இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு.

சட்டங்களா? சவால்களா?

I. எசாயா 43:16-21
II. பிலிப்பியர் 3:8-14
III. யோவான் 8:1-11




தவக்காலத்தின் ஐந்தாம் வாரத்தில் இருக்கக்கூடிய நம்மை இன்றைய வாசகங்களின் மூலம் இறைவன் மன்னித்து வாழ, சவால்களை சந்தித்து வாழ அழைக்கின்றார். இன்றைய முதல் வாசகமும் இரண்டாம் வாசகமும் கடந்ததை மறந்து கண்முன் இருக்கும் வாழ்க்கை சவால்களைக் கண்டு வாழ அழைக்கின்றன. நற்செய்தி வாசகத்திலோ இயேசு பாவியான பெண்ணிற்கு மன்னிப்பு அளித்து புது வாழ்விற்கு அழைப்பு விடுத்து அதன் முலம் நாமும் புதுவாழ்வு வாழ அழைக்கின்றார். தவக்காலத்தினை மிகச்சிறப்பான முறையில் அனுசரித்து வாழ்ந்து வரும் நாம், இன்னும் வளர வேண்டிய ஒரு பகுதியாக மன்னிப்பு என்னும் குணம் இருப்பதை நமக்கு எடுத்துரைக்கின்றார். மன்னிப்பு கொடுப்பதும் பெறுவதும் சட்டரீதியாகவா இல்லை சமூக நலன் கருதியா என்று எண்ணியே காலத்தைக் கழித்துவிடுகிறோம். நாம் நம்முடைய வாழ்நாட்களில் சட்டங்களை கடைபிடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அன்றாட வாழ்வின் சவால்களான செயல்களுக்குக் கொடுப்பதில்லை. சட்டங்களையும் கொள்கைகளையும் கடைபிடித்து நம்மை நாமே நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றோமே அன்றி நடைமுறை வாழ்க்கைக்கேற்ற செயல்களில் மாற்றம் ஏற்படுத்த முனைவதில்லை. இன்றைய காலகட்டத்தில் மன்னிப்பு தான் நம் வாழ்வின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
நான் ஒரு கிறிஸ்தவன்/ள் எனவே நான் எனக்கு எதிராக தீமை செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்று சட்டதிட்டங்களை எண்ணி பிறரை மன்னிப்போமாயின் அதனால் ஒரு பலனுமில்லை. மீண்டும் பிறரோடு மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. அதை ஒரு சவாலாக எண்ணி மன்னித்து மறந்து வாழ்ந்தோமானால் அதுவன்றி இன்பம் வேறில்லை. எவ்வாறு வேரில்லாத செடி விளைச்சல் தருவதில்லையோ அதுபோல சவால்களில்லாத வாழ்வும் தரமான பலன் தருவதில்லை. இப்படிப்பட்டதொரு சவாலான வாழ்வை சட்டங்களால் தொலைத்துவிடாதீர்கள் என எச்சரிக்கின்றார் இயேசு. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களை யாவே இறைவன் எவ்வாறு வழிநடத்தினார் என்பதை எடுத்துரைத்து அதைவிட மேலாக இன்னும் மேன்மையாக வழிநடத்துவேன் என்கிறார். பழையதை மறந்து விடு புதிய வாழ்வை வாழ். அது சவால் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் பழையது போல் இல்லாது புது முறையில் உன்னை வழிநடத்துவேன் என்கிறார். இரண்டாம் வாசகத்திலோ பவுலடியார் தன்னுடைய கடந்த கால வாழ்வை மறந்துவிட்டு புதிய இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றார். இறைவன் தரும் அழைப்பே பரிசு என்னும் இலக்கு என்கிறார். இவர் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக செய்த குற்றத்திற்கு மன்னிப்பு பெற்று புதிய வாழ்வை வாழ்த் தொடங்குகின்றார். அதனால் ஏற்பட்ட அனைத்து சவால்களையும் பொறுமையோடு ஏற்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிற்கு புதிய வாழ்வு வாழ அழைப்பு விடுப்பது போல நமக்கும் விடுக்கின்றார். நமது குற்றங்களை மன்னித்து நம்மையும் புதிய வாழ்வு வாழ அழைக்கின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் செயல்பாடுகளும் அவர் கூறிய வார்த்தைகளும் நமது வாழ்விற்கு விடுக்கும் செய்தி என்ன என்பதை அறிய முற்படுவோம். செபம், செயல், அமைதி, தெளிவு, மரியாதை, அழைப்பு என்னும் ஆறின் அடிப்படையில் நம்மையும் நமது செயல்பாடுகளையும் அலசி ஆராய்வோம்.
தவக்காலத்தின் சிறு சிறு பக்தி மற்றும் தப முயற்சிகளினால் நமது கிறிஸ்தவ விழுமியங்களை பிறருக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கும் நாம் இயேசுவின் இந்த ஆறு செயல்பாடுகளின் மூலம் அதை மெருகேற்றிக் கொள்ள முயல்வோம். சட்டங்களாக அல்ல வாழ்க்கையை மாற்றும் சவால்களாக.......

