பொதுக்காலம் 24ம் ஞாயிறுநீ யா(ர்)???!!! எசாயா 50:5-9 யாக்கோபு 2:14-18 மாற்கு 8:27-35நீ யா(ர்)???!!! நீ யா!!! என்று கேட்பதற்கும் நீ யார் என்று கேட்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. முன்னையது ஆச்சரியத்தினாலும் பயத்தைனாலும் கேட்பது. (நீ யா!!! என்று ஆச்சரியத்திலும் கேட்கலாம். வெறுப்பிலும் கேட்கலாம். ) நீ யா....... இரண்டாவது ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, நீ யார் ??? என்று கேள்வி கேட்பது. இந்த இரண்டு கேள்வியையும் பல முறை நாம் நமக்குள்ளும் பிறர் நம்மிடமும் கேட்காமல் இருப்பதனால் தான் பல பிரச்சனைகள். இதனையே நமது முன்னோர்கள் நாம் யார் என்று அறிந்து கொள்ளாததே எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம் என்பர். நம்மிடம் யாராவது வந்து நீங்க யாரு? என்று கேட்டால் உடனே நாம் சொல்வது நமது பெயர். பெயர் தான் நீயா உன் பெயர் கொண்ட பலரை நான் பார்த்திருக்கிறேனே என்றால் உடனே வேலை அல்லது இருக்கும் இடம் கூறுவோம். அதையும் மீறி ஏதாவது கேட்டால் இன்னாருக்கு இன்ன உறவின் முறை என்று கூற ஆரம்பிப்போம். மொத்தத்தில் நாம் யார் என்று நமது புற செயல்பாடுகளைச் சொல்லி விளக்க அதிக முயற்சி செய்வோம். இதை விடுத்து யாரும் நான் அன்பானவள், இரக்க குணம் மிக்கவள், பிறருக்கு உதவுபவள் என்று சொல்வதில்லை மாறாக அப்படிச் சொல்வோமானால் ஏதோ வேற்று கிரக வாசிகளைப் பார்ப்பது போல நம்மை மேலே கீழே பார்த்து செல்வர். இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியர் யார் என்று ,அவரது புற அடையாளங்களை வைத்து எடுத்துரைக்கின்றார். அவர் நன்மைக்காக துன்புறும் நல்லாயன், அநியாயத்துக்காக போராடும் அன்புருவம், நிந்தனை அவமானங்களையும் பொறுமையோடு ஏற்கும் பேராளன், என்று பல நிலைகளில் ஊழியராம் இயேசுவை, அவர்தம் வாழ்வை வெளிப்படுத்துகிறார். அவரைப் பின்பற்றும் சீடர்களாகிய நமதின் உருவம் எத்தகையது என்பதை கண்டுணர இன்றைய வாசகங்கள் வழி நமக்கு அறிவுறுத்துகின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்திலோ செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை எனவே நீங்கள் செயல் வீரர்கள் என்பதை உங்களது செயல்களில் காட்டுங்கள் என்று அகத்தில் (எண்ணத்தில் செயலில்) நாம் யார் என்பதை வெளிப்படுத்த அழைப்புவிடுக்கின்றார் புனித பவுலடியார். இதை இரண்டையும் தன் வாழ்வில் இணைத்து தான் யார் என்பதை தானும் வாழ்ந்து காட்டி ,நம்மையும் அது போல வாழ அழைக்கின்றார் இயேசு. தான் யார் என்று தன்னை நன்கு அறிந்த இயேசு தன்னைப் போலவே தன்னைப் பின்பற்றுகிறவர்களும் புரிந்து வைத்திருக்கின்றார்களா என்று அறிந்து கொள்ள இந்த கேள்வியை முன்வைக்கின்றார். நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள் ??? மூன்று விதமான பதில் அவருக்கு சீடர்கள் வழி கிடைக்கின்றது. திருமுழுக்கு யோவான் , எலியா, இறைவாக்கினருள் ஒருவர். திருமுழுக்கு யோவான் ; அதிகாரத்தோடு போதித்தவர், எளிய வாழ்வு வாழ்ந்தவர், மக்களின் மனமாற்றத்திற்கு வழிவகுத்தவர். இயேசுவும் அதிகாரத்தோடு போதித்தார், எளிமையான வாழ்வு வாழ்ந்தார், போதனைகளின் வழி