்த ஞாயிறன்று வாசித்த 'ஆறுவகை நிலங்களின்' தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. இதன் பின்புலம் இதுதான்: மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்: நேர்மையாளர்கள், பொல்லாதவர்கள். பொல்லாதவர்களைத் தங்கள் குழுமத்திலிருந்து வெளியேற்றுவதா? அல்லது அவர்களை அப்படியே வைத்துக்கொள்வதா? வெளியேற்றுவது என்றால் எப்போது வெளியேற்றுவது? வைத்துக்கொள்வது என்றால் எதுவரை வைத்துக்கொள்வது? அவர்களை என்ன செய்வது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக அமைகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

வயலில் தோன்றிய களைகள் உவமை.

வழக்கமாக, மத்தேயு நற்செய்தியாளரின் உவமைப் பொழிவில் சொல்லப்பட்டுள்ள உவமைகள் இறையாட்சி பற்றிய உவமைகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், இந்த உவமை இரண்டு காரணங்களுக்காகச் சொல்லப்படுகிறது: ஒன்று, இறையாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்ப என்பதை அறிய. இரண்டு, இறுதி நாள் நிகழ்வுகளைப் பற்றியது அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடப்பது பற்றியது.

இன்றைய உவமையில், எல்லாம் இரட்டைப் படையில் இருக்கின்றன:

1. விதைகள் இருவகை: கோதுமை, களை

2. விதைப்பவர்கள் இருவகை: நிலக்கிழார், பகைவன்

3. எதிர்வினைகள் இருவகை: அனைத்தையும் வளர விடுவது, களைகளைப் பறிப்பது

4. விளைவுகள் இருவகை: கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது, களைகள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன

5. உணர்வுகள் இருவகை: நிலக்கிழாரின் பொறுமை, வேலையாள்களின் அவசரம்

6. மனிதர்கள் இருவகை: நேர்மையாளர், நெறிகெட்டோர்

7. வாழ்வியல்நிலை இருவகை: கடவுளின் பொறுமை, மனித அவசரம்

'கடவுளின் பொறுமை, மனித அவசரம்' என்னும் இறுதி இணையை மையமாக வைத்து, இன்றைய நாள் வாசகங்களைப் புரிந்துகொள்வோம்.

'பொறுமை'

முதலில், ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில், காந்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் மோகனிடம், 'எனக்கு வைர நெக்லஸ் எப்போது வாங்கித் தருவீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு மோகன், 'கொஞ்சம் பொறுமையாக இரு! மார்க்கெட் நிலவரம் சரியில்லை! கையில் உள்ள காசும் வேகமாகக் காலியாகிறது! அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை!' என்று பதில் சொல்வார். உடனே காந்தா, 'மோகன்! பொறுமையா? வறுமையில் இருப்பவர்கள் அல்லவா பொறுமையைப் பற்றிப் பேச வேண்டும்!' எனச் சொல்லித் துள்ளி எழுவார்.

இங்கே சொல்லப்படும் பொறுமையின் பொருள் காத்திருத்தல்.

இரண்டாவதாக, உளவியலில் பொறுமை என்பது, 'தூண்டுதலுக்கும்' (stimulus) 'எதிர்வினைக்கும்' (response) இடைப்பட்ட தொலைவு. எடுத்துக்காட்டாக, நான் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் இன்னொருவரிடம் பேசிக்கொண்டே இருக்கின்றார். அவர் செய்யும் தொந்தரவு எனக்கு ஒரு 'தூண்டுதல்.' 'தம்பிகளா! எழுந்து வெளியே போங்க!' என்று அவர்களைப் பார்த்துச் சொல்வது என் 'எதிர்வினை.' ஆனால், நான் எந்த எதிர்வினையை உடனே ஆற்றாமல், இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் தள்ளிப் போடுகிறேன். எவ்வளவு தூரம் என்னால் தள்ளிப் போட முடிகிறதோ அவ்வளவு நேரம் நான் பொறுமையாக இருக்கிறேன். மேலும், என்னுடைய பொறுமையின் அளவு கூடக் கூட என்னுடைய உணர்வு முதிர்ச்சி கூடுகிறது.

இங்கே சொல்லப்படும் பொறுமையில் காத்திருத்தல் இருக்கிறது. அத்தோடு, இந்தப் பொறுமையில் என்னுள்ளும் மாற்றம் நிகழ்கிறது. என் மாணவர்களிலும் மாற்றம் நிகழ்கிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு வகுப்பைக் கவனிக்கத் தொடங்குகின்றனர்.

