இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

இம்மானுவேல் என்று பெயரிடுவீர்!

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு 1:18-24

சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்தாலியில் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புகைபிடிப்போர் பெரும்பாலும் தாங்கள் ஒரு குறிப்பிட்ட சிகரெட்டைப் பிடிப்பதில் பெருமை கொள்வதால், சிகரெட் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பெயர் மற்றும் இலச்சினையை அட்டைப்பெட்டியில் அச்சிடக்கூடாது என்றும், 'சிகரெட்' மற்றும் 'எண்ணிக்கை' என்று இரண்டு வார்த்தைகள் இருந்தால் மட்டுமே விற்பனை அனுமதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. இந்த முயற்சிக்கு எதிர்ப்பு சிகரெட் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால், அப்படி எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. எதிர்ப்பு மக்களிடமிருந்தே, வாடிக்கையாளர்களிடமிருந்தே வந்தது. அரசே இதைக்கண்டு ஆச்சர்யப்பட்டது. தங்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், புற்றுநோய் ஏற்படும் அபாயம் மக்களுக்கு இருந்தாலும், அவர்கள் தங்களுடைய அடையாளமாக சிகரெட் கம்பெனியின் பெயரையும், முத்திரையையும் நினைத்திருந்தார்கள் என்பது ஆச்சர்யத்தைத் தருகிறது. 'பெயரில் என்ன இருக்கிறது? ரோஜாவை வேறு பெயர் சொல்லி அழைத்தால் அதன் நறுமணம் குறைந்துவிடுமா?' என்று ரோமியோ-ஜூலியட் நாடகத்தில் கேட்கிறார் ஷேக்ஸ்பியர். பெயரில் நிறையவே இருக்கிறது என்று சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு. மனித வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் பெயர்கள் முக்கியமானவைகளாகவே இருந்திருக்கின்றன. மனிதர்கள் தங்கள் பெயர்களை நிலைநாட்டுவதற்காகவே வாள்களை ஏந்திப் போரிட்டுள்ளனர், கடல்களைக் கடந்து பயணம் செய்துள்ளனர், உயிரைப் பணயம் வைத்து கண்டுபிடிப்புக்கள் பல நிகழ்த்தியுள்ளனர். நம்முடைய தமிழ் மரபில் முன்பு வழங்கப்பட்ட பெயர்கள் எல்லாம் கூட ஒரு குழந்தையின் எதிர்காலத்தை அல்லது அக்குழந்தையின் மூதாதையரின் மரபை நிலைநாட்டி வரையறுக்கப்பட்டுள்ளன. இன்றுதான் பெயர்கள் எல்லாம் வித்தியமாசமாக இருக்கின்றன. புதிய பெயர்களை வைப்பது புதிய தொடக்கமாகவும் வரலாற்றில் இருக்கின்றது. பல மாகாணங்களாக பிரிந்து கிடந்த நம் நாடு, 'இந்தியா' என்று பெயர் பெற்றதும் கூட ஒரு புதிய தொடக்கமே. மேலும், நாம் நகரங்களுக்கு, விமான நிலையங்களுக்கு, மாவட்டங்களுக்கு, நிறுவனங்களுக்கு, தெருக்களுக்கு வழங்கும் பெயர்களும் நம் முன்னோர்களை, வரலாற்றில் மாற்றத்தைக் கொண்டுவந்தவர்களை நினைவுகூர்வதன் அடையாளமாக இருக்கிறது. வயது