இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு

விண்ணரசு மண்ணரசு ஆகுமா?

சாலமோனின் ஞானம் 12:13,16-19
உரோமையர் 8:26-27
மத்தேயு 13:24-43

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா? நாம் ஏன் ஜெபிக்கின்றோம்? எதோ ஒரு கருத்துக்காக, நினைத்தது நடக்க வேண்டும் என ஜெபிக்கின்றோம். நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் யாராவது ஜெபிப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஆக நாம் ஜெபிக்கின்ற போது எதோ மற்றங்கள் நிகழ்கின்றன. எனவு நாம் அனைவருமே ஜெபிக்கின்றோம். உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து ஜெபிக்கும் ஜெபம் எது? கர்த்தர் கற்பித்த ஜெபம். அதிலே “விண்ணுலகில் நிறைவேறுவது பேல மண்ணுலகிலும் நிறைவேறுக” பரலோகத்தில் செய்யப்படுவது போல புலோகத்திலும் செய்யப்படுவதாக! என்று ஒவ்வொரு முறையும் நாம் ஜெபிக்கின்றோம். அப்படியானால் கடவுளின் அரசு அல்லது கடவுளின் உலகம் விண்ணகத்தில் எப்படி இருக்கின்றதோ அதைப்போலவே மண்ணுலகிலும் அவரது விண்ணரசு இருக்க வேண்டும் என தினந்தோறும் நாம் ஜெபிக்கின்றோம். அப்படியானால் விண்ணரசை, கடவுளின் அரசை மண்ணகத்தில் நிலைநாற்ற முடியுமா? …

எதுவெல்லாம் விண்ணரசின் பண்புகள்? அன்பு, அமைதி, சமாதானம், நீதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் … விண்ணரசை கடவுளின் அரசை மண்ணகத்தில் நிலைநாற்ற முடியும் என்றால் ஏன் அன்புக்கு பதிலாக சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்து காணப்படுகின்றன அமைதிக்குப் பதிலாக போர்களும் வன்முறையும் தலைவிரித்தாடுகின்றன, சகோதரத்துவத்திற்கு பதிலாக சுயநலம் நிறைந்துள்ளன, நீதிக்கு பதிலாக அநீதிகளே நிறைந்து காணப்படுகின்றன. எனவே இதுவா கடவுளின் விண்ணரசு? இன்று கடவுள் நம் அனைவரையும் விண்ணரசை கடவுளின் அரசை மண்ணகத்தில் நிலைநிலைநாட்ட நம் ஒவ்வொருவருக்கும் அழைப்புவிடுக்கின்றார். முதல் வாசகத்திலே கடவுள் நீதியின் அரசராக செயல்படுகிறார். நற்செய்தி வாசகத்திலே இயேசு விண்ணரசை உவமை வாயிலாக மக்களுக்கு போதிக்கின்றார். இரண்டாவது வாகத்திலே விண்ணரசின் விழுமியங்களை தூயஆவியார் நம்ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்துகிறார். அவரது குரலுக்கு செவிகொடுக்க தயாராக உள்ளவர்கள் செவிமடுக்கவும். பிரியமானவர்களே! மண்ணரசை விண்ணரசாக்க இன்றைய வாசகங்கள் வழியாக விண்ணரசின் விழுமியங்களான நீதி, அமைதி, மகிழ்ச்சி, இவற்றை சிந்தித்து அதை வாழ்வாக்க முயற்சிப்போம்.

நம் கடவுள் நீதியை நிலைநாட்டும் கடவுள்:
கடவுள் ஒருவரே நீதியுள்ளவர் அவரைத்தவிர வேறு எவரும் இலர். சீரா18:2 மேலும் மத்தேயு 12:18ல் “இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் புரிப்படைகிறது. இவருள் என் ஆவி தங்கும் படிசெய்தேன். இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். ஆக நம் கடவுள் நீதியின் கடவுளாக இருக்கின்றார். இதைத்தான் முதல் வாசகத்தில் ஆண்டவரே நீர் முறைகேடாக தீர்ப்பு வழங்குவதில்லை. உமது ஆற்றலே நீதியின் ஊற்று.

கடவுளின் நீதி எப்படிப்பட்டது?
இவருடைய நீதி கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பதல்ல மாறாக நீதி அன்பு, கருணை, மற்றும் நீடிய பொருமையுடையது. உதாரணமாக ஆபிரகாம் கடவுளிடம் “ஆண்டவரே தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று. நீதிமானையும், தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ என்கிறார்”. மேலும் அபிரகாம் ஆண்டவரிடம் சோதோமில் 50 நீதிமான்கள் இருந்தால் அந்நகரை அழிப்பீரா அல்லது காப்பாற்றுவீரா? ஆண்டவர் 50 நல்லவர்கள் இருந்தால் அந்நகரை நான் அழிக்கமாட்டேன் என்கிறார் மேலும் ஆபிரகாம் அந்நகரில் 45, 40,30,20,10 நீதிமான்கள் இருந்தால் அந்நகரை அழிப்பீரா அல்லது காப்பாற்றுவீரா? ஆண்டவர் 10 நல்லவர்கள் இருந்தால் அந்நகரை நான் அழிக்கமாட்டேன் என்கிறார். இதுதான் ஆண்டவரின் நீதி. தீயோர் சாகவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் அல்ல மாறாக அவர்கள் திருந்தி கடவுள் பக்கம் வருவதைத்தான் கடவுள் விரும்புகின்றார். அதைத்தான் நற்செய்தி வாசகத்திலே இயேசு உவமைகள் வயிலாக மக்களுக்கு போதிக்கின்றார்.

