இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

அவர் மடியில் மகிழ்ச்சி!

எசாயா 66:10-14
கலாத்தியர் 6:14-18
லூக்கா 10:1-12, 17-20

ஒரு குழுவினர். அவர்கள் சென்றார்கள். அவர்கள் வெறுங்கையராய்ச் சென்றார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போல சாந்தமாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களோ ஓநாய்களைப் போல ஆபத்தானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஒன்றுமில்லை. தோளில் பைகள் இல்லை. மாற்று உடைகள் இல்லை. அரையில் பணம் இல்லை. பாதங்களில் மிதியடிகள் இல்லை. அவர்கள் போகும் வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்தவில்லை. ஏனெனில் அடுத்தவருக்கு வணக்கம் செலுத்தி முகஸ்துதி செய்யும் குணமும் அவர்களிடம் இல்லை. யாருடைய உறவும் அவர்களுக்குத் தேவையாய் இல்லை. உறவுகளை அவர்கள் சுமைகளாய் நினைத்தார்கள். தங்கள் கண்களில் பட்ட வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் முன் வைக்கப்பட்டதை உண்டார்கள். அங்கிருந்தவர்களின் நோய்களைக் குணமாக்கினார்கள். இறையரசு வந்துவிட்டது என்ற செய்தியைச் சொன்னார்கள். சிலர் கதவுகளைத் திறந்து ஏற்றுக்கொண்டனர். பலர் கதவு இடுக்கின் வழியே இவர்களைப் பார்த்துவிட்டு, கதவுகளைத் திறக்கவில்லை. சிலர் இவர்களோடு வாக்குவாதம் செய்தனர். சிலர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களின் வேலை முடிந்து தன் தலைவரிடம், தன்னை அனுப்பியவரிடம் திரும்பினார்கள். இவர்களின் உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி. இவர்களைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். ஒன்றும் இல்லாமல் இருந்தாலும், எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருந்தாலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவர்களின் தலைவர் அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்துகின்றார்: 'உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்று மகிழுங்கள்!' என்கிறார். மனிதர்களின் நினைவில் மறைந்துவிடும் இவர்களின் பெயர்கள் அழியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

இன்னொரு குழுவினர். செழிப்பாக வாழ்ந்தார்கள். நிலம், கடவுள், ஓய்வுநாள், திருச்சட்டம் என வாழ்க்கை இனிதே நகர்ந்தது. ஆனாலும், உடன்படிக்கை மீறலால் நாடுகடத்தப்பட்டார்கள். அடிமைகளாக அடுத்த நாட்டிலும், அநாதைகளாக சொந்த நாட்டிலும் திரிந்தனர். அவர்களின் இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தன் தோள்மேல் சுமந்து, 'இதோ! என் மகன்! என் மகள்!' என வலம் வருகின்றார். 'உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்' என்கிறார் அவர்.

இருவருமே இழந்தார்கள்! ஆனால், இழந்த அவர்களை அவர் தன் மடியில் ஏந்திக்கொண்டார். அவரின் மடியில் மகிழ்ச்சி. அவரின் மடியில் மட்டுமே மகிழ்ச்சி!

கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் பாடங்களைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும், தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை இறையரசுப் பணிக்கு அனுப்புவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-12, 17-20) வாசிக்கக் கேட்டோம். எல்லாவற்றையும் இழந்தவர்களாய் அவர்களை வழியனுப்பும் இயேசு, இறைவனின் மடியில் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள அவர்களுக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:10-14), பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா குலத்தினர் தங்களின் சொந்த நகராம் எருசலேம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையின் செய்தியை விதைக்கின்ற மூன்றாம் எசாயா, எருசலேமை ஒரு தாயாக உருவகித்து அந்தத் தாயை நோக்கி அனைத்து நாட்டினரும் வர வேண்டும் எனவும், அவளின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' (66:13) என்று கடவுளைத் தாயாக உருவகிக்கும் எசாயா, அதே உருவகத்தைக் கொண்டு எருசலேமையும் உருவகிக்கின்றார். 'அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகள்,' 'அவளின் மார்பு,' 'பால்,' 'அவளின் மடி' என்னும் வார்த்தைகள் புதிதாக குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயை நம் கண்முன் கொண்டு வருகின்றன. எருசலேம் நகரம் இயற்கையாகவே மலைப்பாங்கான பகுதி. மலைமுகடுகளை மார்பாக உருவகிக்கின்ற எசாயா, முகடுகளில் வழிந்தோடும் நீரைப் பால் எனவும், முகடுகள் ஏற்படுத்தும் பள்ளத்தாக்குகளை தாயின் மடி என்றும் உருவகிக்கின்றார். முலைகள், மார்பு, பால், மடி போன்றவை குழந்தைக்கு மகிழ்ச்சி, நிறைவு, அல்லது இன்பம் தந்தாலும், இந்த மகிழ்ச்சிக்கு முன்னால் அந்தத் தாய் அனுபவித்த மரண வேதனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பேறுகால வேதனையுற்று தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்த துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனை போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. ஏனெனில் இறைவன் அவர்களை மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார் இறைவன். இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இழப்பு அவர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்துவிட்டது.

