இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

வெறுங்கை முழம் போடுமா?

1 அரசர்கள் 17:10-16
எபிரேயர் 9:24-28
மாற்கு 12:38-44

கைம்பெண்கள் - நாம் எதிர்கொள்ளும் கேள்விக்குறிகள், ஆச்சர்யக்குறிகள்!

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் இரண்டு கைம்பெண்களை (சாரிபாத்து, எருசலேம் நகர்) பார்க்கின்றோம். இவ்விரண்டு கைம்பெண்களையும் இரண்டு இறைவாக்கினர்கள் (எலியா, இயேசு) சந்திக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தை கொஞ்சம் முன்னும் (1 அர 17:1-9), பின்னும் (1 அர 18) நீட்டிப் பார்த்தால்தான் இந்த வாசகத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வை முழுவதும் புரிந்து கொள்ள முடியும். சாரிபாத்து நகரில் எலியா இறைவாக்கினர் கைம்பெண் ஒருவரால் பசியாறப்பெறுகின்றார். இதுதான் ஒற்றைவரியில் முதல் வாசகம். ஆனால் இதன் பின்புலம் பாகால் வழிபாடு. சாலமோனுக்குப் பின் ஒருங்கிணைந்த அரசு வடக்கு, தெற்கு என பிரிந்து போக, எலியா வடக்கே, அதாவது இஸ்ராயேலில் ('தெற்கு', யூதா என அழைக்கப்பட்டது) இறைவாக்குரைத்தார். வடக்கே ஆட்சி செய்த ஆகாபு தன் நாட்டில் இருந்த பாகால் வழிபாட்டைத் தடுக்க முடியவில்லை. மக்கள் தங்கள் இறைவனாம் யாவேயை மறந்துவிட்டு இந்தப் புதிய கடவுள்பின் செல்கின்றனர். யாவே இறைவன் இதனால் கோபம் கொண்டு மழையை நிறுத்திவிடுகின்றார். மூன்றரை ஆண்டுகள் கடும் பஞ்சம். தண்ணீர்நிலைகள் வற்றிக்கொண்டிருக்கின்றன. காகங்கள் வழியாக எலியாவுக்கு உணவளித்து வந்த இறைவன் இப்போது சாரிபாத்து நகர் ஏழைக்கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார். அப்படி சாரிபாத்துக்கு வந்த எலியா, ஏழைக்கைம்பெண்ணைச் சந்திக்கும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம்.

எலியா நகரின் நுழைவாயிலை அடையும்போது கடைசிக் கள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள் கைம்பெண். 'பாத்திரத்தில் தண்ணீர் கொடு' என்கிறார் எலியா. அந்தக் கைம்பெண்ணின் வீட்டில் ஒருவேளை ஒரேயொரு பாத்திரம் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். கைம்பெண்கள் வீட்டில் யாரும் தண்ணீர் கேட்டு வருவதில்லை. ஆகவே, அவர்கள் தனி சொம்பு அல்லது டம்ளர் வைத்திருக்க வாய்ப்பில்லை. இப்போது எலியாவுக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென்றால் மாவு இருக்கும் பாத்திரத்தைக் காலி செய்து அதிலிருந்துதான் கொண்டு வர முடியும். முதலில் தண்ணீர் கேட்டவர், கூடவே அப்பமும் கேட்கிறார். ஒன்றுமில்லா கைம்பெண் தனக்கென்று வைத்திருந்த எல்லாவற்றையும் இந்த எலியா கேட்டுவிடுகிறார். இறைவன் கேட்டால் நம்மிடம் அப்படித்தான் கேட்கிறார். கொடுத்தால் எல்லாவற்றையும் கொடு. அல்லது ஒன்றையும் எனக்குக் கொடுக்காதே. 'எனக்கு கொஞ்சம், உனக்கு கொஞ்சம்' என இறைவனிடத்தில் நான் பேச முடியுமா? முடியாது. கொடுத்தால் அப்படியே முழுமையாகக் கொடுக்க வேண்டும்.