செபம்:
இயேசு எப்போதும் செபத்துணையோடு எல்லா செயல்களையும் செய்தார். அதிகாலையில் எழுந்து இறைவனை நோக்கி செபிக்கின்றார். கோவிலுக்கு செல்கின்றார். அதிகாலையில் என்னை நோக்கி கூப்பிடுகிறவன் ஒரு போதும் தளர்ந்து போகான் என்ற இறைவசனத்திற்கு ஏற்ப, தன்னை செபத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார். எல்லா வேளையிலும் செபமே அவரை இறைத்தந்தையுடன் இணைத்தது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய ஆற்றல் தந்தது. நமது செப வாழ்வு எப்படி இருக்கிறது? இறைவனோடு நம்மை ஐக்கியப்படுத்த காரணியாக அமைகின்றதா? நமது வாழ்விலும் பல அளப்பரிய செயல்களை நம்மால் செய்ய முடிகின்றதா? செபத்தின் துணை கொண்டு ஜெயம் பெற முயல்வோம். சிறு துளி பெரு வெள்ளம். நம் சிறு ஜெபம், தருமே ஜெயம்.

செயல்;
இயேசு சொல்வீரர் மட்டுமல்லர். மாறாக செயல் வீரர். சொன்னதை செய்கின்றவர். வெறும் வாய்ச்சொல்லில் வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு வாழ்ந்து போகும் வாடிக்கை மனிதரல்லர் அவர். எதை சொன்னாரோ அதைச்செய்தவர். இதனாலே அவரைப் பலரும் பின்தொடர்ந்தனர். காலை மாலை மதியம் அதிகாலை இரவு என எல்லா நேரமும் அவரை சுற்றி மனிதர்கள் கூட்டம் . தான் எப்படி வாழ்ந்தாரோ அதன்படி வாழ மக்களுக்கும் போதிக்கின்றார். சிலர் போதனைக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடுகள் அதிகம் இருக்கும். இயேசுவுக்கோ இரண்டும் இணைந்தே போகின்றது . அதனால் மக்கள் கூட்டம் வெள்ளமென பாய்ந்து வருகிறது. நமது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? வார்த்தைக்கும் வாழ்விற்கும் முரண்பாடுகள் இருக்கின்றனவா? சிந்தனை சொல்லாக, சொல் செயலாக, செயல் பழக்கமாக, பழக்கம் வழக்கமாக, வழக்கம் வாழ்க்கையாக மாற முயற்சிப்போம்.

அமைதி :
அமைதியே பல பிரச்சனைகளுக்கு தீர்வு. பேசவேண்டிய இடத்தில் பேசாமலும் அமைதி காக்க வேண்டிய நேரத்தில் அமைதிகாக்காமலும் இருப்பதாலேயே பல சிக்கல்கள் நமக்கு ஏற்படுகின்றன. இயேசு அதனை சரியாக கையாளுகின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கேட்ட கேள்விகளுக்கு இயேசு எப்படி பதில் சொல்லி இருந்தாலும் அவரை அன்றே விரைவாகக் கொல்லத் திட்டம் தீட்டி இருப்பர். இயேசு அமைதி காக்கின்றார். அவர்கள் தவறை அவர்களே உணர்ந்து கொள்ள வழி செய்கின்றார். தன்னை காயப்படுத்தியவரை விட்டு விட்டு மௌனமாக விலகிச்செல்பவரே உண்மையான பக்குவ நிலையை அடைந்தவர். இயேசு பக்குவனிலையை அடைந்தவர் . நாம் எப்படி? அமைதி காக்கின்றோமா? எப்போது எந்த நேரத்தில் ? நமது அமைதியினால் பிரச்சனை முடிவடைகின்றதா? இல்லை விரிவடைகின்றதா?

