இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

நம்பிக்கையை வாழ்தல்

அபகூக்கு 1:2-3,2:2-4
2 திமொத்தேயு 1:6-8,13-14
லூக்கா 17:5-10

நீங்கள் என்றைக்காவது உழைத்து ஓய்ந்துபோன, மற்றவர்கள் பயன்படுத்தித் தள்ளிவிட்ட கழுதைபோல (exhausted ass) உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது 'நான் நல்லது செய்கிறேன் ஆனால் நல்லதே எனக்கு நடப்பதில்லை' என்று நீங்கள் புலம்பியதுண்டா? அல்லது 'நான் எழுப்பும் கூக்குரலுக்குக் கடவுள் செவிமடுப்பதில்லை' என்று நீங்கள் சோர்ந்து போவதுண்டா? அல்லது எங்கே செல்கிறதோ வாழ்க்கை என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கிறதா? அல்லது 'இது என்னால் முடியுமா? இதை நான் செய்ய முடியுமா?' என்று தன்ஐயத்தால் (self-doubt) நீங்கள் வருந்தியதுண்டா? அல்லது 'எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர, என்னுடைய மகிழ்ச்சியை, துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள யாரும் என்னோடு இல்லை' என்று நீங்கள் புலம்பியது உண்டா?

இந்தக் கேள்விகளுள் எதற்காவது உங்களுடைய பதில் 'ஆம்' என்றால் இன்றைய இறைவாக்கு வழிபாடு உங்களுக்குத்தான். நீங்கள் எழுப்பும் அந்தக் கேள்விக்கான விடையை இன்றைய வாசகங்கள் உங்களுக்குத் தருகின்றன.

எப்படி?

நம்பிக்கைக்கு பல வரையறைகளும் வடிவங்களும் உள்ளன. இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்பிக்கையின் ஒரு வரையறையும் வடிவத்தையும் நமக்கு விளக்குகிறது: நம்பிக்கை அன்றாடம் வாழ்வாக்கப்பட வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். அப 1:2-3,2:2-4) நாம் காணும் இறைவாக்கினர் அபகூக்கு யூதா நாடு அனுபவித்த மிகப்பெரிய மாற்றத்தின் காலத்தில் வாழ்ந்தார். யோசியா அரசன் நிறைய சமூக, அரசியல் மாற்றங்களைச் செய்தார். சிலைவழிபாட்டுத் தளங்களை ஒழித்தார். அரசவையில் விளங்கிய சிலைவழிபாட்டையும் தடை செய்தார். இப்படியாக கடவுளையும் அவருடைய திருச்சட்டத்தையுமே மையமாக வைத்து ஆட்சி செய்த அவர் திடீரென கிமு 609ல் எகிப்தியருக்கு எதிரான போரில் இறந்து போகின்றார். அதன்பின், எகிப்தியர்கள், பாபிலோனியர்கள் என்ற அந்நியர்கள் யூதாவை ஆட்சி செய்கின்றனர். அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சி நம்பிக்கை கொண்ட பல இஸ்ரயேலர்களின் உள்ளத்தில் நிறைய கேள்விகளை எழுப்பியது: 'கடவுள் இருக்கிறாரா? கடவுள் இருந்தால் ஏன் இப்படி எல்லாம் தீமை நடக்கிறது? தீமையின் மேல் நன்மை வெற்றி கொள்வது ஏன்? நன்மையும் அன்பும் உருவான கடவுள் தீமையை எப்படி அனுமதிக்கலாம்?' - இப்படியாக நிறையக் கேள்விகளை மக்கள் கேட்பதோடல்லாமல் இறைவாக்கினர் அபகூக்கும் கேட்கின்றார்.

'இன்னும் எத்துணை காலத்திற்கு?' என்று இறைவாக்கினர் கேட்கும் கேள்வியில் அவருடைய சோர்வும் தளர்ச்சியும் வெளிப்படுகிறது. 'நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?' என்ற கேள்வியில், 'இன்னும் நான் உயிரோடு இருக்க வேண்டுமா?' என்ற இறைவாக்கினரின் புலம்பல் தெரிகிறது.

