இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

புதிய பாதை

பாரூக்கு 5:1-9
பிலிப்பியர் 1:4-6,8-11
லூக்கா 3:1-6

மதுவுக்கு அடிமையாகிக் கிடந்து, பின் ஒருநாள், 'இனி நான் குடிப்பதே இல்லை' என்ற முடிவெடுத்து, மதுவிலிருந்து விலகி நிற்கும் ஒரு இனியவரைக் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. 'ஃபாதர் நான் இன்னைக்கு ஒரு டிரைவரா இருக்கேன். கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் இப்படி இல்லை. ஒருமுறை இரவு ஊருக்குத் திரும்புமுன் பேருந்தில் ஏறுவதற்கு முன் நன்றாகக் குடித்தேன். கடையிலிருந்து பேருந்து நிலையம் தூரத்தில் தெரிந்தது. சீக்கிரம் போய் பேருந்து ஏற வேண்டும் என்று என் மனம் சொன்னாலும், கொஞ்ச நேரத்தில் என் கால்கள் தடுமாறுவதுபோல உணர்ந்தேன். ஒரே மயக்கமாக இருந்தது. அப்படியே விழுந்துவிட்டேன். நான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது மருத்துவமனையில் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். நான் எப்படி இங்கே வந்தேன் என்று விசாரித்தேன். இரவில் ஒருவர் இங்கே கொண்டுவந்து சேர்த்ததாகச் சொன்னார்கள். கடவுளே எனக்கு இன்றைய இரண்டாம் வாழ்வைக் கொடுத்தார் என எண்ணினேன். அன்று குடியை நிறுத்தினேன்.' எல்லாம் முடிந்தது என்று நினைத்த அந்த நொடியில் ஒரு கனவுபோல எல்லாமே அவர் வாழ்வில் மாறிவிட்டது. போதையின் பாதை புதிய பாதையாக மாறியது.

நம் வாழ்வின் பாதை ஒன்றாக இருக்க, அங்கே புதிய பாதை ஒன்றை உருவாக்க இறைவன் வருவதாக இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்கிறது. நம் எல்லாருடைய வாழ்விலும் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒரு பாதை நாம் அவரையும், அவரின் செயல்களையும் அறிய முற்படுவதற்குமுன் உள்ள பாதை. மற்றொரு பாதை அவரைக் கண்டவுடன் நாம் மேற்கொள்ளும் பாதை.

இன்றைய பதிலுரைப்பாடலிலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்' (திபா 126) என்று அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர். 'சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றியபோது நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்' என எழுதுகிறார். பாபிலோனிய நாடுகடத்தலின் பின்புலத்தில் பாடப்பட்ட இத்திருப்பாடலில் ஆசிரியர் தன் குழு அனுபவித்த ஒட்டுமொத்த வலியைப் பதிவு செய்கின்றார். தங்களுடைய நகரம், ஆலயம் என எல்லாம் அழிந்து தாங்கள் வேற்றுநாட்டுக்கு அடிமைகளாக நடத்திச் சென்றதை ஒரு இறப்பு அனுபவமாக, உறக்க அனுபவமாக நினைக்கின்ற ஆசிரியர், ஆண்டவர் தங்களை மீண்டும் தங்களின் நாட்டிற்கு அழைத்து வந்ததை ஒரு கனவு போல நினைத்துப்பார்க்கிறார். 'எல்லாம் முடிந்தது' என்ற அவர்களின் முந்தைய பாதை இருக்க, இறைவன் புதிய பாதையை அவர்களுக்கு வடிவமைத்துக்கொடுக்கின்றார்.

இந்த நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். பாரூக் 5:1-9) வாசிக்கின்றோம். பாரூக்கு எரேமியா இறைவாக்கினரின் செயலர். பாரூக்கு நூல் கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறை பகுதியில் இருக்கிறது. இதன் கிரேக்க மூலம் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முதல் ஏற்பாட்டு நூல்களை யூதர்களும், பிரிந்த சகோதரர்களும் 'வெளிப்படுத்தப்பட்ட நூலாக' ஏற்றுக்கொள்வதில்லை.