வந்தவர்கள் சிலர் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. விளையாட்டு மற்றும் சினிமா துறைகளில் புகழ்பெற்றவர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்கிறார்கள், அடைமொழி சேர்த்துக்கொள்கிறார்கள், அல்லது புனைப்பெயர் வைத்துக்கொள்கிறார்கள். ஒருவரின் குணாதிசயத்தை பிரதிபலிக்கும் விதமாக நாம் பட்டப்பெயர் வழங்குகிறோம். நம் நட்பு அல்லது காதல் வட்டத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பெயர் வைத்து அழைத்து மகிழ்கின்றோம். நம்மைச் சாராத மற்றவர்களை இழிபெயர் கொண்டும் அழைக்கின்றோம். படைப்பின் தொடக்கத்தில் தாம் படைத்த அனைத்திற்கும் பெயரிடுமாறு ஆண்டவராகிய கடவுள் படைப்பனைத்தையும் முதல் மனிதனாகிய ஆதாமிடம் கொண்டுவருகின்றார். ஆதாமும் அவற்றுக்குப் பெயரிடுகின்றார். பெயரிடுதல் இங்கே உரிமையைக் குறிப்பதாக இருக்கின்றது. விவிலியப் புரிதலில் பெயர் என்பது வெறும் விளிச்சொல் மட்டுமல்ல. அது ஒருவரின் குணம் மற்றும் பணியைக் குறிக்கக்கூடியது. அது ஒருவரின் அடையாளமாக இருப்பதோடு ஒருவரின் வரையறையாகவும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 'யாக்கோபு' என்ற பெயர் ('ஏமாற்றுபவன்') 'இஸ்ரயேல்' என்று மாற்றப்பட்டபோது ('கடவுளோடு போரிடுபவன்') குலமுதுவர் யாக்கோபும் அவருடைய வழிமரபினரும் கடவுளோடு போராடுபவர்களாகவே இருக்கின்றனர். ஒருவரின் பெயரை அறிந்துகொள்வது என்பது அவருடைய அடையாளத்தை, பணியை, வாழ்க்கை இலக்கை, நோக்கை அறிந்துகொள்வதாகும். ஆக, ஒருவருக்குப் பெயர் அளிப்பது அல்லது ஒருவரின் பெயரை மாற்றுவது என்பது விவிலியத்தில் முக்கியமான கூறாக இருக்கிறது. இன்றைய முதல் வாசகத்தின் (காண். எசா 7:10-14) வரலாற்றுப் பின்புலத்தை முதலில் புரிந்துகொள்வோம். இஸ்ரயேல் மக்களுக்கு அது ஒரு கடினமான காலம். ஆகாசுக்கும் அவருடைய அரசுக்கும் சுற்றியிருந்த பல அரசுகளிடமிருந்து நிறைய நெருக்கடி இருந்தது. அவர்களின் எண்ணமெல்லாம் ஆகாசை அழிப்பதும், அவருடைய அரசாட்சியைப் பறித்துக்கொள்வதுமே. மேலும், ஆகாசு தங்களோடு சேர்ந்து அசீரியாவுக்கு எதிராகப் போரிடவேண்டும் என்றும் அவரைக் கட்டாயப்படுத்தினர். அதற்கு ஆகாசு மறுத்தபோது அவர்கள் ஆகாசுடன் போரிடத் துணிகின்றனர். மிகவும் பயந்துபோய் போருக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார் ஆகாசு. போர்க்காலத்தில் எருசலேம் நகரத்துக்குத் தேவையான நீராதாரம் போதுமானதாக இருக்கிறதா என்று  அரசர் ஆகாசு ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருக்கின்ற வேளையில் ஆறுதல் தரும், நம்பிக்கை தரும் செய்தியோடு அவரை எதிர்கொள்கிறார் எசாயா. ஆண்டவருக்கு மிகவும் விருப்பமான நகரமாக இருக்கின்ற எருசலேம் அழிவதை அவர் அனுமதிக்கமாட்டார் என்றும், ஆண்டவர் என்றும் தன்னுடைய உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் எசாயா. இதற்கு ஓர் அடையாளம் கேட்குமாறு ஆகாசிடம் சொல்கின்றார் எசாயா. அடையாளம் கேட்க மறுக்கின்றார் ஆகாசு. ஏனெனில், ஆகாசு கடவுள் மேல் நம்பிக்கை கொள்ளாமல், தன்னுடைய பலத்தை மட்டும் நம்பி, அசீரியாவின் துணையை நாடி மற்ற நாடுகளோடு போரிடுகின்றார். போரில் ஆகாசுக்கு வெற்றி கிடைத்தாலும் அதன் விலை மிகவும் பெரியதாக இருக்கின்றது. ஏனெனில், அசீரியா ஆகாசைத் தன்னுடைய அடிமை அல்லது ஏவல் அரசனாக வைத்துக்கொள்ள விழைகிறது. மேலும், ஆகாசு தன்னுடைய அரியணையை விட்டுக்கொடுப்பதோடு, அசீரிய தெய்வங்களுக்குத் தூபம் காட்டவும் கட்டாயப்படுத்துகின்றார். அசீரியாவின் பேச்சைக் கேட்டு, அசீரியத் தெய்வங்களுக்கும் எருசலேம் ஆலயத்தில் இடம் அளித்தார். இவ்வாறாக, சிலைவழிபாடு என்னும் தீமையையும் செய்தார் ஆகாசு. இஸ்ரயேல் சமய அடையாளங்கள் எல்லாம் எருசலேம் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கடவுளே தன்னுடைய ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலை உருவானது. எருசலேம் புறவினத்து நகரமாகவும், யூதா அசீரியாவின் மாகாணமாகவும் மாறியது. இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளின் மக்கள் இல்லை என்ற நிலையும் உருவானது (காண். 1 அர 16). இச்சூழலில்தான் குழந்தை ஒன்றின் பிறப்பு பற்றிய முன்னறிவிப்பு வருகின்றது. இங்கே சொல்லப்படும் குழந்தை ஆகாசின் குழந்தை. ஆகாசுடைய இளைய மனைவி ஒருத்தி இந்நேரத்தில் குழந்தைப்பேற்றுக்காய் காத்திருக்கின்றாள். பிறக்கின்ற குழந்தை சாதாரண மனித குழந்தையாக இருந்தாலும் அதன் வாழ்வியல் நோக்கம் பெரிதாக இருந்தது. 'இம்மானுவேல்' ('கடவுள் நம்மோடு') என்ற உருவகப் பெயர் அக்குழந்தைக்கு வழங்கப்பட்டது. இக்குழந்தை ஆகாசின் மகன் 'எசேக்கியாவை' குறித்தது. எசேக்கியா தான் அரசாட்சி ஏற்றவுடன் அசீரிய நுகத்தை உடைத்ததோடு, எருசலேம் ஆலயத்தில் ஒரு சமயப் புரட்சியும் செய்தார். முதலில், அசீரியக் கடவுளர்களையும், சமய அடையாளங்களையும் ஆலயத்திலிருந்து அகற்றினார். மேலும், தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட எந்த இடத்திலும் வேற்று தெய்வங்கள் இல்லாமல் ஆக்கினார். கடவுளின் பிரசன்னத்தை மீண்டும் ஆலயத்திற்குள்ளும் எருசலேம் நகருக்குள்ளும் கொண்டுவந்தார். 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற நிலையை மாற்றி, 'கடவுள் நம்மோடு' என்ற நிலையை உருவாக்குகிறார். தனக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்ட 'இம்மானுவேல்' என்று பெயரை அப்படியே வாழ்வாக்குகின்றார். 