இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு

நம்பிக்கைகொள்!

திருத்தூதர் பணிகள் 2:42-47
1 பேதுரு 1:3-9
யோவான் 20:19-31

நேற்றைய தினம் எங்கள் அருள்பணியாளர்களில் ஒருவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓர் இறையியலாளர் பற்றிப் பகிர்ந்துகொண்டிருந்தார். இங்கிலாந்து நாட்டில் இறையியல் பேராசிரியராக பணிபுரிந்த ஓர் அருள்பணியாளரின் பெயர் சார்லஸ் டேவிஸ். அவருடைய அறிவாற்றலைக் கண்டு மாணவர்கள் வியந்தனர். உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் பொறாமை கொண்டனர். தான் கற்றதைச் சொல்வதோடல்லாமல், அவர் அன்றாடம் தேடித் தேடி பல புது விடயங்களைக் கற்றுக்கொண்டும், அவற்றை மாணவர்களோடும் பகிர்ந்துகொண்டும் இருந்தார். ஒரு நாள், அவர் இறையியல் கல்லூரியிலிருந்து பணித்துறப்பு செய்ததாகவும், மேலும், அருள்பணியாளர் நிலையிலிருந்து விலகியதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிர்ச்சி. 'இவர் எப்படி இப்படிச் செய்யலாம்?' சார்லஸ் டேவிஸின் நண்பர்கள் பேராசிரியர் சிலர், அவரைச் சந்திக்க அவருடைய இல்லம் சென்றனர். 'ஏன் சார்லஸ் நீங்க இந்த இரண்டு பெரும் முடிவுகளை எடுத்தீர்கள்?' என்று கேட்க, சார்லஸ் இப்படி விடையளித்தார்: 'இறையியல் கற்றுக்கொடுக்க அடிப்படையான தேவை இறைநம்பிக்கை. இந்த நம்பிக்கை என பல ஆண்டுகளாக இல்லை. நான் கற்றுக்கொடுத்தது எல்லாமே என் அறிவிலிருந்து வந்தவை. நான் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருக்க முடியவில்லை. ஆகவேதான், இம்முடிவை எடுத்தேன்.' உடன் சென்ற பேராசிரியர்களில் ஒருவர், 'இறைநம்பிக்கை கொள்வது எளிதுதானே!' என்றார். அதற்கு சார்லஸ், 'இல்லை! இறையனுபவம் இல்லாமல் இறைநம்பிக்கை சாத்தியமல்ல.’

நிற்க.

இறையனுபவத்திலிருந்து இறைநம்பிக்கை, இறைநம்பிக்கையிலிருந்து இறையியல் என்பது சார்லஸ் டேவிஸின் எண்ணமாக இருக்கிறது.

உயிர்ப்புக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றை நாம் இறை இரக்கத்தின் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். இறைஇரக்கத்தின் படங்கள் அல்லது திருவுருவங்களை நாம் பார்த்தால், அதன் அடியில், 'இயேசுவே, என் நம்பிக்கையை உம் மேல் வைக்கிறேன்' என்று எழுதியுள்ளதைப் பார்த்திருப்போம். ஏன் இந்தப் படத்தில் மட்டும் இப்படி எழுதியிருக்கிறது? - என்று பல நாள்கள் நான் கேட்டுள்ளேன். இன்று எனக்கு விடை கிடைப்பதுபோல தெரிகிறது. 'நம்பிக்கை கொள்ளும் ஒருவரே இறைவனின் இரக்கத்தை உணர முடியும். தொடர்ந்து, இறை இரக்கத்தை உணர்ந்த அவருடைய நம்பிக்கை வலுப்பெறும்.'

ஆக, இறையனுபவம், இறைநம்பிக்கை, இறைஇரக்கம் என்னும் மூன்று கோணங்களைக் கொண்ட முக்கோணத்திற்குள் நாம் இருக்கிறோம் என நமக்கு உணர்த்துகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 20:19-31) மூன்று பிரிவுகளாக உள்ளது. முதலில், வாரத்தின் முதல் நாள் மாலையில் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றுகின்றார். அவர்களோடு தோமா இல்லை. இரண்டாவது, எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றுகிறார். அவர்களோடு தோமா இருக்கிறார். மூன்றாவது, நற்செய்தி நூலின் நோக்கம் வரையறுக்கப்படுகிறது.

தோமாவின் அடைமொழி 'திதிம்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. திதிம் என்றால் 'இரட்டை' அல்லது இரட்டைத்தன்மை.

'ஐயம்' மற்றும் 'நம்பிக்கை' என்னும் இரட்டைத்தன்மை,

'அவர்களோடு' மற்றும் 'அவரோடு' என்னும் இரட்டைத்தன்மை,

'நான் நம்பமாட்டேன்' மற்றும் 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்' என்னும் இரட்டைத்தன்மை.

தோமாவில் எப்படி இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை அறிக்கை செய்ய முடிந்தது?

தோமா இயேசுவின் கைகளில் விரலை விட்டதாகவும், விலாவில் கையை விட்டதாகவும் நற்செய்தி வாசகத்தில் இல்லை. அவருடைய விருப்பமாக அது இருந்ததாகவே பதிவு செய்யப்படுகின்றது.

'நான் என் உடன் சீடர்களிடம் சொன்ன வார்த்தைகளை - அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் - இவர் எப்படிச் சொன்னார்?' - என்ற கேள்வியில்தான் தோமா உடனடியாக சரணடைகின்றார் என எடுத்துக்கொள்ளலாம். அதாவது, தோமா தன்னுடைய மனத்தில் எண்ணியதையும், தனக்கு நெருக்கமான சீடர்களிடம் சொன்ன இந்த மறைவான செய்தியையும் இயேசு எல்லார் முன்னாலும் சொல்கின்றார்.

'ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகுமுன்பே அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்' (காண். திபா 139:4) என்னும் திருப்பாடல் வரிகளை அடிக்கடி செபித்த தோமாவுக்கு, ஒருவரின் எண்ணங்களையும் வார்த்தைகளையும் அறிபவர் கடவுளே என்ற நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். இல்லையா?

இதுதான் இவருடைய இறையனுபவம் என நினைக்கிறேன்.

ஆக, கடவுளைப் பற்றி நான் நினைக்கின்ற ஒன்று, அப்படியே எனக்கு நடந்தால் அது இறையனுபவாக இருக்கிறது என, இறையனுபவத்தை நாம் வரையறுக்கலாம்.

ஆனால், மோசே, எரேமியா, எசாயா, பவுல் ஆகியோர் பெற்ற இறையனுபவங்கள் எந்தவொரு முன்நினைவும் இல்லாமலேயே நடந்தேறுகின்றன.

ஒன்று மட்டும் உறுதி. தோமா இறையனுபவம் பெற்றார். அதை உடனடியாக நம்பிக்கை அறிக்கையாக வெளிப்படுத்துகின்றார். 'என் ஆண்டவரே! என் கடவுளே!' என்று சரணாகதி அடைகின்றார்.

'ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள்' என்னும் திரட்டில், 'தோமாவின் நற்செய்தி' என்று ஒன்று உண்டு. அதில், இயேசு தோமாவுக்கு மட்டும் தன்னை ஆண்டவர் என வெளிப்படுத்தும் பகுதி ஒன்று உண்டு. மேலும், அந்த இடத்தில் இயேசு தோமாவிடம், 'நீ வழிப்போக்கன் போல இரு!' என அறிவுறுத்துகின்றார். வழிப்போக்கன் போல இருக்க இரண்டு விடயங்கள் அவசியம்: ஒன்று, அச்சம் அகற்ற வேண்டும். அச்சப்படுகிற எவரும் வீட்டைவிட்டு வெளியே புறப்பட முடியாது. குறிப்பாக, இயேசுவின் சமகாலத்து பாலஸ்தீனத்தில். இரண்டு, நம்பிக்கை கொள்ள வேண்டும். தன்மேல், தனக்கு அடுத்தவர் மேல், தன் உடன் பயணியின்மேல், தன் இறைவன்மேல். நம்பிக்கை இல்லாமல் எந்தப் பயணமும் சாத்தியமில்லை.

அச்சம் களைந்து ஆனந்தம் பெற சீடர்களையும், ஐயம் களைந்து நம்பிக்கை பெற தோமாவையும் அழைக்கிறார் இயேசு.

மேலும், தோமாவின் செயலைக் கடிந்துகொள்ளாத இயேசு, அவரின் ஐயத்தைப் போக்க இறங்கி வருதலே இறை இரக்கம். ஆண்டவரின் இதயத்தையே தொட்டுப் பார்க்கும் அளவிற்குக் கடவுள் மனுக்குலத்திற்கு நெருக்கமாகிறார்.

ஆனால், இது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. சில நேரங்களில், கடவுள் கண்ணுக்கெட்டாத தூரத்தில் நிற்பது போல, அல்லது அவர் இல்லாததுபோலவே இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையில் இருக்கிறது பேதுருவின் திருச்சபை. அந்தத் திருச்சபைக்கு மடல் வரைகின்ற பேதுரு (இரண்டாம் வாசகம், காண். 1 பேது 1:3-9), அவர்கள் அனுபவிக்கும் சோதனைகள், துன்பங்கள், மற்றும் வேதனைகள் அனைத்தும் அவர்களுடைய நம்பிக்கையில் தளர்வை ஏற்படுத்த, அவர், 'குன்றா நோக்கோடு வாழவும்,' 'நீங்கள் அவரைக் கண்டதில்லை எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள்' என்றும் அறிவுறுத்துகின்றார்.

ஆக, இறையனுபவத்திலிருந்து நம்பிக்கை பிறக்கிறது.

நம்பிக்கை வேதனைகளில் உறுதி செய்யப்படுகிறது.

உறுதி செய்யப்பட்ட நம்பிக்கை, நம்பிக்கையாளர்களால் வாழ்வாக்கப்படுகிறது இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:42-27). 'நம்பிக்கை கொண்டவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும்' நிலைத்திருப்பவர்கள், 'கடவுளைப் போற்றியும்' 'மற்ற மக்களுடைய நல்லெண்ணத்தைப் பெற்றும்' வருகிறார்கள்.

இறுதியாக,

இன்றைய சூழலில், சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சியதுபோல, நாம் கொரோனாவுக்கு அஞ்சி கதவுகளை அடைத்து வைத்துள்ளோம். பூட்டிய அறைக்குள் அன்று வந்த அவர் இன்றும் வருகின்றார். அவர் வருமுன்னே தோமோ போல, என் உள்ளறையில் இறைவனைக் கண்டால் அவரின் அனுபவம் பெறுவேன்.

இன்றைய பதிலுரைப் பாடல் சொல்வது போல, 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று' (காண். திபா 118:23) என்று எல்லாவற்றிலும், அவரின் கரம் காணுதலே இறைஅனுபவம். அதில் புறப்படும் இறைநம்பிக்கை. அந்த நம்பிக்கையில் உதயமாவும் இறைஇரக்கம்.

'நம்பிக்கை கொள்!' 'ஏனெனில், ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!'