'நீங்கள் பால் பருகுவீர்கள்,' 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்,' 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' என மகிழ்ச்சிக்கு மூன்று பரிமாணங்களைத் தருகின்றார் எசாயா. 'பால் பருகுவீர்கள்' - தாய்மையின் நிறைவே இது. ஒரு தாய் தன் இரத்தத்தை பாலாக மாற்றி தன் குழந்தையின் பசி தீர்க்கின்றாள். தன் உடலில் பத்து மாதங்கள் சுமந்து குழந்தைக்கு உடலும், இரத்தமும் கொடுத்த ஒரு தாய் தொடர்ந்து பால் வழியாக தன் உடலையும் இரத்தத்தையும் குழந்தைக்குக் கொடுக்கின்றாள். (தன் உடலையும், இரத்தத்தையும் கொடுக்க வல்லவள் பெண் மட்டுமே. அப்படி இருக்க, இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் எடுத்து, 'இது என் உடல்,' 'இது என் இரத்தம்' என ஓர் ஆண் கொடுப்பதை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி நியாயப்படுத்துவதை இயற்கையை இருட்டடிப்பது போல இருக்கிறதே! சிந்திக்க வேண்டிய கேள்வி.) இறைவனின் இரத்தமும், நாடு திரும்பியவர்களின் இரத்தமும் இனி ஒன்றாகிவிடும். 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்' - தாயின் இந்தச் செயல் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. மார்பில் அணைத்துச் சுமக்கப்படாத குழந்தைகள் வளர்ந்தவர்களாகும்போது பாதுகாப்பின்மையால் வருந்துகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்ட உளவியல் உண்மை. எதிரிகளின் கைகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தவர்கள் இனி இறைவன் தரும் பாதுகாப்பை பெறுவார்கள். 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' - எந்த ஒரு ஆபத்தும் இல்லாத நிலையை இது குறிக்கிறது. எந்த ஒரு பதட்டமும், கலக்கமும் இல்லாமல் தரையில் அமர்ந்திருக்கும் தாய் தன் குழந்தையைத் தன் மடியில் அல்லது தொட்டிலில் கிடத்தி தாலாட்டுகிறாள். போரும், வன்முறையும், இயற்கைச் சீற்றமும் இருக்கும் இடத்தில் ஒரு தாயால் அமரவோ, தன் குழந்தையைத் தாலாட்டவோ முடியுமா? இல்லை. ஆக, இனி போர் இல்லை. வன்முறை இல்லை. இயற்கைச் சீற்றம் இல்லை.

ஆக, எல்லாவற்றையும் இழந்தவர்கள் ஆண்டவரின் மடியில் நிறைவான மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் முதல் வாசகத்தில்.

தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியை தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் பவுல் தன் கடிதத்தை நிறைவு செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 6:14-18). 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன்' என்னும் பவுல், 'என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதன் அடையாளம்' என்று சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

இழப்பின், அழிவின், அவமானத்தின் சின்னமாகிய சிலுவையைப் பற்றி பவுல் எப்படி பெருமைப் பட முடியும்? தன் பணியின் தோல்வி மற்றும் தான் அடைந்த துன்பங்களின் அடையாளமான தழும்புகளைக் கொண்டு எப்படி பெருமிதம் கொள்ள முடியும்? மேலும், 'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, சிலுவை. அந்தச் சிலுவையின் ஒரு பக்கத்தில் உலகம். மறு பக்கத்தில் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது.

ஆக, வலி, துன்பம், அவமானம், அழிவு அனைத்தும் இழப்புகள் என்றாலும், அந்த இழப்புகள் பவுலுக்கு மகிழ்ச்சியை நிறைவாகக் கொடுக்கின்றன.

