இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு

இனி நீங்கள் ஆண்டவருக்கும் அயலாருக்கும் நண்பர்களே

திப 10:25-26, 34-35, 44-48
1 யோவான் 4:7-10
யோவான் 15:9-17

இறைஇயேசுவில் பிரியமான நண்பர்களே! இன்றைய வாசகங்கள் அனைத்தும் அன்பைப் பற்றி போதிக்கின்றது. அன்பு செய்யும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்கிறார் தூய யோவான். அன்பிற்கு இலக்கணமாக நமதாண்டவர் நம்மை அயலாருக்கும், ஆண்டவருக்கும் நண்பர்களாக வாழ அழைக்கின்றார். இந்த உலகில் நண்பர்களுக்கான உறவு நிலையானது என்பதை அன்றாட வாழ்வு நமக்கு உணர்த்தி வருகின்றது.

உலகத்தில் மதம் சார்ந்த விழாக்கள், சமயம் சார்ந்த விழாக்கள், ஒவ்வொரு நாட்டிற்கான விழாக்கள் இருக்கின்றன; ஆனால் அனைத்து நாட்டினரும், மதத்தினரும் ஒருங்கே இணைந்து கொண்டாடக்கூடிய விழா என்றால் அது நண்பர்களுக்கான விழாவாகத்தான் இருக்க முடியும். உலகில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. ஒரு கவிஞன் நட்பை இவ்வாறாக கூறுகின்றான்…

அம்மாவின் அன்பின் இழப்பையும்
அப்பாவின் அக்கறையின் இழப்பையும்
சொந்தங்களின் பந்த இழப்பையும்
எந்தவிதமான இரத்த தொடர்பு இல்லாமல்
எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல்
ஈடு செய்ய இறைவன் கொடுத்த
இணையற்ற உறவுமுறை தான்
உண்மையான உயிரான நண்பர் கூட்டம்
சாதிசான்றிதழ் கேட்கும் பள்ளியிலும்
வருமான சான்றிதழ் கேட்கும் கல்லூரியிலும்
சாதி வருமானம் அறியாமல் உருவாகிற உன்னதம் தான்
“நட்பு” அதில் உள்ளவர்கள் தான் நண்பர்கள்.


ஆம் பிரியமானவர்களே நட்பிற்கு இலக்கணமாக நம் தமிழ் இலக்கியங்கள் சொல்லித் தந்த பாடங்கள் ஏராளம். உதாரணமாக சங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்தனர். கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்தி நட்பிற்கு இலக்கணம் வகுத்துள்ளனர்.

அதே போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தவர் அதியமான். மேலும் வள்ளுவன் திருவள்ளுவர் உலகபொதுமறையாம் திருக்குறளில் ''நட்பு'' என்ற அதிகாரத்தை வகுத்து நட்பின் இலக்கணத்தை உலகரியச் செய்தவர். இப்படியாக நட்பை பற்றி பல முன்ணுதாரனங்களை நாம் நம்முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ளனர்.


இவர்களைப் போன்றே நமதான்டவரும் இயேசுவும் நண்பர்களுக்காக உயிரைத் தருவதைவிட மேலான அன்பு இவ்வுலகில் எங்கிலும் இல்லை என்று கூறியவர். மேலும் இன்றைய நற்செய்தியில் இனி உங்களை பணியாளர் என்று சொல்லமாட்டேன் காரணம் தலைவர் செய்வது பணியாளருக்குத் தெரியாது ஆனால் உங்களை நான் நண்பர்கள் என்கின்றேன். காரணம் தந்தையிடமிருந்து கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன் என்கின்றார். ஆக ஆண்டவருக்கும் நம் அயலாருக்கும் நல்ல நண்பர்களாக வாழ நம் வாழ்வை மாற்றுவோமா!