'அதன் பின் சாகத்தான் வேண்டும்'. கைம்பெண்ணின் இந்தச் சொல் நம் உள்ளத்தையும் பிசைந்து விடுகிறது. எல்லா இடத்திலும் பஞ்சம் அதிகரித்து மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கதாசிரியர் இந்த ஒற்றை வரியில் பதிவு செய்கிறார். 'என்னையும், என் மகனையும் சுவாசிக்க வைத்திருப்பது இந்த அப்பம்தான். இதன்பின் பசியும், இறப்பும்தான்' என முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் நிலை பற்றி சொல்கின்றார் கைம்பெண். வாழ்வில் இதற்குமேல் ஒன்றுமில்லை என்ற கட்டத்திற்கு வந்துவிட்டால் நாமும் முன்பின் தெரியாதவரிடம்கூட நம் மனதை அப்படியே திறந்து காட்டுவிடுவோம்தானே. மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு விளக்கு அணையப்போகிறது என்று நினைத்தவுடன் கடவுள் அங்கே சரியான நேரத்தில் தன் இறைவாக்கினரை அனுப்புகின்றார். ஏற்கனவே அவளின் வாழ்வில் கணவன் என்ற விளக்கு அணைந்து போய்விட்டது. இன்னும் இருக்கும் நம்பிக்கை மகனில் எரிந்து கொண்டிருக்கிறது. மகன் ஒருவேளை சிறு பையனாக இருக்கலாம். ஆகையால்தான் இன்னும் தாயே அவனுக்கு உணவு தந்து கொண்டிருக்கிறாள். இவளின் வாழ்வு என்னும் விளக்கு அணையும்போது, 'இனி உன் வீட்டில் விளக்கே அணையாது' என்று அவளின் அடுப்பை என்றென்றும் எரிய வைக்கின்றார்.

சாரிபாத்து நகரப் பெண் எலியாவின் இறைவனாம் யாவே கடவுளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை!' என எலியாவின் கடவுளை 'வாழும் கடவுளாக' ஏற்றுக்கொள்கிறார். இந்த நம்பிக்கைதான் அவரைச் செயலாற்ற, தன்னிடம் உள்ளதை இழக்கத் துணிவைத் தருகிறது. 'வாழும் கடவுள்' என்னை வாழ வைப்பார் என்ற நம்பிக்கை அவரிடம் முதலில் எழுந்தது. 'பின் சாகத்தான் வேண்டும்' என்று விரக்தியில் இருந்த பெண்ணிடம், 'போய் நீ சொன்னபடி செய். ஆனால் அதற்கு முன் அப்பம் கொண்டு வா' என்று சொல்வது சிறிது புன்னகையை வரச் செய்தாலும், 'நீ சொன்னபடி நடக்காது' என்று எலியா அவரிடம் சொல்லி அனுப்புவது போலத்தான் இருக்கிறது. தன்னிடமிருந்த கையளவு மாவையும், கலயத்தின் எண்ணெயையும் கொடுக்கத் துணிந்த கைம்பெண்ணின் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

இந்த அற்புதம் நிகழக் காரணங்கள் மூன்று:

அ. எலியாவின் ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.

ஆ. 'அந்த ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்று நம்பினார்.

இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பசித்தவருக்கு உணவு கொடுப்பேன்' தன்னை அடுத்தவருக்காக நொறுக்கினார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற்கு 12:38-44), 'கைம்பெண்களைக் கொள்ளையடிப்பவர் பற்றியும்,' 'முழுவதையும் கொடுத்த கைம்பெண் ஒருவர் பற்றியும்' என இரண்டு பகுதிகளாக உள்ளது.

முதல் பகுதியில், இயேசு மறைநூல் அறிஞர்களைக் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார். அந்த எச்சரிக்கையின் ஒரு பகுதியாக, 'இவர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்' என்கிறார். இதன் பொருள் என்ன? யூத சமூகத்தில் கைம்பெண்கள் மிகவும் நொறுங்குநிலையில் இருந்தவர்கள். ஆகையால்தான் பத்திலொருபாகம் கொடுப்பதற்கான சட்டம் பற்றிய பகுதியின் இறுதியில் மோசே, 'உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு பெறுமாறு பத்திலொரு பாகத்தை நகரின் வாயிலருகே வை' (இச 14:19) என்கிறார். 'அந்நியருக்கு' தங்க இடம் கிடையாது. அவர்களுக்கு மொழி உட்பட எல்லாம் புதிதாக இருக்கும். அநாதைகள் பெற்றோர்கள் இல்லாததால் செல்லும் இடம் அறியாதவர்கள். கைம்பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை, வருமானத்தை இழந்தவர்கள். கையறுநிலையின் உச்சக்கட்டத்தை உணர்ந்தவர்கள் இம்மூவர். மறைநூல் அறிஞர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இம்மாதிரி கைம்பெண்ணைக் கவரும் விதமாக நீண்ட செபம் செய்வார்கள். வாழ்வில் ஏற்கனவே நொந்துபோய் இருப்பவர்கள் செபம் செய்பவர்களை எளிதாகப் பிடித்துக்கொள்வார்கள். இப்படியாக, கைம்பெண்ணின் ஆவலைக் கவர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடமிருந்து பணம் பெறுவார்கள். இறுதியில், உனக்காக வாதாடுகிறேன், உன் உரிமைச் சொத்தை மீட்கிறேன், உன் கணவனின் சொத்தில் உனக்கு பங்கைப் பெற்றுத் தருகிறேன் என வாதாடுவதாகச் சொல்லி அவரின் ஒட்டுமொத்த வீடு மற்றும் உடைமைகளையும் பறித்துக்கொள்வார்கள். இந்த நிலையைத்தான் சாடுகின்றார் இயேசு. 'எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்' என்பதுதான் இவர்களின் லாஜிக்காக இருக்கிறது.

