இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 5ம் ஞாயிறு

எல்லோருக்கும் எல்லாமாய்....

யோபு 7:1-4,6-7
1 கொரிந்தியர் 9:16-19,22-23
மாற்கு 1:29-39


எல்லோருக்கும் எல்லாமாய் இருப்பது எல்லாராலும் முடியாது. ஆனால் இறைமகன் இயேசுவால் முடியும். அவர் வழி வாழ்ந்த பவுலடியாராலும் அவ்வாறு வாழ முடிந்திருக்கின்றது. பொதுக்காலத்தின் 5ம் ஞாயிற்றில் இருக்கக் கூடிய நம்மை இன்று எல்லோருக்கும் எல்லாமாய் வாழ இறைவன் அழைக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் யோபு இறைவாக்கினர் துன்பத்தின் உச்சகட்டத்தில் தன் வாழ்வை எண்ணி வருந்திக் கூறுவதாக வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம்.

நிழலுக்கு ஏங்கும் அடிமை போல, கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போல இருக்கின்றேன் என்று தனது நிலைமையை தன் நண்பர்களுக்கு எடுத்துரைப்பது போல அமைந்துள்ளது இன்றைய முதல் வாசகம். தன் வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ ? தனது வாழ்வில் இனி நல்லவை எதுவும் திரும்ப வராதோ? என்று எண்ணி வருந்துகின்றார். நாமும் பல நேரங்களில் துன்பம் வந்து விடுமோ என்று அஞ்சுகின்றோம். நன்மை வராமல் போய்விடுமோ என்று வருந்துகிறோம். எல்லோருக்கும் எல்லாமாய் இருக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதை ஏனோ தவற விட்டு விடுகின்றோம்.

இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் நற்செய்தியை பிற மக்களுக்கு அறிவிப்பதற்காக தான் எல்லோருக்கும் எல்லாமாய் மாறினதாக எடுத்துரைக்கின்றார். நற்செய்தியை அறிவிக்காவிடில் தனக்கு கேடு என்று எண்ணி அதன்படி செயல்படுகின்றார். தனது வாழ்வில் எவ்வளவு துன்புற்றாலும் அதை அனைத்தையும் கிறிஸ்துவின் மகிமைக்கென எடுத்துக் கொள்கின்றார். துன்பத்திலும் இன்பத்தைக் கண்டு கொள்ள முயல்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவின் மாமியார் காய்ச்சலைப் போக்கிய நிகழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இயேசுவின் மூன்று விதமான செயல்களை நமது சிந்தனைக்கு என்று எடுத்துக் கொள்வோம். அருகிருத்தல், செபித்தல், பணி செய்தல்.

அருகிருத்தல்:
இயேசு பேதுருவின் மாமியார் காய்ச்சலால் துன்புறுகின்றார் என்று தெரிந்தவுடன் அவரருகில் செல்கின்றார். அவரது கையைப் பிடித்து தூக்கிவிடுகின்றார். நோயாளியைத் தேடிச்செல்கின்றார். அவரது அருகில் செல்கின்றார். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகின்றார்கள் என்றால் வீட்டின் உரிமையாளர்களுக்கு கையும் ஓடாது காலும் ஓடாது. அவர்கள் காலில் சக்கரம் இல்லாத குறையாக சுற்றிக் கொண்டு இருப்பார்கள். அதுவே அந்நேரத்தில் அவர்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் அந்த வீட்டின் சூழலே மாறிவிடும். வழக்கமான கலகலப்பு, மகிழ்ச்சி இல்லாமல் போய்விடும். வந்த விருந்தினருக்கும் ஏன் வந்தோம் என்ற மனநிலை, வீட்டு உரிமையாளருக்கும் இந்நேரத்தில் வந்திருக்கின்றார்களே என்ற கவலை, அவ்வீட்டின் இயல்பு நிலையையே மாற்றிவிடும். அவ்வாறு நிகழாதவாறு இயேசு அந்த பெண்ணின் உடல் நிலையை சரி செய்கின்றார். நோயளிகளின் அருகில்மட்டுமல்ல சாதாரணமாகவே யார் அருகிலும் செல்லக் கூடாது என்று சமூக இடைவேளி கடைபிடிக்கும் காலத்தில் நாம் இருக்கின்றோம். ஆனால் இந்த இடைவெளி மனித உறவுகளிலும் உள்ளங்களிலும் விழுந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு நமது சமூகம் மாறிக் கொண்டு இருக்கின்றது.
அப்படிப்பட்ட நேரத்தில் இயேசு உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்ல அவர்களின் கைகளைப் பிடிக்க நமக்கு வலியுறுத்துகிறார். கைகளைப் பிடிப்பது என்பது உங்களுக்காக நான் இருக்கின்றேன் என்பதன் அடையாளம். தூக்கிவிடுதல் அவர்களின் இயலாமையிலிருந்தும், பலவீனத்திலிருந்தும் தூக்கி விடுதலாகும். அப்படி நாம் செய்யும் போது நாமும் இயேசு போல எல்லோருக்கும் எல்லாமாய் மாறுகின்றோம்.