வாசகத்தின் இரண்டாம் பகுதியில் ஆண்டவர் அவருக்கு மறுமொழி பகர்கின்றார். இந்த இக்கட்டான வேளையில் இறைவாக்கினரின் பணி என்ன என்பதை முதலில் உணர்த்துகின்றார் ஆண்டவர்: 'எழுதி வை! ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் தெளிவாக எழுதி வை!' கடவுள் சரியான நேரத்தில் குறுக்கிட்டு அனைத்தையும் சரி செய்வார். மக்கள் மடியும்போது கடவுள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில்லை. மாறாக, கடவுள் ஒரு 'நோக்கமும் இலக்கும் பார்வையும்' வைத்துள்ளார். கடவுளின் திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப வரலாறு விரிகிறது. கடவுளே அனைத்து நிகழ்வுகளையும் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என்பதும், தீமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கைச் செய்தி இங்கே புலப்படுகிறது. இதை நம்பாதவர்கள் 'உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர்' எனவும், 'நேர்மையுடையவர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்றும் இறுதியில் வரையறுக்கின்ற ஆண்டவர், 'ஆணவமிக்கோர்' - 'நம்பிக்கையுடையோர்' என்ற இரு குழுவினரில் நம்பிக்கை உடையவர்களே வாழ்வு பெறுவர் என்கின்றார். நேர்மையுடையவரின் நம்பிக்கை என்ன? கடவுள் பார்ப்பதுபோல அனைத்தையும் பார்ப்பது, அல்லது கடவுளின் நோக்கம், இலக்கு, மற்றும் பார்வையை தன்னுடைய நோக்கம், இலக்கு, மற்றும் பார்வையாக ஆக்கியவரே நேர்மையடைவயர். இந்த நம்பிக்கைப் பார்வையை (faith vision) ஒருவர் கொண்டிருத்தலே நம்பிக்கையை வாழ்வாக்குதல்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 1:6-8,13-14) தன்னுடைய உடனுழைப்பாளரான திமொத்தேயுவுக்கு பவுல் வழங்கும் அறிவுரையாக இருக்கின்றது. திமொத்தேயு என்ற இளவலின் கண்காணிப்பின்கீழ் எபேசு ஒப்படைக்கப்படுகிறது (காண். 1 திமொ 1:3). அங்கே அவர் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றார். பலர் அவருடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆகையால், திமொத்தேயு சோர்வுக்கும் விரக்திக்கும் உள்ளாகின்றார். இதை அறிகின்ற பவுல் அவருக்கு உந்துதல் தரும் பொருட்டு இன்றைய இறைவார்த்தைப் பகுதியை எழுதுகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் திமொத்தேயு பெற்றிருந்த நம்பிக்கையைப் பாராட்டுகின்றார்: 'வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது.' இந்த இரண்டு பெண்மணிகளின் நம்பிக்கையை மேல்வரிச்சட்டமாகக் காட்டி, திமொத்தேயுவின் திருத்தூது ஆர்வத்தைத் தூண்டு எழுப்புகிறார். திமொத்தேயு மேல் கைகளை வைத்து செபித்து அவரிடம் பணிப்பொறுப்பை வழங்குகின்றார். இப்போது அதே நிகழ்வைச் சுட்டிக்காட்டி, 'கடவுள் நமக்கு கோழையுள்ளத்தை அல்ல. வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்' என்று பெருமிதம் கொள்கின்றார். மேலும், ஆண்டவருக்குச் சான்று பகர்வதைக் குறித்து வெட்கப்பட வேண்டாம் என்று ஊக்கம் தருகின்றார். தன்னுடைய குழுமத்தில் தன்னை மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும், தன்னைப் பயமுறுத்துகிறார்கள் என்றும் உணர்கின்ற திமொத்தேயு பயம், தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம் (timidity), மற்றும் வெட்கம் கொள்கின்றார். ஆனால், அவர் தன்னுடைய அம்மா, பாட்டி, மற்றும் வழிகாட்டி பவுல் போல வாழ்ந்தால் நம்பிக்கையை வாழ முடியும் என உணர்கின்றார்.

