இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தூய ஆவி பெருவிழா

துணையாளரே துணையாய் வாருமே

1 கொரிந்தியர்: 12: 3-7, 12-13
திருத்தூதர் பணிகள்: 2;1-11
யோவான்:20:19-23

தூய ஆவியின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம். தூய ஆவி யார்? தந்தையிடமிருந்து மகன் இயேசு மூலம் நமக்கு அனுப்பப்பட்டவர். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாள் தூய ஆவியின் வல்லமையை சீடர்களுக்கு அளிக்கிறார். தூய ஆவியைப் பெற்ற சீடர்களும் துணிச்சலுடன் நற்செய்தியை அறிவிக்கின்றனர். ஆவியின் வல்லமையை, ஆற்றலை,உணர்ந்ததால் அவர்கள் புதுத்துடிப்புடன் செயல்படுகின்றனர். நாமும் தூய ஆவியைப் பெற்றிருக்கின்றோம் உறுதிப் பூசுதலின் போது. ஆனால் அவர் வழி செயல்படுகிறோமா? என்று சிந்திக்க இன்றைய பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. எங்கள் பள்ளியில் நான்கு வயதே உடைய சிறுமி ஒருத்தி ஒருநாள் கழண்டு விழுந்த தன் காலணிகளை தானாக மாட்டிக் கொண்டிருந்தாள். அருகில் சென்று நான் உதவட்டுமா? என்றேன். உடனே அவள், வேண்டாம். எனக்கு நான்கு வயது என்னுடைய காலணிகளை நானே சரி செய்து கொள்ளும் வயது இது. நானே செய்து கொள்கிறேன் என்றாள். எனக்கு ஒரே ஆச்சரியம் . நீ வளர்ந்து விட்டாய் என்று உனக்கு சொன்னது யார் என்றேன். அவளோ, என் அம்மா என்றாள் சற்றும் யோசிக்காமல். மேலும் தொடர்ந்து கூறினாள், சென்ற வாரம் தான் நான் நான்காவது ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடினேன். அப்போது என் அம்மாவும் அப்பாவும் நான் வேகமாக வளர்கிறேன் எனவே என்னுடைய உடைகள் காலணிகள் படுக்கைகள் முதலியவற்றை சரி செய்தல் போன்ற சிறு சிறு வேலைகளை நானாக செய்து கொள்ள வேண்டும், தானாக சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள் என்று தன்னுடைய மழலை மொழியில் அடுக்கிக் கொண்டே போனாள். நான் அவள் பேச்சைக் கேட்டு திகைத்ததை விட, தன்னுடைய வளர்ச்சியின் மேல் நம்பிக்கை கொண்டு அவள் நடந்த விதம் தான் என்னை மலைக்கச்செய்தது. மேலை நாட்டு கலாச்சாரம், தாய் தந்தையர் இருவரும் வேலைக்கு செல்லும் நிலை, குழந்தைகளுக்கு தனி அறை, என்ற தங்களது சூழலை எளிமையாக தங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர். எங்களால் உனக்கு உண்டான வேலைகளை செய்ய இயலாது என்று கூறாமல், நீ வளர்ந்து விட்டாய், உனக்கான வேலைகளை நீயே செய்யத் துவங்கு என்று கூறுகின்றனர். வளர்ச்சி என்னும் ஆற்றல் உன்னிடத்தில் இருக்கிறது. உன்னால் முடியும் என்று அடிக்கடி சொல்லும் போது குழந்தைகளும் அதன்படியே மாறுகின்றன. இயேசுவும் சீடர்களை அப்படியேக் கூறி வளர்க்கிறார். தூய ஆவியை உங்களிடம் அனுப்புவேன். உண்மைக்கு சாட்சியம் பகர்வீர்கள், நற்செய்தியை அறிவிப்பீர்கள், திருமுழுக்கு கொடுப்பீர்கள் என்று சொல்ல சொல்ல சீடர்களும் அதனை உணர்கிறார்கள். அதன்படி மாறுகின்றார்கள். இனிமேலும் உங்களுடன் என்னால் இருக்க இயலாது, என் தந்தையிடம் நான் திரும்பிச்செல்ல