இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

ஆண்டவரை அனுபவித்து அறிவிக்கும் விளம்பரங்களாக!

1 சாமூவேல் 3: 3ஆ-10,19
1 கொரிந்தியர் 6:13-15, 17-20
மாற்கு 1:35 -42

இறையேசுவில் மிகவும் பிரியமான சகோதர சகோதரிகளே இன்று நாம் வாழும் நம்முடைய உலகில் எல்லாப் பொருட்களுமே நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. எந்தப் பொருளை வாங்கினாலும் நமக்கு அந்த பொருளானது முன்னரே அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த அறிமுகத்திற்கு பல்வேறு விளம்பரங்கள் உறுதுணையாக இருக்கின்றன. இன்று நாமும் ஆண்டவரை அனுபவித்து அறிவிக்க தாயாம் திருச்சபையானது அனைவருக்குமே அழைப்பு விடுக்கின்றது .

இயேசுவில் பிரியமானவர்களே கடந்த மாதம் ஒரு பிரபல கம்பெனி எங்களை வந்து சந்தித்தார்கள். உங்கள் பங்கு மக்களிடத்தில் எங்களது கம்பெனியைப்பற்றி அறிவியுங்கள் எனக் கூறி அவர்களுடைய கம்பெனியின் செயல்பாடுகளை எங்களுக்கு அறிவித்தார்கள். நீங்கள் எங்களது கம்பெனியில் சேர்ந்து உங்களது அன்றாட வீட்டிற்கு பயன்படுத்தும் பெருட்களை எங்களது கம்பெனியில் வாங்கும் போது உங்களுக்கு நிறைய இலவசமான பொருட்கள் கிடைக்கும், அத்தோடு நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு மதிப்பென்கள் கொடுக்கப்படும். அதன் அடிப்படையில் நீங்கள் வீட்டில் இருந்துகொண்டே இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.


இந்த கம்பெனியில் சேரும் ஒருவர் ஆறு நபர்களை சேர்த்து விட வேண்டும். அப்படி அந்த ஆறு பேர் 60 பேராக மாறுவர். அந்த 60 பேர் 600, 6000 ஆக மாறுவர் இப்படி இவர்கள் வாங்கும் அன்றாட வீட்டு பொருட்களினால் இலட்சக்கணக்கில் வீட்டில் இருந்துகொண்டே சம்பாதிக்கலாம் இதன் வழியாக ஒவ்வொருவருக்குமே லாபம் கிடைக்கும் என்றனர்.

இது எப்படி இலபம் கிடைக்கும்? என வினவிய போது ‘சார் இன்னைக்கு உலகத்திலுள்ள எந்த பொருளையும் எடுத்துக்கங்க அந்த எல்லாப் பொருட்களுக்கும் டிவியில் ஒரு விளம்பரம் இருக்கின்றது. ஒரு கம்பெனி ஒரு பொருளை தயாரிக்கின்றது. அதை விளம்பர நிறுவனத்திடம் கொடுத்து விளம்பரம் செய்கின்றது. அதனால் வரும் லாபத்தை கம்பெனியும், விளம்பரங்களும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஆனால் எங்கள் கம்பெனி தயாரிக்கும் எந்த பொருட்களும் டிவியில் விளம்பரமாக வருவதில்லை. எங்கள் கம்பெனி தயாரிக்கும் பொருட்களுக்கு உறுப்பினர்கள் தான் விளம்பரதாரர்கள். ஆக நேரடியாக லாபம் உங்களை வந்தடைகின்றது.


அதன்படி ஒருவர் நான் மாதம் 500 ரூபாய் சம்பாதிக்கின்றேன், மற்றொருவர் 5000 ரூபாய் சம்பாதிக்கிறேன்; மற்றொருவரோ மாதத்திற்கு 5 லட்சம் வரை சம்பாதிக்கின்றேன் என்று அவர்களது வங்கி புத்தகத்தை காண்பித்தார்கள். 10 ஆண்டுகளில் அந்த கம்பெனியில் ஒருகோடிக்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்று கூறினர்.