பாபிலோனியாவுக்கு இஸ்ராயேல் மக்கள் அடிமைகளாக நாடுகடத்தப்பட்டபோது இவரும் உடன் சென்றவர். அதாவது, எருசலேமில் எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரையும் நெபுகத்னேசர் தன் அரண்மனைக்கு எடுத்துச்சென்றுவிட்டான். ஆக, பாரூக்கு அடிமைத்தனத்தின் கோரத்தை நேருக்கு நேர் கண்டவர். அரண்மனையில் இருந்ததால் அவர் அனுபவித்திருக்கும் வாய்ப்பில்லை. 'புரட்டிப்போடுதல்' - இதுதான் பாரூக்கின் இறைவாக்கின் மையம். இன்று இருக்கும் நிலையை நாளை ஆண்டவர் புரட்டிப்போடுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறார் பாரூக்கு.

பாரூக்கு ஐந்து வகை புரட்டிப்போடுதல்களை முன்வைக்கின்றார்:

1. துன்ப துயர ஆடை களையப்பட்டு, மாட்சியின் பேரழகு அணிவிக்கப்படும்.

2. ஒன்றுமில்லாத வெறுந்தலையில், ஆண்டவரின் மாட்சி மணிமுடியாகச் சூட்டப்படும்.

3. பெயரில்லாதவர்களுக்கு, தங்கள் பெயர்களை இழந்தவர்களுக்கு, 'ஐரின் டிகாயுசனேஸ்' ('நீதியில் ஊன்றிய அமைதி') என்றும் 'டோக்ஸா தெயோசேபெயாஸ்' (இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி') என்றும் பெயர்கள் சூட்டப்படும்.

4. நடந்து சென்றவர்கள் பல்லக்கில் மன்னர்போல் தூக்கிவரப்படுவார்கள்.

5. மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகளில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் சமமும், நறுமணமும் மிகுந்த சாலைகளில் நடத்திவரப்படுவர்.

இந்தப் புரட்டிப்போடுதலையே நாம் 'பழைய பாதை,' 'புதிய பாதை' என்னும் சொல்லாடல்கள் வழியாகப் புரிந்தால், அடிமைத்தனத்தின் முந்தையை பாதைக்கு எதிர்மறையாக இருக்கிறது இறைவன் அமைத்துத் தரும் புதிய பாதை.

பழைய பாதை அவர்களை நிர்வாணமாக நடத்திச் சென்றது. 'ஷின்லர்ஸ் லிஸ்ட்' அல்லது 'லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்' திரைப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஜெர்மானிய நாசிப்படைகள் யூதர்களைக் கைது செய்து வதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும்போது முதலில் செய்யப்படுவது 'ஆடைகள் களையப்படுதல்'. அதாவது, இதுவரை இருந்த அடையாளம் அழிக்கப்பட்டு, புதிய அடையாளம் தரப்படுகின்றது. இன்றும் நம் சிறைச்சாலைகளிலும் கைதிகளுக்கு அவர்களின் ஆடைகள் களையப்பட்டு, சிறையின் சீருடைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு ஆடைகள் மறுக்கப்பட்டன. உரோமின் கிளாடியேட்டர்கள் என்று சொல்லப்படும் போரிடும் அடிமைகள்கூட நிர்வாணமாகவே அழைத்துச் செல்லப்பட்டனர். நிர்வாணமாகவே போரிட்டனர். பண்டைக்கால ரோம் மற்றும் கிரேக்க நாடுகளில் வீடுகளில் பணிபுரிந்த ஆண்-பெண் அடிமைகள் ஆடைகள் மறுக்கப்பட்டனர். நம்ம ஊர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நம்பூதிரி பெண்கள் தவிர மற்ற பெண்கள் மேலாடை மறுக்கப்பட்டனர் என்பதும் நாம் அறிந்த ஒன்று. இப்படி பாபிலோனியாவில் நிர்வாணமாக நின்றவர்களை தன் மாட்சி என்னும் பேரழகால் உடுத்துகின்றார் இறைவன். புதிய பாதை அவர்களுக்கு ஆடை அணிவிக்கிறது. கடவுள் அருளும் மாட்சியின் பேரழகே அவர்களின் ஆடையாக இருக்கிறது.