வேண்டும் என்று கூறியவர், என்னைப் போல் வாழுங்கள், நான் கற்பித்ததை செயல்படுத்துங்கள் என்கிறார். சீடர்களும் தங்களால் முடியும் என்பதை உணர்கிறார்கள். அனைத்து மக்கள் முன்பும் அதை செயல்படுத்திக் காண்பிக்கிறார்கள். பரவசப் பேச்சு பேசுதல், அற்புதங்கள் நிகழ்த்துதல், அதிகாரத்தோடு போதித்தல் போன்றவற்றை திறம்படச்செய்கிறார்கள். புற வளர்ச்சி என்பது கண்களுக்கு புலனாகும். அக வளர்ச்சியைப் புரிந்து உணர்ந்து கொண்டால் மட்டுமே புலனாகும். தூய ஆவி அன்று சீடர்கள் மேல் பொழியப்பட்டது. அகவளர்ச்சியில் மாற்றம் கண்டனர். அந்த மாற்றத்தை பிறரும் அறியும்படி வாழ்ந்தனர். நாமும் உறுதிப்பூசுதலின் போது தூய ஆவியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் என்ன? நம் புற வளர்ச்சி தான் பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. ஆவியின் துணையால் வளர்ச்சி அடைந்திருக்கிறோமா என்றால் அது கேள்விக்குறியே. தூய ஆவியை துணையாளர் என்கிறோம் யார் துணையாளர்? நமதுஇன்பம், துன்பம், வறுமை செழிப்பு, ஏற்றம் , இறக்கம் அனைத்திலும் நம்மோடு உடன் நடந்து நமக்கு உதவிகளை செய்பவர். நமக்கு துணையாய் இருந்து நம்மை ஆள்பவர். தூய ஆவியார், திடப்படுத்துபவராக, வழிநடத்துபவராக, தெளிவு படுத்துபவராக நமக்கு விவிலியத்தில் காட்டப்படுகிறார். உதாரணத்திற்கு அன்னை மரியாளை திடப்படுத்தினார், இயேசுவை சீடர்களை வழிநடத்தினார், சூசையப்பருக்கு தெளிவை ஏற்படுத்தினார். இது போன்ற ஆவியின் செயல்பாடுகள் விவிலியத்தில் ஏராளமாய் இருக்கின்றன. இதே தூய ஆவியானவர் நமது துன்பத்தில் நம்மை திடப்படுத்தி, வாழ்வில் வழிநடத்தி, குழப்பத்தில் தெளிவு படுத்துபவராக இருக்கின்றார். நாம் தான் இந்த ஆவியின் அருளை உணராது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், எங்கு சென்றாலும் எதை செய்ய நினைத்தாலும், செய்யத் தொடங்குவதற்கு முன்பு, தூய ஆவியின் துணை நாடி செபிக்கச்சொல்வது நவதுறவு பயிற்சி வாழ்வில் வழக்கம். அப்படி செய்தால் நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும் என்பர். அது உண்மையும் கூட. நம்மிடம் ஏராளமான ஆற்றல்கள் மறைந்து கிடக்கின்றன. நாம் தான் அதை வெளிக்கொணர மறுத்து மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துணையாளர், நம் உடன் நடப்பவர், வழிகாட்டுபவர், தெளிவுபடுத்துபவர். அவரைஅடையாளம் கண்டு கொள்வோம். மறைந்து கிடக்கும் அவரை வெளியேக் கொண்டு வர முயல்வோம். புதையல் தனக்கு அடியில் தான் உள்ளது என்று அறியாமல் அதன் அடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மனிதன் போல் இல்லாமல் நமக்குள் புதைந்திருக்கும் புதையலாம் துணையாளரை இனம் கண்டு கொள்வோம். நாம் தூய ஆவியின் ஆற்றலினால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நம்புவோம். அப்போது தான் வளர்வோம். துணையாளராம் தூய ஆவியை துணையாகக் கொண்டு வாழ முற்படுவோம் . இறைவனின் அருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.