இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு

காணாமற்போவதன் சுகம்!

விடுதலைப் பயணம் 32:7-11,13-14
1 திமொத்தேயு 1:12-17
லூக்கா 15:1-32

20 வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் மாலை செய்திகள் பார்க்க யார் வீட்டுக்காவது ஓடிப் போய் உட்கார்ந்தால், அல்லது பஞ்சாயத்து போர்டு டிவி முன் இடம் போட்டு பார்த்தால், முதலில் 'காணாமற்போனவர்கள் பற்றிய அறிவிப்பு' என்று வரிசையாக அறிவித்துக் கொண்டிருப்பார்கள். இப்போது அத்தகைய விளம்பரங்கள் டிவி நிகழ்ச்சிகளில் வருவதில்லை. வரிசையாக அறிவிக்கப்படும் ஒவ்வொரு பெயரையும் பார்க்கும்போது, நானும் காணாமல்போனால் என் பெயர் டிவியில் வருமே என நான் நினைத்ததுண்டு.

இன்று காணாமல்போன மனிதர்கள், நாய்க்குட்டிகள் என நிறைய விளம்பரங்கள் பொதுவிடங்களிலும், பொது போக்குவரத்து சாதனங்களிலும் ஒட்டப்படுகின்றன. சில இடங்களில் பெரிய வால்போஸ்டர்களும் இருக்கின்றன. இந்த நோட்டீஸ்கள் தேடுபவரின் வசதிக்கும், காணாமல்போனவரின் வசதிக்கும் ஏற்றாற்போல இருக்கும். சில ஃபோட்டோக்களோடு இருக்கும். சில அலங்கோலமான கையெழுத்துக்களில் இருக்கும்.

வீட்டைவிட்டு காணாமல்போனவர்கள், போர் மற்றும் இயற்கை சீரழிவுகளில் இடம்பெயர்ந்து காணாமல்போனவர்கள், திருவிழாக்களில் காணாமல்போனவர்கள், பகை மற்றும் வன்முறையால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எண்ணற்ற காணாமற்போனவர்களைப் பற்றிக் கேள்விப்படுகின்றோம்.

இறந்தவர்களும் காணாமல்தான் போகிறார்கள். அவர்களை நம் கண்களால் காண முடிவதில்லை. இருந்தாலும் அவர்களை இனி நாம் காணவே முடியாது என்பதால் அவர்களை நாம் தேடுவதில்லை. ஆக, ஒருவரின் இறப்பு அவரை நாம் தேடுவதை நிறுத்திக் கொள்ள வைக்கிறது. ஆக, ஒருவர் இருந்தாலும் நாம் தேடுவதில்லை. அவர் இறந்தாலும் நாம் தேடுவதில்லை.

நாம் தேடுபவர்கள் யார் என்றால் இதற்கு இடைப்பட்ட காணாமல்போனவர்களைத்தாம். காணாமல்போவது அதன் உரிமையாளருக்கு ஆற்ற முடியாத சோகத்தை தருகிறது. கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் காணாமல்போனவர்கள் தேடுபவர்களைப் பற்றி கவலைப்படுவார்களா? பல நேரங்களில் இல்லை.