இந்த உலகத்தில் நல்லவர்கள் வாழ்வது நல்லதா அல்லது கெட்டவர்கள் வாழ்வது நல்லதா?... கெட்டவர்களை நாம் என்ன செய்யலாம்?...கெட்டவர்களை தண்டிக்கலாம். நாம் நல்லவர்களா? அல்லது கெட்டவர்களா? நாம் தண்டிக்கப்பட வேண்டுமா? அல்லது மன்னிக்கப்பட வேண்டுமா? அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தியில் நல்ல கோதுமை பயிரையும், களையையும் சேர்த்து வளரவிடுகிறார் காரணம் களைகளை பரிக்கும் போது நல்ல பயிர்களும் பரிக்கப்படலாம். அதைப்போலவே தீயோரின் பொருட்டு நல்லவர்களும் அழிக்கப்படலாம். நல்லவர்களை அழிப்பது கடவுளின் நோக்கம் அல்ல.

இரண்டாவதாக நல்லவர்களைப் பார்த்து தீயவர்கள் திருந்துவதற்க ஒரு வாய்ப்பை கடவுள் ஏற்படுத்தி தருகின்றார். உதாரணமாக விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் அழைத்து வந்து நீதி கேட்கின்றனர். இயேசு பொறுமையாக உங்களுள் பாவம் செய்யாதவர் முதலில் கல் எறியட்டும் என்கிறார். இங்கு பரிசேயர்களும், சதுசேயர்களும் தாங்கள் மட்டுமே நல்லர்கள் என்றும் இந்த பெண் மட்டும் தீயவள் என கருதிய சூழலில் இயேசு இந்த பெண் வழியாக தீயவர்களும் மனம் திருந்த வாய்ப்பளிக்கின்றார். அதைப்போலவே அனைவரும் தாங்களும் பாவிகள் என்பதை அறிந்து கல்லை கீழே போட்டுவிட்டு அனைவரும் சென்று விடுகின்றனர். ஆம் பிரியமானவர்களே இன்று நமது வாழ்விலும் கூட கடவுள் நல்லவர்களையும், தீயவர்களையும் ஒருங்கே ஒன்றாக வளர விடுகிறார். தீயோர்கள் அனைவரும் திருந்தி கடவுளிடம் வரவேண்டும் என கடவுள் எதிர்பார்க்கின்றார். நாம் திருந்தவில்லை என்று சென்னால் அன்று சோதமுக்கு நடந்த சோதனைதான் நமக்கும். 10 நல்லவர்கள் கூட அந்த நகரத்தில் இல்லை எனவே கடவுள் அந்நகரை அழித்துவிட்டார். அதைப்போலவே நாமும் திருந்தாவிட்டால் நீதிதீர்ப்பின் போது நாமும் வானதூதர்கள் வழியாக சோதித்தறியப்பட்டு அறுவடையின் நாளின் போது நமக்கு ஏற்ற பலனை கடவுள் நிச்சயம் அளிப்பார். நாம் நல்ல கோதுமை பயிர்களா? அல்லது களைகளா?

நம் கடவுள் அமைதியின் கடவுள்
கடவுள் உலகை படைத்தபோது இவ்வுலகமானது உருவற்று வெறுமையாக அமைதியாக இருந்தது. இந்த அமைதியில் தான் கடவுள் உலகையே படைக்கின்றார். புதிய ஏற்பாட்டில் ‘உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உரித்தாகுக’! ஆக நம்முடைய கடவுள் அமைதியின் கடவுளாக இருப்பதால் தன்னுடைய மக்களுக்கும் அமைதியை அருளுகிறார். யாரெல்லாம் கடவுளின் மக்கள்? “அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்” மத்5:9. அதைப்போலவே இயேசு உயிர்த்தபிறகு தனது சீடர்களுக்கு ஒவ்வொருமுறையும் தோன்றும் போது உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்கிறார். காரணம் நாமும் அமைதின் தூதுவர்களாக வாழ நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.