பிரியமானவர்களே இதிலே கூறியவர்கள் அனைவரும் தாங்கள் அனுபவித்ததை எங்களிடம் அறிவித்தார்கள். அவர்களின் பேச்சை கேட்ட போது நானும் இணைந்து விடலாம் போல் இருந்தது அவர்களின் அறிவிப்பு. அப்படியானால் நம்முடைய கத்தோலிக்க திருச்சபையானது இந்தியாவிற்கு வந்து 2000 ஆண்டுகளை கடந்து விட்டது. நாம் சொல்லுகின்றோம் இயேசுவினுடைய சீடர் புனித தோமையார் இந்தியாவிற்கு வந்தார். அதன் வழியாக கிறித்தவ விசுவாசம் பரவியது என்று நாம் நம்புகின்றோம் விசுவாசிக்கிறோம். அப்படி என்று சொன்னால் 2000 ஆண்டுகளுக்கு மேலாக கத்தோலிக்க விசுவாசமானது நமது மத்தியிலே அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் இன்றைய கணக்குப்படி 3 கோடிக்கு குறைவாகத்தான் கிறித்தவர்கள் இருக்கின்றோம். 10 ஆண்டுகளில் இந்த கம்பெனியில் 1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் உண்டு ஆனால் 2000 ஆண்டுகளைக் கடந்தும் கிறித்தவர்களின் எண்ணிக்கை மிக சொர்ப்பமே! அப்படியென்றால் நம்முடைய அறிவிப்பு எப்படிப்பட்டதாக இருக்கின்றது?


இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலுக்கு ஏலி என்ற இறைவாக்கினர் ஆண்டவரை அறிமுகப்படுத்துகின்றார். ஏலி ஒரு இறைமனிதர். இறைவனை முழுமையாக அனுபவித்தவர். தான் அனுபவித்த அந்த ஆண்டவரை சிறுவன் சாமுவேலுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஆண்டவர் சாமுவேலை அழைக்கின்றார் ஒருமுறை அல்ல; இருமுறை அல்ல; மூன்று முறை சாமுவேலை அழைக்கின்றார். அப்படி அழைத்த பொழுது 1 சாமூவேல் 3:7-ல் சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை; அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்று உணர்ந்த இறைவாக்கினர் ஏலி மீண்டும் அழைத்தால் “ஆண்டவரே பேசும் அடியான் கேட்கின்றேன்” என்று சொல் எனச் சொல்லி ஆண்டவரை அறிந்து கொள்ள சிறுவன் சாமூவேலுக்கு ஏலி உதவி செய்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்ற பொழுது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களுக்கு “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று ஆண்டவர் இயேசுவை தன்னுடைய சீடர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார். யோவானின் சீடர்கள் ஆண்டவரை பின் தொடர்ந்து “ஆண்டவரே நீர் எங்கு தங்கியிருக்கிறீர்” என்று கேட்டபொழுது ஆண்டவர் இயேசு “வந்து பாருங்கள்” என்று சொல்கின்றார். வந்து பாருங்கள் என்று சொல்லுகின்ற பொழுது வந்து என்னை அனுபவித்து பாருங்கள், வந்து என்னை அறிந்து கொள்ளுங்கள் என்று சீடர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். சீடர்களும் ஆண்டவர் இயேசுவோடு தொடர்ந்து செல்லுகின்றனர். ஆண்டவரை அனுபவித்து அறிந்து கொள்கின்றனர். தாங்கள் அறிந்துகொண்ட இயேசுவை மற்ற மக்களுக்கு அறிவிக்கின்றனர். குறிப்பாக சீமோனைப் பார்த்து நாங்கள் மெசியாவைக் கண்டோம் என்று அறிந்து கொண்ட மெசியாவை சீமோனுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

ஆம் பிரியமானவர்களே அன்று சீடர்களுக்கும், சிறுவன் சாமூவேலுக்கும் தன்னை வெளிப்படுத்திய இறைவன் இன்று நம் ஒவ்வொருவரையும் “வந்து பாருங்கள்” எனச் சொல்லி நம்மை அழைக்கின்றார். ஆண்டவரை அனுபவித்து அறிவிக்க நாம் தயாராக இருக்கின்றோமா?