தெளிவு
இயேசுவின் பேச்சில் தெளிவு இருக்கின்றது. உள்ளத் தூய்மையோடு இருப்பவர்களின் வார்த்தைகள் எப்போதும் தெளிவாக இருக்கும் . அவர்கள் கூற நினைப்பதை தெளிவாக பிறருக்கு எடுத்துரைத்து விடுவார்கள். மனதில் குழப்பமும் சலனமும் இருப்பவர்களால் தாங்கள் நினைப்பதை பிறருக்கு எடுத்துரைக்கவும் முடியாது. பிறர் கூறுவதற்கு கவனமும் செலுத்த முடியாது. ஆனால் இயேசுவின் வார்த்தைகள் தெளிவாகவும் ஆழமாகவும் வெளிப்படுகின்றன. உங்களில் பாவம் இல்லாதவர் இவர் மேல் முதல் கல் எறியட்டும் என்கிறார். பாவமே இல்லாதவன் இந்த உலகில் யாருமே இல்லை இறைமகனைத் தவிர. இயேசுவின் அந்த வார்த்தையினால் கவரப்பட்டவர்கள், கலங்கடிக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். நமது பேச்சில் தெளிவு இருக்கின்றதா? சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இயேசுவின் பண்பு நம்மிலும் துளிர் விட அருள் வேண்டுவோம்.

மரியாதை :
இயேசு பாவியான அப்பெண்ணிற்கு உரிய மரியாதையை கொடுக்கின்றார். விபச்சாரி என்று கடுமையாக அனைவர் முன்னிலையிலும் விமர்சிக்கப்பட்டவரை அம்மா என்று அழைக்கின்றார், அம்மா, யாரும் உம்மைத் தீர்ப்பிடவில்லையா ? நானும் தீர்ப்பு அளிக்கவில்லை நீர் போகலாம் என்கின்றார். தனது கண்ணியமான வார்த்தைகளின் மூலம் பாவிகளின் மனதிலும் இடம் பிடிக்கின்றார். மரியாதை கொடுக்கப்பட வேண்டியவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றார். பிறர் குற்றவாளி என்று தீர்ப்பிட்டாலும், தன்னுடைய மனதிற்கு எது எப்படி தோன்றுகின்றதோ அதன்படி செயல்படுகின்றார். பெண்களுக்கு உரிய மாண்பையும் மதிப்பையும் கொடுக்கின்றார். நாம் எப்படி பிறரை தீர்ப்பிடுகின்றோம்.? மற்றவர் கூறும் வார்த்தைகளை வைத்தா? பிறர் நல்லவர் கெட்டவர் என்ற கணிப்பு நமக்கு எதைப் பொறுத்து ஏற்படுகின்றது?

அழைப்பு :
இயேசு தன்னை பின்பற்ற விரும்பும் அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றார். பாவியான பெண்ணுக்கும் அழைப்பு விடுக்கின்றார். இனிப்பாவம் செய்யாதே என்று கூறி புதியவாழ்விற்கு அழைக்கின்றார். பழைய வாழ்வை மறந்து கண்முன் இருக்கும் புதிய வாழ்வை வாழ் என அழைக்கின்றார். இந்த அழைப்பு நமக்கும் பொருந்தும். நமது பழைய இருண்ட வாழ்வை விட்டு புதிய ஒளி மயமான வாழ்வை வாழ அழைக்கப்படுகின்றோம். இந்த அழைப்பு நமக்கு ஒவ்வொரு நாளும் கொடுக்கப்படுகின்றது. அழைப்பை பயனுள்ள முறையில் பயன்படுத்தி வாழ முற்படுவோம்.

இவ்வாறாக இயேசுவின் இந்த ஆறு செயல்பாடுகளும் நமது இன்றைய வாழ்வின் சவால்களாக இருக்கின்றன. இவை அனைத்தையும் செயல்படுத்துவது எளிது ஆனால் அதை சரியாக பயன்படுத்தி வெற்றி காண்பது என்பது அரிது. சட்டதிட்டங்களுக்காக நாம் அதை கடைபிடித்தோமானால் அது நம் வாழ்க்கைக்கு எந்த வித பயனும்தராது. மாறாக அதை ஊக்கம் தரும் சவாலாக எண்ணி செயல்பட்டோமானால் வெற்றி நம் பக்கம். வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற்படி தான் . நாம் வாழ பிறந்தவர்கள் இயேசுவுக்காக இயேசுவைப் போல ... என்ற எண்ணத்தொடு செயல்படுவோம். நமது செபம், செயல், அமைதி, தெளிவு, மரியாதை, அழைப்பு இவற்றில் கவனம் செலுத்தி சவாலான வாழ்வை எதிர் கொள்வோம். மன்னிக்கும் தேவன் நமது பாவங்களை மன்னித்து நமக்கு அருள் நிறைந்த வாழ்வைத் தருவாராக. இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.