இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

கரை சேர்க்கும், கரை சேரும் கடவுள்

எசாயா 40:1-5,9-11
தீத்து 2:11-14, 3:4-7
லூக்கா 3:15-16,21-22

ரொம்ப பரிச்சியமான ஒரு கதைதான். ஆனால், இன்றைய நாளுக்கு இது பொருந்துவதாக இருப்பதால், அக்கதையுடன் நம் சிந்தனையைத் தொடங்குவோம். ஒரு ஊரில் இருந்த 3 பேர் ஒரு நாள் மாலையில் குடிப்பதற்காக ஆற்றின் அக்கரையிலுள்ள ஓர் ஊருக்குச் செல்கின்றார்கள். பரிசல் ஒன்றை எடுத்து இவர்களே ஓட்டிக்கொண்டு போய் அக்கரையை அடைந்து வெகு நேரம் குடிக்கிறார்கள். நன்றாக இருட்டிவிட, அவர்கள் வீடு திரும்புவதற்காகத் தாங்கள் வந்த பரிசலில் மீண்டும் ஏறி ஊர் திரும்பும் முகத்தான் துடுப்புப் போடுகின்றனர். துடுப்புப் போட்டுக்கொண்டே இருக்க விடிந்து விடிகின்றது. ஆனால், அவர்கள் அக்கரையிலேயே இருக்கின்றனர். போதை தெளிந்த அவர்கள் சற்றே திரும்பிப் பார்க்கிறார்கள். மது மயக்கத்தில் தாங்கள் ஏறி அமர்ந்த பரிசலைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்காமலேயே விடிய விடிய தங்கள் ஆற்றலை வீணாக்கியிருப்பதை நினைத்து வருந்துகிறார்கள்.

அவர்களின் மது மயக்கம் அவர்களைக் கரை சேர்க்கவும், கரை சேரவும் விடாமல் தடுத்துவிட்டது. இல்லையா?

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக் காலம் நிறைவு பெறுகிறது. திருவருகைக்காலத்தில் 4 மெழுகு திரிகள் ஏற்றி, குடில் ஜோடித்து, நட்சத்திரங்கள் கட்டி, கேரல்ஸ் பாடி, கேக் உண்டு, கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு, திருக்காட்சி என விழாக்களைக் கொண்டாடிய நாம் இன்றோடு நாம் அவற்றை நிறைவு செய்கின்றோம். இவ்வளவு நாளாக நாம் கரையின் இந்தப் பக்கம் இருந்துவிட்டோம். கரையின் இந்தப் பக்கம் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. இப்போது கரையின் அடுத்த பக்கமான சாதாரண, பொதுக்காலத்திற்குக் கடந்து செல்கின்றோம். ஆனாலும், இப்போது நாம் செல்லும் கரையின் மகிழ்ச்சி கொஞ்சமும் சாதராணது அல்ல.

இன்றைய நாளின் இறைவாக்கும் வழிபாடு கரை சேர்க்கும் கடவுளாக ஆண்டவராகிய இறைவனையும், கரை சேரும் கடவுளின் மகனாக இயேசு கிறிஸ்துவையும் முன்வைக்கின்றன. திருமுழுக்கின் வழியாக பாவக் கரை-கறையிலிருந்து தூய்மைக்குக் கரைசேர்த்த கடவுளோடு இணைந்து நாம் தொடர்ந்து கரை சேர இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

கி.மு. 586ஆம் ஆண்டு யூதாவில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்படுகின்றனர். இறப்பும், இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த நேரத்திலும் அவர்கள் அந்தப் புதிய நாட்டில் இயல்பான வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர். வாழ்க்கை என்னதான் இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள் இருப்பது அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு செய்த யூதா நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த நாட்டிற்கு இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும் விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல் கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில் நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை அனுப்புகிறார் இறைவன். இந்த மிகப்பெரும் நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின் பாவங்கள் மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு திரும்பும் நேரம் வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார். ஆண்டவர் தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத் திரும்பக் கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது: 'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது. மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது நேராக்கப்பட்டு, கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.

