இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

இன்னும் கொஞ்சம்!

அபக்கூக்கு 1:2-3, 2:2-4
2 திமொத்தேயு 1:6-8, 13-14
லூக்கா 17:5-10

சார்லஸ் டிக்கென்ஸ் அவர்கள் எழுதிய 'ஆலிவர் ட்விஸ்ட்' நாவலில் வரும் ஒரு திருப்புமுனை 'இன்னும் கொஞ்சம்' என்னும் இரண்டு வார்த்தைகள்தாம். எல்லாருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருக்க, வரிசையில் வரும் சிறுவன் ஆலிவர் கஞ்சி பரிமாறுபவரிடம், 'எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!' என்பான். பரிமாறுபவருக்கு கோபம் வரும். கரண்டியால் சிறுவனை அடிக்க நினைப்பார். இந்த விஷயம் மேலிடத்திற்கு சொல்லப்படும். சிறுவனை உடனடியாக வெளியேற்றுவது பற்றி எல்லாரும் பேச ஆரம்பிப்பார்கள்.

இன்றைய நவீன யுகத்தின் ஏக்கமும் இதுவே. 'இன்னும் கொஞ்சம்!' - கம்ப்யூட்டரில் இன்னும் கொஞ்சம் வேகம், இணையதளத்தில் இன்னும் கொஞ்சம் வேகம், செல்ஃபோனில் இன்னும் கொஞ்சம் மெமரி, கேமராவில் இன்னும் கொஞ்சம் மெகாபிக்சல், அபார்ட்மெண்டில் இன்னும் கொஞ்சம் இடம், காரில் இன்னும் கொஞ்சம் ஸ்பேஸ், பள்ளிக்கூடத்தில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கரிகுலர், டூவீலரில் இன்னும் கொஞ்சம் சிசி என எல்லாவற்றிலும் நாம் 'இன்னும் கொஞ்சம்' கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் வரும் சீடர்களும் இந்த நவீன கால எண்ண ஓட்டத்தையே கொண்டிருக்கின்றனர். ஆகையால்தான், 'இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!' என இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இயேசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. உள்ளதே போதும் - இதைக் கொண்டே நீங்கள் அரிய பெரிய காரியங்கள் செய்யலாம் என்கிறார்.

கடவுளிடம் நம்பிக்கை கொள்வதையும், அவருக்கு வழிபாடு செய்வதையும் பற்றி எனக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு. இந்த சந்தேகங்கள் தொடக்க கால திருஅவையிலும் நிறைய இருந்தன. அந்த சந்தேகங்கள் நிறைய இறையியல் கருத்துக்களுக்கும், மாற்றுக்கருத்துக்களுக்கும் வழி கோலின. அப்படிப்பட்ட சந்தேகங்களில் ஒன்று நம்பிக்கையா? நற்செயல்களா? என்ற கேள்வி. நாம் மீட்படைவது எதன் வழியாக? நம்பிக்கை வழியாகவா? அல்லது செயல்கள் வழியாகவா?

உரோமையருக்கு எழுதும் பவுலடியார் 'நம்பிக்கையால்தான் ஆபிரகாம் கடவுளுக்கு ஏற்புடையவரானார்' என்று சொல்லி, செயல்களால் ஒரு பயனும் இல்லை என எச்சரிக்கின்றார். ஆனால் அவருக்கு சமகாலத்தில் எழுதிய யாக்கோபு, 'செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்' என செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

நாம் மீட்பு பெறுவது கடவுளின் இரக்கம் அல்லது அருளாலா? அல்லது நாம் செய்யும் நற்செயல்களாலா?

கடவுளின் இரக்கம் அல்லது அருளால்தான் என்றால் நாம் நற்செயல்கள் செய்வதால், நாம் நல்லவராக இருப்பதால் ஒரு பயனும் இல்லையே? நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஏனெனில் கடவுளின் இரக்கம் அல்லது அருள் அல்லது அவர்மேல் நாம் கொள்ளும் நம்பிக்கை நம்மை மீட்டுவிடுகிறது.

அல்லது

நம் நற்செயல்களால்தாம் மீட்பு என்றால் இயேசுவின் பிறப்பு, பணி, இறப்பு, உயிர்ப்பு ஆகிய மீட்பின் மறைபொருள்கள் அனைத்தும் தேவையற்றனவாகிவிடுகின்றனவே?

இது ஒரு புறம் இருக்க,

இயேசுவின் வருகைக்கு முன், அவரின் இறப்பு, உயிர்ப்புக்கு முன் இவ்வுலகில் பிறந்து இறந்தவர்களின் நிலை என்ன? அவர்களுக்கும் மீட்பு உண்டா?

