ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு
தாராள அன்பு - கடுகளவு நம்பிக்கை
அபக்கூக்கு 1:2-3, 2:2-4
2 திமொத்தேயு 1:6-8, 13-14
லூக்கா 17:5-10
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இறைமகன் இயேசு ஒரு கடமையை செய்ய பணிக்கிறார். அந்த கடமை நம்பிக்கையாகும். அன்று உயிர்த்த பின் தம் சீடர்களுக்கு கூறியது, உங்களுக்கு அமைதி உரித்தாகுக. ஜயம் தவிர்த்து நம்பிக்கை கொள். உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று. இஸ்ரேயலில் இப்படிப்பட்ட நம்பிக்கையை நான் கண்டது இல்லை இது போன்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி வாசிக்க கேட்டிருக்கிறோம். இதயம் மனித உறுப்புகளின் மையமாக திகழ்கிறது. அது போல கிறிஸ்தவர்களாகிய நமக்கு கடுகளவாவது நம்பிக்கை இருக்க வேண்டும் என கூறுகிறார்.
கடுகளவு நம்பிக்கை .
கடுகளவு நம்பிக்கை என்பது நம்பிக்கையின் அடையாளமாக இங்கு உருவகப்படுத்தப்படுகிறது. ஆம் இது புத்துணர்ச்சியை கொடுக்கிறது. நாம் வாழும் சமுதாயத்தில் சின்னதாக அன்பு, அடக்கம், பாசம், பரிவு, இன்முகம், இரக்கம், நீதி, நேர்மை போன்றவை சமூகவாழ்வில் நாம் கொடுக்கின்ற கடுகளவு விதை. இந்த விதை சிறிது சிறிதாக வளரும் போது இறைவிருப்பத்தை நிறைவேற்றும் நம்பிக்கையுள்ள பணியாளாராக வாழ்கின்றோம். நம்பிக்கை என்பது ஒரே நாளில் தோன்றுவது அல்ல. எதார்த்ததை எதிர்கொள்ளவும், அன்பை அனைவருடனும் பகிரும் போதும், தாராள அன்பு, குறையாத அன்பு, நிறைவான அன்பு, என நமது அன்பை பகிர்ந்து கொடுக்க பழகும் போது, கடுகளவு விதையை விதைக்கிறோம். விதைத்து விட்டு அதற்கு நீர் உற்றி பாதுக்காக வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் அது நமது கடமை எனவும் விளக்குகிறார். நாம் கடமையை செய்ய பழகும் போது பயனை எதிர்பாராது செய்யவும் பழக வேண்டும் என பணிக்கிறார். இந்த காலகட்டத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும்? அல்லது என்னால் தினசரி வாழ்க்கையில் செய்ய இயலுமா? . ஆம் அனைத்து மக்களாலும் செய்ய இயலும் என தம் வாழ்க்கை முறையின் மூலம் இறைமகன் இயேசு வாழ்ந்தும் காட்டினார். அன்பு என்ற விதையை விதைத்து நம்பிக்கை என்னும் பயிரை அருவடை செய்தார் நம் இயேசு. இதை மட்டும் பின்பற்றிட இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு விடுக்கிறது.
கடமை கடமையை செய்கிறேன்/ என் கடன் பணி செய்து கிடப்பதே.
மனிதனின் கடமை என்று எதைக் குறிக்கின்றோம்? ஒருவனுக்குப் பிறரால், விதிக்கப்பட்ட அல்லது தனக்குத் தானாகவே விதித்துக் கொண்ட ஓர் இலக்கின் செயலாக்கத்தைத் தான் கடமையாகக் கருதுகின்றோம். ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு மாதம் ஒரு தொகை ஊதியமாக வரையறுக்கப்பட்டு அதற்காக அவர் செய்ய வேண்டிய பணிகள் யாவை என்று விளக்கப்படுகின்றது. அவரும் அன்றாடம் அந்தப் பணியினைத் தங்கு தடையின்றி செய்வது அவரது கடமை ஆகின்றது. ஒரு பெற்றோர் தமது குழந்தைகளைப் பேணி வளர்த்து ஆளாக்கி அவர்களுக்குத் தகுந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதைத் தமது கடமையாகக் கொள்கின்றனர்.