பவுல் தான் அடைந்த துன்பம், அனுபவிக்கின்ற சிறைவாசம், அடைந்த எதிர்ப்புகள் அனைத்தையும் நம்பிக்கை கண் கொண்டு பார்க்கின்றார். இவை எல்லாவற்றிலும் தன் நம்பிக்கையை வாழ்கின்றார் பவுல். இதே போல வாழ திமொத்தேயுவை அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:5-10) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் திருத்தூதர்கள், 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்' என்று ஆண்டவரிடம் வேண்டுகிறார்கள். இப்படிக் கேட்பதால் அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்று பொருள் இல்லை. மாறாக, இயேசுவோடு ஒப்பிட்ட நிலையில் தங்களுடைய நம்பிக்கை குறைவுபடுவதாக ஐயம் கொண்டார்கள். 'கடுகளவு நம்பிக்கை கொண்டு மலையைப் பெயர்த்துவிடலாம்' என்று சொல்கிறார் இயேசு. கடுகு அளவில் மிகவும் சிறியது. மலையோ பெரியது. சிறியதைக் கொண்டு பெரியதைச் செய்துவிடலாம் என்று இயேசு அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையின் சிறப்பை அடிக்கோடிடுகின்றார். இவ்வாறாக, நம்பிக்கை என்பது ஒருவர் பெற்றிருக்கின்ற பொருள் அல்ல. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனக்குள்ள உருவாக்கிக் கொள்கின்ற ஆற்றல் அல்லது திறன் என்கிறார் இயேசு. தொடர்ந்து, இரண்டாவது பகுதியில் அவர்கள் தங்கள் நம்பிக்கையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று கற்பிக்கின்றார் - நம்பிக்கைக்குரிய மற்றும் பலனை எதிர்பாராத பணிவிடையின் வழியாக. தன்னுடைய சமகால மேட்டிமை சமூகத்தைச் சார்ந்தவர்கள் இல்லத்தில் நடக்கும் நிகழ்வின் பின்னணியில், பணியாளர்கள் அல்லது அடிமைகள் எந்தவொரு நன்றியையும், வெகுமதியையும் எதிர்பாராமல் உழைக்க வேண்டிய சூழலைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. பணியாளர் பகல் முழுவதும் வயல்வெளியிலும், மாலையில் தலைவரின் உணவறையிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும், இச்செயலைப் பொறுப்புடனும் கண்ணியமுடனும் அவர் நிறைவேற்றுவதற்காக அவருக்கு எந்தவொரு பாரட்டும் நன்றியும் வழங்கப்படவில்லை. 'பயனற்ற பணியாளர்கள்' என்றால் 'பயனை மையப்படுத்தியோ, மற்றவர்களின் பாராட்டை மையப்படுத்தியோ, நன்றியை எதிர்பார்த்தோ பணியாற்றாத பணியாளர்கள்' என்று பொருள்.

எந்தப் பணியாளருக்கு நம்பிக்கைப் பார்வை இருக்கிறதோ அவர் ஒருவரால்தான் இப்படி பயனையோ, பாராட்டையோ, நன்றியையோ எதிர்பாராமல் பணிசெய்ய முடியும். அதாவது, தன்னுடைய வேலை தன்னுடைய கடமை என்று மட்டும் எண்ணுவது. இப்படி எண்ணும்போது ஒருவர் எளிதில் சோர்வடைந்துவிடுவதில்லை. நான் காலையில் திருப்பலியில் மறையுரை நிகழ்த்தும்போது, 'எல்லாரும் என்னைப் பாராட்ட வேண்டும்' என்பது என் இலக்காக இருந்தால், யாரும் பாராட்டாதபோது நான் சோர்ந்துவிட வாய்ப்புண்டு. மாறாக, மறையுரை நிகழ்த்தும் பொறுப்பை, கடமையை நான் நேர்த்தியாகச் செய்வேன் என்று அங்கே என்னுடைய திருப்தி மற்றும் நிறைவை மட்டும் நான் முன்வைத்தால் நான் அப்படிச் சோர்வடைய மாட்டேன்.

ஆக, நம்பிக்கை என்பது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் வாழ்வாக்கப்பட வேண்டும். அபகூக்கைப் பொறுத்தவரையில் நம்பிக்கை என்பது சந்தேகம் மற்றும் எதிர்மறை நிகழ்வுகள் சூழ்ந்த நேரங்களில் கடவுள் செயலாற்றுவார் என்று கடவுளின் அகன்ற பார்வையைப் பெற்றிருப்பது. திமொத்தேயுவைப் பொறுத்தவரையில் நம்பிக்கை என்பது தான் நிராகரிக்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும் தன்னுடைய திருத்தூது தாகத்தைக் குறைத்துக்கொள்ளாமல் இருப்பது. இயேசுவின் திருத்தூதர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கை என்பது மிகச் சிறியதாக இருந்தாலும் மிகப் பெரிய செயலை ஆற்றும் வல்லமை கொண்டது. மேலும், அன்றாட வாழ்வில் பணிவிடைச் செயல்களில் வாழப்பட வேண்டியது.