சிலுவை என்பதை சீடத்துவத்தின் நீட்சி என்று போதிக்கும் இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை தாம் போகவிருந்த ஊருக்கு தமக்கு முன் இருவர் இருவராக அனுப்புகிறார். இந்த நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில கிரேக்க பிரதிகள் 'எழுபது பேரை' அனுப்பியதாகக் குறிப்பிடுகின்றன. நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்குப் பின் இருந்த 72 (அல்லது 70) நாடுகளையும் (காண். தொநூ 10), அல்லது மோசே தன் உதவிக்காக தெரிவு செய்த 72 (அல்லது 70) பேரையும் (காண். விப 24:1, எண் 11:16, 24) இது குறிக்கலாம். இருவர் இருவராக அனுப்பக் காரணம் மோசேயின் சட்டப்படி இருவரின் சாட்சியமே செல்லும் என்பதற்காகவும் (காண். இச 19:15) அல்லது பாலைநிலப் பகுதிகளின் ஆபத்து காரணமாக இருவர் சேர்ந்து அனுப்பப்படுதல் மரபாகவும் இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலும், பேதுரு மற்றும் யோவான் (8:14), பவுல் மற்றும் பர்னபா (11:30, 13:1), பர்னபா மற்றும் மாற்கு (15:39), பவுல் மற்றும் சீலா (15:40) என திருத்தூதர்கள் இருவர் இருவராகவே பணி செய்கின்றனர்.

'இருவர்' என்னும் இலக்கியக்கூறும் இங்கே கையாளப்படுகிறது. இங்கே இயேசு சொல்லும் பழமொழிகளும் இரண்டு: (அ) 'அறுவடையோ மிகுதி. வேலையாள்களோ குறைவு.' (ஆ) ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி. மக்கள் சீடர்களை ஏற்றுக்கொள்ளும் விதமும் இரண்டு: (அ) 'நேர்முகமாக ஏற்றுக்கொள்வார்கள்.' (ஆ) 'எதிர்மறையாக உதறித் தள்ளுவார்கள்.' இயேசுவின் போதனையும் இரண்டு: (அ) வீட்டிற்குள் போகும் போது என்ன செய்ய வேண்டும்? (ஆ) நகருக்குள் போகும்போது என்ன செய்ய வேண்டும்?

முதல் ஏற்பாட்டில் அறுவடை என்பது வரப்போகும் இறுதித்தீர்ப்பையும், இஸ்ரயேல் மக்கள் ஒன்றுகூட்டப்படுதலையும் குறித்தது (காண். யோவே 3:13, மீக் 4:11-13). அறுவடைக் காலம் என்பது விறுவிறுப்பான காலம். விறுவிறுப்பும், வேகமும் இல்லையென்றால் அறுவடை சாத்தியமல்ல. அறுவடைக் காலத்தில் சோம்பித் திரிந்தால் அது முதலுக்கே மோசம் கொண்டுவந்துவிடும். அறுவடைக்கால வேகம் இயேசுவின் மற்ற அறிவுரையிலும் வெளிப்படுகிறது: 'எதையும் கொண்டு செல்லாதீர்கள் - ஏனெனில், நீங்கள் எதையாவது கொண்டு சென்றால் உங்கள் கவனமெல்லாம் உங்கள் உடைமையில்தான் இருக்கும்!' 'யாருக்கும் வணக்கம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள்!' 'இந்த ஊரு, வீடு ஓகேவா, அந்த ஊரு, வீடு ஓகேவா, என ஒவ்வொரு ஊராக, வீடாக மாறிக் கொண்டு இராதீர்கள்!'

பின் என்னதான் செய்ய வேண்டும் அவர்கள்? சீடர்கள் செய்ய வேண்டியது மூன்று காரியங்கள் மட்டுமே: (அ) 'உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்' - இதுதான் புதிய நற்கருணைப் படிப்பினை. எதையும் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ளும், தன்னிடம் உள்ளதை அப்படியே பகிர்ந்து கொடுக்கும் உள்ளம்தான் நற்கருணையைக் கொண்டாட முடியும்! (ஆ) 'உடல்நலம் குன்றியோரைக் குணமாக்குங்கள்' - இறையாட்சிப் பணி என்பது ஆன்மீகப் பணி அல்ல. 'நல்லா இருங்க, சாப்பிடுங்க, நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன், நீங்களும் எனக்காக வேண்டிக்கோங்க!' என வாயிலேயே அவரைப் பந்தல் போடும் பணி அல்ல. மாறாக, உடல்சார்ந்த தேவைகளையும் நிவர்த்தி செய்தல் - பசித்தோரின் பசி போக்குதல், பிணியுற்றோரின் பிணி போக்குதலே இறையாட்சிப் பணி. (இ) 'இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்' - சில நேரங்களில் இந்தச் செய்தியை சொல்வது நமக்கு கூச்சமாக இருக்கின்றது!