மேலும், மானிடர் தங்கள் வார்த்தைகளில் தவறிப் போவர், ஆனால், 'நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று தன் வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிக்கையிடும் இறைவன், 'ஆயனைப் போல அவர்களை மேய்ப்பதாக' உருவகம் செய்கிறார்.

இறைவன் இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவிலிருந்து மீட்டு மீண்டு எருசலேமில் கரை சேர்க்கும் நிகழ்வு மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும் இறைவனின் கரம் படும். ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல அவர் சேர்க்க மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின் அடையாளமாகும். தன் கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற அனைத்து ஆடுகளையும் ஒன்று சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம் தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால் தங்களின் உடல் மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ) 'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது, முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள் எளிதில் சோர்ந்துவிடக் கூடியவை. அவைகளுக்கு தொடர் அரவணைப்பு அவசியம். அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.

இவ்வாறாக, சிதறுண்டவர்களை ஒன்று சேர்த்து, வலுவிழந்தவர்களைத் தோள் மேல் சுமந்து, வலுக்குறைந்தவர்களைத் தன் வலது கரத்தால் தாங்கி கரை சேர்க்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் தீத்து தன் குழுமத்தில் உள்ளவர்கள் எப்படி கண்காணிக்கப்பட வேண்டும் என எழுதுகிறார். 'நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம். கீழ்ப்படியாமல் இருந்தோம். நெறிதவறிச் சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம். தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம். காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம்' (தீத் 3:3) தன் குழுமத்தின் வலுக்குறைந்த பின்புலத்தைச் சுட்டிக்காட்டும் தீத்து, இவ்வலுவின்மையிலிருந்து நாம் விடுபட்டது, 'நம் அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாக ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டே, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுளால் மீட்கப்பட்டோம்' என எழுதுகின்றார்.

ஆக, 'புதுப்பிறப்பு அளிக்கும் நீரும், புதுப்பிக்கும் தூய ஆவியும், இவை இரண்டின் ஊற்றாக இருக்கின்ற கடவுளின் இரக்கமும்' பாவ இயல்பிலிருந்து மனுக்குலத்தை மீட்பு என்னும் கரையில் கொண்டு போய்ச் சேர்ப்பவைகளாக இருக்கின்றன. இங்கே 'நீர்' மற்றும் 'தூய ஆவி' ஒருவர் பெறுகின்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுபடுத்துகின்றன.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே பதிவு செய்கின்றனர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்: (அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான் சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண். 3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்' என்று பதிவு செய்யும் லூக்கா, யார் இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப் பதியாமல் விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில், இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன் தந்தையின் குரல் கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில், இயேசு திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது, 'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்க' வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசு 'தண்ணீரால்' மட்டுமே திருமுழக்கு பெறுகின்றார். ஆனால், லூக்காவில், 'தண்ணீர்,' 'தூய ஆவி' என இரண்டு நிலைகளில் திருமுழுக்கு பெறுகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் திருமுழுக்கு யோவானிடம் மக்கள் வருகிறார்கள். 'அவர்கள் மீட்பரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என அவர்கள் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.' 'மெசியா எதிர்பார்ப்பு' இயேசுவின் காலத்தில் மிகவும் உச்சநிலையில் இருந்தது. ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மக்கள் தாங்கள் உரோமையர்களால் அனுபவித்த அரசியல், சமூக, சமய, கலாச்சார துன்பங்களிலிருந்து தங்களை விடுவிக்க மெசியா வர வேண்டும் என மிகவும் எதிர்நோக்கியிருந்தனர். வரவிருக்கும் மெசியா முதலில் ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆகையால்தான், 'மனமாற்றத்தை' அறிவித்து, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு கொடுத்து வந்த திருமுழுக்கு யோவான் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக நினைக்கின்றனர். ஆனால், அதை மறுக்கிறார் யோவான்.

இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் இரண்டு நிலைகளில் இருக்கிறது: ஒன்று, அவர் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார். ஏன்? தன்னிடம் பாவம் இருப்பதால் அல்ல. மாறாக, 'மனமாற்றம்' என்பது 'கரைக்குத் திரும்புவது' என அறிந்திருந்தார் இயேசு. இதுவரை நாசரேத்தில் மறைந்து வாழ்வு வாழ்ந்த இயேசு, தண்ணீரில் மறைந்திருப்பது போல மறைந்து நின்ற இயேசு, இப்போது கரை சேர்கின்றார். முற்காலத்தில் இதே யோர்தானைக் கடந்துதான் யோசுவா தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குக் கரை ஏறினார்கள். இந்த 'கரை சேரும் நிகழ்வு' வழியாகத் தன் பொதுவாழ்வையும் பணிவாழ்வையும் தொடங்ககிறார் இயேசு. இரண்டு, இயேசு தூய ஆவியால் திருமுழுக்கு பெறுகிறார். இத்தூய ஆவியால்தான் இயேசுவின் பணி உந்தித் தள்ளப்படுகிறது. தன் உயிர்ப்புக்குப் பின் இதே தூய ஆவியைத் தம் திருத்தூதர்கள்மேல் பொழிகிறார் இயேசு.

தங்களைக் கரை சேர்க்க யாராவது வர மாட்டார்களா? என்று மெசியா எதிர்நோக்கில் மேலோங்கியிருந்தவர்கள் நடுவே, தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய்க் கரை சேருகிறார் இயேசு.

இவ்வாறாக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை எசாயா இறைவாக்கினர் வழியாக எருசலேம் என்னும் கரை சேர்க்கிறார் ஆண்டவராகிய கடவுள். பாவத்திலும் தீமையிலும் உழன்றவர்களை மீட்பு என்ற கரையில் சேர்க்கின்றார் கடவுள். 'மெசியா வந்து எங்களை மீட்பார்' எனக் காத்திருந்தவர்களில், 'நீ இறைவனின் அன்பார்ந்த மகன்-மகள்' என்று கடவுள் சாயலைத் தூண்டி எழுப்பி, பணிவாழ்வு என்னும் கரை சேர்ந்து மற்றவர்களைக் கரை சேர்க்க கரம் குவிக்கின்றார் இயேசு.

இப்படிப்பட்ட இறைச் செயலையே இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே! நீர் எத்துனை மேன்மைமிக்கவர்! ... உமது ஆவியை நீர் அனுப்பி மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்' (திபா 104:1,30) எனப் பாடுகின்றார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. அக்கரைக்கும் இக்கரைக்குமான வாழ்க்கை

கிறிஸ்து பிறப்புக் காலம் என்னும் அக்கரையில் இருந்த நாம், பொதுக்காலம் என்னும் இக்கரைக்குள் வருகின்றோம். மகிழ்ச்சி, கொண்டாட்டம் விடுத்து வாழ்வைத் தொடங்குவது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். பழையவற்றின் நினைவுகள் நம்மை இழுக்கும். பழைய நினைவுகள் மகிழ்ச்சி தந்தால் பரவாயில்லை. சில நேரங்களி;ல் நாம் காயப்பட்ட நினைவுகள் நம்மைப் பின் நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். நாம் அனைவருமே காயப்பட்டிருக்கிறோம். காயப்படுத்தியிருக்கிறோம். வருத்தம் தரும் தவறுகள் செய்திருக்கின்றோம். ஆனால், நாம் எந்த நிலையில் இருந்தாலும் அவைகளிலிருந்து விடுபட்டு 'மகிழ்ச்சி' என்ற கரையை அடைவது சாத்தியம் எனச் சொல்கிறார் கடவுள். நாம் தயங்கி நிற்கும்போது அவரே முன்வந்து நம்மைக் கரைசேர்க்கத் தன் கரத்தை நீட்டுகின்றார்.

