இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் முதல் ஞாயிறு

வானவில் மாற்றம்

தொடக்க நூல்: 9: 8-15
1 பேதுரு: 3: 8-22
மாற்கு 1;12-15



ஒரு நாள் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு அறிவிப்பானது பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அனைவரும் மிக ஆவலாக என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்க சென்றனர். அதில் " உங்களின் வளர்ச்சிக்கு இதுவரை தடையாக இருந்தவர் நேற்று காலமானார். அவரின் உடல் அடுத்த அறையில் வைக்கப்பட்டுள்ளது. தவறாமல் அவரின் இறுதி சடங்கில் பங்கேற்கவும்" என்று எழுதப்பட்டு இருந்தது. வாசித்த அத்தனை பேரும் தங்களுடைய வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்திருப்பார்கள் என்று காண மிக ஆவலாய் அடுத்த அறைக்கு சென்றனர். அங்கு ஒரு சவப்பெட்டி இருந்தது. அதன் அருகில் சென்று உற்று பார்த்தவர்கள் அனைவரும் மிக வருத்தத்துடன் திரும்பி வந்தனர்.

சவப்பெட்டியினுள் ஒரு கண்ணாடியும் அதன் அருகில் "உங்களின் வளர்ச்சிக்கு காரணரும் நீங்களே, தடையும் நீங்களே!" நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும். தடையை மாற்றி வளர்ச்சியடையுங்கள் என்று எழுதப்பட்ட வாசக அட்டையும் வைக்கப்பட்டு இருந்தன. கண்ணாடியில் தங்களது முகத்தையும் வாசகத்தையும் கண்ட அவர்கள் அன்று முதல் அனைவரும் தங்கள் பணிக்கு தடை தரும் செயல்களை விட்டு விட்டு, வளர்ச்சி தரும் மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

நாமும் மாற்றத்தின் காலமாம் தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். தடைகள் பலவற்றை தகர்த்து வளர்ச்சி மாற்றத்தை, மனமாற்றத்தை நோக்கி பயணிக்க இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்புவிடுக்கின்றார். காலம் நிறைவேறிவிட்டது இறையரசு நெருங்கி வந்து விட்டது, மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் என்று அவர் இன்று நமக்கு அறிவுறுத்துகிறார். காலையில் பள்ளி பேருந்து வந்துவிட்டது என்றால் நம்முடைய வழக்கமான செயல்பாடு எவ்வாறு மிக துரிதமாக இருக்குமோ அதுபோல் இருக்க வேண்டும் இனி நம்முடைய வாழ்வு. அதற்கான ஒரு அறிவிப்பு தான் இந்த தவக்காலம். பிற நாட்களைப் போல் இருக்கக்கூடாது. வழக்கமான செயல்களை விட மிக சிறப்பான செயல்களை நாம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதுவரை நாம் எப்படி இருந்தோமோ அதுவும் நம்மால் தான் . இனிமேல் எப்படி இருக்க போகிறோமோ அதற்கும் நாம் தாம் முழு பொறுப்பு அதை நல்ல விதத்தில் மாற்றி அமைத்து கொள்ள நமக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நோவா காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின் மண்ணுலக மக்களுடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கை பற்றி கூறுகின்றார். அது உடன்படிக்கையின் வில். எவ்வாறு வானவில் நம் கண்களுக்கு அரைவட்ட வடிவில் இரு துருவங்களை இணைப்பது போல் தென்படுகிறதோ அது போல இறைவனை நம்மோடு இணைக்கிறது இந்த உடன்படிக்கையின் வில்.
சூரியனின் ஒளியால் மழைத்துளி பெறும் மாற்றம் ஒளிப்பிழம்பாக வானவில்.
இறைவனின் அருள் ஒளியால் நாம் பெரும் மாற்றம் செயல் வடிவமாக நம் வாழ்வில்.
வானவில் மழை வந்து சென்ற பிறகே வரும். பார்க்கும் நமக்கு மகிழ்வைத் தரும். பல்வேறு வண்ணங்களால் நம் மனதை கொள்ளை கொள்ளும். சிறிது நேரமே என்றாலும் நம் உள்ளங்களை அள்ளி சென்று விடும். நமது வாழ்வும் வானவில் போன்று மாற்றம் பெற்று நம்மோடு உடன் பயணிப்பவர்களுக்கும், வாழ்பவர்களுக்கும் மகிழ்வை தரக் கூடியதாக அமைய வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு பாலைநிலத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்ட நிகழ்வை வாசிக்கக் கேட்டோம். இயேசு சோதிக்கப்பட்ட நிலையிலும் வானதூதர்களால் பணிவிடை பெறப்பட்டார். சோதனை காலத்திலும் துன்புற்ற நேரத்திலும் இறைப்பராமரிப்பை உணர்கிறார். நமது வாழ்விலும் இத்தகைய இறைப்பராமரிப்பை நாம் உணர வேண்டும். நாம் வாழுகின்ற உலகம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டதாக இருக்கின்றது. அரசியல் மாற்றம், பொருளாதார மாற்றம், வரி மாற்றம் வட்டி மாற்றம் என்று எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றது. எத்தனை மாற்றங்கள் வந்து சென்றாலும் நாம் மாறாவிட்டால் எதையும் மாற்றவும் முடியாது, ஏற்கவும் முடியாது. நம்மைச்சுற்றி இருக்கும் மாற்றங்கள் சில நம்மை வருத்தப்பட வைக்கலாம் ஆனால் அது நாம் அனுமதித்தால் மட்டுமே நடக்கும். வெளிப்புறத்தில் நடக்கும் வித்தியாசமான மாற்றங்களை விட நமக்குள் நாமே செய்யும் மனமாற்றங்கள் தான் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன. இயேசுவின் துன்பத்திலும் வானதூதர்களின் பணிவிடை ஆறுதல் தருகின்றது. நமது துன்பத்திலும் இறைவனின் உடனிருப்பு நமக்கு ஆற்றலை தரும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது மாற்றத்திலும் துன்பத்திலும் இறைவனின் உடனிருப்பை ஆழமாக உணர்வது தான். மாற்றத்தின் காலமாம் இந்த தவக்காலம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நல்லதொரு வளர்ச்சி மாற்றத்தை தர இறைவனின் ஆசீர் வண்டுவோம். சாதாரண மழைத்துளி சூரியனின் ஒளியால் வானவில்லாக மாறி காட்சி அளிப்பது போன்று, நமது வாழ்வும் இறைவனின் அருள் ஒளியால் மாற்றம் பெற அருள் வேண்டுவோம். மாற்றம் நல்லதொரு வளர்ச்சி மாற்றமாக இத்தவக்காலத்தில் மலரட்டும் இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்