'கடவுள் நம்மோடு' என்று கடவுளை மக்களிடம் கொண்டவந்ததோடல்லாமல், 'நாம் கடவுளோடு' என்று மக்களையும் உடன்படிக்கையின் பிரமாணிக்கத்திற்கு அழைத்தார். எசேக்கியாவின் இச்செயலால் இஸ்ரயேல் மக்கள் மீண்டும், 'கடவுள் நம்மோடு' என்று கொண்டாடத் தொடங்கினார்கள். ஆக, 'கடவுள் நம்மோடு' என்ற பெயர் ஆகாசின் குழந்தையின் பெயராக மாறியதோடல்லாமல் இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் அனுபவமாகவும் மாறுகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. பவுலின் இயற்பெயர் 'சவுல்' அவருடைய தமஸ்கு அனுபவத்திற்குப் பின் மாற்றம் பெறுகிறது. தமஸ்கு அனுபவம் பவுலை முற்றிலும் புரட்டிப்போட்டது. கிறிஸ்துவர்களை அழிப்பவரும், கிறிஸ்துவின் எதிரியுமாக இருந்த சவுல், தான் பவுலாக மாற்றம் பெற்றதை, தன் அடையாளம் மாறியதை, தன்னுடைய பெயரும் பணியும் மாற்றம் பெற்றதை மூன்று சொல்லாடல்கள் வழியாகப் பதிவு செய்கின்றார்: (அ) 'இயேசு கிறிஸ்துவின் தொண்டன் அல்லது அடிமை,' (ஆ) 'திருத்தூதன்,' மற்றும், (இ) 'நற்செய்திப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவன்.' இம்மூன்று சொல்லாடல்கள் வழியாக தன்னுடைய அடையாளம் மற்றும் பணியை ஒருங்கிணைந்த முறையில் சொல்லிவிடுகின்றார் பவுல். முதலில், பவுல் தன்னையே முழுவதும் இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமாக்குவதை 'அடிமை' அல்லது 'தொண்டன்' என்ற சொல்லாடல் குறிக்கிறது. 'அடிமை' அல்லது 'தொண்டன்' என்ற நிலையை, அவர் தன்மேல் சுமத்தப்பட்ட சுமையாக எண்ணாமல், தானே விரும்பி, முழுப் பொறுப்புணர்வுடன் ஏற்கின்றார். 'அடிமை' என்ற நிலையில் தன்னுடைய பணியைச் செய்யாமல், தன் தலைவனின் பணியைச் செய்ய முழுமையாகத் தன்னைக் கையளிக்கிறார். இரண்டாவதாக, 'திருத்தூதன்' என்ற நிலையில் தன்னுடைய பணியின் இலக்கைப் பதிவு செய்கிறார் பவுல். 'இதுதான் என்னுயை பணி,' 'இப்படித்தான் என் வாழ்வை நான் இனி அமைத்துக்கொள்ளப்போகிறேன்' என்று தன்னுடைய இயக்கத்தை வரையறை செய்யும் பவுல், கடவுளின் தூதனாய், திருப்பயணியாய், அன்றைய உலகின் கடைக்கோடிக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்கின்றார். மூன்றாவதாக, 'ஒதுக்கிவைக்கப்படுதல்' என்ற சொல்லாடல் அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கிறது. 'ஒதுக்கிவைக்கப்படுதல்' என்பது வெண்பொங்கலிலிருந்து தேவையில்லை என ஒதுக்கிவைக்கப்படும் 'மிளகுபோல்' அல்ல. மாறாக, முக்கியமான நிகழ்வுக்காக ஒதுக்கிவைக்கப்படும் சேலை அல்லது பெர்ஃப்யூம் போன்றது. இது பவுலின் இலக்குத் தெளிவையும் காட்டுகிறது. ஆக, தனக்குப் புதிய பெயர்களை அடையாளங்களாகக் கொடுத்துக்கொள்ளும் பவுல், அவற்றை அவர் வாழ்ந்துகாட்டியதன் வழியாக மிகவும் போற்றுதற்குரியவர் ஆகிறார். இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), இயேசுவின் பிறப்பு யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படும் நிகழ்வாகவும், பிறக்கப்போகும் குழந்தைக்கு