அல்லது

இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு என்ன நிலை ஏற்படும்? அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவராவது எப்படி?

கடவுளை நம்புவதும் பிரச்சினையாக இருக்கிறது. நம்பாததும் பிரச்சினையாக இருக்கிறது? - இல்லையா?

இன்றைய நற்செய்தியில் சீடர்கள் இயேசுவிடம் ஒரு விண்ணப்பத்தோடு வருகின்றனர்: 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்!'

இந்த இறைவாக்குப் பகுதி லூக்கா நற்செய்தியில் சீடர்களுக்கான அறிவுரைப் பகுதியில் உள்ளது. தாழ்ச்சி, மன்னிப்பு என வாழ்வியல் பாடங்களை வழங்கும் இயேசு அவற்றின் ஒரு பகுதியாக நம்பிக்கை பற்றியும் சொல்கின்றார். நம்பிக்கை பற்றிய பதிவுகள் லூக்கா நற்செய்தியில் நிறைய இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முடக்குவாதமுற்றவரின் நம்பிக்கை (5:20), நூற்றுவர் தலைவனின் நம்பிக்கை (7:9), தைலம் தேய்க்கும் பெண்ணின் நம்பிக்கை (7:50), இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணின் நம்பிக்கை (8:48), நன்றி சொன்ன தொழுநோய் பிடித்தவரின் நம்பிக்கை (17:19), பார்வையற்றவரின் நம்பிக்கை (18:42) என நம்பிக்கை பற்றிய நிகழ்வுகள் இருந்தாலும், புயலை அடக்கும் நிகழ்வில் இயேசு தம் சீடர்களிடம், 'எங்கே உங்கள் நம்பிக்கை?' என்று கேட்கின்றார் (காண். 8:25).

'எங்களின் நம்பிக்கையை அதிகமாக்கும்!' என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்பது நம்பிக்கை பற்றி இரண்டு விடயங்களைக் குறிப்பிடுகின்றது:

அ. நம்பிக்கை என்பது வளர அல்லது தேயக்கூடியது. நம்பிக்கை என்பது ஒரு பொருள் அல்ல. மாறாக, ஒருவர் உள்ளார்ந்த அளவில் பெறும் ஓர் உணர்வு. அதாவது, அன்பு, நட்பு, மன்னிப்பு போல நாம் பயன்படுத்தினால் வளரவும், பயன்படுத்தாவிட்டால் தேயவும் கூடியது.

ஆ. நம்பிக்கை என்பது தனிநபரைப் பொறுத்தது. ஒருவரிடம் அதிகமாக இருக்கும் நம்பிக்கை மற்றவரிடம் குறையாக இருக்கலாம். குறையாக அதை வைத்திருப்பவர் அதை இன்னும் வளர்த்து அதிகமாக்கிக் கொள்ள முடியும்.

மேலும், 'எங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும்' என்று அவர்கள் இயேசுவிடம் வேண்டுவது, 'நம்பிக்கை என்பது கடவுளின் கொடை' என்பதையும் தெளிவாக்குகிறது. இந்த இடத்தில் நம்பிக்கை பற்றிய லூக்காவின் புரிதல் பவுலடியாரின் புரிதலையே ஒத்திருக்கின்றது.

'நம்பிக்கையில் வளர நீங்கள் இவற்றையெல்லாம் செய்யுங்கள்!' என இயேசு உடனடியாக மருந்துச் சீட்டு எழுதவில்லை. மாறாக, 'கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடு பெயர்ந்து போய் கடலில் நில்!' என்று சொன்னால் அது கீழ்ப்படியும்' என்கிறார். மற்ற நற்செய்திகளில் மலை என குறிப்பிடும் இயேசு இங்கே அத்திமரம் எனக் குறிப்பிடுகின்றார். இயேசு சொல்ல வருவது இதுதான். அதாவது, நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் அசாதாரண காரியத்தையும் ஒருவரால் செய்து முடிக்க முடியும்.

லூக்காவின் கிரேக்கம் இங்கே உடைந்து காணப்படுவதால், இயேசு தன் சீடர்களின் நம்பிக்கையை பாராட்டுகிறாரா, அல்லது கடுகளவு கூட அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என சாடுகிறாரா என்பது தெளிவாக இல்லை.

இந்த உருவகம் வழியாக இயேசு சொல்வது என்ன? சீடத்துவம் என்பதை வாழ்வதற்கு பெரிய அளவில் முயற்சிகள் எல்லாம் தேவையில்லை. கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலே போதும். எல்லாம் எளிதாகிவிடும்.

