இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் நான்காம் வாரம்

உண்மை ஒளி

2 குறிப்பேடு 36; 14-16,19-23
எபேசியர் 2; 4-10
யோவான் 3; 14-21 <

p>தவக்காலத்தின் நான்காம் வாரத்தில் இருக்கக் கூடிய நம்மை இறைவன் உண்மை ஒளியை நோக்கி வர அழைக்கின்றார். இயேசுவின் பாடுகளோடு பயணித்து நம்மை நாமே செதுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் யார் ஒளி? அது உண்மை ஒளியா என ஆராய்ந்து பார்த்து வாழ அழைக்கின்றார். தேர்தல் நேரத்து பரபரப்புகள் , பரப்புரைகள், அவசர செய்திகளின் அதிர்வலைகள், இலவசங்களின் இடர்ப்பாடுகள், விலையேற்றத்தின் வீரியங்கள் என பல்வேறு இருள்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ஒளியை நோக்கி முன்னேறி வரச்சொல்கின்றார். உண்மை ஒளியை நாம் கண்டறிய முதலில் நம்மில் இருக்கும் இருள்களை விரட்டியடிக்க வேண்டும்.
இருள் என்ற ஒன்று முதலில் இல்லை . மாறாக ஒளியானது பல்வேறு பொருள்களால் மறைக்கப்பட்டிருப்பதாலே இருள் என்ற ஒன்று ஏற்படுகின்றது. சூரியன் இரவில் காணாமல் போவதில்லை. அது மறைக்கப்பட்டிருப்பது போல. நாமும் பல தேவையற்ற குணங்களால் பண்புகளால் நம்மிடம் உள்ள ஒளியை மறைத்து வைத்திருக்கிறோம். அதனை நீக்கிவிட்டால் நாமும் நமது ஒளியைக் காணலாம்.
ஜென் கதை ஒன்று; துறவி ஒருவர் தனது மாணவர்களிடம் எது உண்மையான ஒளி என்று எப்போது அறிந்து கொள்ளலாம்? என்று கேட்டார். சீடர் ஒருவர் தூரத்தில் இருப்பது ஆலமரமா? அரசமரமா என்று கண்களுக்கு நல்ல வெளிச்சமாய் தெரிவது உண்மை ஒளி என்றார். மற்றொருவர், எதிரில் வருவது குதிரையா கழுதையா என்று கண்டுபிடிக்கும்படி தெளிவாய் இருக்கும் வெளிச்சம் உண்மை ஒளி என்றார். ஆனால் குருவோ ஆறறிவற்ற பொருளான மரம், விலங்குகளை அடையாளம் காண்பதற்கு உதவும் வெளிச்சம் உண்மை ஒளி அல்ல, மாறாக ஆறறிவுடைய மனிதன் என் சகோதரன் என்று அறியும் படி நம் மனக்கண்களுக்கு கிடைக்கும் வெளிச்சமே உண்மை ஒளி என்றார். பல நேரங்களில் நாம் எங்கோ யாருக்கோ நடக்கும் துன்பங்களுக்காக நம்மை அறியாமல் கண்ணீர் விடுகின்றோம் இரக்கம் கொள்கின்றோம். ஆனால் அருகில் இருக்கும் நம் சக நண்பர்களின் துன்பங்களை கண்டு கொள்ளாமல் விடுகின்றோம். நம் அருகில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை புரிந்து உதவும் நேரத்தில் உண்மை ஒளி நம் உள்ளத்தில் உதயமாகி விட்டது என்று அர்த்தம்.

உண்மை ஒளியை நாம் உணர இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நமக்கு சில அறிவுரைகளைக் கொடுக்கின்றார். 1. ஆலயம் செல். 2. நற்செயல் புரி. 3. ஒளியை நோக்கி வா.

1. ஆலயம் செல்:
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் செய்த பாவச்செயலும் அதனால் கடவுளின் சினத்திற்கு அவர்கள் ஆளானதும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு தான் பாவம் செய்தாலும், கடவுள் அவர்கள் மேல் இரக்கம் கொண்டு தூதர்களை அனுப்புகின்றார். ஆனால் மக்கள் அதனை புரிந்து கொள்ளாமல் மேலும் மேலும் பாவம் செய்கின்றனர். 70 ஆண்டுகளுக்கு பின், கடவுளின் ஆலயம் நம்மிடத்தில் இல்லை என்பதை உணர்ந்து அதனை கட்ட அரசன் ஆணை பிறப்பிக்கின்றான். "ஆண்டவரின் மக்கள் அவரின் ஆலயம் செல்லட்டும்" என்ற ஆணையைப் பிறப்பிக்கின்றான். ஆக மக்களின் துன்பத்திற்கு காரணம் அவர்கள் ஆண்டவரை நாடாமல் இருப்பதே என்பதை அரசன் அறிந்து அதனை செயல்படுத்த வழிவகை செய்கின்றான்.
நாமும் பல நேரங்களில் சோதனைகளுக்கு ஆளாகின்றோம். துன்புறுகின்றோம். ஆனால் அத்துன்பத்திற்கு நம்முடைய சூழலையும் நேரத்தையும் உடன் வாழும் சக மனிதர்களையும் காரணம் காட்டி விடுகின்றோம். துன்புற்ற நேரத்தில் ஆலயத்திற்கு சென்றாலும் நம்முடைய மன்றாட்டுகள் புலம்பல்களாகவும் அழுகைகளாகவும் தான் இருக்கின்றனவே தவிர, அவை எதனால் என்று எண்ண மறந்துவிடுகின்றோம். இந்த தவக்காலத்தில் ஒறுத்தல்களையும், செப தவங்களையும் மேற்கொள்ளும் நாம், ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடிக்கடி செல்லும் இடமே நமது இல்லம். எப்போதாவது சென்றால் அது விருந்தினர் இல்லம். நாம் கடவுளின் பிள்ளைகள் எனில் அவர் வாழும் இல்லம் நமது இல்லம். அனுதினமும் ஆலயம் சென்று நாம் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற உரிமையை தக்க வைத்துக் கொள்வோம். உண்மை ஒளி நம்மில் தானாக சுடர்விடும்.