சிலர் மற்றவர்களைப் பழிவாங்குவதற்காகவும், பிடிவாதத்தாலும்கூட காணாமல்போவார்கள். சிலர் அடுத்தவர்களுக்கு பயந்து கொண்டு காணாமல்போவார்கள். வீட்டிற்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படிப்பட்டவர்கள். காணாமல்போகும் போது அடுத்தவர்கள் நம்மைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தாலும் அடுத்தவரின் பார்வையிலிருந்து நாம் விலகி இருப்பது நமக்கு சுகமாகத்தான் இருக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு இத்தகைய சுகத்தைப் பற்றியே பேசுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 32:7-11, 13-14) யாவே இறைவனுக்கும், மோசேக்கும் சீனாய் மலையில் நடந்த உரையாடலின் இறுதிப்பகுதியை வாசிக்கின்றோம். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பாலும் தேனும் பொழியும் கானான் நாடு நோக்கி அவர்களை அழைத்து வருகின்றார் ஆண்டவராகிய இறைவன். அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களுக்கு 'பத்து கட்டளைகள்' வழங்க மோசேயை அழைக்கின்றார். 40 நாட்களாக இறைவனோடு பேசிக்கொண்டிருந்த மோசே காணாமல்போய்விட்டார் என நினைக்கின்ற அவரது அண்ணன் ஆரோனின் தலைமையில் மக்கள் தங்களுக்கென்று ஒரு பொற்கன்றுக்குட்டியை செய்து கொண்டு அதை வழிபடத் தொடங்குகின்றனர். வழிபாடு என்றால் ஆலயத்திற்குள் அமர்ந்து கொண்டு மெதுவாக செபிப்பதா? இல்லை. மேளதாளம் என்று கொட்டி முழக்குகின்றார்கள். இவர்களின் முழக்கம் மலைமேல் மோசேயிடம் பேசிக்கொண்டிருந்த ஆண்டவரின் காதுகளில் விழுகின்றது. உடனே கோபம் கொள்ளும் ஆண்டவர் மோசேயை நோக்கி, 'உன் மக்கள்' என்று வசைபாட ஆரம்பிக்கின்றார். அதாவது, எகிப்து நாட்டில் காணாமல் போய் கிடந்தவர்களை கண்டெடுத்து வந்த என்னை மறந்துவிட்டு மீண்டும் காணாமல்போய்விட்டார்கள் என்று அங்கலாய்க்கின்றார். கடவுளிடமிருந்து காணாமல்போவதை சுகம் என்றே கருதுகின்றனர் மக்கள். இருந்தாலும் மோசே அவர்களுக்காக பரிந்து பேசி ஆண்டவரின் மனத்தை மாற்றுகின்றார். 'உன் மக்களே உன் உரிமைச்சொத்து' என ஆண்டவருக்கு நினைவுபடுத்தும் மோசே அவர்களை ஒருபோதும் கைவிட்டுவிட வேண்டாம் என வருந்திக் கேட்டுக்கொள்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 1:12-17), தன் அன்புப் பிள்ளை திமொத்தேயுவுக்கு எழுதும் கடிதத்தில் தன் பழைய வாழ்வை நினைவுகூறும் பவுல், 'ஆண்டவரை நான் பழித்துரைத்தேன், துன்புறுத்தினேன், இழிவுபடுத்தினேன். ஆனால் அவர் என்னை நம்பிக்கைக்குரியவன் என்று கருதி திருத்தொண்டில் அமர்த்தினார்' என்கிறார். அதாவது, காணாமல்போன பவுலைத் தேடிக் கண்டுகொள்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தியில் (காண். லூக் 15:1-32) காணாமல்போன ஆடு, நாணயம், மகன் என்ற மூன்று எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கின்றார் இயேசு. இயேசு சொன்ன இந்த உவமைகளின் பின்புலம் என்னவென்றால் விருந்து நடக்கும் இடம். இயேசு பாவிகளோடு(!) உணவருந்திக் கொண்டிருக்கின்றார். அவரின் இந்தச் செயலைக் காணும் பரிசேயர்களும், மறைநூல் அறிஞரும் அவருக்கு எதிராக முணுமுணுக்கின்றனர்.

இந்த மூன்று உவமைகளும் ஒரு குறிப்பிட்ட வரிசை நிகழ்வுகளைக் கண்டுபிடிக்கிறது.

காணாமல்போதல் - உரிமையாளர் தேடுதல் - கண்டுபிடித்தல் - கொண்டாடுதல்

ஆடு காணாமல் போகிறது - உரிமையாளர் தேடுகின்றார் - கண்டுபிடிக்கின்றார் - கொண்டாடுகின்றார்.

திராக்மா நாணயம் காணாமல் போகிறது - உரிமையாளர் தேடுகின்றார் - கண்டுபிடிக்கின்றார் - கொண்டாடுகின்றார்.

இந்த வரிசையில் பார்த்தோம் என்றால், ஊதாரி மைந்தன் (தந்தை) உவமையை நாம் புதிய கோணத்தில் பார்க்கலாம். காணாமல்போன ஆட்டையும், நாணயத்தையும் அவற்றின் உரிமையாளர்கள் தேடுகின்றனர். ஆனால், காணாமல்போன மகன் எடுத்துக்காட்டில் அவரின் தந்தை தேடுகிறாரா? நன்றாகப் பார்த்தோமென்றால் 'இல்லை' என்ற பதிலே மிஞ்சுகிறது. தந்தை தன் மகனுக்காக காத்திருக்கிறாரே தவிர, அவரைத் தேடவில்லை. இல்லையா? முதல் இரண்டு உவமைகளில் 'ஹெவ்ரிஸ்கோ' (தேடுதல்) என்ற வினைச்சொல்லும், மூன்றாம் உவமையில் 'ஹொராவோ' (பார்த்தல்) என்ற வினைச்சொல்லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்க காணாமல்போன மகனை யார் தேடியது? யார் கண்டுகொள்கிறார்? யார் கொண்டாடுகின்றார்?

