இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









. திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு

ஆயத்தமா(க்)குவோம் வாருங்கள்

எசாயா 40 1-5, 9-11
2 பேதுரு 3: 8-13
மாற்கு 1; 1-8


அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் . அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். எனவே தலைவர் போட்டிகளை அறிவிக்கும்படி தன்னுடைய உதவியாளர்களுக்குக் கட்டளையிட்டார். நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்துவிட்டது . இருவரையும் நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி. தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார். மறுநாள் இரண்டு வீரர்களையும் அவருடைய இடத்துக்கு வரவழைத்தார். " இளைஞர்களே! இதுவரை உங்களுடைய செயல்களால் உங்களுக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான். இப்போது உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும் , சமையல் பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும் கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும் வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் . தீர்ந்த பிறகு காட்டில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக் கடற்கரையில் வைத்துக் கொளுத்துங்கள். அதிலிருந்து வரும் புகையைக் கண்டவுடனேயே இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன்தான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார். மஞ்சள் மரம் என்பது அந்தக் காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

தலைவர் சொன்ன நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு ஆளுக்கொரு தீவுக்குப் பயணமானார்கள் .அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள். நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது. படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது. அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான்." தலைவா , எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தும் நான் சாமர்த்தியமாக இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத்தாக்குப் பிடித்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன் " என்றான்.

தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம் உண்டாகிவிட்டது . இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா ? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது. ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு. இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார். கொஞ்சதூரம் காட்டுக்குள் நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம் . அங்கே மூங்கிலாலும் , ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது. அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடிவந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான்.

" உள்ளே , வாருங்கள் தலைவா " என்று அழைத்துச் சென்று அமர வைத்தான். உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கோ ஒன்றும் புரியவில்லை." உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே . நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ? " என்றார்.
" கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே " என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. அவன் சொன்னான் ," தலைவா, நான் வந்த அன்றே எனது தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல . இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும் " என்றான். தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.
" நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன் . நீயோ உன் அறிவாலும் , உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய் . *_நாட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி, என்றார்._*

*கையில் கொடுக்கப் பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே ஜெயிக்கிறார்கள்.
அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் , நேரமானாலும்.*
இக்கதையில் வரும் மனிதன் போல எந்நிலையிலும் ஆயத்தமாயிருந்து கிடைத்ததை கொண்டு நம் வாழ்வை மெருகேற்ற இறைவன் அழைக்கின்றார். நமது பாதையை நேரத்தை செயலை ஆயத்தமாக்குவோம். நாமும் ஆயத்தமாகுவோம். திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கும் நம்மை ஆயத்தமாக்க, ஆயத்தமாக வாழ இறைவன் அழைக்கின்றார்.

பாதையில் ஆயத்தம்:
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வாயிலாக நம் வழியை செம்மைப்படுத்த சொல்கின்றார். நெடுஞ்சாலைகள், பள்ளத்தாக்குகள், மலை குன்றுகள், கரடு முரடான பாதைகள் என அனைத்தையும் சீர்படுத்தச்சொல்கின்றார். ஆயத்தம் என்பது நம் உடலளவில், மனதளவில் என்று அகம் சார்ந்த ஒன்று மட்டுமன்று அது புறம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பாதைகள் நாம் செல்வதற்கு மட்டுமன்று நம்மைப் போல் பிறரும் செல்ல பயன்படும். கதையில் வரும் மனிதன் தன்னுடைய நாளைய உணவிற்காக அந்த சோளக்கொல்லையை ஏற்படுத்தி இருந்தாலும் தனக்கு பின் வரும் தன்னுடைய சந்ததிகளுக்கும் அவற்றை விட்டுச்செல்கின்றான். நம்முடைய தயாரிப்பும் ஆயத்தமும் நம்மை சார்ந்ததாக மட்டும் இல்லாமல் நமக்கு பின் வருபவர்களுக்கு வழிவகை செய்வதாக அமைய வேண்டும். இன்று இந்தியாவில் விவசாயிகள் தலைநகரில் போராடிக் கொண்டு இருப்பது அவர்களுக்கான பாதைக்கான ஆயத்தம் மட்டுமல்ல, அது தனக்கு பின் வரும் தன்னுடைய சந்ததிகளுக்கான பாதையினை சரிசெய்யும் ஆயத்தம். நாம் செல்கின்ற பாதை யாரோ அன்று உருவாக்கியது . நாம் இன்று உருவாக்கும் பாதை நாளை யாரோ செல்ல பயன்படும்.