முதலில் கூறிய அலுவலரே பெற்றோராகவும் இருக்கலாம். இரு விதமான பணிகளைச் செய்வது அவருக்கு இருவேறு கடமைகளாகக் கருதப்படுகின்றது. ஆனால் பெற்றோராய் செய்யும் கடமைக்கு ஊதியம் எதுவும் நிர்ணயிக்கப் படுவதில்லை. இதனால் கடமை என்பது ஓர் பொறுப்பு உணர்வு என்று கூறலாம். வாழும் வாழ்விற்கு ஓர் பிடிப்பு, ஓர் அர்த்தம், ஓர் இலக்கைக் கொடுப்பதாகக் கொள்ளலாம். . அலுவலகத்தில் அதாவது வெளியுலகில் ஆற்றும் கடமைக்குக் கால வரையறை உண்டு. காலை ஒரு குறிப்பிட்ட நேரம் தொடங்கி மாலை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அலுவலகப் பணிகளைச் செய்வது அந்த நபருக்கு அவர் எந்த நிலை ஊழியராய் இருப்பினும் கடமை ஆகின்றது. ஆனால் குடும்பத்தில் அவ்விதமாகக் கால வரையறை ஏதும் வகுத்துக் கொள்வதில்லை.
இவற்றிலிருந்து நமக்குத் தெரிவது – கடமை என்பது மனிதன் தனக்குத் தானே வரையறுத்துக் கொள்ளும் இலக்கணம் கொண்ட செயல்பாடு. தனக்கு முன்னால் வைக்கப்பட்ட ஓர் பணியை நிறைவேற்றுவதாகவும் இருக்கலாம். தானே வகுத்துக்கொண்ட வரையறையை அடைவதற்கு முயலுவதாகவும் இருக்கலாம். எது எப்படி ஆயினும் அந்தப் பணியை ஓர் ஒழுங்கு முறையாக செயல் படுத்துதல் வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலே கூறிய இரண்டு விதமான கடமைகளுக்கும் சில ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உள்ளன.
நாம் வெளியுலகில் பணியாற்றும் போது அதாவது நமது கடமைகளை நிறைவேற்றும் போது அதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. காலம் தவறாமை, விதிகளை மீறாமை, இட்ட பணிகளைச் செவ்வனே செய்தல், மேலதிகாரிகளுக்குப் பணிந்து நடத்தல், உடன் பணிபுரிவோருடன் சுமுகமாகவும் அன்பாகவும் பழகுதல் அவற்றுள் சில. சுயமாகத் தொழில் செய்வோருக்கு இப்பண்புகள் அனைத்தும் பொருந்தும். தமது பணிகளில் ஓர் இலக்கை நிர்ணயம் செய்து இலட்சியங்களைக் குறித்து கடுமையாக உழைத்து முன்னேறத் துடிப்பதும் ஒரு சாரார் இயல்பு. தமது கடமைகளை நேர்மையாக ஒழுங்காகச் செய்பவர்களுக்கே இப்பாதை சாத்தியம் ஆகின்றது. பொருள் ஈட்டுவது ஒன்றே இலட்சியமாய் இருப்பதைக் காட்டிலும் தனக்கு மட்டுமின்றி தன்னைச் சார்ந்தவர்களுக்கும், சமுதாயத்திற்கும் சேர்ந்து ஒரு பரந்த நோக்குடன் சிந்தித்து செயல்படுவோரே வாழ்க்கையில் சாதனையாளர்கள் ஆகின்றனர்.
மனிதனின் கடமை என்பது ஓர் பொறுப்பு உணர்வு. இது நாம் அன்பு செய்யும் மனிதரிடத்திலும் காட்டக் கூடியதொன்றாக இருக்கின்றது. அன்பை ஏனோ தானோ என ஓர் பொறுப்பு உணர்வின்றி மற்றவரிடத்தில் காட்டினோமானால் அது கடமைக்காக அன்பு செய்வது போல் ஆகிவிடும். அன்பு, அடக்கம், பாசம், பரிவு, இன்முகம், இரக்கம், நீதி, இவற்றை நம் வாழ்வின் கடமையாக கொண்டு செயல்பட்டால், கடமைக்காக என்பது அழிந்து நம்பிக்கை உதயமாகும். எதிர்பார்ப்புக்கள் அதிகமாகி நிறைவேறாத போது அன்பு குறைந்து நம்பிக்கைக்கு மாறாக சந்தேகங்கள் உருவாகி பயனற்ற பணியாளராக மாற வழிகளை அமைக்காமல், கடமையை செய்யும் போது எந்த ஒரு பயனையும் எதிர்பார்க்காமல் எனது கடமையைத்தானே செய்தேன் எனகூறும் போது நம்பிக்கை என்னும் மரம் வளர்ந்து கொண்டே செல்கிறது..................... ஆமென். .
|