பொதுக்காலம் பதினொன்றாம் ஞாயிறு
அன்பும் இரக்கமும்
2சாமுவேல் 12:7-10.13
கலாத்தியர் 2:16.19-21
லூக்கா 7:36-8:3
அன்புப் பாதை வழியாகக் கடந்து செல்பவர்கள், அன்பையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் அடைகின்றனர் என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஒரு குழந்தையைத் தாய் தன்னோடு இணைத்துக் கொண்டிருப்பது, விடாமல் பார்த்துக்கொள்ளவது அன்பு. அதற்கு மேலாக அதை பாதுக்காத்து வளர்ப்பது இரக்கம். தனது வாழ்வின் இறுதிவரை எல்லா சுழ்நிலைகளிலும் உடனிருப்பை கொடுப்பது, மேலும் தம்மை அறிந்துக் கொள்ள செய்வது மன்னிப்பு. இதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது, உடனிருப்பை விரும்பிய பரிசேயருள் ஒருவர், பாவியான பெண் அதன் மூலம் இறைவனது அன்பை, இரக்கம் நிறைந்த மன்னிப்பை பெறுகின்றனர்.
அன்பு
இறைமகன் இயேசு அன்பை கொடுக்கிறார், அதே போல் அன்பை பெறும் விதமாக அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசி அன்பு அனைத்தையும் செய்யவல்லது என இங்கு எண்பிக்கப்படுகிறது. அன்பால் தியாகம் செய்யும் அளவுக்குக் கிறிஸ்தவர்கள்வளர வேண்டும். இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார். அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்க்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும் நிலையான அன்பே அன்பு.
இந்த அன்பு மனிதன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காது, தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா என்று பார்க்காது, ஏழை பணக்காரன் வித்தியாசம் பார்க்காது, யாரையும் மனம் நோக பேசாது, இருக்கும் சூழ்நிலையை பார்க்காது ஆனால் பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். இறைவனின் ஆவி நம்முள் உற்றப்பட்டால் ஒழிய இப்படி ஒரு அன்பை நாம் ருசித்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட தெய்வீக அன்பை பற்றி (1கொரிந்தியர்13) மிக அருமையாக விளக்குகிறது.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். மேலும் கண்ணதாசன் சொன்னதுபோல் "கருணையும் இரக்கமும் பொங்கும் உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்". வள்ளுவர் கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருகின், நாட்டில் நலம் பெருகும், அமைதி நிலவும். கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டினால் அன்பு பெருகும்.
இரக்கம் நிறைந்த மன்னிப்பு
குரு ஒருவரிடம் சீடன் கேட்ட கேள்வி, கடவுள் என்னை எப்போதும் மன்னிப்பாரா? குரு கூறிய பதில், சீடரின் கையில் படிந்திருந்த அழுக்கைக் காட்டி கையில் அழுக்குப் படிந்திருப்பதால்,அதை வெட்டி எறிந்து விடுவாயா? அழுக்குப்படும் போதெல்லாம் தூய்மைப்படுத்துவாயா? என்றார். சீடன் கூறிய பதில், அழுக்குப்படும் போதெல்லாம் தூய்மைப்படுத்துவேன். என கூறி சீடன் புரிந்து கொண்டு வாழ்வை மாற்றிக் கொண்டான்.
இறைவன், தமது இரக்கத்தை நமக்குத் தொடர்ந்து நிரம்பப் பொழிந்து வருகிறார், நாம் ஒவ்வொருவரும் நமது மனிதத்தை முழுமையாய் வாழும்பொருட்டும் அந்த இரக்கத்தை நமக்கு அடுத்திருப்பவர்க்கு வழங்க வேண்டும் என்றும் வாழ்ந்தும் காட்டினார். நமக்கு மன்னிப்பும் கொடுக்கிறார். அன்பு உயிர் நாடியாகத் திகழ்ந்து, மன்னிப்பைப் பெற நாம் நம் பாவங்களுக்காக மனவருத்தப்பட்டு, மிகுந்த நேரிய மனத்துடன் ஆண்டவரிடத்திலே மன்னிப்பை எப்போதும் நாட வேண்டும். மன்னிப்பைப் பெற்று புது வாழ்வு பெறுவோம். ஆமென்.
|