நம்பிக்கைப் பார்வை கொண்டிருப்பது என்பது வீட்டின் ஜன்னலுக்கு முன் நின்று வெளியில் பார்க்கும் குறுகிய பார்வை அன்று, மாறாக, வீட்டு மாடியில் நின்று பார்க்கும் அகன்ற பார்வை போன்றது. அந்தப் பார்வை நம் இலக்கை, நோக்கை, செயல்பாட்டை அதிகரிக்கும். அத்தகைய நம்பிக்கைப் பார்வை நம் வாழ்வின் செயல்களை மேம்படுத்தும்.

நம்பிக்கையை நாம் எப்படி வாழ்வாக்குவது?

1. கேள்வி கேட்கும் உள்ளமா? சரணாகதி ஆகும் உள்ளமா?

நம் வாழ்வின் துன்பமான நேரங்களில் நம்முடைய மூளை அதிகமாக வேலை பார்க்கும். 'இப்படியா?' 'அப்படியா?' 'இப்படி ஆகிவிடுமா?' 'அப்படி ஆகிவிடுமா?' 'இது ஏன்?' 'அது எப்படி?' என நிறைய அங்கலாய்க்கும். இம்மாதிரியான நேரங்களில் நாம் மூளையின் வேலையை அப்படியே நிறுத்த வேண்டும். இக்கேள்விகளுக்கு நாம் விடை தேடினால் குழப்பம் இன்னும் அதிகமாகும். இந்த மாதிரியான நேரங்களில் மூளையின் செயல்பாட்டைக் குறைத்து மனத்தின் செயல்பாட்டைக் கூட்ட வேண்டும். மூளையின் செயல்பாடு கேள்வி கேட்பது என்றால், மனத்தின் செயல்பாடு சரணாகதி ஆவது. நான் உரோமையில் இருந்த பங்கில் என்மேல் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ரோஸா பாட்டியின் அணுகுமுறையும் இதுதான். 'சிறுவயதில் என் கணவரை இழந்தேன், என்னுடைய பிள்ளைகள் மூவரும் திருமணம் செய்ய மறுத்தனர், என்னுடைய இரண்டாவது மகளுக்கு மூளை வளர்ச்சி குறைந்தது, என்னுடைய மூத்தமகன் உடல்பருமனால் துன்பப்பட்டார், எனக்கு இடைவிடாத மூச்சுப் பிரச்சினை, என் வீடு ஏலத்தில் போய்விட்டது, ஊரில் உள்ள தோட்டம் வீணாய்க் கிடக்கிறது. ஆனால், நான் பார்க்கும் பார்வை ஒரு ஜன்னலுக்கு முன் நின்று பார்ப்பது போல. அவருடைய பார்வையில் இவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். அவர் பார்த்துக்கொள்வார்' என்று ஒரு முறை பகிர்ந்துகொண்டார். பல நேரங்களில் வெறும் ஜன்னலின் சிறிய ஓட்டைக்குள் பார்த்துவிட்டு, 'இதுதான் நாம்! இதுதான் உலகம்! இவ்வளவுதான் மனிதர்கள்! கடவுளும் இல்லை ஒன்றும் இல்லை!' என்று நாம் சோர்ந்துவிடுகிறோம். இல்லை! 'நேர்மையுடையவர்' - 'அதாவது கடவுளைப் போல பார்ப்பவர்,' 'நம்பிக்கை ஆற்றல்' (faith energy), 'நம்பிக்கை பார்வை' கொண்டிருப்பவர் அவருடைய நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். ஆக, கேள்விகள் குறைப்பது நம்பிக்கையை வாழ்வதற்கான முதல்படி.

2. கோழையுள்ளமா? வல்லமையா?

'கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் எல்லாம் நன்றாக நடக்கும்' என்ற புரிதலை திமொத்தேயு கொண்டிருந்ததால், சின்னச் சின்ன பிறழ்வும் அவரைத் தாக்கிவிடுகிறது. ஆகையால் எளிதில் மனம்தளர்ந்துவிடுகிறார். கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருப்பதால் எல்லாம் நன்றாக இருக்கும் எந்த ஆட்டோமேடிக் தத்துவமும் உலகில் இல்லை. ஒன்றும் நன்றாக நடக்கவில்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை இருந்தால் நாம் வல்லமை பெறுவோம் என்பதே சரியான பார்வை. ஆக, கடவுளின் உடனிருப்பு துன்பத்தை இல்லாமல் செய்துவிடும் என்று நினைக்கக் கூடாது. மாறாக, கடவுளின் உடனிருப்பால் நான் துன்பத்தை ஏற்க முடியும் என்று நினைக்க வேண்டும். பவுல் திமொத்தேயுவின் வாழ்வில் நடந்த அருள்பொழிவு நிகழ்வை இங்கே சுட்டிக்காட்டுகிறார்: 'உன் மீது என் கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையைத் தூண்டி எழுப்புமாறு ...' நான் என்னுடைய தனிமை, விரக்தி, சோர்வு, பயம் போன்ற நேரங்களில் என்னுடைய அருள்பொழிவு நாளையே நினைவுகூர்வதுண்டு. அன்று என்னில் விதைக்கப்பட்ட வல்லமை என்ன ஆயிற்று? நான் ஏன் கோழையுள்ளம் கொள்கிறேன்? நான் ஏன் பயப்படுகிறேன்? நான் ஏன் பின்வாங்குகிறேன்? நம் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இருக்கும் - அருள்பொழிவு, திருமண நாள், உறுதிப்பூசுதல் நாள், வேலை கிடைத்த நாள் - இப்படி ஏதாவது ஒரு நேர்முகமான நிகழ்வுகளில் நம் மனத்தை நங்கூரமிட்டுக்கொள்ளுதல் (anchoring) நம்பிக்கையை வாழ்வதற்கான இரண்டாம் படி.

3. செயல்களின் பயனை எதிர்பாராமல் வாழ்வது

இன்று சின்னச் சின்னச் செயல்கள் செய்தாலும் அதில் நம் பெயர் வர வேண்டும் என நினைக்கிறோம். பிறரின் பாராட்டுக்கள், ஏற்றுக்கொள்ளுதல், விமர்சனங்கள் நம் செயல்களை நிறையவே பாதிக்கின்றன. ஆனால், நம்பிக்கைப் பார்வை கொண்டவர்கள் தங்களுடைய செயல்களோடும் அவற்றின் கனிகளோடும் ஒருபோதும் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ளவே மாட்டார்கள். நான் என்பது என் செயல்களையும் தாண்டிய ஒன்று. எடுத்துக்காட்டாக, இன்று எனக்கு ஒரு விபத்து நடந்து என் கைகால்கள் முடமாகிப் போய், என்னால் ஒரு செயலும் செய்ய முடியவில்லை என்றால், 'நான் பயனற்றவன்' என்று ஆகிவிடுவேனா? ஆக, பயன்பாட்டையும் தாண்டிய ஒரு பண்பு மனிதனுக்கு உண்டு. நான் ஆற்றும் செயல்களோடு என்னைக் கட்டிக்கொள்ளாமல் என்னைச் செயல்படுவதற்கு அழைத்த என் தலைவனின் பார்வை கொண்டு நான் அனைத்தையும் பார்த்தால் என் மகிழ்ச்சியை நான் இழந்துவிட மாட்டேன். இதையே, 'விடாமுயற்சியோடும் முணுமுணுக்காமலும் பணி செய்யுங்கள்' என்று கற்பிக்கின்றார் பவுல்.

இறுதியாக,

நம்பிக்கையை வாழ்வாக்குவது என்பது பறவை கூடு கட்டுவது போன்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குச்சி என்று சேர்த்துக்கொண்டே இருப்பது போன்றது. அன்றைய வேலை அன்றைக்கு நிதானமாக நேர்த்தியாகச் செய்வது. சிறு குச்சிகள் அழகான கூடாக மாறும் என்ற பார்வையை மங்காமல் பார்த்துக்கொள்வது.

இப்படிப்பட்ட நம்பிக்கையாளரே, இன்றைய திருப்பாடல் ஆசிரியர் போல, 'அவரே நம் கடவுள். நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்' (காண். திபா 95:7) என்று சொல்ல முடியும்.