பழைய பாதையில் அவர்கள் தலைமுடி மழிக்கப்பட்டது. அடிமைகளின் தலைமுடி மழிக்கப்படும். எதற்காக? சுகாதாரத்திற்காக. குளிப்பதற்கும், தலை முடியைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், எண்ணெய் தேய்ப்பதற்கும் நேரம் அளிக்கப்படாது. மேலும், நம் தலைமுடிதான் நமக்கு மணிமுடி. கடவுளுக்கு நாம் மொட்டை எடுப்பதும் இதற்காகவே. நாம் மணிமுடி எனக் கருதும் ஒன்றைக் கழற்றி இறைவனின் திருவடியில் வைக்கிறோம். போரில் தோற்ற அரசன், வெற்றி பெற்ற அரசனின் காலடிகளில் தன் தலைமகுடத்தை கழற்றி வைக்க வேண்டும். இந்தப் பிண்ணனியில் அடிமைகளுக்குத் தலைமுடியும் மறுக்கப்படுகின்றது. இப்படி மொட்டைத் தலையாய் இருந்தவர்களுக்கு மணிமகுடம் அணிவிக்கிறார் இறைவன். புதிய பாதையில் அவர்கள் மாட்சியை மணிமுடியாகச் சூடியிருக்கின்றனர்.

பழைய பாதையில் இஸ்ரயேல் மக்களுக்குப் பெயரில்லை. அடிமைகளும், சிறைக்கைதிகளும் பெயர் சொல்லி அழைக்கப்படுவதில்லை. அவர்கள் வெறும் எண்கள்தாம். பெயர் என்னும் அடையாளம் இழந்தவர்கள் 'ஐரின்' (அமைதி), 'டோக்ஸா' (மாட்சி) என்ற அழகான பெயர்களைப் பெறுகிறார்கள். இந்த இரண்டு பெயர்களும் அவர்கள் இவ்வளவு நாள் இழந்தவைகளைத் திருப்பி தருவனவாக இருக்கின்றன.

பழைய பாதை இருளாக இருந்தது. புதிய பாதை பேரொளியால் ஒளிர்கிறது.

பழைய பாதை அவர்களை மண்டிபோட வைத்திருந்தது. புதிய பாதை அவர்களை எழுந்து நிற்கச் செய்கிறது.

பழைய பாதை கண்ணீராய் நிறைந்தது. புதிய பாதை மகிழ்வால் நிறைகிறது.

பழைய பாதையில் சங்கிலி கட்டப்பட்டு கால்நடையாக நடத்திச் செல்லப்பட்டனர் மக்கள். 'கால் மண்ணில் படாமல் இருப்பது' மாட்சியின் அடையாளம். நிலம் அழுக்கானது. ஆகையால்தான் கடவுளின் கால்கள் நிலத்தில் படக்கூடாது என நினைக்கிறோம். விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவது நம் காலணிகள். நாம் அணியும் காலணிகள் நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் பல்லக்குகள். இறைவன்தாமே இனி இவர்களை பல்லக்கில் தூக்கி வருவார். புதிய பாதையில் அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல உயர்மிகு மாட்சியுடன் அவர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.

பழைய பாதையில் யாருடைய உயிரையும் பற்றி யாரும் கவலைப்படவில்லை. புதிய பாதையில் இறைவன் அவர்களின் உயிரைப் பாதுகாக்கின்றார்.

பழைய பாதை இரத்தம் மற்றும் வியர்வையால் துர்நாற்றம் அடித்தது. எருசலேமிலிருந்து பாபிலோனியாவுக்குச் செல்லும் பாதை கரடு முரடானது. பள்ளத்தாக்குகள், குன்றுகள் நிறைந்தது. இவற்றையெல்லாம் சமன்படுத்துவதோடு இறைவன் இன்னும் ஒருபடி போய், பாதைகளில் சாம்பிராணியும் போடுகின்றார். அடிமைகள் இழுத்துச் செல்லப்பட்ட பாதை இரத்தம், உடலின் அழுகல் என நாற்றம் எடுக்கும். நறுமணம் இந்த நெடியை மாற்றுவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கும். புதிய பாதையில் நறுமணம் வீசும் மரங்கள் நிழல் தருகின்றன.