இன்றைய முதல் வாசகம் (காண். அப 1:2-3, 2:2-4) நம்பிக்கையின் மேன்மை பற்றியே பேசுகிறது. தன் சமகாலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. 'நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள். இந்த இறைவாக்கின் இரண்டாம் பகுதியைத்தான் தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார்.

இந்த இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இதே நம்பிக்கையின் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 1:6-8, 13-14) தூய பவுலடியார் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்: 'கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு...' திமோத்தேயுவின் வாழ்வு அனைத்திற்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது நம்பிக்கை என்ற ஒன்றே.

இன்றைய வாசகங்கள் இத்தோடு நிறைவுபெற்றிருந்தால் நமக்குப் பிரச்சினையில்லை.

தொடர்ந்து லூக்கா எழுதும் பகுதி நம்மை குழப்பம் அடையச் செய்கிறது. 'பணியாளர் மற்றும் அவரின் பாஸ்' என்னும் உருவகத்தைப் பதிவு செய்கிறார் லூக்கா. நிலக்கிழார் சமூகத்தின் பின்புலத்தில் இருக்கும் இந்த உருவகம் முதலாளித்துவ பொருளாதாரத்தை வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அந்நியமாக இருக்கிறது. வேலையாள் ஒருவர் தன் பணி முடிந்து வீடு திரும்புகிறார். மாலையில் வீடு திரும்பும் அவர் கண்டிப்பாக சோர்ந்து போயிருப்பார். அப்படி சோர்ந்து வந்தவரை ஓய்வெடுக்கச் சொல்வதற்குப் பதிலாக, 'இன்னும் இதைச் செய்!' என்று தனக்கு உணவு தயாரிக்கும் வேலையைச் செய்யச் சொல்கின்றார் பாஸ்.

இது இன்றும் நம் வீடுகளில் நடக்கலாம். கணவனும், மனைவியும் மாலையில் வெளியே கடைவீதிக்கு அல்லது கோவிலுக்கு செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இருவரும் வீடுதிரும்பும்போது ஒரே மாதிரி சோர்வாக இருந்தாலும், வீட்டிற்குள் நுழைந்தவுடன், 'எனக்கு சுடுதண்ணீர் போடு! அல்லது காஃபி போடு!' என்று சொல்லிவிட்டு கணவர் டிவியை ஆன்செய்து விடுகின்றார். தன் மனைவியும் தன்னைப்போலத்தான் சோர்வாக இருப்பார் என்பதை அவர் நினைப்பது கிடையாது.

மேற்காணும் தலைவரையும், இந்தக் கணவரையும் பார்க்கும்போது நமக்கு கோபம் வருகிறது.

இந்த உருவகத்தைக் கடவுளுக்குப் பொருத்திப் பார்த்தால் நம் கோபம் இன்னும் அதிகமாகிறது.

கடவுள் இரக்கமில்லாத ஒரு தலைவன்போல, கணவன்போல நம் கண்முன் வந்து போகின்றார்.

இப்படி மாய்ந்து மாய்ந்து வேலை செய்யும் பணியாள் என்ன சொல்ல வேண்டுமாம்?

'நான் பயனற்ற ஊழியன். என் கடமையைத்தான் நான் செய்தேன்!'

அதாவது, அவனது செயலும், நற்குணமும் தலைவனின் எண்ணத்தை மாற்ற முடியாது. அவனது செயல்களால் அவனுக்கு எந்தவொரு பயனும் இல்லை.

நற்செயல்களால் ஒருவருக்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று சொன்னால், இறுதி வரியாக அங்கே இறைவனின் இரக்கமும், அவரின் அருளும்தான் நம் மேலான நிலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. நம்பிக்கை - அதானே எல்லாம்!

இறைவனின் மேல் உள்ள நம்பிக்கை அவர் நமக்குத் தரும் கொடை. நம்பிக்கை என்பது பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் நமக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ள பயன்படுத்தும் மந்திரக்கோல் என நினைப்பது சரியன்று. கடவுள்மேல் உள்ள நம்பிக்கையை நாம் எப்படி அளவிடுவது என்பதும் நமக்கு பல நேரங்களில் புரிவதில்லை. நம்பிக்கை என்பது சரணாகதி. இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய முற்படும்போது அவர்களுக்குக் குறுக்கே செங்கடலும் எரிக்கோ மதிலும் நிற்கின்றது. இந்த இரண்டும் மறையக் காரணம் அவர்கள் கொண்டிருந்த சரணாகதியே. இந்த சரணாகதிதான் நேர்மையுடையவரை வாழ வைக்கிறது. என்னிடம் அதிகம் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று 'இன்னும் கொஞ்சம்' மனநிலை நமக்குத் தேவையில்லை. நம் வாழ்வின் இருள்சூழ் பொழுதுகளை நாம் அறிந்திருத்தலும், நாம் வளர வேண்டிய வாழ்க்கை நிலைகளை அறிந்திருத்தலும், நம் பயங்களையும், நம் வருத்தங்களையும் அறிந்திருத்தல்கூட நம்பிக்கையே. நம்பிக்கை என்பது நாம் உள்ளத்தில் வைத்திருக்கும் நேர்மை.

2. வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும்

'கடவுள் நமக்கு கோழை உள்ளத்தை அல்ல.மாறாக, வல்லமையும், அன்பும், கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தை, ஆவியை நமக்குத் தந்துள்ளார்' என திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துகின்றார் பவுல். ஏதாவது ஒரு செயலை நாம் செய்ய வேண்டும் என நினைக்கிறோம். பல நேரங்களில் நாம் செய்யும் செயல்களை நம்மால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதற்கு காரணம் நம் உள்ளம் வலிமை இல்லாமலும், கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதால்தான்.

3. நிஷ்காமகர்மா

இயேசுவின் இந்தப் போதனை நம் இந்தியச் சிந்தனைக்கு ஒன்றும் புதிதல்ல: பகவத் கீதை போதிக்கும் 'நிஷ்காமகர்மா' என்பதும் இதற்கு ஒத்ததுதான். 'நாம் செய்கின்ற வேலையே வேலைக்காக மட்டுமே செய்வது'. நாம் செய்வது அனைத்துமே மற்றொன்றிற்காகத்தான். நாம் படிப்பது வேலை பார்ப்பதற்காக. வேலை பார்ப்பது சம்பளத்திற்காக. திருமணம் செய்வது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நம் கனவுகளை அவர்கள் மேல் சுமத்துவதற்காக. யோகா கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரிடம் வருகின்ற அவருடைய சீடர் கேட்டாராம்: 'நான் யோகா செய்தால் என்ன நடக்கும்? யோகா செய்தால் என் சுகர் சரியாகுமா? என் பிரஷர் குறையுமா?' நாம் ஒன்றைச் செய்தால் அதன் பலன் இப்படி இருக்குமா என எதிர்பார்த்தே செய்கின்றோம். 'இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தால் என் குழந்தை ஒழுக்கமாக வளருமா, நல்ல கல்வியைப் பெறுமா?' என்ற நிலையில் சிந்திப்பதற்குப் பதில் 'என் குழந்தை இவ்வளவு மதிப்பெண்கள் பெறுமா?' என்றுதான் சிந்திக்கின்றோம். நாம் செய்த வேலையைப் பற்றி நாம் பேசக் கூடாது என்றால் எப்படி? எனக் கேட்கலாம்.

4. கண்காணிப்பாளர்கள் நாம்

இயேசுவின் இந்தப் போதனை நாம் அனைவரும் நம் வாழ்வின் கண்காணிப்பாளர்கள் மட்டும்தான், உரிமையாளர்கள் அல்ல என்ற சிந்தனையைத் தருகின்றது. 'என் வாழ்விற்கு நான்தான் பொறுப்பு' என உரிமை கொண்டாடுவது பல நேரங்களில் நமக்கு விரக்தியையே தருகின்றது. 'நம் வாழ்விற்கு நாம்தான் உரிமையாளர்கள்' என்று நாம் சொன்னாலும் நம்மால் பல நிகழ்வுகளை கண்ட்ரோல் செய்ய இயல்வதில்லை. நாம் என்னதான் நன்றாக இருந்தாலும் நம்மையறியாமலே ஏதோ வகையில் உடல்நலமில்லாமல் போய் விடுகிறோம். வாழ்வில் நடக்கும் எண்ணற்றவைகளுக்கு நம்மால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால், இறைவன் தான் நம் வாழ்வின் உரிமையாளர் எனவும், நாம் அதன் பணியாளர் எனவும் நினைக்கும்போது தேவையற்ற கவலைகள் மறைந்து விடுகின்றன.

5. ஒப்பீடு

நாம் நம் வேலைகளையும், நாம் செய்யும் முறையையும் மற்றவரோடு ஒப்பிடும்போதும் எண்ணற்ற பிரச்சினைகளும் ஏற்றத் தாழ்வுகளும் பிறக்கின்றன. 'உணவு சமைக்கின்ற பணியாளர் தான் செய்யும் பணிதான் சிறந்தது எனவும் வாயிற்காப்போனின் பணி ஒன்றுமில்லை' என ஒப்பீடு செய்வாரானால், 'நான் வாயிலில் நிற்கப்போய்தான் நீ இங்கே அமைதியாக சமைக்க முடிகிறது' என எதிர்கேள்வி கேட்பார். நாம் செய்யும் அனைத்து வேலைகளுமே தனித்துவம் மிக்கவை. ஒன்றை மற்றொன்றோடு ஒப்பீடு செய்ய முடியாது. நாம் இருக்கும் நிலையில் சிறப்பாக இருப்பதே நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும் வெளிப்பட வேண்டும்.