2. புதுப்பிறப்பு அளிக்கும் நீர், புதுப்பிக்கும் தூய ஆவி

திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் புதுப்பிறப்பளிக்கும் நீரினால் கழுவப்பட்டுள்ளோம், தூய ஆவியால் புதுப்பிக்கப்பட்டும் உள்ளோம். மேலும், கடவுளின் இரக்கத்தை முன்னிட்டு நாம் மீட்கப்பட்டுள்ளோம். அந்த இரக்கத்தின் துணையால் நாம் பழைய கட்டுக்களை அவிழ்த்துவிடவும், பழைய இயல்புகளைக் களைந்துவிடவும் முடியும். அக்கரைக்குப் பரிசலில் சென்றவர்கள் பரிசலின் கயிற்றை அறுக்காமல் விடிய விடிய துடுப்புப் போட்டதுபோல, நானும் சில நேரங்களில் என் கயிறுகளை அவிழ்த்துவிடாமல், அக்கரையிலேயே கட்டிவிட்டு நிற்கலாம். ஆனால், என் பழைய இயல்பு என்னும் கயிற்றை நான் அறுக்கும்போது, அவரின் அருள்துணையால் நான் அக்கரை அடைவேன்.

3. நீரே என் அன்பார்ந்த மகன்-மகள்

இயேசுவின் வாழ்வில் திருமுழுக்கு ஓர் அடித்தள அனுபவம். இந்த அனுபவம் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வை அப்படியே முழுவதுமாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. 'நீரே என் அன்பார்ந்த மகன்' எனத் தன் தந்தையாகிய கடவுளால் அழைக்கப்பட்டதால், ஒருவர் மற்றவரை, 'நீர் என் சகோதரர், சகோதரி' என அழைக்கிறார் இயேசு. இப்படி அவர் மற்றவர்களை அழைப்பதற்காக வெட்கப்படவில்லை. ஆகையால் தான் அவரின் பார்வையில் அனைவரும் - யூதர்கள், சமாரியர்கள், புறவினத்தார்கள், பெண்கள், குழந்தைகள், தொழுநோயாளர்கள், கண்பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், இறந்தோர் – சமமாகத் தெரிகின்றனர். அனைவரோடும் அவரால் பழக முடிகின்றது. இறைவனின் அரசு அனைவருக்கும் சொந்தம் எனவும் அது சமத்துவத்திலும், சகோதரத்திலும், சுதந்திரத்திலும் அடங்கியுள்ளது எனவும் கற்பிக்கின்றார். 'நான் இறைவனின் மகன்' என்ற அனுபவம் அவரின் முழு ஆளுமையையும் ஆட்கொள்கின்றது. இறப்பு வரை அவருக்கு இருந்த ஒரே அடையாளமும் இதுதான். ஆகையால் தான், 'இவன் தன்னையே இறைமகனாக்கிக் கொண்டான்' என குற்றம் சுமத்தப்படுகின்றார். நாம் பெற்ற திருமுழுக்கின்போதும் நமக்கு இதே அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அதை நாம் உள்வாங்கியிருக்கிறோமா? திருமுழுக்கில் நாம் பாவம் என்னும் கரையைக் கடந்து தூய வாழ்வு என்னும் கரை சேர்கிறோம். அப்பயணத்தில் நாம் தாங்கியிருக்கும் இறையியல்பு நம்மில் புதுப்பிக்கப்படுகிறது. திருமுழுக்கில் நாமும் நம் இறைத்தன்மையை மீட்டெடுப்பு செய்வதால், நாமே கடவுளாக கரை சேர்கிறோம்.

இறுதியாக, நம்மைக் கரை சேர்க்கும் கடவுள் நமக்கு ஆறுதலும், கனிமொழியும் கூற, அவரின் இரக்கம் அன்றாடம் நம்மைப் புதுப்பிக்கிறது. இயேசுவோடு இணைந்து நாமும் கரை சேர்ந்தால் நாமும் இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகளே.

இந்த அனுபவத்திற்கு நாம் மற்றவர்களை அழைத்துச் செல்லும்போது நாமும் கரை சேர்க்கும், கரை சேர்க்கும் கடவுள்களே!