பிரியமானவர்களே யாரெல்லாம் நல்ல நண்பர்கள்?
திருவள்ளுவர் தனது குறலில்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு – 786
அதாவது உள்ளம் கலக்காமல் முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; மாறாக நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு இவர்கள் தான் நல்ல நண்பர்கள்.


ஆங்கிலத்தில் பிரண்ட்ஷிப் பற்றி இவ்வாறாக கூறுவர் கடல் அலைகளும், காற்றும் கப்பல் மீது மோதி கப்பலேயே கவிழ்த்தாலும் வாழ்க்கையில் துன்பங்களும், பிரட்சனைகளும் வந்தாலும் நம்மை மூழ்கடிக்காமல் காப்பாற்றுவது பிரண்ட்ஷிப் அதைத்தான் மூழ்காத ஷிப் பிரண்ட்ஷிப் என்பார்கள். ஆக பிரண்ட்ஸ் என்ற பெயரிலே நண்பர்களுக்கான அர்த்தம் அடங்கியுள்ளது.

FRIEND

F- FAITHFUL FRIEND (நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள்)

நண்பர்கள் எப்போதும் நம்பிக்கைக்கு உரியவர்கள். இவர்கள் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள். உதாரணமாக சீராக்கின் ஞானம் 6 : 14ல் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்; இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள். மேலும் சீராக்கின் ஞானம் 6 : 16 நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்; ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர். நல்ல நண்பர்கள் நம்பிக்கை தரும் மருந்தாக நம்முடைய வாழ்வில் செயல்படுகின்றனர்.

R- RIGHTEOUS FRIEND (நண்பர்கள் நேர்மையாக வாழ வழி காட்டுபவர்கள்)

நல்ல நண்பர்கள் நேர்மையாக வாழ நமக்கு உதவுபவர்கள். சவுல் தாவீதை கொல்ல திட்டமிட்டுருக்கையில் தாவீதுக்கு சவுலை கொல்ல வாய்ப்பு கிடைத்திருந்தும் அவரை கொல்லாமல் அவர் திருந்தி நேர்மையாக வாழ அவருடைய மேலாடையின் ஒருபகுதியை மட்டும் தாவீது வெட்டுகின்றார். இதையறிந்த சவுல் 1சாமுவேல் 24:18-19 ல் “ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய். ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்ட பின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! எனக்கூறி தீயவழியில் இருந்து விழகி வாழ தாவீது சவுலுக்கு உதவுகின்றார். யோனத்தனின் நட்பும், தாவீதின் நட்பும் சவுலை நேர்மையாராக, நீதிமானாக வாழ உயர்த்துகின்றது.

I- INTIMATE FRIEND (நண்பர்கள் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள்)

தாவீதும் யோனாத்தனும் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர்களாக வாழ்ந்தனர். தன்னுடைய நண்பர்கள் இறப்பு செய்தி கேட்டு தாவீது கண்ணீர் சிந்தி அழுகின்றான். அதைப்போலவே ஆண்டவர் இயேசுவும் தன் நண்பர் லாசர் இறந்த செய்தி கேட்டு அவருக்காக கண்ணீர் சிந்தினார். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் நம்முடைய இதயத்தின் சொந்தங்களை நமக்கு அடையாளப்படுத்துகின்றது.

E- ENDING SORROWS (நண்பர்கள் சோகத்தை முடிவுக்கு கொண்டு வருபவர்கள்)