6. தாழ்ச்சி

இந்த நிலைக்கு நாம் செல்ல நாம் கொண்டிருக்க வேண்டியது நம்மிடம் இருக்கும் தாழ்ச்சி. 'நம்மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் லேபிள்கள்' நம்மைக் கூட்டுவதோ குறைப்பதோ கிடையாது. லேபிள்களை விட மேலானவர்கள் நாம் என அறிந்து கொள்வது அவசியம்.

7. அடுத்தவர்களின் வேலையை பாராட்டுவது

இன்றைய நற்செய்தியில் வரும் வீட்டுத்தலைவரைப் போல நாம் இருக்கக் கூடாது. பிறரின் நிலையிலிருந்து அவரைப் பார்க்க வேண்டும். அடுத்தவர்மேல் நாம் கொண்டிருக்கும் சார்புநிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்தவர் செய்யும் ஒவ்வொன்றையும் பாராட்ட வேண்டும்.

இறுதியாக,

இன்று நாம் எல்லாவற்றையும் வெற்றி கொள்ள பெரியவற்றின் துணையை நாடுகிறோம். மரங்களை அகற்ற, பள்ளம் தோண்ட ஜேசிபிகளையும், புல்டோசர்களையும் தேடுகின்றோம். அடுத்தவரின் மனத்தில் இடம் பிடிக்க பெரிய காரியங்களைச் செய்ய நினைக்கின்றோம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தால் பெரிய அளவில் சாதிக்கலாம் என நினைக்கிறோம். பெரிய மனிதர்களை நம் வார்த்தையாலும், செயல்களாலும் திருப்திப்படுத்த நினைக்கிறோம். ஆனால், வாழ்வின் பெரியவைகள் எல்லாம் சிறியவைகளால்தான் செய்யப்படுகின்றன என்பதை நாங்கள் மறந்துவிடுகின்றோம்.

ஆனால் சின்னஞ்சிறியவைகளைச் செய்துவிட்டு அமைதியுடன் ஓரமாய் நிற்கும் மனிதர்கள் நம் வாழ்வில் நிறையப்பேர் இருக்கின்றார்கள் - நம் பெற்றோர், நம் உடன் பிறந்தோர், நம் அறைகளைச் சுத்தம் செய்வோர், நம் துணிகளை துவைத்து தேய்த்துக் கொடுப்போர், நமக்காக விவசாயம் செய்வோர், நம் வீடுகளைக் கட்டிக்கொடுப்போர், வங்கிகளில் நமக்கு உதவி செய்வோர்.

நாம் நிறைய வேலைசெய்ய இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாளின் இறுதியில், 'வா, வந்து உட்கார்ந்து சாப்பிடு!' என யாரும் நம்மிடம் சொல்லவில்லை என்றாலும், நம் வேலையை நாம் செய்தல் அவசியம்.

நம்பிக்கை என்ற கையின் துணையோடு நம் வேலைகளை நாமே செய்து கொள்வோம். நம்பிக்கை என்பது நாம் நம் வாழ்வைப் பார்க்கும் பார்வை. எல்லாமே கடவுளிடமிருந்து புறப்படுவதாக, அவரையே சென்றடைவதாக நம்புவோம். சில நேரங்களில் - பல நேரங்களில் - சந்தேகங்கள் வரலாம். ஆனால், சந்தேகம்தான் நம் வாழ்வை இன்னும் முன்னேற்றித் தள்ளுகிறது. நம்பிக்கை எப்போதும் முழுப்பார்வை கொண்டிருக்கிறது. நம்பிக்கையால் மட்டும்தான் அத்திமரத்தையும் கடலின் நடுவில் நிறுத்திப் பார்க்க முடியும். நம்பிக்கையால்தான் நம் வேலையை நாமே செய்ய முடியும். நம்பிக்கையால்தான் ஒப்பீடு செய்ய முடியாமல் இருக்க முடியும். நம்பிக்கையால்தான் அடுத்தவரின் பாராட்டுகளை நம்பியிராமல் நம்மால் வாழ முடியும்.

நம்பிக்கை - இன்னும் கொஞ்சம்!