இரண்டாம் பகுதியில், இயேசு காணிக்கை பெட்டி முன் அமர்ந்திருக்கிறார். எருசலேம் ஆலயத்தில் நிறையக் காணிக்கைப் பெட்டிகள் உண்டு. இயேசு அமர்ந்த இடம் அவற்றில் ஏதாவது ஒன்றின் முன் இருக்கலாம். வரிசையாக வந்தவர்களில் இரண்டு வகை கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்: (அ) செல்வர் வகை - தங்களிடம் இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போடுகின்றனர். (ஆ) கைம்பெண் வகை - தன்னிடம் உள்ளது எல்லாவற்றையும் போட்டுவிடுகின்றார்.இந்த இரண்டு வகை கொடுத்தலை 'உள்ளதிலிருந்து கொடுப்பது', 'உள்ளத்திலிருந்து கொடுப்பது' எனவும் சொல்லலாம். ஒவ்வொரு யூதரும் ஆலயத்தின் மேலாண்மைக்காகவும், பராமரிப்புக்காவும், ஆலயத்தின் குருக்களின் பராமரிப்புக்காகவும் ஆண்டுக்கு இரண்டு செக்கேல்கள் கொடுக்க வேண்டும் என்பது முறைமையாக இருந்தது. இப்பெண் போட்ட காசு - ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகள் - அதாவது, எவ்வளவு போட வேண்டுமோ அதில் 60ல் 1 பங்கு மட்டுமே. ஆனால், இவரிடம் இருந்தது இவ்வளவுதான்.

இயேசுவின் கணக்கு வித்தியாசமாக இருக்கிறது. 'எவ்வளவு' போட்டோம் என்று பார்ப்பதைவிட, 'எந்த மனநிலையில்' போட்டோம் என்று பார்க்கின்றார். அதாவது, 100 கோடி கொண்டுள்ள நான் 1 கோடியை ஆலயத்திற்கு கொடுக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு அருகில் இருப்பவர் தன் ஒரு மாத சம்பளம் 5000 ரூபாயை அப்படியே கொடுத்துவிடுகின்றார். 1 கோடி என்பது 5000 ரூபாயைவிட பெரியதுதான். ஆனால், என்னிடம் இந்த மாதம் செலவுக்கு இன்னும் 99 கோடிகள் இருக்கின்றன. ஆனால் என் அருகில் இருப்பவரிடம் ஒன்றும் இல்லை கையில். எனக்கு அருகில் இருப்பவர்தான் அதிகம் போட்டார் என்கிறார் இயேசு.

பல நேரங்களில் இந்த நற்செய்திப் பகுதியை அருட்பணியாளர்களும், சபைப் போதகர்களும், 'நல்ல கலெக்ஷன்' ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுதான் வருத்தத்திற்குரிய ஒன்று. மாற்கு நற்செய்தியாளரின் நோக்கமும், இயேசுவின் நோக்கமும் 'நிறைய காணிக்கை எடுப்பது எப்படி?' என்று நமக்குச் சொல்வதற்கு அல்ல. மாறாக, கடவுளின் திருமுன் நம் அர்ப்பணம் எப்படி இருக்கிறது என்பதை நமக்குத் தோலுரித்துக் காட்டவே.

இந்தப் பெண்ணும் சாரிபாத்துக் கைம்பெண் போலவே தான் செய்த செயலுக்கு மூன்று காரணங்கள் வைத்திருந்தார்:

அ. ஆண்டவரை வாழும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்.

ஆ. 'அவர் பார்த்துக்கொள்வார்' என நம்பினார்.

இ. 'அவர் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இதுதான் நான் என என் ஆண்டவரிடம் என்னைக் காட்டுவேன்' என இறைவன்முன் தன்னை நொறுக்கினார்.