மூன்றாவதாக, காலம் அனைத்துக் காயங்களையும் ஆற்றும் என்பது பழமொழி. இந்தப் பழமொழியிலும் பொறுமையே பின்புலத்தில் இருக்கிறது. வெறும் காலம் மற்றும் காயங்களை ஆற்றுவதில்லை. மாறாக, காயம் பட்டவர் தன்னுடைய பொறுமையால் தன் காயத்தை எதிர்கொள்கின்றார். நாள்கள் ஆக, ஆக, அனுபவங்களும் நிகழ்வுகளும் மாற, மாற காயம் காலத்தில் கரைந்துவிடுகிறது. இங்கே காயம் பட்டவர் ஒரு பக்கம் ஓய்ந்திருந்தாலும், அவருடைய உள்ளத்தில் அவர் தன்னையே குணமாக்கிக் கொள்கிறார்.

வயலில் களைகளைக் கண்ட பணியாளர்களுக்குக் கோபம் வருகிறது.

தங்கள் தலைவரிடம் 'வெரிகுட்' வாங்குவதற்காக, அவரிடம் ஓடி, 'வயலில் களைகள் காணப்படுவது எப்படி? நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா?' எனக் கேட்கின்றனர். இதைக்கேட்ட தலைவர் தனக்குள்ளே சிரித்திருப்பார். 'ஏன்டா! சோம்பேறிகளா! நான் சொல்ற வேலையவே பாதி பாதிதான் செய்வீர்கள்! இப்ப என்ன ஓவர் பில்ட் அப்!' எனத் தன் மனத்திற்குள் கேட்டிருப்பார். பணியாளர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டுபிடித்த அவர், 'வேண்டாம்! இவ்வளவு ஆர்வத்திலும் அவசரத்திலும் நீங்கள் கோதுமையையும் பறித்துவிடுவீர்கள்!'

இத்தலைவர் வெறும் விவசாயி மட்டுமல்ல. மாறாக, மேலாண்மையியலில் சிறந்தவரும் கூட.

அதாவது, வயலின் ஒரு பாத்தியில் 50 கோதுமைச் செடிகள், 50 களைகள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். முளைத்து வருகின்ற பருவத்தில் கோதுமைச் செடிகளும், களைகளும் ஒன்றுபோலத் தெரியும். 40 களைகளோடு சேர்த்து 10 கோதுமைச் செடிகளையும் பறித்துவிட்டால் தலைவருக்கு 10 செடிகள் நஷ்டம். ஆனால், வேலைக்காரர்கள், ரொம்ப எளிதாக, 'ஸாரி!' சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். இவர்களுக்கு அது வெறும் 'ஸாரி!' தான். தலைவருக்கோ அது அவருடைய சொத்து. வேகமாக மனக்கணக்கு போடுகிற அவர், தன்னுடைய எந்தக் கோதுமையையும் இழக்கத் தயாராக இல்லை.

இந்த இடத்தில் நாம் மற்றொரு மேலாண்மையியல் பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, தலைவனைவிட ஊழியக்காரன் பரபரப்பாக இருக்கக் கூடாது. தலைவனே தூங்கப் போய்விட்டான். ஊழியக்காரன் ஏன் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும்? இவன் புலம்புவதால் களை வளராமல் போய்விடுமா? அல்லது இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைத்தால் தலைவன் அள்ளிக் கொடுப்பானா? இல்லை! அப்புறம் ஏன் இந்த ஆரவாரம்! தலைவனுக்கு எல்லாம் தெரியும். அமைதியாகத் தூங்கச் செல்வதே பணியாளனுக்கு அழகு.

தலைவன் இங்கே பொறுமை காப்பதால் சில பிரச்சினைகளும் எழுகின்றன:

அ. களைகள், கோதுமைக்குத் தேவையான நிலத்தின் ஊட்டத்தை எடுத்துக்கொள்கின்றன.

ஆ. களைகள், கோதுமைக்குப் பாய்ச்சப்படும் நீரைப் பறித்துக்கொள்கின்றன.

இ. களைகள், பல பூச்சிகள் மற்றும் புழுக்களைத் தங்கள்பால் ஈர்ப்பதால், அவற்றாலும் கோதுமைப் பயிருக்கு தீங்கு நேர்கின்றது.

ஈ. களைகள் மண்டிக் கிடக்கும்போது அது வயலின் அழகைக் கெடுக்கிறது.

ஆனாலும், தலைவர் அமைதி காக்கிறார்?

ஏன்?

ஒரு கோதுமைப் பயிர்கூட அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, மேற்காணும் அனைத்துப் பிரச்சினைகளையும் தாங்கிக்கொள்கின்றார்.

இதுதான் கடவுளின் பொறுமை.

ஆக, கடவுள் காத்திருக்கின்றார்.

