இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருக்குடும்ப விழா

குழந்தையே தந்தை

1 சாமுவேல் 1:20-22, 24-28
1 யோவான் 3:1-2, 21-24  
லூக்கா 2:41-52

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும்: ஒரு ஆணும், இன்னொரு ஆணும் அல்லது ஒரு பெண்ணும். இன்னொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டிருப்பர். அல்லது இன்னொரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக டுவிட் செய்து கொண்டிருப்பார். அல்லது நாம் இருவரும் நண்பர்களாகவே இருப்போம் என ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ முடிவெடுத்துக்கொண்டிருப்பர். அல்லது நம் சேர்ந்து வாழ்தலை இன்றோடு முடித்துக்கொள்வோம் என்ற இருவர் தத்தம் வீடுகள் நோக்கிச் செல்வர். அல்லது ஒரு பெண் தன் நண்பனுக்கு வாடகைத் தாயாக இருக்க முன்வருவதாக வாக்குறுதிப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொண்டிருப்பாள்.

'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்' என்று ஆண் பெண் ஏற்றுக்கொண்டு, 'ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள், 'ஆண்டவரின் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்'' என்று சொன்ன மனிதக் குடும்பம் கடந்து வந்த பாதையை நினைக்கும்போது, குடும்பம் என்ற நிறுவனம் இன்று தேவையற்ற சுமையாக, அல்லது தேவைக்கேற்ற சுகமாகப் பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது.

இந்தப் பின்புலத்தில் இன்று நாம் கொண்டாடும் 'திருக்குடும்ப திருவிழா'வை எப்படிப் பொருள் கொள்வது? கடவுளால் படைப்பின் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம் ஒரு தோல்வியா?

'குழந்தையே தந்தை' என்ற மையக்கருத்தில் இன்றைய நாளில் சிந்திப்போம்.

ஆங்கிலத்தில், 'தெ சைல்ட் இஸ் த ஃபாதர் ஆஃப் தெ மேன்' (குழந்தையே மனிதனின் தந்தை) என்ற ஒரு சொல்லாடல் உண்டு. இது ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்றின் வரிதான். இதை எழுதியவர்கள் பிரயன் வில்சன் மற்றும் ஃபான் டைக் பார்க்ஸ். இதன் பொருள் என்ன? 'குழந்தை எப்படி மனிதனின் தந்தையாக இருக்க முடியும்? மனிதன் தான் குழந்தையின் தந்தை' என நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், இந்தச் சொல்லாடலின் பொருள் வேறு. குழந்தையாக இருக்கும்போது ஒருவர் கற்றுக்கொள்ளும் பழக்கங்களும், பண்புகளுமே ஒருவரை மனிதனாக உருவாக்குகின்றன. இந்த நிலையில் குழந்தை மனிதனின் தந்தையாக இருக்கிறது. குழந்தையின் பழக்கங்களும், பண்புகளும் எங்கிருந்து வருகின்றன? குடும்பத்திலிருந்துதான். குழந்தையை தந்தையாக மாற்றுவது குடும்பம்.

திருக்குடும்பத் திருவிழாவின் வாசகங்கள் நம்மை குழந்தை பிறப்பு நிகழ்வுகளிலிருந்து குழந்தை வளர்ப்பு நிகழ்வுக்கு அழைத்துச் செல்கின்றன. குழந்தைகள் தந்தையர்களாக உருவெடுக்க குடும்பம் அவசியமானது என்பதை இன்றைய மூன்று வாசகங்களும் நமக்குச் சொல்கின்றன.

இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 1:20-22, 24-28) சாமுவேல் நூலின் முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சாமுவேலின் பிறப்பு மிகவும் சோகமான பின்பலத்தோடு தொடங்குகிறது. எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த எல்கானாவுக்கு இரண்டு மனைவியர் - அன்னா ('அருள்'), பெனின்னா ('விலைமதிப்பில்லாத கல்' 'முத்து' 'மாணிக்கம்' 'மரகதம்'). பெனின்னாவுக்கு குழந்தைப்பேறு இருக்கிறது. அன்னாவுக்கு இல்லை. இதை ஒரு குறையாக அன்னாவிடம் சுட்டிக்காட்டுகிறார் பெனின்னா. ஆக, வீட்டில் அவருக்கு மிஞ்சியதெல்லாம் கண்ணீரும், கேலிப்பேச்சும்தான். இதை கடவுளிடம் முறையிட சீலோவில் அமைந்திருந்த ஆண்டவரின் ஆலயத்திற்கு செல்கின்றார். அங்கிருந்த ஏலி என்னும் குரு அன்னாவின் செபத்தை குடிவெறி என தவறாகப் புரிந்து கொண்டு அவரைக் கடிந்து கொள்கிறார். அதே நேரத்தில், 'மனநிறைவோடு செல்ல. இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளை கேட்டருள்வார்' என்று நல்ல வார்த்தையும் சொல்கிறார். மேலும், அன்னா ஆண்டவருக்கு ஒரு வாக்குறுதியும் கொடுக்கிறாள். அன்னாவின் எதிர்பார்ப்புக்களைவிட  கடவுளின் அருள் மிகுதியாக இருக்கிறது. அன்னா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததோடல்லாமல், அந்தக் குழந்தை இஸ்ரயேலின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக மாறுகிறது.

சாமுவேல் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு அன்னா மிக முக்கியக் காரணம். முதலில், அன்னா குழந்தையின் உடல் ஊட்டத்திற்கு உதவுகிறார். மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பால் கொடுக்கிறார். அடுத்து, தன் குழந்தையைச் சரியான பாதையில் தூக்கி நிறுத்துகின்றார். 'நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்' என்று சொல்லி, குழந்தைக்கு 'சாமுவேல்' எனப் பெயரிடுகிறாள். இவள் பெயரிட்டது போலவே, குழந்தையும் வளர்ந்து தன் வாழ்க்கை முழுவதும் கடவுள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மேலும், அன்னா தன் கணவரிடம், 'பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்' என்கிறாள். இவ்வாறாக, குழந்தையின் வாழ்க்கைக்கான முடிவை தானே எடுக்கின்றாள். அக்காலச் சமுதாயம் அத்தகைய உரிமையை தாய்க்கு வழங்கியது. 'மேமல்ஸ்' என்று சொல்லப்படும் பாலூட்டி இனம் (சில விலங்குகள் மற்றும் மனிதர்கள்) தன் குழந்தைக்கு கொடுக்கும் மார்பகப் பாலை நிறுத்தும், அல்லது குழந்தை தாயிடம் பால் குடிக்கும் நேரம்தான் பால்குடி மறக்கும் பருவம். இது குழந்தையின் வாழ்வில் மிக முக்கியமான பருவம். இந்த பருவத்தில்தான் குழந்தை சார்புநிலையிலிருந்து, தனித்தன்மை (அடானமி) நிலைக்கு கடந்து போகின்றது. ஆங்கிலத்தில் இந்த பருவத்தை 'வீனிங் பிரியட்' என அழைக்கின்றனர். 'வீன்' என்ற ஆங்கில வார்த்தைக்கு 'பழுத்தல்' (அதாவது, பழம் பழுத்தல்) என்பது பொருள். திராட்சை செடியில் பழுத்த கனிக்கு இனி அந்தச் செடியில் வேலையில்லை. அது தன் தாயாகிய செடியை விட்டு விடைபெறும் நேரம் வந்துவிட்டது. இனி அது தாயோடு ஒட்டிக்கொண்டிருந்தால், புழு வைத்து தாய்க்கும் ஆபத்தாகிவிடும். தனக்கும்; ஆபத்தாகிவிடும். பால்குடி பருவத்தில் தாய் என்னும் திராட்சைச் செடியிலிருந்து உறவுநிலை மாறத் தொடங்குகிறது குழந்தைக்கு. ஒரு உறவிலிருந்து அடுத்த உறவுக்கு மாறும் பாதைதான் இந்தப் பருவம். ஆனால் இதை தாயின் உறவின் முறிவு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. உளவியல் அடிப்படையில் எந்த ஒரு குழந்தை இந்த பருவத்தை சரியாக கடக்கிறதோ, அந்தக் குழந்தையே 'நிறைவு பெற்ற குழந்தை' (ஃபுல்பில்ட்) என்று அழைக்கப்படுகிறது. ஏன்? ஒரு குழந்தை அதிக நாள் பால் குடித்தது என்றால் அது பிற்காலத்தில் அடுத்தவர்களை சார்ந்தே நிற்கும் அல்லது அடுத்தவர்களைக் கேட்டே முடிவெடுக்கும் மனிதராக உருப்பெறுகிறது. குறைந்த நாளே பால் குடித்தது என்றால், அடிப்படையிலேயே பாதுகாப்பற்ற, யாரிடமும் ஒட்டிக்கொள்ளாத, தன்னை மட்டுமே மையப்படுத்துகின்ற மனிதராக உருப்பெறுகிறது. சாமுவேலின் தாய் தன் குழந்தையை ஒரு நிறைவுபெற்ற குழந்தையாக ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்ய விழைகிறாள்.