இவ்விரண்டு கைம்பெண்களும் நமக்கு முன்வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. 'ஒரு கை மாவு - ஒரு கலயம் எண்ணெய் - இரு செப்புக்காசுகள்'

'இதுதான் நான்' - முன்பின் தெரியாத எலியாவிடம் தன் பீரோவைத் திறந்து காட்டி, 'இதுதான் நான்' என்று சொல்ல சாரிபாத்துக் கைம்பெண்ணால் எப்படி முடிந்தது? 'என்னிடம் உள்ளது இவ்வளவுதான்' என்று தன் உள்ளங்கை ரேகைகளை விரித்துக்காட்ட எருசலேம் கைம்பெண்ணால் எப்படி முடிந்தது? இவர்கள் இருவரும் தங்களை அறிந்த ஞானியர். பல நேரங்களில் நான் என் இருப்பை இல்லாததையும் சேர்த்துக் கூட்டிக்கொள்கிறேன். என் படிப்பு, குடும்பம், அழைப்பு, பணி, பொறுப்பு ஆகியவற்றை என் இருப்பாக்கிக் கொண்டு நான் என்னையே மிகைப்படுத்தி இறைவன் முன் நிற்கிறேன். ஆக, என்னிடம் மிகைப்படுத்துதல் இருப்பதால் என்னையே இழக்க என்னால் முடியவில்லை. நான் என்னையே நொறுக்காததால் நொறுங்குநிலை என்றால் என்ன என அறியாமல் இருக்கிறேன். இன்று என் அடையாளங்களை நான் இழக்க முன்வர வேண்டும். இது முதல் பாடம்.

2. 'எனக்கு இன்னும் வேண்டும்'

'எனக்கு இன்னும் வேண்டும்' என்று சிறுவன் ஆலிவர் கேட்டவுடன் ஆலிவர் டுவிஸ்ட் நாவல் ஒரு புதிய வேகத்தைப் பெறுகிறது. அப்படிக் கேட்டதற்காக அந்தச் சிறுவன் கொடுமைப்படுத்தப்படுகிறார். இன்று நாம் எதையாவது வாங்கிக்கொண்டே இருக்க விழைகின்றோம். 'எனக்கு இன்னும் வேண்டும்' - என்பதே என் தேடலாக இருப்பது. இது உறவு நிலைகளிலும், 'எனக்கு இன்னும் புதிய நண்பர் வேண்டும்' என்ற நிலையிலும், அல்லது 'என் நண்பரிடமிருந்து எனக்கு இன்னும் வேண்டும்' என்ற நிலையிலும் சேகரிப்பதாகவே இருக்கிறது. ஆனால், இன்று நாம் இறைவாக்கு வழிபாட்டில் காணும் கைம்பெண்கள் இந்த மனநிலைக்கு எதிராக ஒரு புரட்சி செய்கின்றனர். 'பெரிதினும் பெரிது கேள்' என்பதற்கு மாற்றாக, 'சிறிதினும் சிறிது பார்' என இழப்பதில் இருப்பைக் காண்கின்றனர். 'போதும் என்றால் இதுவே போதும். போதாது என்றால் எதுவும் போதாது' - இதுவே இவர்கள் தரும் இரண்டாம் பாடம். இதுவே இயேசுவின் சீடத்துவப் பாடமும்கூட.

3. 'கேள்விகள் கேட்காத சரணாகதி’

'எங்க ஊருக்கு மட்டும் ஏன் பஞ்சம்?' 'எங்க ஊருல மட்டும் என் வறட்சி?' 'என் கணவர் மட்டும் ஏன் சாகணும்?' 'எனக்கு மட்டும் ஏன் எதுவும் இல்லை?' 'என் ஆடை ஏன் கிழிஞ்சுருக்கு?' 'என் வீடு மட்டும் ஏன் ஓட்டையாயிருக்கு?' - இப்படி நிறையக் கேள்விகள் இரண்டு கைம்பெண்கள் மனத்திலும் ஓடியிருக்கும். ஆனாலும், தங்கள் கேள்விகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு சரணாகதி அடைகின்றனர். கேள்வி கேட்காத மனமே சரண் அடையும். கேள்வி கேட்காத மனமே பகிர்ந்து கொடுக்கும். இவர்களின் சரணாகதி இறைவன் முகத்தில் இவர்கள் ஓங்கி அறைவதுபோல இருக்கிறது. வாழ்வில் பல கேள்விகளுக்கு விடைகள் இல்லை. அல்லது நாம் விரும்புகின்ற விடைகள் இல்லை. அந்நேரங்களில் சரணடைவதே சால்பு.

இறுதியாக,

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 9:24-28) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் மற்ற தலைமைக்குருக்களின் பலிகளிலிருந்து இயேசுவின் பலியை வேறுபடுத்திக் காட்டுகின்றார். மற்றவர்கள் கைகளில் ஆடுகளை எடுத்துச் சென்றனர். ஆனால் இயேசு வெறுங்கையராய்ச் சென்றார். அதுவே உயர்ந்த பலியானது.

வெறுங்கை முழம் போடுமா? என்பது பழமொழி.

ஆனால், வெறுங்கைதான் முழுவதும் போடும் என்பது இன்றைய இறைமொழி.