நேரத்தில் ஆயத்தம்:
ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் என்பது1000ஆண்டுகள் போலவும் 1000 ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. அவர் நம்முடைய மனமாற்றத்திற்காக பொறுமையோடு காத்திருக்கின்றார். அவர் காலங்களைக் கடந்தவர். அவர் நமக்காகக் காத்திருப்பது போல நாம் அவருக்காக காத்திருக்க அழைக்கின்றார். அவர் வரும் நேரத்தை எதிர் நோக்கி ஆயத்தமாயிருக்க பணிக்கின்றார். அவர் எந்நேரத்திலும் வரலாம் அவர் வரும் நாளோ நேரமோ யாருக்கும் தெரியாது. திருடனைப் போல வரும் என்கின்றார். திருடன் வரும் நேரம் யாரும் அறிய முடியாது. எனவே ஒரு நாளின் எல்லா வேளையிலும் மிக விழிப்பாக இருக்க அழைக்கின்றார். நம்மில் பலர் இன்று நம்முடைய பொன்னான நேரத்தை வீண்பேச்சிலும் வெட்டியான பொழுது போக்குகளிலும் செலவிட்டு கொண்டு இருக்கின்றோம். நம்முடைய நேரத்தை மனமாற்றத்திற்காகவும், பயன்படுத்துவதை விடுத்து நாட்களையும் நேரத்தையும் விரயமாக்கிக் கொண்டு இருக்கின்றோம். அவரது இரண்டாம் வருகையின் போது நாம் வாழ்கின்ற இந்த மண்ணுலகமும் அதன் செயல்பாடுகளும் அழிந்து போகும். எனவே தான் கடவுள் என்றுமே அழியாத தூய இறைப்பற்று உள்ளவர்களாய் நடத்தையில் சிறந்து விளங்க அழைக்கின்றார். எனவே நம்முடைய நேரத்தை இறைவனை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்துவோம். மாசு மறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் காணும்படி வாழ முயற்சி செய்வோம்.

செயல் ஆயத்தம்;
திருமுழுக்கு அருளப்பர் இயேசுவுக்காக வழியை ஆயத்தம் செய்தார். அவர் பாலை நிலத்தில் இருந்து முழக்கம் இடுகின்றார். பாலை நிலம் அரவம் அற்ற ஒரு இடம் அங்கு எதற்காக முழக்கமிட வேண்டும் என்று நான் எண்ணியதுண்டு. பல நேரங்களில் மேடை நாடகமோ நடனமோ செய்ய இருப்பவர்கள் தங்களுக்கு தாங்களே ஒத்திகை தனிமையில் பார்த்து கொள்வதுண்டு . தன்னுடைய குரலும் செயலும் அரங்கேற்றத்திற்கு சரியானது தான் என்று அவரவர் பரிசோதனை செய்த பிறகே அதனை பிறர் முன் செய்து காட்டுவர். மேலும் அந்த தனிமையில் நம்முடைய செயலின் பிரதிபலிப்பும் குரலின் எதிரொலியும் நமக்கு நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்தும். பாலை வனத்தில் யோவானின் குரல் அவரது செயலை சரிவர செய்ய அவருக்கு உதவியது. தன்னை ஆயத்தப்படுத்திய பின் பிறரையும் ஆயத்தமாயிருக்க வலியுறுத்துகின்றார். பாலைவனத்தில் ஒன்று முழங்குகின்றது என்ற எசாயாவின் இறைவாக்கு பல ஆண்டுகள் கழித்து திருமுழுக்கு யோவான் மூலம் நிறைவு பெறுகின்றது. எசாயாவின் குரல் எதிரொலிப்பு, யோவானின் பிரதிபலிப்பாகின்றது. அவரின் செயலால் இயேசுவின் பாதையை சரி செய்கின்றார். நேரத்தை அறிவிக்கின்றார். மனம் மாற அழைக்கின்றார்.

இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் நாம் நமது பாதையை, நேரத்தை, செயலை சரி செய்ய ஆயத்தப்படுத்த இறைவன் அழைக்கின்றார். இதனால் தூயவர்களாக இறைப்பற்று உள்ளவர்களாக நாம் மாறுவோம். மாசு மறுவற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய் நாம் மாற முயற்சிப்போம் ஆயத்தமாகுவோம் பிறரையும் பிறவற்றையும் ஆயத்தமாக்குவோம். இறைவனின் ஆசீரும் அருளும் என்றும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவதாக இறையாசீர் என்றும் நம்மோடு. ஆமென்.