இவ்வாறாக, புதிய பாதையின் கூறுகளின் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் செய்த மாபெரும் செயல்களை நாம் கண்டுணர முடிகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11) பவுலின் சிறைமடல்களில் ஒன்றான பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தன் நெஞ்சுக்கு நெருக்கமான பிலிப்பு நகரத் திருஅவைக்கு பவுல் எழுதும் திருமடலின் நடை மற்ற திருமடல்களின் நடையைவிட ஆத்மார்த்தமாக இருக்கின்றது. 'நீங்கள் என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டீர்கள்' (1:7), 'என் அன்பார்ந்தவர்களே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றிவாகை' (4:1) என அன்பில் நீராட்டுகின்றார். தன் திருமடலின் தொடக்கத்தில் அவர்கள் இதுவரை நம்பிக்கையில் நிலைத்து நிற்பதற்காக அவர்களை வாழ்த்திப் பாராட்டுகின்றார். 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று அவர்கள்மேல் தான் வைத்துள்ள நம்பிக்கையைப் பதிவுசெய்கின்றார். மேலும், 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன்' என ஏங்குகின்றார்.

இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும் வரை பிலிப்பி நகர மக்கள் தங்களின் பழைய பாதையில் இருக்கின்றனர். இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கை அவர்களைப் புதிய பாதைக்கு அழைத்துவருகின்றது. இந்தப் புதிய பாதையில் அவர்கள், 'அறிவிலிலும் அன்பிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுவதாக' முன்மொழிகின்றார். மேலும், அவர்களின் செயல்கள் நீதியின் செயல்களாக வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். புதிய பாதைக்கு இறைவனின் அருளால் அழைத்துவரப்படுகின்ற பிலிப்பி நகர மக்கள், தங்கள் சொந்த நற்செயல்களால் அந்தப் பாதையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 3:1-6) திருமுழுக்கு யோவானி;ன் பணித்தொடக்கத்தை லூக்கா பதிவு செய்கின்றார். மற்ற நற்செய்தியாளர்கள் போல அல்லாமல், லூக்கா யோவானின் பணியை வரலாற்றுப் பின்புலத்தில் பதிவு செய்கிறார். உரோமைப் பேரரசர் திபேரிய சீசர், யூதேய ஆளுநர் பிலாத்து, மாநில அரசர்கள் ஏரோது, பிலிப்பு, குறுநில மன்னர்கள் இத்துரேயா, லிசானியா, தலைமைக் குருக்கள் அன்னா, கயபா என்று ஒரு சாதாரண, சாமானிய யூதரின்மேல் ஆட்சி செய்த அனைவர் பெயர்களையும் பதிவு செய்கின்றார் லூக்கா. ஒரு சாமானிய யூதர் தனது சமூக, சமய, பொருளாதார வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரும் இந்த சாமானிய யூதரின் அன்றாட வாழ்வைத் தீர்மானித்தனர்.

ஆனால், இப்படிப்பட்ட சமூக, சமய, பொருளாதாரப் பாதை ஒரு யூதரை வழிநடத்திக்கொண்டிருக்க, கடவுளின் வார்த்தை விந்தையாக பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவானுக்கு அருளப்படுகின்றது. ஆக, இறைவன் தேர்ந்தெடுக்கும் பாதை சாமானிய பாதையிலிருந்து முழுவதும் வித்தியாசமாக இருக்கிறது. இதுதான் இறைவனின் விந்தை.

புதிய பாதையை முன்னுரைக்கின்ற திருமுழுக்கு யோவான், 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள். அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மலை குன்று யாவும் தாழ்த்தப்படும். கோணலானவை நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்' எனப் புதிய பாதைக்கான தயாரிப்பு வேலைகளை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கின்றார். மேலும், 'இந்தப் புதிய பாதையில் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்' என்ற ஆறுதல் செய்தியையும் தருகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு ஆண்டவர் காட்டும் புதிய பாதையை சுட்டிக் காட்டுகிறது. ஒரு சாமானிய யூதர் பெற்றிருந்த சமய, சமூக, பொருளாதார கட்டுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது.

