பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு ஆண்டவரைக் கண்டோம்.முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள்: 4,32-35 பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118 இரண்டாம் வாசகம்: 1யோவான் 5,1-6 நற்செய்தி: யோவான் 20,19-31
மகத்தான காரியங்களின் பிறப்பிடம் மகத்தான நம்பிக்கை. நம்பிக்கை- இதற்கு பெயர் போனவர் தோமையார். ஏனெனில் கிறிஸ்துவைப் பற்றிய போதனையை நமக்கு அறிவித்து நம்மை கிறிஸ்தவர்களாக மாற்றியவர் தோமையார். நாமெல்லாம் தோமையார் வழிவந்த கிறிஸ்தவர்களே. நம்பிக்கை இதற்கு எதிர்ப்பதமான சந்தேகம் இதற்கும் அவரையே முன்னுதாரணமாக நாம் குறிப்பிடுகிறோம். ஏனெனில் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் . தீர விசாரிப்பதே மெய் என்ற கொள்கை உடையவராய் இருந்தாரோ என்னவோ? சீடர்களின் பேச்சை நம்பாமல், தானே கையால் தொட்டு உயிர்த்த இயேசுவை உணர வேண்டும் என்று கூறி வந்தார். அதனால் தான் எதையும் நம்பாமல் இருந்தால் சந்தேக தோமையார் என்று கூறுகிறோம். ஆனால் அதிக நம்பிக்கை உடையவர்களை நம்பிக்கை கொண்ட தோமையார் என்று ஒருபோதும் அழைப்பதில்லை.
நம்பிக்கை சந்தேகம் இந்த இரண்டையும் பெற்ற ஒரு மனிதன் வாழ்வில் நிம்மதியாக வாழ முடியுமா? முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் தோமையார். இயேசு உண்மையிலேயே உயிருடன் எழுப்பப்பட்டாரா என்ற சந்தேகம் சீடர்களுக்கு . இயேசு தான் பட்ட பாடுகள் துன்பங்களின் வழியாக மீட்பை அடைந்தாரா? உயிர்த்து எழுந்தாரா ? என்ற சந்தேகம் தோமையாருக்கு. இயேசுவின் மேல் நம்பிக்கையும் கொண்டார் . அவர் தனக்கும் காட்சி தருவாரா என்று ஐயமும் கொண்டார். சந்தேகம் கொண்டார் அதில் தெளிவு பெற்றதும் இரட்டிப்பு மடங்கு நம்பிக்கை கொண்டார்.
நாமும் பல வேளைகளில் நம்மை அறியாமலேயே சந்தேகத்தோடும் நம்பிக்கையோடும் பயணிக்கிறோம். பூட்டிய வீட்டில் பூட்டை மீண்டும் இழுத்துப் பார்க்கும் போது, செல்போனில் சார்ஜ் போட்டு விட்டு ஏறுகிறதா என்று மறுபடியும் பார்க்கும் போது. இவையெல்லாம் நமது செயலை நாமே சந்தேகப்படுவதால் அல்ல. மாறாக மீண்டும் ஒரு முறைப் பார்க்கும் போது நமது நம்பிக்கை இரட்டிப்பாகிறது. மறுமுறை சந்தேகம் வராமல் பாதுகாக்கப்படுகிறது என்பதற்காக. பேருந்தில் பயணிக்கும்போது இந்த இடத்தில் இத்தனை மணிக்கு இருப்பேன் என்ற நம்பிக்கை . அலாரம் வைக்கும் போது மறு நாள் இந்த வேலைகளை நான் செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்க்கை நம்பிக்கை சந்தேகம் என்ற இரு கடிகார முட்களை கொண்டு சுற்றி வருகின்ற கடிகாரம் போலாகிறது. ஆனால் அது இயங்க இயேசுவின் உயிர்ப்பு ஆற்றல் என்னும் பாட்டரி தேவை.