செபித்தல்;
எவ்வளவு பெரிய புதுமைகளை செய்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தி இருந்தாலும் இயேசு தனிமையில் இறைவனோடு செபிப்பதை ஒரு போதும் மறந்ததே கிடையாது. அவரது அற்புதங்கள் புதுமைகளுக்கான வலிமையை அந்த செப நேரத்தில் பெற்றுக் கொள்கின்றார். அதுவும் அதிகாலையில் எழுந்து தனிமையான ஒரு இடத்திற்கு சென்று செபிக்கின்றார். தனது வாழ்விற்கான வலிமை செபம் என்பதை அறிந்து இருந்தார் இயேசு. இறைமகனுக்கே செபம் அவரது வாழ்விற்கு அவசியம் என்றால் நாம் எம்மாத்திரம். செபம் வெற்றி தரும் என்பதை உணர்ந்து, செபிக்கப்பழகுவோம். நாம் தனிமையில் இறைவனிடம் எடுத்துரைக்கும் செபங்கள், மன்றாட்டுக்கள், நிச்சயம் பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் செபிக்கப்பழகுவோம்.

பணி செய்தல்:
இயேசு தனக்கு பழக்கமான மனிதர்களிடம் மட்டும் வேலை செய்ய விரும்பவில்லை. தான் புதுமை செய்த இடத்தில் அவரை அதிகம் தேடுகின்றார்கள் என்று தெரிந்தவுடன் வேறு இடத்திற்கு நகரத் தொடங்குகின்றார். அறிமுகமான, அவர் மேல் பாசம் கொண்ட மக்களை விட முகம் தெரியாத புது நபர்களுடன் தன் பணியைத் தொடங்க தயாராக இருக்கின்றார். நீர் தேங்கும் குட்டை குளம் போல் இல்லாமல், அருவி ஆறு போல விரைந்து ஒடுகின்றார். தனது பணி ஒரு சில மக்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து மக்களுக்கு தேவை என்பதை தனது சொல்லாலும் செயலாலும் அடிக்கடி நிரூபிக்கின்றார். தனது அன்பு ஒருவரிடத்திலும் ஒரு ஊரிலும் மட்டும் அடங்கி விடக் கூடியது அல்ல. அது உலக எல்லை வரை விரிவடைந்து கொண்டே இருக்கக் கூடியது என்பதை வெளிப்படுத்துகின்றார். நாமும் நம்முடைய அன்பை ஒரு சிலர்களிடம் மட்டும் காட்டி அதனை அத்தோடு நிறுத்தி விடாமல் இயேசுவின் இரக்கத்தின் அன்பை போன்று பலருக்கும் கிடைக்கும்படி அன்பு செய்து வாழ்வோம்.

இவ்வாறு இயேசு போன்று அருகிருந்து, செபித்து பணி செய்து வாழும் போது, நாமும் எல்லோருக்கும் எல்லாமாய் மாறுவோம். துன்பங்களை எதிர்கொள்ளும் சக்தி பெறுவோம். செபத்தினால் வலிமை பெறுவோம். பிறரையும் வலுப்படுத்துவோம். பணி செய்து பலன் பெறுவோம். எல்லோருக்கும் எல்லாமாய் இருக்க, இறைமகன் இயேசுவின் கண்மணிகளாய் வாழ்ந்து சிறக்க, இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.