புனித பிரான்சிஸ் சவேரியார் இந்தியாவிற்கு வந்த பொழுது தான் அனுபவித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு அறிவித்தார். எனவே சவேரியாரின் அறிவிப்பால் நிறைய மக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள். அதைப்போலவே புனித அன்னை தெரசா தான் அனுபவித்த ஆண்டவர் இயேசுவை நோயாளிகளுக்கும், கைவிடப்பட்ட மக்களுக்கும் அறிவித்த பொழுது அவர்கள் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். புனித பிரான்சிஸ் அசிசியார் ஆண்டவரை அனுபவிக்கின்றார். தான் அனுபவித்த ஆண்டவரை படைப்புகள் அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டுமென்று பறவைகள், காட்டுவிலங்குகள், மனிதர்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றார். அவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

பிரியமானவர்களே இன்று நீங்களும் நானும் ஆண்டவரை எப்படிப்பட்ட முறையிலே அறிவித்து வருகின்றோம்? அனுபவித்து அறிவிக்கின்றோமா? அல்லது அறிந்த, கேட்ட, அல்லது படித்த செய்தியை வைத்துக் கொண்டு ஆண்டவரை நாம் அறிவிக்கின்றோமா?

அன்புக்குரியவர்களே இன்று நீங்களும் நானும் ஆண்டவர் இயேசுவை அறிந்து வைத்திருக்கின்றோம். நம்முடைய பெற்றோர் சொல்லி ஆண்டவரை அறிந்து வைத்திருக்கின்றோம்; புத்தகங்களை படித்து ஆண்டவரை அறிந்து வைத்திருக்கின்றோம்; மறைக்கல்வி கேட்டு ஆண்டவரை அறிந்து வைத்திருக்கின்றோம்; அன்றாட மறையுரைகளைக் கேட்டு ஆண்டவரை அறிந்து வைத்திருக்கின்றோம். நாம் அறிந்துகொண்ட இயேசுவை அனுபவித்து இருக்கின்றோமா? அனுவித்தால் மட்டுமே உண்மையாக அறிவிக்க முடியும்.


நம்முடைய குடும்ப வாழ்க்கையில் பார்க்கின்ற பொழுது ஒவ்வொரு தாயும் தன்னுடைய கணவனின் அன்பையும், பாதுகாப்பையும் அனுபவித்ததால் தன்னுடைய பிள்ளைக்கு அப்பாவின் அருமையை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதைப் போலவே ஒவ்வொரு கணவனும் தன்னுடைய மனைவியிடம் பெற்றுக் கொண்ட அன்பையும், பாசத்தையும் அனுபவித்ததால் தன்னுடைய பிள்ளைக்கு அம்மாவின் அன்பையும், பாசத்தையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இப்படி பெற்றோரின் அன்பையும், பாசத்தையும் அனுபவித்த பிள்ளைகள் ஒருபோதும் தங்களுடைய பெற்றோரை அனாதையாகவோ, முதியோர் இல்லத்திலோ விடுவதில்லை.

ஆனால் இன்றைய சூழலை சற்று சிந்தித்துப் பார்ப்போம்! இன்று எல்லா பெற்றோர்களும் பிள்ளைகளை பெற்று எடுக்கின்றனர்; ஆனால் அவர்களையெல்லாம் வளர்த்தெடுப்பது வீட்டில் உள்ள ஆயாக்களும், வீட்டுவேலை செய்யும் பணியாளர்களும் தான். இன்றைய பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் ஆயாக்களின் அன்பையும், வீட்டுவேலை செய்யும் பணியாளர்களின் பாசத்தையும் அனுபவித்து வருகின்றனர். எனவேதான் ஆங்காங்கே புற்றீசல் போல முதியோர் இல்லங்கள் பெருகிக்கொண்டே செல்கின்றன. சிந்திப்போம்…


01. நான் எனது பெற்றோரின் அன்பையும், பாசத்தையும் அனுபவித்து இருக்கின்றேனா?, அறிந்து வைத்திருக்கின்றேனா?

02. என்னை படைத்த கடவுளை அறிந்து வைத்திருக்கின்றேனா? அனுபவித்து இருக்கின்றேனா?

அறிந்து கொண்ட ஆண்டவரை அனுபவித்து அறிவிப்போமா…

அறிந்து கொண்ட ஆண்டவரை அனுபவித்து விளம்பரம் செய்ய நான் ரெடி … நீங்க ரெடியா…

அருட்பணி. வேதபோதக சகாய செல்வராஜ், கப்புச்சின் பதோனி உளவியல் இல்லம், திருச்சி.