திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு.மகிழ்ச்சியா அது உன்னைப் பொறுத்தது..I. செப்பனியா 3:14-17 II. பிலிப்பியர் 4:4-7 III. லூக்கா 3:10-18பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியுடன் வாழ்வும் தகுதியுடனே பிறக்கிறார்கள். சிலர் அத்தகுதியைப் பயன்படுத்தி நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள். சிலரோ அத்தகுதியைப் பயன்படுத்துவதுமில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதுமில்லை. சிலருக்கு அதிக மகிழ்ச்சியாய் தான் இருந்தாலே பொறுக்காது. இன்று அதிகமாக சிரிக்கிறேன் என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை என்று நொந்து கொள்வர். அடுத்தவர் அதிக மகிழ்வாக இருந்தாலும் இதை சொல்லி அவரையும் சோகமாக்கிவிடுவர். அதிக மகிழ்ச்சி ஆபத்து என்று நமக்கு நாமே ஒரு எல்லைக் கோடு வரைந்து வைத்திருக்கிறோம். இப்படி இருக்க அகமகிழ்ந்து பூரிப்படைய மகிழ்வடைய இறைவன் அழைப்புவிடுக்கின்றார். மகிழ்ச்சியால் அக்களிக்க ஆர்ப்பரிக்க ஆரவாரம் செய்ய அழைப்புவிடுக்கின்றார். இயேசுவின் பிறப்பு விழாவிற்கென்று நம்மை நாமே தயாரித்துக் கொண்டிருக்கின்ற இந்த திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை, மகிழ்வின் ஞாயிறாகக் கொண்டாட திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கின்றது. இன்றைய வழிபாட்டின் மூன்று வாசகங்களும் மகிழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. மகிழ்ச்சியைத் தேடி அலைவதைவிட அல்லது மகிழ்ச்சிக்காகக் காத்திருப்பதைவிட அந்த மகிழ்ச்சி நம்மிடம் ஏற்கனவே இருக்கிறது என்று நம்பி வாழத் தொடங்கினால் அந்த மகிழ்ச்சி நம்மை விட்டு நீங்காது நிலைத்திருக்கும் என்பதை வாழ்வாக்க அழைப்புவிடுக்கின்றன வாசகங்கள். மகிழ்ச்சியா அது நம் ஒவ்வொருவரையும் பொருத்தது. மகிழ்ச்சியாக வாழ ஐந்து காரணங்கள் ; உன்னை நேசி, நல்லதை செய், மன்னித்து வாழ், தீங்கு செய்யாதே, நேர்மையாக வாழ் என்பன,. உன்னை நேசி : தன்னை நேசிக்காத மனிதன் பிறரை ஒருபோதும் நேசிக்க முடியாது. தானமும் தர்மமும் மட்டுமல்ல அன்பும் தனக்குப் போகத் தான் பிறருக்கும். இதுவே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. தன்னைத்தானே நேசித்தல் என்பது அற்புதமாய் அழகுபடுத்தி, ஆடைநயத்தினால் அடுத்தவர்களை ஈர்ப்பது அல்ல, அன்பான செயல்களால், அழகான செயல்களால் அற்புதமான குணங்களால் தன்னை அழகுபடுத்தி நேசிப்பதாகும். ஆபரணங்களும் அழகுசாதனப் பொருட்களுமல்ல நம் மகிழ்வை வெளிப்படுத்துவது, அன்புச்செயல்களும் அருமையான பண்புகளுமே நமது மகிழ்வை அழகை பிறருக்கு வெளிப்படுத்துவன. இத்தகைய அழகு பொருந்திய நம்மை நாம் நேசிக்க பழகுவோம். நல்லதை செய்; ஒன்றே செய் நன்றே செய் அதை இன்றே செய் என்பர். நல்ல நல்ல செயல்களை செய்து நமது உடன்வாழ்பவர்களின் மகிழ்வினைப் பெருக்குவோம்.அதன் மூலம் நமது மகிழ்வையும் நாம் அதிகரித்துக்கொள்வோம். நன்மை காட்டுத்தீ போல பரவி, பிறரும் அது போல நன்மைகளைச் செய்ய துணைபுரியும். நன்மையானதை மட்டுமே நான் பிறருக்கு செய்வேன் என்ற உறுதிமொழியை திருவருகைக்காலத்தின் தீர்மானமாக எடுத்து செயல்பட முயல்வோம். மன்னித்து வாழ்; மன்னிப்பு மனித வாழ்க்கையின் அடித்தளம். மனிதர்கள் தவறுபவர்கள் தவறுதல்மனித இயல்பு, மன்னிப்பவன் இறைச்சாயல் கொண்டவன். ஆக மனிதன் தவறு செய்வதை இறைவன் மன்னிப்பது போல நாமும் நம்முடன் வாழும் சகமனிதர்களின் தவறுகளை மன்னித்து வாழ முற்பட வேண்டும். தீங்கு விளைவிக்காதே: நன்மையை மட்டுமே பிறருக்கு செய்து வாழவேண்டும். தீங்கான எதையும் யாருக்கும் செய்ய கூடாது. அதைப்பற்றி கனவிலும் நினைக்க கூடாது. நேர்மையாக வாழ்; எந்நிலையிலும் நேர்மையாக வாழ வேண்டும் . செய்யும் தொழிலில் நேர்மை, பேச்சில் நேர்மை, எண்ணத்தில் நேர்மை கொண்டு வாழ முற்படுவோம். ஆக மகிழ்ச்சியாக வாழ இந்த ஐந்து காரணிகளையும் கடைபிடித்து வாழவேண்டும். கிறிஸ்து பிறாப்பு பெருவிழாவிற்கு நம்மை நாமே தயாரித்துக் கொண்டிருக்கின்ற இந்நாட்களில் மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவோம். மகிழ்ச்சியைத் தேடி நாம் ஓடாது, மகிழ்ச்சி என்ன்றும் நம்மோடு என்று நினைத்து வாழ்வோம். அன்று அடிமை நிலையில் இருந்தபோதும் யாவே இறைவன் நம்மோடு என்று மகிழ்ந்த இஸ்ரயேல் மக்கள் போல மகிழ்வோடு வாழ முயல்வோம். சிறைச்சாலையில் துன்புற்ற போதும் இறைவனின் அறிவெல்லாம் கடந்த இறைஅமைதி நம்மோடு என்று மகிழும் பவுலடியார் போல மகிழ்ந்து வாழ்வோம். என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார் என்று மகிழ்ந்து அவருக்காக வழியை ஆயத்தம் செய்ய மக்களை தயார் படுத்திமகிழ்ந்த திருமுழுக்கு யோவான் போல மகிழ்வோம். .... நமது மகிழ்ச்சி நம்மை பொருத்தது.... நம்மை நாமே நேசித்து, நல்லது செய்து, மன்னித்து மன்னிப்பு பெற்று, தீங்கு விளைவிக்காது நேர்மையாக வாழ்ந்தோமானால் நமது மகிழ்ச்சி நமதே.... நமது இதயத்தில் மகிழ்ச்சி பொங்க, ஆன்மாவில் புத்துணர்வு பெருக, வாழ்வில் வெற்றி பெற, முகத்தில் புன்னகை நிலைக்க, நம் இல்லத்தில் அன்பின் நறுமணம் வீச மகிழ்வென்னும் மாபரன் நம்மோடு இருப்பாராக ஆமென்..
|