இப்படி எல்லாவற்றையும் இழந்தவர்களாய் இறையாட்சிப் பணிக்குச் சென்ற சீடர்கள் தங்கள் பணி முடிந்து இயேசுவிடம் திரும்புகிறார்கள். இவர்கள் செய்த பணியின் காலம், இடம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களின் உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்துப் போய் இருக்கின்றது. 'ஐயோ! கையில காசு இல்லாம கஷ்டப்பட்டோம்! வழியில் பாம்பு கடிச்சது! மேலாடை இல்லாமல் ரொம்ப குளிரா இருந்தது! அந்தா அவருக்கு காலில் கல் எத்தியது!' என்ற எந்தப் புலம்பலும் இல்லை. மாறாக, 'பேய்கள் கூட அடிபணிகின்றன!' என்று மகிழ்ச்சியால் துள்ளுகின்றார்கள். சீடர்கள் தீமையின் மேல் ('பாம்பு,' 'தேள்,' 'பகைவரின் வல்லமை,' 'தீய ஆவி') அதிகாரம் பெறுகின்றனர். இதைவிட மேலாக அவர்களின் 'பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன'. இந்த இறுதிக் காரணத்திற்காக அவர்கள் மகிழ வேண்டும்.

ஆக, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனின் மடியில் மகிழ்ச்சி காண்கின்றனர். திருத்தூதர் பவுல் இயேசுவின் சிலுவையின் மடியில் மகிழ்ச்சி காண்கிறார். இயேசுவின் சீடர்கள் தங்களுடைய பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பது குறித்து மகிழ்கிறார்கள்.

'அவரின் மடியில் மகிழ' நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. கிறிஸ்துவின் இடத்தில் நாம் இருத்தல் வேண்டும்

'இயேசு தான் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் தமக்கு முன் சீடர்களை அனுப்புகிறார்.' இதை சீடர்கள் உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் மறு இயேசுவாக தங்கள் பணியிடத்திற்குச் சென்றார்கள். இன்று நாம் இந்த உலகிற்குள் மறு கிறிஸ்துவாக வந்துள்ளோம். பல நேரங்களில் 'நான்' என்ற 'ஈகோ' அல்லது 'தான்மை' உணர்வு நம்மில் மேலோங்கி இருக்கிறது. ஆனால், நான் கடவுளின் பதிலியாக இங்கு வந்துள்ளேன் என்றால் கடவுள்போல சிந்திப்பேன், மன்னிப்பேன், பரிவு காட்டுவேன். ஆக, ஒவ்வொரு நிகழ்விலும் நான் கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும். கிறிஸ்துவைப் போல சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

ஆ. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள்

ஓநாய் வன்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி மென்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி எந்நேரமும் கடிக்கப்படலாம், விழுங்கப்படலாம். அதற்காக, ஆட்டுக்குட்டி தன் இயல்பை விட்டுவிட வேண்டியதில்லை. எதிர்ப்பு அல்லது ஆபத்து எந்நேரமும் நம்மைச் சூழ்ந்தே இருக்கும். இது எதிர்மறைச் செய்தி அல்ல. மாறாக, எதார்த்தச் செய்தி. எல்லாம் நமக்கு நன்றாக இருந்தாலும் நமக்கு மேல் இறப்பு என்ற ஓநாய் தொங்கிக்கொண்டிருக்கிறது. இல்லையா? ஆக, எதிர்மறை உணர்வுகள், எதிர்மறையான மக்கள், எதிர்மறையான நிகழ்வுகள் அனைத்தோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

இ. அமைதி உங்களிடம் திரும்பிவிடும்

வீட்டிற்குள் செல்லும் சீடர் அமைதியை அளித்து, அமைதி அங்கே ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அவர் மனம் தளரக்கூடாது. அதற்காக, அவர் தன் அமைதியை இழந்துவிடக் கூடாது. அவருடைய அமைதி அவரிடம் திரும்பிவிடும். இன்று நாம் சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அமைதி இழக்கிறோம். நாம் அழைத்த நபரின் அலைபேசி பிஸியாக இருந்தால், வாட்ஸ்ஆப்பில் இரண்டு டிக் விழுந்தும் நமக்குப் பதில் வராமல் இருந்தால், கண்டக்டர் சில்லறை தர மறந்தால், சுகர் டெஸ்டில் சில புள்ளிகள் கூட இருந்தால், உடல் எடை கூடினால் குறைந்தால் என எல்லாவற்றிற்கும் அமைதி இழக்கின்றோம். 'என் அமைதி என் உரிமை' என்ற ஒரு புதிய பதாகையை நாம் ஏந்திக்கொள்ளலாமே!

இவ்வாறாக, அவரின் மடியில் கிடைக்கும் மகிழ்ச்சி, இறப்பக்குப் பின் கிடைக்கும் நிலைவாழ்வு அல்ல. இது இப்போதே இங்கே கிடைக்கும் மகிழ்ச்சி. இது இழப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி.

அவரின் மடியில் மகிழ்தல் நலமே!