நம்பிக்கை கொள்ள வேண்டிய இடத்தில் நம்பிக்கையும், சந்தேகம் கொள்ள வேண்டிய இடத்தில் சந்தேகமும் கொண்டிருந்தால் வாழ்க்கை நிம்மதியாகும் . ஆனால் பலர் நம்பிக்கைக்கு பதில் சந்தேகமும் , சந்தேகத்துக்கு பதில் நம்பிக்கையும் கொண்டிருப்பதால் தான் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
உயிர்த்த இயேசு சீடர்களுக்கு காட்சி அளிக்கிறார். தோமையார் அங்கு இல்லை . அவர் வந்ததும் சீடர்கள் தங்கள் அனுபவங்களை அவருக்கு எடுத்துரைக்கின்றனர். இயேசு சொன்னதை விடுத்து இவர்கள் கண்டதையும் , மனதில் ஆழமாகப் பதிந்ததையும் அவருக்கு கூறுகின்றனர். நாங்கள் ஆண்டவரைக் கண்டோம். அவர் காயங்களைக் கண்டோம் . இது தான் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து இருந்தது. இதன் மூலம் தோமையாரின் ஆவலை உயிர்த்த இயேசுவைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறார்கள்.
ஒரு நாள் எங்களது பள்ளியில் நான்கு வயது சிறுமி ஒருத்தி கையடக்கமான சிறு குரங்கு பொம்மை ஒன்றை தன்னுடன் எடுத்து வந்தாள். அதை தனது நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்தாள். பட்டன் ஒன்றை அழுத்தினால் அது கத்தும் .ஆனால் அதை அக்குழந்தை , தான் பேசுவதற்கு குரங்கு பதில் சொல்வதாக கூறி மகிழ்ந்து வந்தாள். அடுத்த நாள். மேலும் இருவர் அதே போல் பொம்மை வைத்திருந்தனர். அடுத்த நாள் இந்த பொம்மை எங்கு கிடைக்கும், எவ்வளவு பணம் என்பன போன்ற பேச்சுக்கள் நிறைந்திருந்தன. அடுத்த மாதம் ஏறக்குறைய எல்லா குழந்தைகளிடத்திலும் அதே மாதிரியான பொம்மை இருந்தது. ஒரு குழந்தையின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் கூறியது , ஆசையாக அல்ல அடம் பிடித்ததாலேயே வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. எல்லோரும் வைத்திருக்கிறார்கள் அதனால் எனக்கும் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம்.
சாதாரண ஒரு பொம்மையை ஒரு குழந்தை எவ்வளவு பெரிதுபடுத்தி பிறரிடம் கூறி மகிழ்கிறது. தான் பார்த்த அந்த பொம்மை போல் தனக்கும் வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு அதை அடைய முயற்சிக்கிறது. நாமும் அப்படி தான் பல வேளைகளில் கண்ணால் பார்ப்பதை கையால் தொட முயற்சிக்கிறோம் . அதற்கும் மேல் அதை நம்முடையதாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறோம். சீடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. மூன்றாண்டுகள் இயேசுவோடு உடனிருந்தவர்கள். சிறு குழந்தை போல் அவர் சொல் கேட்டு அதன்படி நடந்தவர்கள். இறந்து உயிர்த்தெழுந்து அவர்கள் முன் தோன்றிய பொழுது எப்படி மகிழ்ந்திருப்பார்கள். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இடம் தேடுகிறார்கள். யூதர்களிடமோ பிற மக்களிடமோ சொல்ல முடியாது. தோமையார் அவர்களோடு இல்லை என்பதை கண்டறிந்து அவரிடம் சொல்கின்றனர். தங்களின் உள்ள மகிழ்வை வார்த்தையால் வடிக்கின்றனர். அவரது உடல் உடை பற்றி வருணனை, விளக்கம் புகழ்ச்சி என சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் மற்ற எல்லாவற்றையும் மறந்தனர். தூய ஆவியை அவர்கள் மேல் ஊதியதைப் பற்றியோ, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று சொன்னதையோ, பாவங்களை மன்னிக்கும் அருட்கொடையை அளித்ததைப் பற்றியோ எதுவும் கூறவில்லை. மாறாக ஆண்டவரைக் கண்டோம் இது ஒன்றே அவர்களின் நாம செபமானது.
இவர்களின் வர்ணனையால் கவரப்பட்ட சிறு பிள்ளையாய் தோமா. நீங்கள் கண்ணால் கண்டீர்கள் நான் கைகளால் தொடுவேன். என் உள்ளத்தால் உணர்வேன் என்று சபதமிடுகிறார்.