மக்களை மனமாற்றம் அடையச் செய்தார். எலியா; கடவுளின் கட்டளைகளை அப்படியே கடைபிடித்தவர், பாலைவனத்துக்கு போ காகம் உனக்கு உணவு தரும் ஓடையில் நீர் அருந்துவாய் என்றவுடன் உடனே கிளம்பியவர், இரக்க குணம் கொண்டு சாரிபாத் ஏழைக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர்ப்பித்தவர். அவர்களின் பஞ்சம் தீர்த்தவர். இயேசுவும் பாலைவனத்துக்கு கடவுளின் கட்டளைப்படி சென்றார். நயீன் ஊர் விதவை மகனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கின்றார். ஏழை மக்களின் பசித்துயர் போக்குகின்றார். இறைவாக்கினருள் ஒருவர்; திடீரென்று தோன்றியவர்கள், கடவுள் சொல்வதை அப்படியே நிறைவேற்றுகின்றவர்கள், இக்கட்டிலிருந்து மீட்க கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். இயேசுவும் நாசரேத் என்னும் ஊரிலிருந்து திடீரென்று தன் பணியைத் துவங்கியவர். கடவுளின் திட்டத்தை நிறைவேற்றியவர், இக்கட்டிலிருந்து மக்களை மீட்டு புது வாழ்வு தருபவர். இப்படியாக இயேசுவையும் அவரது குணநலன்களையும் முன்னர் இருந்தவர்களின் குணநலன்களுடன் ஒப்பிட்டு மீண்டும் ஒரு இறைவாக்கினர் நம்மிடையே தோன்றிவிட்டார் என்று மகிழ்ந்தனர். இயேசுவிற்கு இப்பதிலில் திருப்தி இல்லை .(அதுக்கும் மேலே) இதைவிட மேலான ஒரு பதிலை , தான் தன்னைப் பற்றி நினைத்து வைத்திருந்த ஒன்றை எதிர்பார்த்து நேரடியாக சீடர்களிடம் கேட்கின்றார். சரி நீங்கள் என்னை யாரென்று சொல்கின்றீர்கள் என்று . அதற்கு பேதுரு நீரே மெசியா என்கிறார். தான் எதிர்பார்த்த பதில் தன் மாணவர்களிடம் இருந்து வந்ததும் மகிழும் ஆசிரியர் போல மகிழ்வடைகின்றார் இயேசு. இயேசுவிற்கு முன் தோன்றிய அனைத்து இறைவாக்கினர்களின் ஒட்டு மொத்த மையம் தான் ,மெசியா என்னும் இயேசு என்பதை அவர்களுக்கு நன்கு அறிவுறுத்துகின்றார். உயிரோடு இருக்கும் போதே தான் இறந்த பின் எப்படி அடக்கச்சடங்கு நடத்த வேண்டும் என்று உயில் எழுதும் மனிதர்கள் மத்தியில் இயேசு வித்தியாசமாக சிந்திக்கிறார். தனது சாவைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கின்றார். இயேசுவினது வாழ்வில் நீர் யார் ??? என்ற கேள்வியும் நீ யா!!! என்பதும் மாறி மாறி கேட்கப்பட்ட ஒன்று. நீர் யார் என்று பிலாத்து கேட்டு யூதர்களின் அரசன் என கண்டு கொள்கிறான். நீ யா!!! என்னை விட்டு அகன்று போ என்று கூறிய இலேகியோன் என்னும் பேய் பிடித்தவன் நலம் அடைகிறான். இதே கேள்வியை நாமும் இயேசுவைப் பார்த்துக் கேட்பவர்களாவோம். நம் அரசரைக் கண்டு கொள்வோம். நம் உள்ள நலன் பெற்று குணமடைவோம். நீ யார் என்று நம்மை பார்த்து கேட்பவர்களுக்கு நமது செயல்களால் நல்ல பதிலளிப்பவர்களாவோம் . சிறு மெசியாக்களாக வளர, திருமுழுக்கு யோவானிடம் உள்ள துணிவையும், எலியா இறைவாக்கினரிடம் இருந்த இரக்க குணத்தையும் இறைவாக்கினர்களிடம் இருந்த நல்ல மாற்றம் ஏற்படுத்தும் குணத்தையும் பெற்று வாழ்வோம். நீ யா !!! என்று நம்மைப் பார்த்து பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவோம். இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் நிலைப்பதாக ஆமென் நீ யார்??? ஓஓஓ நீ யா!!!
|