துன்பங்கள் இல்லாத வாழ்க்கை கிடையாது. ஒருவர் தன் வாழ்வில் சந்திக்கும் துன்பங்ககள், சோதனைகள், கஷ்டங்கள், இழப்புக்கள் என்ற எந்த விதமான சோகத்தை சந்தித்தாலும் நண்பர்கள் மட்டுமே ஆறுதல் அளிப்பர். அந்தோணி என்பவர் தாய்க்கு ஒரே மகன் கடந்த வாரம் கொரோனா பெருந்தொற்றால் திங்கட்கிழமை தன்னுடைய பாட்டியை இழந்தார். வியாழக்கிழமை தன்னுடைய தாயை இழந்தார். சனிக்கிழமை தன் தந்தைக்கும் கொரோனா என்று சொல்லி மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். துன்பத்திற்கு மேல் துன்பம் அவரை தாக்கிய போது அந்தோணியின் நண்பர்கள் தான் அவருடடைய சோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து இன்றுவரை தங்களுடைய வீட்டில் அவரை ஏற்று ஆதரித்து வருகின்றனர். இதைத்தான் வள்ளுவர்
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. - 788)
ஒருவனுக்கு துன்பம் நேரிட்டபோது, உடனே சென்று அந்தத் துன்பத்தை நீக்கி விடுவது சிறந்த நட்பாகும். நண்பர்கள் நம்முடைய கண்ணீரைத் துடைத்து சேகத்தை மகிழ்ச்சியாக மாற்றுபவர்கள்.


N – NATURAL NO DUPLICITY நண்பர்களிடத்தில் ஒளிவுமறைவு ஏதும் கிடையாது

அன்புக்குரியவர்களே இன்றைய சூழலில் தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாத பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதை இன்றைய வழக்கமாக நாம் வைத்திருக்கின்றோம். ஏன் நண்பர்கள் தோள்மீது கைகளைப் போட்டு பேசுகின்றனர்? என்னுடைய இதயமும், என் நண்பனின் இதயமும் நெருக்கமாக இருப்பதால் என் இதயத்தின் வலியை அவனுடைய இதயம் உணர்ந்து கொள்கின்றது. எனவே உயிர்கொடுத்த பெற்றோரைக்காட்டிலும் உணர்வுகளை புரிந்து கெள்ளும் நண்பர்கள் மேலானவர்கள். எனவே நண்பர்களிடத்தில் ஒளிவு மறைவு ஏதும் கிடையாது.

D – DEFENDER AT ALL-TIME நண்பர்கள் எல்லா நேரமும் நமக்காக வாதாடுவார்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு யோவான் 15 : 15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன் என்கிறார். நமக்காக விண்ணகத்தந்தையிடம் பரிந்து பேசுகின்றார். சிலுவையில் தொங்கும் போதுகூட நல்ல கள்வனுக்காவும், இயேசுவை துன்புறுத்திய அனைவருக்காகவும் தந்தையு இவர்கள் அறியாமல் செய்கின்றனர் என இயேசு பரிந்து பேசுகின்றார்.
பிரியமானவர்களு இன்று நானும் ஒருவருக்கு நண்பனாகத்தான் இருக்கின்றேன். என் நட்பு வட்டம் எதை மையப்படுத்தியதாக இருக்கின்றது. அதேவேளையில் எனக்கும் பல நண்பர்கள் கூட்டம் உள்ளது. என் நண்பர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள். சிந்திப்போம்.


உதாரணமாக நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று வாழைமரம் போன்றவர்கள்.

‘‘பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல. பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை. தண்ணீர் ஊற்றி அதை வளர்ப்பது இல்லை. அது தானாகவே முளைக்கிறது. தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது. தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகிற்குத் தருகிறது. நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.

தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது. அதற்கு முறைவைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது. அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது. அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில், நானும், என் நண்பர்களும் எந்த வகையைச் சார்ந்தவர்கள். பனைமரமா? தென்னை மரமா? வாழை மரமா? இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ஆள் பார்த்து செயல்படக்கூடியவர் அல்ல அதைப்போலவே உண்மையான நண்பர்கள் யாரும் ஆள்பார்த்து செயல்படா வண்ணம் இருக்க வேண்டும். பனைமரம் போன்ற நண்பனாகவும் பனைமரம் போன்ற நண்பர்களை தேர்ந்தெடுத்து வாழ இறையருள் வேண்டி நம்மை அர்ப்பணிப்போம்.