சேயின் குரல் கேட்டு சேவை செய்யும் தாயாய், உயிர்த்த இயேசு மீண்டும் தோமாவிற்கு காட்சி தருகிறார் சீடர்களோடு. தனது உள்ளக் குமுறலையும் எண்ணக் கலவையையும் நிறைவேற்றிய ஆண்டவரைப் போற்றி , நீரே என் ஆண்டவர், நீரே என் தேவன். என்று புகழ்கிறார்.
சீடர்கள் வீட்டின் அறைக்கதவுகளை மூடி உள்ளே இருந்தனர். இளஞ்செடிகள் ஆடு மாடு போன்ற விலங்கினங்களால் பாதிக்கப்படாமல் இருக்க சிறு இரும்புக் கூடு ஒன்று செய்து அதை மெல்லிய துணியால் மூடி இருப்பர். செடி தளைத்து வளரும் வரை அது இருக்கும். பின் அகற்றப்பட்டுவிடும்.
உயிர்த்த இயேசுவின் அன்பிலும் அருளிலும் வளர தயாராகிக் கொண்டிருக்கும் இளஞ்செடிகளான சீடர்கள், எங்கே யூதர்கள் ரோமானியர்கள் எனும் கொடிய விலங்கினங்களால் பாதிக்கப்படுவோமோ என்று எண்ணி பயந்து கொண்டிருக்கின்றனர். அறைக் கதவுகளுக்குள் தங்களை அடைத்து வைத்திருக்கின்றனர். உயிர்த்த இயேசுவின் ஆற்றலும் , அமைதியும் அவர்களுக்குள் வந்து தங்கி அவர்களின் நம்பிக்கை வாழ்வை உயர்த்தியதும் வெளியேவருகின்றனர். துணிச்சலுடன் பறைசாற்றுகின்றனர்.
தோமையார் சொல்லின் செல்வர். நற்செய்தியில் நான்கு இடங்களில் மட்டுமே பேசி இருந்தாலும் அவை அனைத்தும் மிக முக்கியமான வார்த்தைகளாகக் கருதப்படுகின்றன. நாமும் பல இடங்களில், பல மணி நேரங்கள் பேசுகிறோம் . நமது சொல் நமக்கோ நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கோ நற்தூண்டுதலை அளித்திருக்கிறதா?
அன்னை மரியாள் அன்று ஆகட்டும் இதோ ஆண்டவரின் அடிமை என்று கூறி மனுக்குலத்திற்காக மனுமகனைக் கருத்தரித்தார். தோமையாரோ நீரே என் ஆண்டவர் நீரே என் இறைவன் என்று நம்பிக்கை அறிக்கை விட்டு கிறிஸ்தவர்களாகிய நம்மை கருத்தரித்தார். பிறக்கும் போது எவனும் முழுமையான கிறிஸ்துவனாக பிறப்பதில்லை மாறாக கிறிஸ்துவுக்குள் மாற்றம் அடையும் போதே முழுமையான கிறிஸ்தவனாகிறான். தோமையார் வழி வந்த நாம் ஆண்டவரைக் கண்டு நமது நம்பிக்கை அறிக்கையை வெளியிடுவது எப்போது?
உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று கூறினார் உயிர்த்த இயேசு அன்று. அவர் சொன்ன அமைதி அவர்களிடம் குடியேறியது. பல மாற்றங்களைக் கண்டனர். ஏனெனில் அமைதியை பெறக் கூடிய நல்ல மனமும் தூய இதயமும் அவர்களிடம் இருந்தது. இன்று உயிர்த்த ஆண்டவர் நம்மைப் பார்த்தும் சொல்கிறார். உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று. அதை ஏற்கக் கூடிய மனநிலையும் தூய உள்ளமும் நமக்கு இருக்கிறதா சிந்திப்போம். ஆண்டவரைக் காண்பவர்களாய் நாமும் மாறுவது எப்போது?
மரி சுமந்த மகவாய்,
மாமுனி சூசை வளர்த்த சிசுவாய்,
சிலுவை சுமந்த சுதனாய்,
காட்சி தந்த கருணாளனாய்,
பல நிலைகளில் நாம் இறைவனை
அகத்தில் காண்பதாய் எண்ணியிருப்போம்.
சேயைக் காப்பாற்றும் தாயாய்,
தாயை மதிக்கும் சேயாய்,
துயர் துடைக்கும் அன்பாய்,
தோள் உயர்த்தும் நட்பாய்,
ஏழைக்கு உதவும் எளியனாய்
புறத்தில் ஆண்டவரைக் காண்போம் .
|