இங்கு குறிக்கப்படுகின்ற சொல்லாடல்களை உருவகங்களாக எடுத்துக் கொள்வோம்:

பாலைநிலம்: நம் மனம் இறைவன் இல்லாமல், ஒளி இல்லாமல், மகிழ்ச்சி இல்லாமல், நிறைவு இல்லாமல் காய்ந்திருக்கும் நிலை. தமிழ் மரபில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களை வகைப்படுத்தி, இந்நிலங்கள் தங்களின் இயல்பை இழக்கின்ற போது அவை பாலையாக மாறுகின்றன. ஆக, பாலை என்பது ஒரு குறைவு. பேரரசர், ஆளுநர், குறுநிலமன்னர்கள், தலைமைக்குருக்கள் என பளிங்குத் தரைகளில் வலம் வந்தவர்களுக்கு எட்டாத ஆண்டவரின் குரல், பாலைநிலத்தில் வாழ்ந்த திருமுழுக்கு யோவானை எட்டுகிறது. நம் வாழ்விலும் குறை மேலோங்கி நிற்கும் போது இறைவன் குரல் நம்மை எட்டுகிறது.

வழி: இது ஆண்டவர் அமைத்துத் தரும் புதிய பாதையைக் குறிக்கிறது. வழி நம் முன்பாக இருந்தாலும் அந்த வழிக்கான பயணத்தை மேற்கொள்ளும்போது தான் அந்த வழி அர்த்தம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக நாம் பயணிக்கும் நான்கு வழிச் சாலைகள், வாகனங்கள் இல்லாத போது வெறும் காட்டுப்பகுதியே. பயன்பாட்டில் தான் வழியானது வழியாக மாறுகிறது.

ஆயத்தமாக்குதலும் செம்மையாக்குதலும்: ஆயத்தமாக்குதல் புதிய முயற்சியையும், செம்மையாக்குதல் புதுப்பிக்கும் முயற்சியையும் குறிக்கிறது. நாம் நம் வாழ்வில் சில நேரங்களில் புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம். சில வேளைகளில் ஏற்கனவே உள்ள பாதையைப் புதுப்பிக்கின்றோம். புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க துணிவு தேவை. பழைய பாதையைப் புதுப்பிக்க உள்ளுணர்வு தேவை.

பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தகர்க்கப்படும்: பள்ளத்தாக்குகள் என்பவை என் வாழ்வில் உள்ள குறைவு மனநிலைகள். மலை என்பது என் வாழ்வில் உள்ள மேட்டிமை எண்ணங்கள். பள்ளத்தாக்குகள் நமக்குப் பயம் தருகின்றன. மலை நம் பார்வையை மறைக்கின்றது.

கோணலானவை நேராக்கப்படும். கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். கோணலானவை என்பவை நமக்கு நாமே நாம் சொல்லும் பொய்கள். இவை, நம் மனவுறுதியைக் குலைக்கின்றன. கரடுமுரடானவை என்பவை நம்மைத் தொற்றிக் கொண்டிருக்கும் பிறழ்வுகள்.

இவற்றை எல்லாம் சரி செய்யும்போது, 'நாம் கடவுள் அருளும் மீட்பைக் காண்கிறோம்.' ஆக, லூக்காவைப் பொறுத்தவரையில், 'மீட்பு' என்பது இறப்புக்குப் பின் அல்லது மறுவுலக வாழ்வில் நடக்கும் நிகழ்வு அன்று. மாறாக, இன்றே, இங்கேயே நடக்கக் கூடியது.

இறுதியாக, 'கதிரவன் உதிக்கும் என்ற நம்பிக்கை மாலைப் பொழுதின் இருள் தரம் பயத்தை நாம் எதிர்கொள்ளத் துணை செய்கிறது.' புதிய பாதை பிறக்கும் என்ற நம்பிக்கை நம் பழைய பாதையின் அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்ளவும், அவற்றைச் சரி செய்யவும் நம்மை அழைக்கிறது.

இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி குறித்துக் காட்டுவது அமைதி. அமைதிக்கான சிறந்த வழி பாதை மாற்றம். அணு ஆயுதங்கள் செய்து கொண்டே உலக அமைதி பற்றிப் பேசுவது எப்படிப் பயனற்றதோ, அப்படியே, எந்த ஒரு அகப் பாதை மாற்றமும் செய்யாமல் புறப்பாதை இனிமையாக இருக்கும் என்று யோசிப்பதும் பயனற்றது. அகம் மாற முகம் மாறும். அந்த முகத்தில் மீட்பு ஒளிரும். அந்த முகம் புதிய பாதையை வெற்றியுடன் பார்க்கும். அந்த வெற்றியே அமைதி.