இளைய மகன் தன்னையே கண்டுபிடித்துக்கொள்கிறான்.

தானே விரும்பி காணாமல் போகின்றான் மகன். அவனுக்கு தன் தந்தையின் மேல் ஏதோ ஒரு கோபம் இருந்திருக்கிறது. ஒருவேளை அவருடைய உடனிருப்பைக்கூட அவன் தாங்க முடியாத சுமையாகப் பார்த்திருக்கலாம். ஆகையால்தான் அவரிடமிருந்து காணாமல் போக நினைக்கின்றான். அப்படி நினைத்தவன் தான் மட்டும் போகாமல், தன்னைப் பற்றிய எந்த நினைவும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்றெண்ணி தனக்குரியது அனைத்தையும் தூக்கிக் கொண்டு புறப்படுகின்றான். போன வேகத்தில் தான் கொண்டு வந்த அனைத்தையும் செலவழிக்கின்றான். அதாவது, தன்னிடம் இருக்கும் பொருள் அல்லது பணம் அவனுக்கு தன் தந்தையை நினைவுபடுத்தியிருக்க வேண்டும். ஆகையால்தான் அவற்றை செலவழிப்பதில், அழிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றான். ஆனால், இந்த முரட்டுக் கோபத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது அவனது வறுமையும், பசியும், வெறுமையும். மகனாக இருந்தவன் வேலைக்காரனாக மாறுகின்றான். பன்றிகள் தின்னும் நெற்றுக்களே அவனுக்குக் கிடைக்கிறது.

அப்படி ஒருநாள் பன்றிகளின் நெற்றுக்களை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்கு தன் (தந்தையின்) வீட்டு நினைவு வருகிறது. இந்நேரம் ரொட்டிகள் சுட்டு எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்களே. இந்த உணர்வை ஆங்கிலத்தில் நொஸ்டால்ஜியா என அழைக்கின்றனர். இது ஒரு முக்கியமான உணர்வு. இந்த உணர்வுக்கு நிறைய ஆற்றல் உண்டு. 'ஐயோ! நான் அப்படி இருந்தேனே! இன்று நான் இப்படி இருக்கிறேனே!' என்ற உணர்வு பல நேரங்களில் நம்மையும் மாற்றிவிடும். அப்படித்தான் மாறிப்போகின்றான் இந்த இளைய மகன்.

அவன் அந்நேரம் அறிவு தெளிவுபெறுகின்றான். அவன் 'தனக்குள் வந்தான்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் லூக்கா. அதாவது இதுவரை காணாமல்போயிருந்தவன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். ஆக, மூன்றாம் உவமையில் இளைய மகன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். காணாமல்போனது அவனுக்கு சுகமாக மாறுகிறது. ஏனெனில் காணாமல்போன நிலையில்தான் அவன் தன்னையே கண்டுபிடிக்கின்றான். தன்னைக் கண்டுபிடித்த அவன் இனியும் காணாமல்போகவே மாட்டான். முடிவெடுத்து புறப்படுகின்றான்.

தன்னையே கண்டுபிடித்த இளைய மகன் இனி யாரையும் எளிதாக எதிர்கொள்வான். ஆகையால்தான் தன் வீட்டிற்கு திரும்புவதைப் பற்றி எந்தவொரு பயமும் அவனுக்கு இல்லை. அப்பாவா, அண்ணனா பார்த்துக்கொள்வோம் என புறப்படுகின்றான். மகன் என்ற நிலையிலிருந்து வேலையாள் என்ற நிலைக்கு இறங்கியாயிற்று. அந்த நிலையிலேயே தன்னை இணைத்துக்கொள்ள நினைத்து வீடு வந்து சேர்ந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும், உடலுக்கு ஆடையும் கிடைக்க வீடே விருந்தின் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறது.