ஆனால், என்னுடைய பொறுமையான நேரத்தில் என் மாணவர்களின் இயல்பு மாறுவதுபோல, களைகளின் இயல்பு மாறுவதில்லை. களை எப்போதும் களைதான். பாதி தூரம் களையாக வந்தபின் அது கோதுமையாக மாற முடியாது. களையின் இயல்பு தன்னுடைய காத்திருத்தலால் மாறாது என்று தெரிந்தாலும் கடவுள் காத்திருக்கின்றார்.

கடவுளின் பொறுமை எதிரியின் செயலை இறுதியில் அழிக்கின்றது. களைகளின் இருப்பு கோதுமைப் பயிர்களுக்கு நெருடலாக இருந்தாலும், இறுதியில் களைகள் பறித்து எரிக்கப்படும்வரை அவை காத்திருக்க வேண்டும். களைகளின் இருப்பைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்வாதரமான தண்ணீரும், உரமும், ஊட்டமும் அநீதியாகப் பகிரப்படுவதை அல்லது பறித்துக்கொள்ளப்படுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

கடவுளின் பொறுமை பல நேரங்களில் நம் அவசரத்தோடு பொருந்துவதில்லை.

நம்பிக்கையின் பிதாமகன் என அழைக்கப்படுகின்ற ஆபிரகாமே, தனக்குக் கடவுள் தந்த வாக்குறுதி நிறைவேறும் என்ற பொறுமை இல்லாமல், தனக்கான வாரிசாக, தன்னுடைய அடிமையின் மகன் எலியேசரை, உரிமைப் பிள்ளையாக தத்தெடுக்க முனைகின்றார்.

மீட்பின் நாயகன் என அழைக்கப்படுகின்ற மோசே, 'பாறைக்குக் கட்டளையிடு!' என்று கடவுள் சொன்னதை மறந்து, 'பாறையை இருமுறை அடித்து!' தன்னுடைய அவசரத்தால், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றார்.

இஸ்ரயேலின் முதல் அரசராகிய சவுல், ஆண்டவருக்குப் பலி செலுத்தி, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என அவசரப்பட்டு, அமலேக்கியரின் கால்நடைகளை அழிக்காமல், அவற்றை ஆண்டவருக்கென ஒதுக்கி வைத்ததால் அரச நிலையை இழக்கின்றார்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகிய தாவீது, 'ஆண்டவரிடம் கேட்டால் அவர் எனக்கு மனைவியரைத் தருவார்' என்று அறிந்திருந்தாலும், அவசரப்பட்டு பெத்சேபாவைத் தழுவிக்கொள்கின்றார். அவளுடைய கணவனைக் கொல்கின்றார். விளைவு, வாள் அவருடைய தலைக்குமேல் இறுதிவரை தொங்கிக்கொண்டே இருந்தது.

மனித அவசரங்கள் பல நேரங்களில் கோதுமைப் பயிர்களை அழிப்பதோடு, நிலத்தையும் பாழ்படுத்திவிடுகின்றன.

இந்தக் கொரோனா காலத்தில், கோதுமைப் பயிர்களாகிய நாம், களை என்னும் அந்த தீநுண்மியோடு வாழப் பழகிக்கொண்டோம். அவை நம்மை நெருக்கிக் கொண்டே இருந்தாலும், நம் அன்பு உறவுகளை நம்மைவிட்டுத் தூரமாக்கினாலும், நம்மைவிட்டு எடுத்துக்கொண்டாலும், 'எல்லாம் சரியாகிவிடும்!' என்று பொறுமையுடன் காத்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.

ஆனால், இந்தப் பொறுமை நம் இயலாமையால் வந்த பொறுமை.

இது மட்டும் நமக்குப் போதாது! ஏனெனில், இயலாமையில் வருவது பொறுமை அல்ல, மாறாக, கையறுநிலை.

கடவுளின் பொறுமையை நாம் எப்படி பெறுவது?

1. நம்பிக்கை பார்வை கொண்டிருப்பதால்.

2. தீமையின் இருப்பை ஏற்றுக்கொள்வதால்.

3. தீமை என்னுடைய நன்மையை எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்ற பரந்த மனம் கொள்வதால்.

4. வாழ்வின்மேல் உரிமை கொண்டாடுவதால்.

5. நன்மைத்தனத்தில் வளர்வதால்.

6. 'இதுவும் கடந்து போகும்!' என எண்ணுவதால்.

இறுதியாக, நாம் களைகளின் நடுவில் சிக்கிக்கொண்ட கோதுமைப் பயிர்களாக, ஆண்டவரை நோக்கி பெருமூச்சு எழுப்பினாலும் (காண். இரண்டாம் வாசகம்), அவர், பல நேரங்களில், 'பொறு!' என்கிறார். ஏனெனில், அவர் 'பொறுமையும், பேரன்பும் கொண்டவர்' (காண். முதல் வாசகம், பதிலுரைப் பாடல், திபா 86).