இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 32ம் ஞாயிறு

யார் அந்தப் பெண்?

1 அரசர்கள் 17:10-16,
எபிரேயர் 9:24-28 ,
மாற்கு 12: 38-44

நான்கு பேர் அறிந்து உதவி செய்தால் அது விளம்பரம்.
நான்கு பேர் அறியாது செய்தால் அதற்கு பேர் உதவி.
உதவி பெறுபவர் யார் என்று அறியாது செய்தால் அது தானம், காணிக்கை....

நம்முடைய செயலை வைத்து நாம் யார் என்று நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய உருவம், செல்வம், தகுதி , திறமை வைத்து அல்ல.

இப்பொழுதெல்லாம் நம்முடைய அடையாளங்கள் உருவத்தை வைத்தும் செல்வ வளத்தைப் பொறுத்து மட்டுமே அமைகின்றன. யாரையாவது நாம் இன்னொருவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றால் , அதோ அந்த மாடி வீட்டில் வசிப்பவர், கோவிலுக்கு காரில் வருபவர், முதல் பெஞ்சில் உட்காருபவர் என்று தான் அந்த நபரை அடையாளப்படுத்துகின்றோம். மாறாக யாரும் அவர் செய்த நற்காரியங்களை வைத்து அறிமுகப்படுத்துவது இல்லை, அடையாளப்படுத்துவது இல்லை. ஏன் அப்படி செய்யும் அளவுக்கு நாம் நற்காரியம் எதுவும் செய்து விடவில்லையா?. இப்பொழுதெல்லாம் நற்காரியங்கள் நான்கு சுவத்துக்குள் மட்டுமல்ல நானிலம் முழுவதற்கும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு கை செய்வது மறு கைக்கு தெரியக்கூடாது என்று சொன்ன காலம் போய், ஒரு கையால் கொடுப்பதை மறு கையால் செல்ஃபி எடுத்து உலகிற்கு சொல்லும் காலம் வந்து விட்டது. அதுவும் அருகில் வாழ்வோரை விட அயல் நாட்டில் வாழ்வோருக்கு அறிவிக்கவும், அதிக லைக்குகள் வாங்கவுமே செய்யப்படுகின்றன.

இப்படி நாம் இருக்க இன்றைய வாசகங்களில் நாம் கண்ட இரு பெண்கள் தங்களுடைய செயலால் தங்களை யார் என்று நிருபித்து இருக்கின்றார்கள். கைப்பேசியில் புகைப்படம் எடுக்கவில்லை, வலைதளத்தில் காணிக்கை போடும் குறும்படம் காட்டவில்லை. இணையதளம் இல்லாமலே இன்று வரை நம்மால் பேசப்படுகின்றார்கள். பெண்கள் என்றாலே அழகு, உருவம் வைத்து அடையாளப்படுத்தும் உலகில் தங்களது செயல்களால் யார் அந்த பெண்கள் என்று பிறரை திரும்பி பார்க்க வைத்து இருக்கின்றனர் நம் மங்கையர்கள். இவர்களது வாழ்வும் செயலும் இறைவாக்கினர் எலியாவையும் இறைமகன் இயேசுவையும் நெகிழச்செய்தது. நம்முடைய வாழ்வும் செயலும் இயேசுவை நெகிழச்செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்களின் வாழ்க்கை வழி அறிந்து கொள்ள முயல்வோம்.

பழைய ஏற்பாட்டு கைம்பெண்:

* படைத்த இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை
* இறையடியார்களை மதிக்கும் குணம்.
* எளிமை வாழ்வு. பகிரும் குணம்

* இவருக்கு பெயர் கொடுக்கப்படவில்லை. சாரிபாத்து ஊரைச்சேர்ந்தவர் என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படுகின்றார். கணவர் இருந்திருந்தால் இன்னாரின் மனைவி என்று கூறப்பட்டிருப்பார். கணவனை இழந்ததால் கைம்பெண் ஆக்கப்பட்டவர். தன்னிடம் இருக்கும் சிறிதளவு உணவை சமைக்க தேவையான சுள்ளிகளைப் பொறுக்க வீட்டை விட்டு வெளியே வருகின்றார். தன் மகனை அனுப்பாமல் தானே அந்த வேலைகளை செய்கின்றார். எளிய மகன் அதனால் அதிக பசியுற்று துன்புறக் கூடாது என்று எண்ணிணாரோ என்னவோ?? ஏழ்மையிலும் பக்தி நிறைந்த மன நிலையில் இருக்கின்றார். படைத்த இறைவன் உணவளிப்பார் என்ற நம்பிக்கை, அவர் தந்த வாழ்வு அவர் கட்டளைப்படி நடக்கட்டும் என்ற மன நிலை.

