பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு மெல்லிய கோடா??? மீளா கோடா??? I. எரேமியா 17:5-8 II. 1 கொரிந்தியர் 15:12,16-20 III. லூக்கா 6:17,20-26 இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை, இன்றைய வாசகங்கள் அனைத்தும் சிந்தித்து செயல்பட அழைப்பு விடுக்கின்றன. மனிதராய் பிறந்த நாம் அனைவருமே நல்லவர் கெட்டவர் என்ற இரு நிலைகளில் அடங்குவோம். நற்செயல் புரிந்து நன்மைகளை செய்தால் நல்லவர் என்றும் தீய செயல்களில் ஈடுபட்டு தீச்செயல் புரியும் போது கெட்டவர் என்றும் அழைக்கப்படுகின்றோம். இவை இரண்டிற்கும் இடையில் இருப்பது ஒரு கோடே.. அந்த கோட்டினை மெல்லிய கோடாக -மறைந்து போகக்கூடிய கோடாகவும், மீளாக் கோடாக- மறைந்து போகா கோடாகவும் மாற்றுவது நம்மிடமே உள்ளது. இன்றைய வாசகங்களனைத்தும் நமது இத்தகைய நிலையினை நமக்கு தெளிவாக எடுத்துரைத்து, நாம் எந்நிலையில் இருக்கின்றோம் என்பதனை கண்டுணர்ந்து வாழ அழைப்புவிடுக்கின்றன. இன்றைய முதல் இரண்டாம் வாசங்களும் சரி பதிலுரைப்பாடல் முதல் நற்செய்தி வாசகம் வரை அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர், மனிதரில் நம்பிக்கை வைப்பவர் நீரோடை அருகில் நடப்பட்டவர், பாலை நில புதர்ச்செடிக்கு ஒப்பானவர். நற்பேறு பெற்றோர், நற்பேறு பெறாதோர். தூயஆவியால் உருப்பெற்ற கடைசி ஆதாம் இயேசு, களிமண்ணால் உண்டான முதல் ஆதாம் ஆவியின் இயல்பு ,மனிதரின் இயல்பு ஏழைகள் , பணக்காரர் பட்டினியாய் இருப்போர், உண்டு கொழித்திருப்போர். அழுது துன்புறுவோர், சிரித்து இன்புறுபவர். வெறுத்து ஒதுக்கப்படுவோர், புகழப்படுபவர். ஆக இரண்டு விதமான மனிதர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டில் நாம் யார் என்பதைக் கண்டறிய மூன்று கேள்விகள் உங்கள் நம் முன் வைக்கப்படுகின்றன. 1. தற்போது வெளியான நவீன ரக தொலைதொடர்பு சாதனம் உன்னிடம் இல்லை ... இருப்பினும் நீ மகிழ்ச்சியாக இருக்கின்றாயா??? 2. அளவுக்கு அதிகமான பணம் துன்பத்தைத் தரும் என்பதை உணர்கின்றாயா??? 3. நீ இப்போது இருக்கும் நிலைக்காக இறைவனுக்கு நாள்தோறும் நன்றி சொல்கின்றாயா??? இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் ஆம் இல்லை என்று தெளிவாக பதில் சொல்லுமிடத்து நாம் யார் என்பது தெளிவாக விளங்கும். எப்போதாவது ஒரு சில நேரங்களில் பல நேரங்களில் என்று பிரித்து பதில் கூறுவோமானால் நாம் இரண்டிற்கும் நடுவில் ஒரு மெல்லிய கோட்டினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. இயேசு கூறிய பேறுபெற்றவர்கள் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருக்க முயல்வோம். ஏழைகளைப் போல எளிய மனம் உடையவர்களாக வாழ்ந்து இறையாட்சியை நமதாக்குவோம். இறைத்தாகம் பசி உடையவர்களாக திகழ்ந்து, இறையாசீரால் நிறைவு பெறுவோம். நன்மை செய்ய துணிந்து வெற்றி பெற்று நிறைவு பெறுவோம். எதுவும் நம்மிடம் இல்லை இருப்பினும் எதிலும் குறைவுமில்லை என்ற மனப்பான்மையுடன் வாழ்வோம். நமது குணங்களுக்கிடையேக் காணப்படும் அந்த மெல்லியக் கோட்டினை இறை நம்பிக்கையால் தகர்த்தெறிவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக ஆமென்.
|