உயிர்ப்புக் காலம் நான்காம் ஞாயிறுஎன் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றனமுதல்வாசகம் :திருத்தூதர் பணிகள் 4:8-12 இரண்டாம் வாசகம் : 1யோவான் 3:1-2 நற்செய்தி வாசகம் : 10:11-18 இன்று உயிர்ப்புக் காலம் நான்காம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் உயிர்த்த இயேசுவின் வல்லமை, அவர்தான் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குபவர், அவர்தான் மீட்பர், மனிதர்களிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்க வில்லை என்றும், நாம் அனைவரும் கடவுளின் மக்களென அழைக்கப்படுகின்றோம், கடவுளின் மக்களாகவே இருக்கிறோம், இயேசுவே நல்ல ஆயன், நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பவர். கூலிக்கு மேய்ப்பவர் அல்ல, தந்தை என்னை அறிந்திருக்கிறார், இயேசு தந்தையை அறிந்திருப்பது போல் அவருடைய ஆடுகளும் அவரை அறிந்திருக்கின்றனர், என்ற பல்வேறு மையக்கருத்துக்களை இன்று இறைவன் நமக்கு வெளிப்படுத்துகின்றார்.
இறைவார்த்தையை தியானிக்கின்ற போது என் ஆடுகள் என்னை அறிந்திருக்கின்றன “ என்ற இறைவார்த்தை என் மனதை மிகவும் ஆழமாகத் தொட்டது. நானும் நீங்களும் கிறிஸ்துவனாக, கிறிஸ்துவளாக ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இறைமகன் இயேசுவை நமது வாழ்க்கையின் ஆயனாக ஏற்றுக் கொண்டுள்ளோமா? நமது குடும்ப வாழ்க்கைக்கு ஒளியின் விளக்காக நல்ல ஆயனாக அவர் இருக்கின்றாரா? அவருடைய ஆவியின் அருள்க் கொடைகளால் நிரம்ப நாம் அனைவரும் விரும்புகின்றோமா? இறைவன் இருக்கின்றாரா என்ற கேள்வி பலரிடையே எழும்பிக் கொண்டுதான் உள்ளது? கிறிஸ்துவ விசுவாசம் குறைந்து கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் நல்ல ஆயன் இயேசுவை வார்த்தையின் வழியாக அறிந்திருந்தால் மட்டும்தான் நம்மால் திருத்தூதர் பேதுருவைப் போல் துணிவுடன் உயிர்த்த இயேசுவைப்பற்றி எடுத்துரைக்க முடியும். இன்று உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தையும், ஆவியானவரின் அருள் கொடைகளையும் நாம் அனுபவித்து உள்ளோமா? இறைமகன் இயேசுவைப் பற்றி வார்த்தையின் வழியாக பிறருக்கு அறிவித்துள்ளோமா? இருளானவன் ஒவ்வொரு ஆன்மாவை இருளின் பாதையில் நடத்திச் செல்வதைக் இன்று நமது சமூதாயத்தில் காண்கின்றோம்தானே? பல நேரங்களில் உண்மையை எடுத்துரைக்க தயங்குகின்றோம், தீமைக்கு துணைசெல்கின்றோம்? அப்படித்தானே? மேலைநாடுகளில் அனைத்து வசதிகள் செல்வாக்குகள் இருப்பதால் இறைவன் நமக்கு இரண்டாவது இடமாகத்தான் உள்ளார். நேரம் நெருங்கி விட்டது மனம் மாற்றம் பெற முயற்சிப்போம்.