வழங்கப்படும் பெயரின் வரையறையாகவும் இருக்கின்றது. நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள் கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் 'பெயரிடும் நிகழ்வால்' உறுதிசெய்யப்படுகிறது. யோசேப்பு பேசிய மொழியில், 'யெசுவா' என்றால் 'ஆண்டவர் மீட்கிறார் அல்லது விடுவிக்கிறார்.' இக்குழந்தையின் பணி உலகத்திற்கு மீட்பைக் கொணர்வது. இயேசுவின் வழியாக கடவுள் உலகை மீட்பார். இந்தப் பெயரே இக்குழந்தையின் பணியையும் சொல்லிவிடுகிறது. மீட்பு என்பது தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. மாறாக, மனித வரலாற்றின் ஒரு பகுதி. கடவுள் எசேக்கியா வழியாகத் தொடங்கிய, 'கடவுள் நம்மோடு' என்ற நிகழ்வு, இயேசுவில் தொடரும். எசேக்கியாவைப் போல இயேசுவும் கடவுளிடமிருந்து அந்நியமாகிப்போன மக்களை மீண்டும் அவரிடம் ஒன்றுசேர்ப்பார். பாவத்தால் உடைந்துபோன கடவுள்-மனித இணைப்பை சரிசெய்வார். எருசலேம் ஆலயத்தைச் சரிசெய்து இஸ்ரயேல் மக்களை மீண்டும் ஆண்டவரிடம் எசேக்கியா கொண்டுவந்ததுபோல, ஒட்டுமொத்த மனுக்குலத்தின்மேலிருக்கும் பாவத்தையும் அகற்றி அவர்களைக் கடவுளோடு ஒப்புரவாக்குகிறார் இயேசு. ஆக, 'இயேசு' என்ற பெயர் குழந்தையின் வாழ்வின் இலக்கையும், அக்குழந்தை தன் வாழ்வில் முன்னெடுக்கும் பணியையும் முன்குறிக்கிறது. இவ்வாறாக, 'இம்மானுவேல்,' 'பவுல்,' 'இயேசு' என்னும் மூன்று பெயர்களும், இன்றைய வாசகங்களில், அவர்களின் இருப்பையும், இயக்கத்தையும் வரையறுக்கின்றன. பெயர்கள் மனித வாழ்வின் நோக்கங்களை வரையறுக்கின்றன. இன்றைய வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால் எது? அ. எனக்கு என் பெற்றோர் இட்ட பெயர் என்ன? என்னை மற்றவர்கள் அழைக்கும் பெயர்கள் - ஃபாதர், பேராசிரியர், அண்ணன் - எவை? இப்பெயர்களுக்கு ஏற்றாற்போல நான் வாழ்கிறேனா? ஆ. எனக்கு நான் இடும் பெயர் என்ன? முந்தைய பெயர்(களை) விட இந்தப் பெயர் முக்கியமானது. ஏனெனில், இதுதான் என்னுடைய இலக்கு, வாழ்வு நோக்கு அனைத்தையும் நிர்ணயிக்கிறது. இ. நான் கடவுளுக்கு இடும் பெயர் என்னை? கடவுளை நான் எப்படிப் பார்க்கிறேன்? பிறருக்கு நான் இடும் பெயர்கள் எவை? அந்தப் பெயர்களுக்கேற்ற உறவுநிலையை நான் தகவமைத்துக்கொள்கிறேனா? இறுதியாக, 'இம்மானுவேல்,' 'பவுல்,' 'அடிமை,' 'திருத்தூதன்,' 'ஒதுக்கிவைக்கப்பட்டவன்,' 'இயேசு' என்ற வரிசையில் நாம் நம்முடைய பெயரையும் இணைத்துப் பார்ப்போம். மேற்காணும் பெயர்களைப் போலவே நம் பெயர்களும் வாழ்வாக மாற இறைவனிடம் வேண்டுவோம். 'மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் - நீங்களும் நானும் - ஆண்டவருடையவை. நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்' (திபா 24:1).