*இறைவாக்கினர் எலியாவை உடனே கண்டு கொள்கின்றார். தாகமாய் இருக்கிறது தண்ணீர் கொடு என்று எலியா கேட்டவுடன் தண்ணீர் கொடுக்க விரைந்தவர். அப்படியே சிறிது அப்பமும் கொடு என்றவுடன் தயங்குகின்றார். தண்ணீர் தாராளமாய் கொடுக்குமளவுக்கு இருக்கும் அவரிடம் அப்பம் இல்லை. கைம்பெண்ணான தன்னிடம் ஒரு இறைவாக்கினர் தண்ணீர் கேட்டதை பெறும் பேறாக எண்ணி இருந்திருப்பார். அப்பம் கேட்டும் கொடுக்க இல்லையே என்ற வருத்தம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. வாழும் கடவுள் மேல் ஆணை என்று சொல்கின்றாள். கேட்டு மறுக்கப்படும் வலி என்ன என்பதை நன்கு அறிந்தவ(ள்)ர். எலியாவின் பசி உணர்வையும், தான் இல்லை என்று கூறும் உணர்வையும் எளிதில் கண்டு கொள்கின்றா(ள்)ர்.

தன்னிடம் எதுவும் இல்லாதபோதும் எலியா சொன்ன அந்த வார்த்தையின் மேல் நம்பிக்கை கொள்கின்றார். சாவதற்கு முன் நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்தது போல எண்ணி மகிழ்கின்றார். உணவின்றி செத்தாலும் பரவாயில்லை. இறைவாக்கினர்க்கு உணவிட்டு மாண்டு விட எண்ணுகின்றார். அவர் சொன்னபடியே அவர்க்கு அப்பம் சுட்டு கொடுக்கின்றார். அவரது நம்பிக்கையின் படியே பானையிலுள்ள மாவும் தீரவில்லை கலயத்தில் உள்ள எண்ணையும் தீரவில்லை. இன்றே இறந்து விடுவோம் என்று எண்ணியவர்க்கு, பல ஆண்டுகாலம் வாழ உணவு கிடைக்கின்றது.
தான் செய்த செயலை எல்லோரிடமும் சென்று கூறி தம்பட்டம் அடித்திருக்க மாட்டார். மாறாக தன்னைப் போல் துன்புறும் மக்களுக்கு கட்டாயம் அந்த உணவை பகிர்ந்திருப்பார். உதவி செய்யும் குணம் உடையவர்களால் பிறருக்கு உதவாமல் இருக்க முடியாது. பெற்ற உதவியை பிறருக்கு பகிர்ந்து அளித்திருப்பார்.
நாமும் நம்மைப் படைத்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ முயல்வோம். இறைவாக்கினர்கள் இறைவனின் அடியார்கள் என்பதை உணர்ந்து வாழ்வோம். இருப்பதே போதும் என்ற மன நிலையில் எளிய வாழ்வு வாழ முற்படுவோம்.
இப்படி வாழ்ந்ததாலேயே சாரிபாத்து கைம்பெண் இன்றளவும் பேசப்படுகின்றார். எலியா உணவு கேட்டதும் எரிந்து விழுந்து விரட்டி அடித்து இருந்தால் இன்று இவர் இப்படி விவிலியத்தில் இடம் பெற்றிருக்க மாட்டார். கைம்மாறு கருதாது செய்யும் உதவிக்கு காலம் நல்ல பதில் சொல்லும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்த சாரிபாத் நகர் கைம்பெண்.

புதிய ஏற்பாட்டு கைம்பெண்.