ஆண்டவரின் இல்லத்திற்கு குழந்தையை அழைத்துச் செல்கின்ற அன்னா, 'அவன் தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்' என்று கடவுளுக்கான நாசீராக ஒப்படைக்கின்றாள். அவன் 'ஆண்டவருக்கு' அல்ல, 'ஆண்டவருக்கே' அர்ப்பணிக்கப்பட்டவன். ஆக, அவனுடைய அர்ப்பணம் இனி வேறு யாருக்கும் இல்லை. ஆண்டவருக்கு மட்டுமே. இப்படியான கடினமான, தூய்மையான அர்ப்பண வாழ்வு மற்ற இஸ்ரயேலருக்கு ஒரு பாடமாக இருந்தது. அவர்களைத் தூய்மை வாழ்வுக்குத் தூண்டியது. இத்தகைய உயர்ந்து அர்ப்பணத்திற்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள் அன்னா. தன் ஒரே மகனை, கடவுள் கொடுத்த கொடையை அவருக்கே கொடுக்கிறாள். இதுவே அன்னாவின் உயர்ந்த தியாகம். தன் மகனைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் ஆண்டவரின் இல்லத்தில் அவன் வளர, அவருடைய அழைப்பைக் கேட்டு இஸ்ரயேலின் நடுவராக, ஆள்பவராக, அருள்பணியாளராக மாற விட்டுவிடுகின்றாள்.