இயேசு இந்த இடத்தில் உவமையை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் தொடர்கிறார். இவ்வளவு நேரம் திரைக்குப் பின் இருந்த மூத்த மகன் உள்நுழைகின்றான். அவன் தந்தைக்கு அருகில் இருந்தாலும் அவனும் காணாமல்போய்தான் இருக்கின்றான். ஆனால், அவன் காணாமல்போன தன் நிலையை கண்டுகொள்ளாமல் இருக்கின்றான். ஆகையால்தான் அவனால் தன் தம்பியை தம்பி என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உன் மகன்' என்று மூன்றாம் நபரில் விளிக்கின்றான். இளைய மகன் தன்னையே கண்டுகொண்டதால் மகிழ்ச்சி அடைகின்றான். மூத்த மகன் தன்னையே கண்டுகொள்ளாததால் விருந்தின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள மறுக்கின்றான்.

ஆக, இந்தக் கதையின் நாயகன் தந்தை அல்ல. மாறாக, இளைய மகனே. காணாமல்போவதே சுகம் என்று நினைத்தவன், தன்னையே கண்டுகொள்கின்றான். அவன் தன்னையே கண்டுகொண்டதுதான் மேலானது.

எப்படி ஆடு கண்டுபிடித்தவரும், நாணயம் கண்டுபிடித்தவரும், அவற்றை எடுத்துக்கொண்டு அண்டை வீட்டுக்கு ஓடி தங்கள் மகிழ்வைக் கொண்டாடுகிறார்களோ, அதுபோல இளைய மகனும் தான் கண்டுபிடித்த தன்னையே எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு ஓடுகின்றான். 'அப்பா, நான் என்னையே கண்டுபிடித்துவிட்டேன்!' என்று அவரின் கைகளில் விழுகின்றான்.

நாம் ஆசையாய் அணிந்து கொண்ட திருமண மோதிரம் திடீரென்று காணாமற்போய் அதைத் தேடும்போது நாம் அதனுடன் ஒரு புதிய உறவிற்குள் தான் நுழைகின்றோம். கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வைத்து வாங்கிய பைக் திடீரென்று காணாமற்போய் மீண்டும் கிடைக்கும்போது முதலில் பைக் வாங்கிய சந்தோஷம் நம்மைத் தொற்றிக்கொள்கின்றது.

முதல் வாசகத்தில் காணாமல்போன இஸ்ராயேல் மக்களை மோசே கண்டுபிடித்துக் கொடுக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில் காணாமல்போன பவுலை இறைவனே தேடிக் கண்டுபிடிக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் காணாமல் போன மகன் தன்னைத் தானே கண்டு கொள்கின்றார்.

ஆக, கண்டுபிடித்தல் என்பது மற்றவர்களின் உதவியாலும், இறைவனின் இரக்கத்தாலும், நம் சொந்த முயற்சியாலும் என மூன்று நிலைகளிலும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு முன்வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

அ. மோசேயிடம் இருந்த நற்குணம்

என்ன நற்குணம்? அடுத்தவர்கள் காணாமல்போனால் எனக்கென்ன? என ஓய்ந்திராமல், 'அவர்கள் உன் மக்கள்' என இறைவனுக்கு தன் மக்களை அறிமுகம் செய்துவைக்கின்றார். 'உனக்கு மட்டும் வாழ்வின் நூலில் இடம் கிடைக்கும்' என்று கடவுள் சொன்னாலும், 'எனக்கு கூட வேண்டாம். மற்றவர்களுக்கு கொடும்!' என்று தன்னையே பின்தள்ளி தன் மக்களை முன்வைக்கின்றார். தன் முதுகுக்குப் பின்னால் காணாமல்போனவர்களை தன் முன்னே நிறுத்துகின்றார். இந்த பெருந்தன்மை நமக்கு தேவை. இன்று நிறைய வகையான காணாமல்போனவர்கள் இருக்கிறார்கள். வீட்டை விட்டு ஓடுபவர்கள் மட்டுமே காணாமற்போனவர்கள் அல்லர். ஏதோ ஒரு வகையில் எல்லாம் இழந்தவர்களும், வேலை தேடும் இளைஞர்களும், படிப்பைப் பாதியில் நிறுத்தித் தொடர வழியில்லாமல் நிற்கும் சின்னஞ்சிறு குழந்தைகளும், பல துன்பங்களுக்கு ஆளாகும் பெண்களும், வலி, விரக்தி, வேதனை, கலக்கம் என கண்ணீர் வடிக்கும் அனைவரும் காணாமற்போனவர்கள்தாம். இவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இரண்டு நிலைகளில் இருக்கலாம்: ஒன்று, இவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே இருந்து விடுவது. யார் எப்படி இருந்தால் என்ன, நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற கண்டுகொள்ள மனநிலை. மற்றொன்று, அவர்களைத் தேடிச்செல்ல மெனக்கெடுவது. தேடிச் செல்வதன் சுமையை அனுபவிக்கத் தயாராயிருப்பது.