* நிறைவான மனது.
* கோவில் கடமை
* நம்பிக்கையான செயல்

நிறைவான மனதுடன் வாழ்கின்றார் இந்த கைம்பெண். தனக்கு அது இல்லை இது இல்லை என்று அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் இவர் இது போதும் என்ற மன நிலையில் வாழ்கின்றார். அதனால் தன்னுடைய அடுத்த வேளை உணவிற்கான பணமான அந்த திராக்மாவை காணிக்கையாக அளிக்கின்றார். அதில் அவருக்கு எந்த விதமான மன வருத்தமும் இருந்திருக்காது. ஏனெனில் அவர் யாருடைய கட்டாயத்தினாலும் அதை காணிக்கையாக்கவில்லை. மாறாக தானாக மனமுவந்து அதை அளிக்கின்றார். பிறர் பார்க்க வேண்டும் என்று நினைத்து செய்யவில்லை. யாருக்கும் தெரியாமல் அதை காணிக்கையாக்குகின்றார். ஏழ்மையிலும் நிறைவான மனது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நான் அவனைப் போல் இல்லை இவனைப் போல் இல்லை என்று நினைத்து வெம்பி அழும் மனிதர்கள் நடுவில் இருந்த அந்த காசுகளையும் காணிக்கையாக்குகின்றார்.

* தான் எப்படி இருந்தாலும் தன்னுடைய ஆலய கடமைகளை சரியாக செய்கின்றார். கோவிலுக்கு வருகின்றார். தன்னுடைய காணிக்கையை செலுத்துகின்றார். ஆலயத்திற்கு செல்லாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் தேடிக் கொள்ளும் மக்கள் மத்தியில் கடமை தவறாமல் செல்கின்றார்.
என்ன உடை உடுத்துவது, என்ன நகை அணிவது எந்த வாகனத்தில் போவது யார் அருகில் அமர்வது என்ற எந்த கேள்வியும் இவரிடத்தில் இல்லை. ஆலயத்திற்கு செல்கிறேன் ஆண்டவனை பார்க்கிறேன். என்னிடத்தில் உள்ளதை காணிக்கையாக்குகிறேன் என்ற ஒரே நோக்கத்தோடு செல்கின்றார். ஆண்டவனின் கடமைகளை நாம் சரிவர செய்யும் போது அவர் நமக்கு உண்டான கடமைகளை மறக்காமல் செய்வார் என்பதை ஆழமாக நம்பியிருப்பார்.


* தன்னுடைய எதிர்காலம் என்ன ஆகும்? அதற்கு எப்படி பணம் சம்பாதிப்பது? யார் நமக்கு உதவுவார்? என்ற எந்தவிதமான கவலையோ பயமோ அவருக்கு இல்லை. தன்னிடம் இருந்தது அனைத்தையுமே காணிக்கையாக்குகின்றார். 100 % கடவுளையும் அவருடைய வார்த்தையையும் மட்டுமே நம்பி செயல்படுகின்றார். கப்பல் மாலுமியின் மகள் கொந்தளிக்கும் கடலை கொள்ளை அழகோடு ரசிப்பது போல. கடல் கொந்தளித்தால் என்ன கப்பல் ஓட்டுவது என் அப்பா என்ற நம்பிக்கையில் பயணம் செய்கின்றாள். அதே நம்பிக்கை இந்தக் கைம்பெண்ணிற்கும். நாளைய நாளைக் குறித்து கவலை இல்லை இன்றைய பொழுது நான் இறைவனோடு என்ற நம்பிக்கையில் வளர முயற்சிப்போம்.


பழைய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் புதிய ஏற்பாட்டுக் கைம்பெண்ணும் நமக்கு விடுக்கும் செய்தி. எந்நிலையிலும் இறைவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில் தளர்ந்து விடாதீர்கள். இருப்பதே போதும் என்ற மன நிலையில் வளருங்கள். எதிர்பார்ப்பின்றி உதவுங்கள் ..

ஆம் அன்பு உள்ளங்களே இவர்களது வாழ்வும் செயலும் போன்று நமது வாழ்வு மாற அருள் வேண்டுவோம். யார் இந்த பெண்/ ஆண் என்று நம்முடைய வாழ்வையும் செயலையும் வைத்து அவர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வோம். இப்படி வாழ்ந்தால் நம்முடைய் மாவுப் பானை என்னும் நம்பிக்கை அள்ள அள்ள குறையாமல் பெருகும். நற்செயல் என்னும் எண்ணெய் கலயம் நிரம்பி வழியும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.