சாமுவேல் என்ற குழந்தை இத்தகைய தந்தை என்ற நிலை அடையக் காரணம் அன்னாவும் அவருடைய கணவரும்தான், அதாவது, அவருடைய குடும்பம்தான். அன்னா தன் குழந்தையை உச்சி முகர்ந்து கொண்டாடிவிட்டு, ஆண்டவரிடம் கொடுத்துவிடுகிறார். இதுதான் முழுமையான அர்ப்பணம். அதாவது, எதையும் திரும்ப எதிர்பார்க்காத அர்ப்பணம். இந்த அர்ப்பணம்தான் குடும்பத்தில் கணவனையும், மனைவிiயும் இணைக்கிறது. சேர்ந்து வாழ்தல் அல்லது ஒரேபாலினத் திருமணம் அல்லது வாடகைத் தாய்-தந்தை - இந்த எல்லாவற்றிலும் ஒருவர் மற்றவருக்கு சொல்வது என்ன? 'உன் இடத்தில் நான் யாரையும் வைக்க முடியும்!' ஆனால், திருமணம் என்ற உறவில் மட்டும்தான், 'நீ எனக்கு மட்டும்தான்' என்ற நிலை உருவாகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-2, 21-24) கடவுளின் குடும்பம் என்ற பெரிய குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது. 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படும் மக்கள், அந்த நிலையில் நிலைத்திருக்க, 'நம்பிக்கை,' 'அன்பு' என்ற இரண்டு பண்புகள் தேவைப்படுகின்றன. அல்லது, 'நம்பிக்கை' என்ற கணவனும், 'அன்பு' என்ற மனைவியும் இணைந்து 'கடவுளின் மக்களை' பெற்றெடுக்கின்றனர். இந்த இரண்டும் கடவுளின் மக்களை அவர்கள் தொடர்ந்து அதே நிலையில் நிலைத்திருக்க உதவி செய்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 2:41-52) திருக்குடும்பம் ஒரு பிரச்சினையைச் சந்திக்கிறது. சிறுவன் இயேசுவைக் காணவில்லை. திருக்குடும்பம் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் செல்கிறது. அந்த நேரத்தில் இயேசுவுக்கு வயது 12. யூத சமூகத்தில், 12 வயதில்தான் ஒரு குழந்தை முழுப்பருவம் அடைகிறது. இந்த வயதிலிருந்து அக்குழந்தை யூதச் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவும், அவற்றின்படி நடக்கவும் வேண்டும் என்பது வழக்கம். அந்தச் சட்டங்களில் ஒன்றுதான் எருசலேமுக்குத் திருப்பயணம் செல்வது. இந்த வழக்கப்படியே, இயேசுவை அழைத்துக்கொண்டு தங்களின் ஆண்டு ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்ற திருக்குடும்பம் எருசலேமுக்கு வருகிறது.

இங்கே நற்செய்தியாளர் லூக்காவின் நோக்கம் இயேசுவைக் கடவுளின் மகன் என்று முன்வைப்பதாகவும், இயேசு செய்ய வேண்டிய பணிக்கான அர்ப்பணத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. தன் பெற்றோருடன் ஆலயம் வரும் இயேசு, அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தன் தந்தையின் இல்லத்தில் தங்கிவிடுகின்றார். அந்த இல்லத்தில்தான் அவர் மறைநூல் வல்லுநர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளும் விதம் பற்றிக் கேள்வியெழுப்புகின்றார். சிறுவனாய் இருந்தாலும், அவருக்குத் தன் பயணம் முழுவதும் இந்த ஆலயத்தை மையப்படுத்தியதே என்று அவர் அறிந்திருந்தார்.

இயேசுவின் பெற்றோர்களின் நிலை மிகவும் கடினமானதாக இருக்கிறது. இது மரியாவின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. இருந்தாலும், தாங்கள் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்கிறார்கள். முதன் முதலாக இயேசுவை எருசலேமுக்கு அழைத்து வந்து அவருக்கு அந்த நகரையும், ஆலயத்தையும் அறிமுகம் செய்கின்றனர். காணாமல்போன இயேசுவைக் கண்டுபிடித்தபின் அவரைக் கடிந்துகொள்ளும் மரியா இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மௌனம் காக்கிறார்: 'இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.'

ஆக, இயேசுவின் பெற்றோர் இயேசு என்னும் குழந்தையை அறிவு, கட்டின்மை, ஞானம், உடல்வளர்ச்சி பெற்ற தந்தையாக மாற்றுகின்றனர்.