ஆ. பவுல் போல நினைத்துப் பார்ப்பது

நாம் ஒவ்வொருவரும் இறைவனின் இரக்கத்தை நிறைய வகைகளில் அனுபவித்திருக்கிறோம். ஆனால் நம் அனுபவங்களை பல நேரங்களில் மறந்துவிடுகின்றோம். பவுலைப் பொறுத்தவரையில் இறைவனின் இரக்கம் எப்போதும் அவர்முன் தொங்கிக் கொண்டே இருக்கின்றது. மேலும் பவுலின் அனுபவம் தன்னைப் பற்றி பெருமை கொள்ளாமல் இறைவனின் இரக்கத்தை முன்னிறுத்துவதாக அமைகிறது.

இ. அந்த மூன்று பேர்

தந்தை காத்திருக்கிறார். சில நேரங்களில் தேடுதலை விட காத்திருத்தல் அவசியமானது. நம் அன்பிற்கு உரிய ஒருவர் நம்மைவிட்டு காணாமல்போக நினைக்கிறார் என்றால், அல்லது காணாமல்போகிறார் என்றால், நாம் உடனே அவர்பின் தேடி ஓடுவது முறை அல்ல. தந்தையைப் போல பொறுமையும் காத்திருத்தலும் தேவை. சில நேரங்களில் தன்னை அறிவதற்கு இளைய மகனுக்கு தனிமையும் தூரமும் தேவை. ஆக, அந்த மகனின் தனிமையையும், தூரத்தையும் அனுமதிக்கிறார் தந்தை. என்று வந்தாலும் அவன் என் மகன்தான் என்ற நிலையில் காத்திருக்கிறார். தன்னையே கண்டுபிடித்த ஒருவரால்தான் இப்படி பொறுமைகொண்டிருக்க முடியும்.

இளைய மகன் காணாமல்போகின்றான். கண்டுபிடிக்கின்றான். ஆம். காணாமல்போனாலும் அவன் தன்னையே கண்டுகொள்கிறான். தன்னைக் கண்டுகொள்தல்தான் இன்று நாம் செய்ய வேண்டிய பெரிய வேலை. நம் உறவுகளில், ஏன் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவில்கூட சில நேரங்களில் தூரம் தேவை. அவரின் இல்லாமையை நான் உணர வேண்டும். அவர் என்றும் என்னோடு என்று பாடிக்கொண்டே அவரோடு ஒட்டியிருப்பதும் சரியல்ல. உறவுநிலையில் உள்ள தூரத்தில்தான் நாம் நம்மையும், நம் உறவுநிலையில் உள்ளவர்களையும் புரிந்து கொள்கிறோம். ஒரு மரத்தின் நிழலில் மற்றொரு மரம் வளர முடியாது என்பது இயற்கை நியதி. அதுபோலவே உறவுகளின் நிழலில் எப்போதும் இருப்பதும் வளர்ச்சி தராது. சில நேரங்களில் நாம் வன்முறையாக மரத்தை பிடுங்கி அடுத்த இடத்தில் நட வேண்டும். இளைய மகன் தானாகவே தூரமாகச் சென்றான். தானாகவே திரும்பி வந்தான். மேலும், இயற்பியல் விதி சொல்வதுபோல தூரத்தில் இருந்து எறியப்படுகின்ற பந்து வேகமாக வந்து மோதும். நிறைய அழுத்தத்தை கொண்டிருக்கும். இளைய மகன் தூரமாக சென்றாலும் தன் தந்தையின் உள்ளத்தில் இன்னும் அதிக அழுத்தத்தோடு பதிந்து போகிறான்.

மூத்தமகன் காணாமலும் போகவில்லை. கண்டும் பிடிக்கவில்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்து கொண்டு கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க மட்டும்தான் இந்த மகனுக்கு நேரம் இருக்கிறது. இறுதிவரை தான் யார் என்றும், தன் தந்தை யாரென்றும், தன் தம்பி யாரென்றும் கண்டுபிடிக்காமலேயே போய்விடுகின்றான்.

காணாமல்போவது நம்மையே கண்டுபிடிக்கத்தான் என்றால் காணாமல்போவதும் சுகமே!