2. நற்செயல்கள் புரி:
கடவுள் அன்பும் அருளும் மிக்கவர். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அந்த அன்புக்கும் அருளுக்கும் உரிமையுடையவர்கள். அன்பு அருள் இவ்விரண்டையும் நாம் மென்மேலும் வளர்த்துக் கொள்ள நமக்கு மிக உதவியாக இருப்பவை நாம் செய்யும் நற்காரியங்கள். சிலர் தங்களுடைய நற்செயல்கள் பிறரால் பாராட்டப்படவில்லை ரசிக்கப்படவில்லை என்று எண்ணி அதனை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சூரியன் உதிப்பதையும், மறைவதையும் உலகில் வாழும் எல்லோரும் எல்லா நேரமும் ரசிப்பதில்லை அதற்காக சூரியன் தன் வேலையை செய்யாமல் இல்லை. நாம் செய்கின்ற நற்செயல்களை ரசிப்பவர்களும் அதை விமர்சிப்பவர்களும் இருக்கும் உலகில் நாம் வாழ்கின்றோம். விமர்சனங்களுக்கு பயந்து வாழ்ந்தால் நல் விளைவுகளை அறுவடை செய்ய முடியாது. நாம் நற்செயல்கள் புரிவதற்கென்றே இயேசு கிறிஸ்து வழியாக படைக்கப்பட்டிருக்கின்றோம். அதை உணர்ந்து வாழ்ந்தால் உண்மை உளி நம் வாழ்வை மகிழ்விக்கும்.

3. ஒளியை நோக்கி வா:
சிறு பிள்ளைகள் நடை பயிலும் நேரத்தில் தாய், தந்தையர் அக்குழந்தைகளை தரையில் இறக்கி விடுவர். பின் தன்னை நோக்கி வருமாறு கைகளை நீட்டுவர். குழந்தைகள் அம்மா அப்பாவின் முகம் அறிந்து அவர்களை நோக்கி நடையெடுக்கும். தான் நடக்கிறேன் என்பதை விட தன் அம்மா அப்பாவை நோக்கி செல்கின்றோம் என்ற மகிழ்வே அவர்களுக்கு உற்சாகம். அப்படியே நடை பழகிவிடுவார்கள். பிள்ளைகள் பெற்றோர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையினால் அவர்கள் வாழ்வு மேம்படுகின்றது. நாமும் பல நேரங்களில் நம் இறைவனால் கீழே இறக்கி விடப்படுகின்றோம். சிலர் அதை, நமது வாழ்வு என்னும் நடைபழக என்று எடுத்துக் கொண்டு ஒளியாம் இறைவனை நோக்கி நம்பிக்கையோடு செல்கின்றனர். சிலர் இறைவனால் தாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணிக் கொண்டு அழுது அழுது கண்களால் ஒளியை மறைத்துக் கொள்கின்றனர்.

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியை நோக்கி வருகின்றனர். தீங்கு செய்பவர்கள் ஒளியை வெறுக்கின்றனர் என்று நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக்கேட்டோம். நமது ஒளி இயேசு அவர் நமக்காக சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரில் நம்பிக்கை கொண்டதால் நாம் நிலைவாழ்வு பெறுகிறோம். கடவுளின் அன்பை முழுமையாக பெறுகின்றோம். நமது தீமை விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளை மாற்றி இயேசுவின் பாதையில் பயணம் செய்யும் போது, உண்மை ஒளியின் ஒளிக்கீற்றுகளாகின்றோம். ஆலயம் சென்று, நற்செயல்கள் புரிந்து ஒளியை நோக்கி வரும் போது, நாமும் அந்த ஒளியின் சிறு பிம்பங்களாகின்றோம். அப்போது கடவுளாம் ஆண்டவர் நம்மோடும் இருந்து நம்மையும் வழி நடத்துவார்.

உண்மைக்கேற்ப வாழ்வோம் உண்மை ஒளியின் பிம்பங்களாவோம் இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து வழி நடத்துவதாக ஆமென்