இவ்வாறாக, குழந்தையே தந்தையாக மாறுவதற்கு அதன் குடும்பம் மிக அவசியம். அது சாமுவேல், இயேசுவின் சிறிய குடும்பமாக இருந்தாலும் சரி. அல்லது, கடவுளின் மக்கள் என்ற பெரிய குடும்பம் என்றாலும் சரி. தன்னலமில்லாத் தாயாக தன் ஒரே மகனைத் தயாரித்துக் கடவுளுக்குக் கொடுத்தாள் அன்னா. நம்பிக்கை மற்றும் அன்பின் வழியே கடவுளின் குழந்தையாக மாற முடியும் என தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகிறார் யோவான். தங்களின் இரத்த உறவுக் குடும்பத்தைக் கடந்த ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர் தன் மகன் என அறிந்துகொள்கின்றனர் இயேசுவின் பெற்றோர். இவ்வாறாக, பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் சூழல்கள் வௌ;வேறாக இருந்தாலும் தங்களின் தாராள உள்ளத்தாலும், தியாகத்தாலும் தங்கள் குழந்தைகளைத் தந்தையராக்குகின்றனர். அத்தந்தையர்கள், 'ஆண்டவரின் இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்' (திபா 84) என்ற நிலையை அடைகின்றனர்.

இப்படியான ஒரு ரொமான்டிக் குடும்பமாக இன்றைய நம் குடும்பங்கள் இருப்பதில்லை.

கணவன்-மனைவி சண்டை, திருமணத்திற்குப் புறம்பே உறவு, அவ்வுறவைத் தக்க வைக்க தன் துணையையும், பிள்ளைகளையும் கொல்லும் நிலை, குடும்ப வன்முறை, மணமுறிவு, உடைந்த குடும்பங்கள் என நிறைய எடுத்துக்காட்டுகளை நாம் அன்றாடம் செய்தித்தாள்களிலும், மற்ற ஊடகங்களிலும் பார்க்கிறோம். நம் குடும்பமும் இந்த ஒரு இக்கட்டான நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தங்கள் குழந்தைகள்மேல் பொறுப்புணர்வு குறைந்த பெற்றோர்களையும், தங்கள் பெற்றோர்களை மதிக்காத குழந்தைகளையும்தான் இன்று நாம் அதிகம் பார்க்கிறோம். இந்தப் பின்புலத்தில் திருக்குடும்பம் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

பெற்றோர்களின் வாழ்க்கைமுறை குழந்தைகளை நிறையப் பாதிக்கிறது. 'நண்டு புறாவைப் பெற்றெடுப்பதில்லை' என்பது ஆப்பிரிக்க பழமொழி. ஆக, பெற்றோர்களைப் போலவே பிள்ளைகளும் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவுகோலாக இருப்பது குடும்பமே.

இன்று நாம் நம் இருப்பில் இருக்க நம் குடும்பங்கள் காரணமாக இருப்பதுபோல, நம் குழந்தைகளின் இருப்பு இருக்க நம் குடும்பங்கள் காரணமாக இருத்தல் வேண்டும். மனுக்குலத்தின் மிகத் தொன்மையான இந்த நிறுவனத்திலிருந்தே மனுக்குலம் தழைக்கிறது. இந்நிறுவனம் வழியாகவே குழந்தை தந்தையாகிறது.

ஏனெனில், குழந்தையே தந்தை.

அன்னாவின் தியாக உள்ளம், எல்கானாவின் மனைவியை மதிக்கும் குணம், சாமுவேலின் நீடித்த அர்ப்பணம், யோசேப்பின் தேடல், மரியாளின் ஏக்கம், இயேசுவின் பணித்தெளிவு ஆகிய அனைத்தும் நம் குடும்பங்களுக்கும் ஊக்கம் தருவனவாக.

இன்றைய நாளில் நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம் உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் அனைவரையும் எண்ணிப்பார்த்து இவர்களின் இருப்பிற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இவர்களே நம் ஒவ்வொருவரின் வேர்கள்.

குழந்தையரைத் தந்தையர்களாக, தாயார்களாகக் கனவு கண்டவர்களும், அந்தக் கனவுகளை நனவுகளாக்கியவர்களும் இவர்களே!