ஆவியானவரால் நிரப்பட்ட ஆதி கிறிஸ்துவர்கள் ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்டிருந்தனர் அதற்கு காரணம் அவர்கள் நடுவில் உயிர்த்த இறைமகன் இயேசு பிரசன்னமாக அவர்கள் வாழ்விலும் ஒன்று கூடலிலும் ஆவியானவராக இருந்து செயலாற்றினார். இன்று கிறிஸ்துவ இறைசமூகத்தில் எத்தனை வேறுபாடுகள்? ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாக வாழ்ந்தோமென்றால் எவ்வளவு நம்மை பயக்கும். சிந்தித்து செயல்படுவோம். கிறிஸ்துவர்களை கொன்று குவித்த சவுல் என்றவரை பவுலாக மாற்றி உயிர்த்த இயேசுவின் சீடராக மாற்றினார். இறைமகன் இயேசுவுக்கு ஒரு நொடிப் பொழுது கூடத் தேவையில்லை அவருடைய சீடராக மாற்றுவதற்கு. இனிவரும் நாட்களில் நமது உள்ளத்தில் இருக்கும் பிளவுகளை ஆவியானவரின் துணையால் தகர்த்து எறிந்து உயிர்த்த இயேசுவை அறிந்த ஆடுகளாய் வாழ்வோம். நமது திருவழிபாடுகள் வெறும் சடங்காகவும் கடமையாகவும் இல்லாமல் மாறாக இறைவனின் அருளை அனுபவிக்க அனுதினம் முயற்சிப்போம்.
இன்று இறைவனின் மந்தையை சிதறடிக்க எத்தனை கூலிக்கு வேலை செய்யும் மேய்ப்பர்கள் நம்மிடையே உளாவிக் கொண்டுள்ளனர். கிறிஸ்துவர்கள் என்ற போர்வையில் எத்தனை பேர் ஓநாய்களைப்போல் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சுயநலத்திற்காக இன்று இறைசமூகத்தில் எத்தனை ஓநாய்கள் மந்தையை சிதறடிக்கின்றனர். இன்று இறைப்பணி செய்யும் ஒவ்வொருவரும் கேட்க வேண்டியக் கேள்வி நான் ஒரு நல்ல மேய்ப்பனாக பணி செய்கின்றேனா? அல்லது கூலிக்கு தொண்டு செய்யும் மேய்ப்பனாக பணி செய்கின்றேனா? இறைமகன் இயேசுவின் மகிமையையும், மாட்சிமையையும் அறிந்து அனுபவித்திருந்தால் அவரது குரலுக்கு செவிகொடுத்து அவரைப்போல் முழு உள்ளத்தோடும், முழுவலிமையோடும் இறைபணியில் நம்மால் ஈடுபட முடியும்.
திருப்பாடல் 127:1 ல் கூறியதுபோல் ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும் என்றும், மேலும் இயேசு என்னும் பாறைமீது கட்டபட்ட ஆன்மீகத் தூண்களாக விளங்க முயற்சி செய்வோம். நல்ல ஆயனை நன்கு அறிந்த ஆடுகளாய் நமது சொல்லிலும் செயலிலும் அவருக்கு உண்மை சாட்சிகளாய் வாழ்வோம். கூலிக்கு துணைபோகும் ஓநாய்களின் கூட்டத்தை கண்டறிந்து இறைமகன் நாமத்தில் அவர்களை கண்டிப்போம் அப்பொழுது நம் இறைசமூகம் வளரும். நல்ல மேய்ப்பனுக்கு குரல் கொடுக்கும் மந்தையின் கூட்டத்தில் சேர்ந்து, ஒரே உள்ளமும் மனமும் கொண்டவர்களாக விளங்குவோம்.
நல்ல ஆயன் பசும்புல் வெளிக்கு தன் ஆடுகளை அழைத்துச் செல்பவர்.
நல்ல ஆயன் அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்பவர்.
நல்ல ஆயன் புத்துயிர் அளிப்பவர்.
நல்ல ஆயன் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நம்மோடு இருப்பவர்.
நல்ல ஆயன் எதிரிகளின் முன்பு விருந்து ஏற்பாடு செய்பவர்.
நல்ல ஆயன் என்தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றவர்.
நல்ல ஆயன் வாழ்நாள் முழுவதும் அருளும் நலமும் பேரன்பும் கொடுத்து காப்பவர்.
நல்ல ஆயன் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ வைப்பவர்.
ஆகையால் நல்ல ஆயனான நம் இறைமகனின் குரலுக்கு செவிகொடுத்து அவரை நன்கு அறிந்து கொள்ள கற்றுக் கொள்வோம் ஏனென்றால் அவர் மட்டும் தான் நிரந்தரமும் நிலைவாழ்வும் தருபவர். செவிமடுப்போமா?
ஆண்டவர் என் ஆயர் என்கேதும் குறையில்லை. திருப்பாடல் 23:1
|