இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு

அசைக்கமுடியாத நம்பிக்கை

எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46:52

Don´t be afraid to stand for what you believe in…….. Even if that means standing alone.
இன்றைய நற்செய்தியில் வரும் கதாநாயகர் பர்த்திமேயு, இதை தான் பின்பற்றுகிறார். பயம் கொள்ளாமல், பார்வை பெறவேண்டும் என்பதில் மட்டும் நம்பிக்கை உடையவராக திகழ்கிறார், மேலும் தனிமையில் சாதனை படைத்து மற்றவரையும் சாதனை படைக்க அழைக்கிறார்.
பர்த்திமேயு படைத்தவர் மீது நம்பிக்கை வைக்கிறார். அந்த நம்பிக்கையை அவநம்பிக்கையாக்க அவரை சுற்றியுள்ள குரல்கள் சப்தம் எழுப்புகின்றன. பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; (மாற்கு10:48) ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார். (மாற்கு10:48) என புனித மாற்கு கூறுகிறார். வாழ்வில் எனது உடலில் குறைப்பாடு இருக்கலாம், எனது கண்களை இழந்திருக்கலாம், ஆனால் எனது விடாமுயற்சியுடன் கூடிய நம்பிக்கையை இழக்கவில்லை என்பதை எண்பிக்கிறார். இறைவன் இரக்கமுடையவர் என அனைத்து உள்ளங்களும் புரிந்துக்கொள்ள வேண்டும் அறிந்துக்கொள்ள வேண்டும் என இறைமகன் இயேசு இரக்கமுடையவர் என்பதற்கு சாட்சி பகர்கிறார்.
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார். கோவில் விட்டால் வீடு என்றுதான் வாழ்ந்து வந்தார். இதைத் தவிரஅவருக்கு வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே…அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம், “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார். இறைவன், “எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்குப் பதிலாக நாளை ஒருநாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்க வேண்டும். வருபவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதுமானது. யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ கடவுள் சிலை என்பதை மறந்து விடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூறினார். அதற்கு அந்தப் பணியாளும் சம்மதித்தார். அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோவில் கருவறையில் நின்றார். இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்றுக் கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான். அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாகத் தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றான். இதைக் கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாளர் பார்த்தார். ஆனால், இறைவன் நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார். அப்படியே அசையாது நின்றார். சிறிது நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. அவன், “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ஆசிர்வதிக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய பிரச்சனைகளை எல்லாம் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயே எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்” என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன் வேண்டினான். சில வினாடிகள் கழித்துக் கண்களைத் திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவற விட்ட பணப்பை கண்ணில் பட்டது. அதனுள்ளே பணம் மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொள்கிறான். இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருந்த, அந்தப் பணியாளரால் தற்போதும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூரப் பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையைத் தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்பக் கோவிலுக்கு வந்தான். அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரைப் பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச் செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார். சிலையாக நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி, “கடவுளே இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர். இரவு வருகிறது. கோவில் வாசல் மூடப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளரிடம், இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததைக் கூறினார். இறைவனோ இதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார். இறைவன் அதிருப்தியைப் பார்த்த பணியாளர் பதற்றமானான். இறைவன், “நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை…? என்ன நடந்தாலும் பேசக் கூடாது, அசையக் கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளைத் தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச் சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தைச் சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத் தற்காலிகமாகத்திருட்டுப் பட்டம் சுமக்கச் செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேர வேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணிப் போற்றுவான். இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம் செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றார். பணியாளர், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். “இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும்.
நம்மிது மட்டும் நம்பிக்கை வைக்கும் போது இந்த பக்தனை போல் இறைநம்பிக்கையில் சந்தேகம் வருகின்றது. அல்லது அறிவின் மீது கொண்ட நம்பிக்கையானது கடவுளையும் அறிவற்றவனாக எண்ணும் அளவுக்கு அறிவின் ஆணவம் தொடர்கிறது.
“இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். (மாற்கு10:47)
இறைவன் மீது கொண்ட இறைநம்பிக்கை பயனற்றது என்று நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குரல்கள் எழுப்பும் போதும் இறைவனிடம் மன்றாட தயக்கம் கொள்ளாமல் முன்னேற வேண்டும். என கதாநாயகர் பர்த்திமேயு அழைக்கிறார்.
அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். (மாற்கு10:49)
அங்கு இருந்த மக்களின் எண்ணங்கள் இரக்கத்தை நோக்கி செல்வதை புனித மாற்கு சுட்டிக் காண்பிக்கிறார். பர்த்திமேயு ஆர்வத்தை, உற்சாகப்படுத்துகிறார்கள். பர்த்திமேயு குணமாகும் முன்பே அங்கு இருந்த மக்களின் அககண்கள் திறக்கப்படுகிறது. பர்த்திமேயுவின் விடாமுயற்சியின் நம்பிக்கை ஒருவருக்கொருவர் அன்பின் ஒளியை பகிர்ந்துக்கொள்ள செய்கிறது.
இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். (மாற்கு10:52)
இயேசுவின் தயவில் இரக்கம் பெற்றதோடு அல்லாமல் இறைநம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக புனித மாற்கு விளக்குகிறார். இயேசுவிற்கு சான்று பகர்வது தனது கடமை என பர்த்திமேயு இயேசுவை வாழ்நாள் முழுவதும் பின் தொடர்கிறார். சாதனை படைக்கிறார். நம்மையும் சிந்திக்க அழைக்கிறார். ஆமென்.