அமைதியாக இருந்தே காரியத்தை சாதித்துவிட்டான் என்ற சொல்லாடலை நாம் பயன்படுத்துவதுண்டு. யாரிடம் இந்த அமைதி இருக்கின்றதோ அவர்களால் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான நல்ல முடிவுகளை எடுக்கமுடியும். அமைதியில்லை என்று சொன்னால் எந்தவொரு முடிவையும் எடுப்பது கடினம். ஒரு பெண் மூன்று மரக்கால் மாவில் ஒருதுளி புளிப்பு மாவை சேர்க்க அது அந்த மாவு அனைத்தையும் புளிப்புள்ளதாக மாற்றுகிறது. அதைப்போலவே யாரெல்லாம் அமைதியை தன் வாழ்வில் கடைபிடிக்கின்றரோ இவர்கள் இருக்கும் சமுதாயம் முழுவதையும் அமைதியால் மாற்ற முடியும். உதாரணமாக புனித அசிசி பிரன்சிஸ் இன்றளவம் அமைதியின் தூதனாக அழைக்கப்படுகின்றார். காரணம் 12-ம் நூற்றாண்டிலே சுல்தான்களுக்கும் கிறித்தவர்களும் மிகுந்த போரும் வன்முறைகளும் நிகழ்ந்தது. இத்தருணத்தில் அமைதியை தனது வாழ்வில் கடைபிடித்த அசிசி பிரான்சிஸ் சுல்தான்களிடம் நேரிடையாக சென்று அமைதிபேச்சு வார்த்தையை ஆரம்பிக்கின்றார். அதானல் போரும், வன்முறையும், வஞ்சகமும் நிறைந்த மக்கள் மனம் திருந்தி அன்போடும் அமைதியோடும் வாழ ஆரம்பிக்கின்றனர்.

இன்று நம்மில் எத்தனைப்பேர் அமைதி நிறைந்த மனிதர்களாக வாழ்கின்றோம்? இரண்டாவதாக நாம் தேடும் அமைதி எங்கு இருக்கின்றது? பணத்திலா, பதவியிலா, ஆசையிலா, மூன்றாவதாக மக்களின் வாழ்வில் நாம் அமைதியை ஏற்படுத்தியிருக்கின்றோமா? அல்லது சண்டைகளையும் சச்ரவுகளையும் நாம் ஏற்படுத்தியிருக்கின்றோமா?

நம்முடைய கடவுள் மகிழ்ச்சியின் கடவுள்
பிரியமானவர்களே நம்முடைய வாழ்வில் புதிதாக எதாவது ஒன்றை செய்து அதிலே வெற்றிபெரும் போது நம்முடைய மகிழ்ச்சி அடைகிறோம். போட்டியிலே வெற்றி பெற்று பரிசுகள் வாங்கும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மகிழ்ச்சியைத்தான் கடவுளும் விரும்புகின்றார். யாருக்கெல்லாம் நண்பர்கள் அதிகம் இருப்பர்? பணம் உள்ளவர்களிடத்தில் நண்பர்கள் இருப்பர் ஆனால் அதே பணம் இல்லையென்றால் அவரை தனியே விட்டுவிட்டு சென்றுவிடுவர். ஆனால் எவனொருவன் மகிழ்ச்சியோடு இருக்கின்றானோ அல்லது யாரையெல்லாம் மகிழ்ச்சிபடுத்துகின்றானோ அவனுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பர். இவனக்கு பணம் தேவையில்லை, பதவி தேவையில்லை, பட்டங்கள் தேவையில்லை ஆனால் அவன் சொல்லும் ஒவ்வொரு நகைச்சுவைக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.அதைப்போலத்தான் கடுகு விதை இருக்கின்ற அனைத்துவிதைகளிலும் மிகச்சிறியது. ஆனால் அது முளைத்து வளர்ந்தால் மற்ற எல்லா செடிகளைவிடவம் பெரிதாக வளரும். மேலும் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கி வாழும். எப்படி கடுகு விதைக்க பறவைகள் அனைத்தையம் ஈர்க்கும் ஈர்ப்பு சக்தி உள்ளதோ அதைப்போலவே யாரெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கின்றனரோ அவர்களும் மக்களை தன்பக்கம் ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள். யாரெல்லாம் மகிழ்சியோடு வாழமுடியும்? நேர்மையாளர்கள் மட்டுமே மகிழ்ச்சியோடு வாழமுடியும். அவர்களது மகிழ்ச்சி தான் உண்மையான மகிழ்ச்சி. “நேர்மையாளர்களே மகிழ்ச்சி அடைவர். கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர். மகிழ்ந்து கொண்டாடுவர் திபா 68:3. பிரியமானவர்கள் இன்று நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியோடு வாழத்தான் ஆசைப்படுகின்றோம். எனவே நாம் தேடும் மகிழச்சி எங்கு இருக்கின்றது.

பிரியமானவர்களே விண்ணரசின் விழுமியங்களான நீதி, அமைதி, மகிழ்ச்சி போன்றவற்றை நம்முடைய வாழ்வில் கடைபிடிப்போம். இன்று இந்த உலகம் இந்த மூன்று விழுமியங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது. இதை நம் வாழ்வில் கடைபிடிக்கும்போது கடவுள் எதிர்பார்த்த விண்ணரசு மண்ணகத்திலே சாத்தியமாகும். மண்ணகத்திலே விண்ணகத்தை பிரதிபலித்தோமானால் நாமும் கடவுள் பிள்ளைகளாவோம்.