பொதுக்காலம் 20ஆம் ஞாயிறுஅறிந்துணரும் உணர்வுநீதிமொழிகள் 9:1-6
எபேசியர் 5:15-20
யோவான் 6:51-58
ஞானத்தின் கொடைகளினால் தம் மக்களை நிறைக்கும் ஆவியானவர் இடைவிடாது நிறைஉண்மையை நோக்கி மனித குலத்தை வழி நடத்துகின்றார். ஆம் ஞானம் என்பது அறிந்துணரும் உணர்வு என ஒரு கருத்தை கூறலாம். இறைவன் நமக்கு கொடுத்துள்ள நிறை உண்மையை நோக்கி செல்ல வலியுறுத்தப்படுகிறோம். அதன் நிறை உண்மையை அறிய நமக்கு அறிந்துணரும் உணர்வு தேவைப்படுகிறது.
இன்றைய உலகில் எதை எடுத்தாலும் கலப்படம். மனிதர்களில் கூட தீயோர்கள் மத்தியில் நல்லவர்கள்......சூழ்நிலைகளில் கூட நெருக்கடியின் மத்தியில் அமைதி......வாழ்க்கையில் கூட துன்பங்கள் மத்தியில் மகிழ்ச்சி என சுழற்றுக்கொண்டே இருக்கிறது. இவற்றில் தெளிவு காண ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். (எபே 15-5)என புனித பவுலடியார் கூறுகிறார். ஞானமுள்ளவர்களால் மட்டுமே ஆண்டவருடைய திருவுளம் யாது என புரிந்து கொள்ள இயலும். திருவுளம் என்பது மறைபொருள். அதனை புரிந்துக்கொள்வது எளிதல்ல, இயேசு அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் விதமாக கதைகள், உவமைகள், எடுத்துக்காட்டுகள் என எளிய வழிமுறையை கையாளுகிறார். அவ்வாறு கையாளும் போது சமுதாயத்தின் அறியாமை, வேதனை, கலக்கம், கலவரம், மதம், சாதி, பணம், பதவி, ஆக்கிரமிப்பு, பதுக்கல் என குழப்பத்தின் மத்தியில் தெளிவினை காண, நிறை உண்மையை நோக்கி செல்ல அழைக்கிறார். இதற்கு நேரிய மனத்தோடும், நன்மை செய்வதில் விருப்பத்தோடும், உண்மை கோட்பாடுகளோடும், வீரத்தோடும் வாழ்ந்தாலே கடவுளது திருவுளம் இரகசியமாக இருந்தாலும் புரிந்துக்கொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டு, அன்னை மரியாள், ஆபிரகாம், மோசே, ......... வாழ்க்கையில் எல்லா சிக்கல்களில் இருந்தும் விடுதலை பெற தொடர் நம்பிக்கை, தொடர் விசுவாசம் நம்மில் செயலாற்ற வேண்டும்.
கிறிஸ்தவ விசுவாசத்தில் எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் என்பது திருவிருந்து. இந்த திருவிருந்து என்றும் அழியா உணவாக விளங்குகிறது. இது இயேசுவின் அன்பையும், பராமரிப்பையும், பகிர்தலையும் அடையாளமாகக் கொண்டது. இந்த அடையாளம் நாம் பகிரும் அன்பில், சக்தியில், மகிழ்ச்சியில், அமைதியில், உதவியில், பரிவில் தான் அடங்கியுள்ளது.
நாம் இனம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வகையான பசி எனலாம். பசி என்றதும் வயிற்று பசியை மட்டும் நம் வாழ்வில் பொருள் கொள்கிறோம். ஆனால் கடவுளுக்கேற்ற செயல்களை செய்யும் போது அந்த பசியை போக்குகிறோம். அவற்றை திருவிருந்தில் இருந்து பெறுகிறோம். அவற்றை பகிர்ந்துக் கொள்ளும் போது புதுபொலிவு பெறும் விதமாக வாழ்வு பெறுகிறோம், வாழ்வு கொடுக்கிறோம். ஆமென்.
|